Lekha Books

A+ A A-

நம்முடைய இதயங்கள்

nammudaiya-idhayangal

புகை வண்டியின் அந்தப் பெட்டியில் மொத்தம் எட்டு பேர் இருந்தோம். பல்வேறு மதங்களைச் சேர்ந்த நாங்கள் அற்புதமான விஷயமான காதலைப் பற்றி ஒவ்வொன்றையும் கூறி கலகலப்பு உண்டாக்கிக் கொண்டிருந்தபோது, நாடு முழுக்கப் பயணம் செய்திருக்கும் அந்த இளைஞன் இந்தக் கதையைச் சொன்னான்:

‘‘வட இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பார்க்குறப்போ, நம்ம கேரளத்துல நிலவுற ஜாதி வித்தியாசம் சாதாரண ஒரு சிறு காற்றுன்னுதான் சொல்லணும். பயங்கரமான ஜாதிப் பாகுபாடு என்ற சூறாவளி அங்கே ஒவ்வொரு நாளும் பலமா அடிச்சுக்கிட்டேதான் இருக்குது. ஒருத்தரையொருத்தர் கடிச்சு உடம்பைக் கிழிச்சு ரத்தத்தைக் குடிக்கிறதுக்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கிட்டு இருக்குற ரெண்டு கொடூர மிருகங்களைப்போல நடந்துக்குவாங்க- இந்து, முஸ்லிம், சீக்கிய மதங்களைச் சேர்ந்தவங்க. மாறுபட்ட நம்பிக்கைகளும் ஒன்றோடொன்று சேராத கலாச்சாரமும்! நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் இருந்த பகை இப்பவும் இரத்தத்துல கலந்து இருக்குதோன்னு தோணும். பசுவதை, மொழிச்சண்டை- இவை ஒவ்வொண்ணும் வெறுப்புன்ற நெருப்புல ஊற்றப்படுற எண்ணெயைப்போல, ஏதாவதொரு தெருவின் ஒரு பக்கத்துல கோவில் இருந்தா, எதிர்பக்கத்துல ஒரு பள்ளிவாசல் இல்லாம இருக்காது. அப்படி இல்லைன்னாலும் உண்டாக்குவாங்க! இதுல இந்து, முஸ்லிம், வித்தியாசமே இல்ல. பாங்கு ஒலி கேக்குறப்போ, சங்கநாதமும் மணியோசையும் கேட்கும். மணி அடிக்கிறப்போ, பாங்கு ஓசை உரத்து ஒலிக்கும். இதுதான் உண்மையில் நடக்குறது. பிறகு- ஒரே ஆர்ப்பாட்டம்தான். பத்து முஸ்லிம் தலைகளை இந்துக்கள் எடுக்குறப்போ, முஸ்லிம்கள் மனதில் எண்ணிக்கொண்டே பதினொரு இந்துக்களின் தலைகளை வெட்டிக் கீழே விழச் செய்வாங்க. தலைகளை எண்ணிப் பார்த்துதான் வெற்றியை நிர்ணயம் செய்றது. சின்ன வயசுல பிள்ளைகளுக்குக் கற்றுத் தர்றதே மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவன் நம்மோட பிறவிப் பகைவன் அப்படின்னுதான். இலக்கியம்தான் இந்த விஷயத்தை மேலும் அதிகமா ஊட்டி வளர்த்துக்கிட்டு இருக்குறது.

‘ரங்கீலா ரஸுல்’ என்ற முஹம்மது நபியைப் பற்றிய மோசமான நூலை சிந்தி மொழியில் மொழி பெயர்த்த ராம்சந்த் மேல நடந்து கொண்டிருந்த வழக்கு இந்து-முஸ்லிம் விரோதத்தை அதன் உச்சக் கட்டத்துக்குக் கொண்டு போனது. வாதியாக நீதிமன்றத்துல வந்து நின்னது ஒரு ஜட்கா வண்டிக்காரரான அப்துல் கய்யும். நீதியின் முன்னால், அவன் ராம்சந்தைக் குத்திக் கொலை செய்தான். முஸ்லிம்கள் ப்ரிவியூ கவுன்சில் வரை போனார்கள் என்றாலும், அப்துல் கய்யுமைத் தூக்குல போட்டதுதான் நடந்தது.

‘தியாகி கய்யும்!’ -ஆயிரக்கணக்கான தொண்டைக் குழிகள்ல இருந்து இந்த முழக்கம் வந்தது. பிணம் இருந்த கட்டிலைத் தொடுறதுக்கு மக்கள் ஆயிரக்கணக்குல வந்து கூடினாங்க. தலைகள்! தலைகள்! லட்சக்கணக்கான தலைகள்! ஆரவாரம்! ஆரவாரம்! உள்ளத்தை நடுங்கச் செய்யும் பயங்கரமான ஆரவாரம்! கொதித்து நிற்கும் ஒரு முஸ்லிம் பெருங்கடலென கராச்சி மாறியது. அந்த நகரத்தின் சூழலே பயப்படுற மாதிரி இருந்தது. பிரிட்டிஷ்காரர்கள் ஆண்டு கொண்டிருந்த காலமது.

நான்கைந்து லாரி நிறைய வெள்ளைக்காரர்களின் பட்டாள் நகரத்திற்கு மேலே மூணு விமானங்கள். ஊர்வலம் பட்டாளத்துடன் மோதியது. கருங்கல் துண்டுகள் பறந்தன. சோடா புட்டிகள் உடைந்தன. ட! டு! ட! டே! என்று இயந்திரத் துப்பாக்கி இருபத்தொரு முறை கர்ஜனை செய்தது. அடி! இடி! அழுகை! ஓட்டம்! தலை உடைந்தும் ரத்தம் கொட்டியும் கீழே விழும் மனிதர்கள். எரிந்து கொண்டிருக்கும் கட்டிடங்கள். வீசியடிக்கும் வெப்பக் காற்று, ரத்தமும், வெடிமருந்தும் கலந்த வாசனை! இரத்த அபிஷேகம் நிறைந்த அந்த மாலை நேரத்தில் ரயில்வே சூப்பிரெண்ட்டின் நான்கு மாடிக் கட்டிடத்தின் மேல் மாடியில் நான் நின்னுக்கிட்டு இருந்தேன். பயந்து போன கண்களுடன் மாயாதேவி மேலே ஏறி வந்து என்னை அழைத்தாள். ‘‘மனோகர், அய்யோ! போர்!’’ என்று கத்தினாள். ‘‘தேவி, போயிடு. நான் இந்தத் தமாஷான நிகழ்ச்சியைக் கொஞ்சம் பார்க்குறேன்’’- இது நான்.

அவள் என்னை வற்புறுத்தி அழைச்சா. நாங்க ஒண்ணா கீழே இறங்கினோம். நான் சொன்னேன்: ‘‘நான் தெருவுக்குப் போயி அதைக் கொஞ்சம் பார்க்கணும்னு நினைக்கிறேன்.’’ நான் இப்படிச் சொன்னதும், அவள் என்னைத் தடுத்தாள்:

‘‘வேண்டாம்... முஸ்லிம்கள் கொன்னுடுவாங்க.’’

‘‘ஓ... என்னைக் கொல்ல மாட்டாங்க’’- நான் இறங்கினேன். அவள் உரத்த குரலில் அழைத்துச் சொன்னாள்:

‘‘அம்மா, பாருங்க... மனோகர் தெருவுக்குப் போறாரு.’’

பதைபதைப்புடன் அவளோட அம்மா வந்தாள். ‘மகனே, அய்யோ! அந்தக் கெட்ட மிருகங்கள் கொன்னுடுவாங்க’’- இது அவளுடைய தாய். அப்போ கீழே ஒரு ஆரவாரம். இந்துக்கள் ஓடி வந்து கூடுறாங்க. மண்டை உடைந்த ஒரு முஸ்லிம் பிச்சைக்காரன்! உயிரைப் பற்றிய பயத்துடன் அவன் இந்தக் கட்டிடத்திற்குள் நுழைஞ்சிட்டான். வெளியே கைகளில் கழிகளை வைத்துக் கொண்டு இங்குமங்குமாக ஓடிக்கொண்டிருந்த இந்துக்கள்! மாயா தேவியின் தாய் அந்த ஆளைப் போகும்படி சொன்னப்போ, மாயாதேவி பிடிவாதமான குரலில் சொன்னாள்: ‘‘வேண்டாம்... இந்த ஆளை அவங்க கொன்னுடுவாங்க’’ அவள் அந்த முஸ்லிமை குளியலறைக்குள் போகச் செய்து கதவை மூடினாள். அவளே உணவு கொண்டுபோய்க் கொடுத்தாள். அன்னைக்கு சாயங்காலம் அந்த ஆளைக் காப்பாற்றி வண்டியில அனுப்பினாள்.

நல்ல குணம் படைத்த ஒரு இளம் பெண் மதிக்கிற ஒரு மனிதனாக ஆவது... அது ஆசீர்வாதமும், ஆனந்தமும் உள்ள ஒரு நிலை... காதல்! - கண்களால் பார்க்க முடியாத, காதுகளால் கேட்க முடியாத, நினைத்துப் பார்க்க முடியாத காதல்! காதல் நம்பிக்கைகள் என்ற மிகப் பெரிய கடலில் மூழ்கிச் செத்துப் போய் விடுவேனோன்னு நான் நினைச்சேன். எந்தவிமான பாதுகாப்பும் இல்லாத அந்தக் குஜராத்தி பிராமணக் குடும்பம் என்னை அன்புடன் கவனித்தது. மாயாதேவியின் சகோதரன் யஸ்வந்த் பி.ஏ. படித்துக் கொண்டிருந்த ஒரு நல்ல இளைஞன். நாங்க அறிமுகமானது ஒரு ஹோட்ல்ல. அவங்க வீட்டுல நான் ஒன்பது மாதங்கள் இருந்தேன். பலமுறை அங்கேயிருந்து கிளம்ப நான் முயற்சி செய்வேன்... ஆனா, அவங்க என்னை விடல. எந்த அளவுக்கு உறுதியான மனதுடன் அவங்கக்கிட்ட இருந்து விலக முயிற்சித்தேனோ, அதைவிட உறுதியுடன் சூறாவளி பலத்துடன் - நான் அவங்கக்கிட்ட மிகவும் நெருக்கமானேன். என் உணவு, என் ஆடைகள், என்னோடு சம்பந்தப்பட்ட இந்த விஷயங்களில் தேவி மிகவும் கவனம் செலுத்தினாள். நான் சிகரெட் புதைப்பதைப் பார்த்து அவள் கிண்டல் செய்வாள். பிராமமணன் சிகரெட் புகைக்கக் கூடாது!

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel