Lekha Books

A+ A A-

நினைவுச் சின்னம் - Page 5

தலைவர் மிகவும் நீளமான, ஆழமான கருத்துக்கள் கொண்ட ஒரு அருமையான சொற்பொழிவை ஆற்றினார். சுயநல எண்ணமே இல்லாமல் இலக்கிய சேவை செய்வது எப்படி என்பதற்குச் சரியான உதாரணம் தற்போது நினைவு கூரப்படும் சுதர்ம்மாஜிதான் என்று அவர் இறுதியாக கூறினார்.

தலைமை உரை முடிந்ததும், அரங்கத்தின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த ஒரு தாடி வைத்த மனிதர் எழுந்து, இரண்டு வார்த்தைகள் பேசுவதற்கு தன்னை அனுமதிக்க வேண்டும் என்று தலைவரிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டார்.

தலைவர் 'வரலாம்' என்று சைகை செய்தார்.

சொற்பொழிவாற்றும் மேடையில் ஏறி நின்ற அந்த பண்டிதர் முதலில் தன்னுடைய தாடியைச் சற்று வருடினார். தொடர்ந்து அதை பலமாக பிடித்து இழுத்தார்.

தாடி அந்த மனிதரின் கைக்கு வந்தது. எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒரு முகம் அரங்கத்தில் இருந்தவர்களுக்கு முன்னால் புன்னகை தவழ தோன்றியது. அங்கு அமர்ந்திருந்தவர்கள் ஆச்சரியத்தில் திகைத்துப் போய் விட்டார்கள்.

சுதர்ம்மாஜி!

அரங்கம் ஒட்டு மொத்தமாக அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டது. தலைவர் நாற்காலியிலிருந்து கீழே விழுந்து விடுவாரோ என்ற நிலை உண்டானது. வெற்றி முழக்கத்தால் அரங்கமே அதிர்ந்தது.

'அமருங்கள்! அமருங்கள்!' - சுதர்ம்மாஜி அரங்கில் அமர்ந்திருந்தவர்களை ஒரு வகையாக அமைதிப்படுத்தினார். பெண்களில் சிலர் மயக்கமடைந்து விழுந்தார்கள்.

'ஆமாம்... நான்.... சுதர்ம்மாஜியேதான். நான் மரணமடையவில்லை என்பதற்குச் சான்று உங்களுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் இந்த நான்தான். நான் உயிருடன் இருக்கும்போதே எனக்கான மிகப் பெரிய நினைவுச் சின்னம் இந்த நான்தான். என்றாலும் நான் சில விஷயங்களைக் கூற நினைக்கிறேன். நான் மரணமடைந்து விட்டேன் என்ற தகவலைக் கேட்டவுடன், இந்த அளவிற்கு ஆரவாரத்தை வெளிப்படுத்தி, தாராள குணத்துடன் மிகப் பெரிய முயற்சிகளில் ஈடுபட்ட உங்களில் ஒரு குழந்தை கூட நான் உயிருடன் இருக்கிறேன் என்று நீங்கள் அறிந்திருந்த காலத்தில், என்னுடைய நிலை எப்படி இருந்தது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு விரும்பவில்லை. இலக்கியத்திற்கு நறுமணம் கமழும் மலர்கள் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படும் நீங்கள் நீரும் உரமும் வெயிலும் வெளிச்சமும் கிடைக்காமல் காய்ந்து கருகும் அந்த முட்செடிகளை - இலக்கியவாதிகளை - சற்று திரும்பிப் பார்க்கக் கூட செய்வதில்லை. நான் எப்படி வாழ்ந்தேன் என்பதை உங்களுக்குக் கூறுகிறேன்.'

சுதர்ம்மாஜி தன்னுடைய பரிதாபகரமான வாழ்க்கையைப் பற்றி, எதையும் மறைத்து வைக்காமல் இதயம் நெகிழ விளக்கிக் கூறினார்.

பிரதிபாவின் மரணத்தைப் பற்றி தொண்டை அடைக்க கூறியபோது, அரங்கில் அமர்ந்திருந்தவர்களில் சிலர் குலுங்கிக் குலுங்கி அழுதார்கள்.

'ஆமாம்... வறுமை என் வாழ்க்கையையும் சரீரத்தையும் மட்டுமல்ல - என் சிந்தனைகளையும் நாக்கையும் கூட மோசமாக பாதித்தது. கடன் கொடுத்தவர்களைச் சமாதானப் படுத்துவதற்காக நான் பொய்கள் கூறினேன். காலப் போக்கில் பொய் கூறாமல் என்னால் வாழ முடியாது என்ற நிலை உண்டானது. வாழ்வதற்காக நான் எல்லாவற்றையும் விற்றேன். இறுதியில் ஒரு பெண் தன்னுடைய சரீரத்தை விற்பனை செய்வதைப் போல நான் என்னுடைய தன்மானத்தையும் விற்றேன். ஆயிரம் சிறிய பொய்களை கூறுவதை விட லாபம் தரக் கூடிய பெரிய ஒரு பொய்யைக் கூறுவது நல்லது என்று நான் தீர்மானித்தேன். மிகவும் இறுதியில் நான் என்னுடைய வாழ்க்கையையும் விற்றேன் - அதன் விலையின் ஒரு பகுதிதான் நீங்கள் பலரிடம் நன்கொடையாகப் பெற்ற 10,000 ரூபாய். நான் இன்னும் சில வருடங்கள் உயிருடன் இருந்திருந்தால், இலக்கியத்திற்கு பெரிய சேவைகளைச் செய்திருக்க முடியும் என்று நீங்கள் பேசியதைக் கேட்டேன். நானும் அதைத்தான் விரும்புகிறேன். என்னை மேலும் சில வருடங்கள் வாழ அனுமதியுங்கள். நான் சந்தோஷமாக, சுதந்திரமாக வாழ்ந்து இனியும் இலக்கிய சேவைகளைச் செய்கிறேன், அதனால் தாராள குணம் கொண்ட பெரியவர்களே, அன்புள்ள நண்பர்களே, ஆயிரக் கணக்கான என்னுடைய ரசிகர்களே, பலரிடமும் பெறப்பட்ட இந்த தொகைக்கு சரியான உரிமையாளர் நான்தான் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.'

சுதர்ம்மாஜி உயிருடன் எழுந்து வந்ததைப் பார்த்து எல்லோரும் ஆனந்தத்தால் தங்களை மறந்திருந்தார்கள் - அந்த பணம் சுதர்ம்மாஜிக்குத்தான் என்று எல்லோரும் உரத்த குரலில் கூறினார்கள்.

நினைவுச் சிலைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக வந்திருந்த திவானே 10,000 ரூபாய் கொண்ட பண முடிப்பை சுதர்ம்மாஜியின் கையில் கொடுத்தார்.

அரங்கில் அமர்ந்திருந்தவர்கள் வெற்றி முழக்கமிட்டார்கள்: 'சுதர்ம்மாஜி, ஸிந்தாபாத்!'

கான்ட்ராக்டர் லோனப்பன் மட்டும் எதிர்ப்புடன் அங்கிருந்து வெளியேறினார்.

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel