Lekha Books

A+ A A-

நினைவுச் சின்னம்

நினைவுச் சின்னம்
எஸ். கெ. பொற்றெக்காட்
தமிழில்: சுரா

சுதர்ம்மாஜி புகழ் பெற்ற ஒரு கவிஞராக இருந்தார். உணர்ச்சிகள் நிறைந்த ஏராளமான ஒளிரும் படைப்புகளால் அவர் இலக்கிய ஆலயத்தைப் பிரகாசமாக ஆக்கினார். அவருடைய பேனா நெருப்பென கனன்றது. அந்த கவிதைகள் உயர்ந்த சிந்தனைகள், சர்வதேச கொள்கைகள் ஆகியவற்றை ஆழமாகக் கொண்டிருக்கும் நெருப்பு குண்டமாக இருந்தன.

ஆட்கள் அவரை ஆதரித்தார்கள். வழிபட்டார்கள். 'இலக்கியத்தின் அணையா விளக்கு' 'மொழியின் அதிர்ஷ்ட ஒளி' என்றெல்லாம் புகழ் நிறைந்த பல பட்டங்களையும் அவர்கள் அவருக்கு அளித்தார்கள்.

ஒரு அமைதியான கிராமப் பகுதியில், தனியாக இருந்த ஒரு மலைச் சரிவில் ஒரு பழைய குடிசையில் சுதர்ம்மாஜி, மனைவியுடனும் பிள்ளைகளுடனும் வாழ்ந்தார்.

'கிராமப் பகுதியின் தனித்துவமான இயற்கை அழகை ரசிப்பதற்காக எங்கோ உட்புறத்தில் இருக்கும் ஒரு குடிசையில் அந்த கவிஞர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்' என்று அவருடைய இருப்பிடத்தைப் பற்றி தெரிந்திருந்த சில இலக்கிய ரசிகர்கள், ஆர்வம் நிறைந்த வேறு சிலரிடம் கூறினார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. தன்னுடைய சில கவிதைகளில் தான் வர்ணிக்கக் கூடிய சொர்க்கத்திற்கு நிகரான மாளிகைகளின் சுக சவுகரியங்கள் நிறைந்த அறைகளில் சிறிது நாட்களாவது வாழ்வதற்கான வாய்ப்பு கிடைக்காதா என்று சுதர்ம்மாஜி பல நேரங்களில் மனதில் வேதனையுடன் வேண்டியதுண்டு. சாதாரண தனிமைச் சூழலை விரும்பியோ, இயற்கையை பசுமையாக பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டோ சுதர்ம்மாஜி அப்படிப்பட்ட ஒரு சூழலையும், வீட்டையும் தேர்ந்தெடுக்கவில்லை. அந்த அமைதியின் எல்லைக்கு அவரை விரட்டி விட்டவை கடன் கொடுத்தவர்களின் கடுமையான வார்த்தைகளும், கொடுமையான வறுமையும்தான். அந்த நெருப்புப் பொறி பறக்கும் கவிதைகள் எதுவும் அவருடைய வயிற்றிற்குள் இருந்த சுருக்கங்களைச் சரி செய்யவில்லை. அவை வாழ்க்கையின் உண்மைகளை மறைத்து வைக்கவில்லை. தினசரி தேவைகள் ஒவ்வொரு நிமிடமும் அந்த அப்பிராணி மனிதரை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. பசியால் அழும் குழந்தையை சமாதானப்படுத்துவதற்கு அந்த உலக புகழ் பெற்ற கவிதைகள் திறமையற்றவையாக இருந்தன. சிரமங்களும் பட்டினியும் இல்லாத வாழ்க்கை என்பது சுதர்ம்மாஜியைப் பொறுத்த வரையில், ஒரு வீணான ஆசையாகவே எஞ்சி நின்றது. செல்வச் செழிப்பையும் சந்தோஷத்தையும் புகழ்ந்து இதயம் நெகிழ பாடிய அந்த கவிஞர் பசியால் துடித்தார். வறுமையின் இருள் நிறைந்த மூலைகளில் தட்டுத் தடுமாறி காலத்தை ஓட்டினார்.

'என்ன ஒரு கற்பனை! என்ன ஒரு கொள்கைத் தெளிவு! என்ன ஒரு கம்பீரமான இலக்கு! அவருடைய கவிதைக்கு மண்ணாங்கட்டியைக் கூட நெருப்புக் கனலாக மாற்றக் கூடிய சக்தி இருக்கிறது' என்றெல்லாம் சுதர்ம்மாஜியின் கவிதைகளைப் பற்றி பொது மக்களும் பண்டிதர்களும் ஒரே மாதிரி தூரத்திலிருந்து பாராட்டு மழைகளைப் பொழிந்து கொண்டிருக்க, அருகில் கடன் கொடுத்தவர்கள் 'கடன் வாங்கிய பிறகு, விளக்கு பற்ற வைத்து தேடினால் கூட, அந்த திசையில் பார்க்க முடியாத பயங்கரமான திருடன்! இரவு வேளையில் மட்டுமே வெளியே வரும் பெருச்சாளி! ஒரு மனிதப் பற்றே இல்லாத கவிஞன்!' என்றெல்லாம் அவரைப் பற்றி பின்னாலிருந்து முணுமுணுத்ததை மட்டுமே அவரால் கேட்க முடிந்தது.

சுதர்ம்மாஜிக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருந்தார்கள். என்ன செய்வது? அவருக்கு அப்படிப்பட்ட ஒரு மோசமான நிலை உண்டாகி விட்டது. இலக்கியத்தை உயிர் வாழ்வதற்கான ஒரு வழியாக ஆக்கி ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து, அது வாழ்க்கைக்கு ஒரு தாங்கக் கூடிய சக்தியாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர் ஒரு திருமணத்தைச் செய்தார். அது ஒரு சுமையாக காலப் போக்கில் ஆகி விட்டது. இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு, இறுக பிணைக்கப்பட்ட ஒரு கட்டு என்று அது ஆகி விட்டது. அந்த நான்கு பேரும் வறுமையின் பிணைப்பில் சிக்குண்டு கிடக்கும் வீணான சுமைகளாக ஆகி, கண்களுக்குத் தெரியாத ஒரு ஆழமான குழியை நோக்கி மூழ்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை கரைக்குக் கொண்டு வர கவிதையால் முடியவில்லை. அந்த கவிஞரின் மன வேதனைகள் இலக்கிய உலகைப் புத்துணர்ச்சி அடையச் செய்தன. இலக்கிய ரசிகர்களின் நரம்புகளில் உற்சாகத்தை நிறைத்தன. ஆனால், வீடும் வாசலும் இல்லாமல், காடுகளில் விளையும் சாதாரண கனிகளைச் சாப்பிட்டு, பாட்டுப் பாடி பறந்து திரியும் ஒரு குயிலல்ல மனிதக் கவிஞன் என்ற மிகப் பெரிய உண்மையை சுதர்ம்மாஜியின் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் முழுமையாக மறந்து விட்டிருந்தார்கள்.
தன்னுடைய இலக்கிய சேவையின் இறுதி விளைவு இந்த அளவிற்கு வறண்ட நிலையை அடைந்திருந்தாலும், தன் வாழ்க்கையை வேறு பக்கம் திருப்பி விடுவதற்கு சுதர்ம்மாஜி சம்மதிக்கவில்லை. அவர் தன்னைத் தானே தேற்றிக் கொண்டார்: 'காலம் செல்லச் செல்ல அனைத்தும் சரியாகும். என் படைப்புகள் சூடான நெய்யப்பத்தைப் போல உடனுக்குடன் விற்று தீரும். அந்த வகையில் நான் ஒரு பணக்காரனாக ஆவேன். புதிய ஆடைகளும் அழகான வீடுகளும் எனக்குச் சொந்தமாக ஆகும்.' ஆனால், யதார்த்தம், அவருக்கு முன்னால் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. பக்கத்து வீடுகளிலிருந்தவர்களின் கிண்டலை வெளிப்படுத்தும் பார்வை... கடன் கொடுத்தவர்களின், கொலை செய்யும் அளவிற்கு இருக்கக் கூடிய இறுதி எச்சரிக்கை.... மனைவியின் மரத்துப் போன பொறுமை... குழந்தைகளின் சத்தம் வராத அழுகைக் குரல். ஒரு பலகைத் துண்டின் மீது ஒரு துண்டுத் தாளை விரித்து வைத்து, ஒரு பழைய பேனாவைக் கையில் வைத்தவாறு அவர் கவிதையின் ஆழமான சுரங்கங்களைத் தோண்ட ஆரம்பிப்பார்.

கிழிந்த சட்டையும் அழுக்கடைந்த வேட்டியும் அணிந்து, சவரம் செய்யப்படாத முகத்துடன் அவர் வெளியேறி நடக்கும்போது, அந்தப் பகுதியில் வசிக்கக் கூடிய சிலர் 'அதோ போகிறார்... கவிஞர்' என்று கையால் சுட்டிக் காட்டிக் கூறுவதைக் கேட்டால், அவர் மாயாஜால வித்தைகள் காட்டக் கூடிய ஒரு குறவனாக இருப்பாரோ என்று தோன்றும்.

சுதர்ம்மாஜி சில பதிப்பாளர்களை அணுகி, அவர்களின் 'கைகளையும் கால்களையும்' பிடித்து, தன்னுடைய கவிதைகளைக் கொண்ட ஒரு தொகுப்பைப் பதிப்பித்துக் கொண்டு வருவதற்கு ஒரு தீவிர முயற்சி செய்து பார்த்தார்.

'கவிதையா? ச்சே... அதற்கு இப்போது மார்க்கெட் இல்லை. கதையாக இருந்தால், ஒரு முறை போட்டு பார்க்கலாம்' - அனைத்து பதிப்பாளர்களும் இப்படி கூறி நகர்ந்து கொண்டார்கள். இறுதியில் இரக்க குணம் கொண்ட ஒரு பதிப்பாளர் நூலை அச்சடித்துத் தருவதற்கு ஒத்துக் கொண்டார்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

வனராணி

வனராணி

March 10, 2012

பயணம்

பயணம்

September 24, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel