Lekha Books

A+ A A-

நினைவுச் சின்னம் - Page 3

கடன் கொடுத்தவர்களுக்கு பயந்து இரவு நேரத்தில்தான் சுதர்ம்மாஜி வெளியிலேயே வருவார். ஒருநாள் அவர் பசியால் சோர்வடைந்து, காதுகள் அடைத்துக் கொள்ளும் நிலைக்கு ஆளானார். கண்கள் இருண்டன. காலடிகள் மண்ணில் படாமல் ஒரு உயிரற்ற பிணத்தைப் போல வீட்டிற்குத் திரும்பி வரும் காட்சியை ஒரு கடைக்காரன் பார்த்தான். மறுநாள் அவன் ஒரு புதிய செய்தியை ஊரில் இருப்பவர்களுக்கு மத்தியில் பரப்பி விட்டான்: 'நேற்று நள்ளிரவு நேரத்தில் அந்த கவிஞர் இருக்கிறாரே, சுதர்ம்மாஜி.... அவர் மூக்கு வரை கள்ளு குடித்து, சிறிது கூட சுய உணர்வே இல்லாமல் சாலையில் ஆடிக் கொண்டு போவதைப் பார்த்தேன்.'

கேட்டவர்கள் அனைவரும் அதை அப்படியே நம்பினார்கள். கையில் கிடைக்கக் கூடிய காசு அனைத்தையும் கொண்டு போய் அவர் அதற்கு சாராயம் வாங்கி குடிப்பார். கடன் கொடுத்தவர்களுக்கு காசு தருவதில்லை. வீட்டில் கடுமையான பட்டினி. அந்த வகையில் சுதர்ம்மாஜிக்கு குடிகாரர் என்ற பெயரும் சேர்த்து கிடைத்தது. அவருடைய சில ரசிகர்கள் மட்டும் அதை நம்பவில்லை. மீதிப் பேர் அதை நியாயப்படுத்தினார்கள்: அதில் என்ன இருக்கிறது? 'உண்மையான ரசனை கொண்ட கவிஞர்களுக்கு ஏதாவது சாதாரணமான ஒரு கெட்ட பழக்கம் இருக்கத்தான் செய்யும். துஞ்சத்து எழுத்தச்சன் முன்பு குடிக்கவில்லையா?'

அதனால் காலப் போக்கில் சுதர்ம்மாஜிக்கு மனரீதியாக ஒரு வீழ்ச்சி உண்டாகுமோ என்று கூட அச்சப்பட்டார்கள். அவருடைய கற்பனைகளை ஒரு இருள் மூடி விட்டிருந்தது. தினசரி தரித்திர சூழலிருந்து விடுபடுவதற்காக அவர் முடிந்த வரையில் முயற்சித்தார். முடியவில்லை. தினசரி தேவைகள் அவரை கட்டிப் போட்டன. விருப்பம் என்ன என்பதே அவருக்குத் தெரியாமலிருந்தது. சுதர்ம்மாஜி பூமியில் வாழும் ஒரு மனிதராக இல்லாமற் போயிருந்தார். அவருடைய தலை கற்பனை நிறைந்த இன்னொரு உலகத்திலும், சரீரம் நரகத்திலும் எல்லா நேரங்களிலும் இருந்தன. தற்காலிகமான சிரமங்களின் கொடுமையாலும் பட்டினியாலும் விரக்தியாலும் சுதர்ம்மாஜியின் சிந்தனைகள் தற்கொலை என்ற சுவருக்கு வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தன. ஆனால், மனைவியும் குழந்தைகளும் அடங்கிய சுமையின் காரணமாக அதற்கு அப்பால் அவரால் நகர முடியவில்லை.

ஒரு நாள் உச்சிப் பகல் வேளையில் சுதர்ம்மாஜி ஒரு நண்பரைத் தேடி ஒரு வயலின் வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார். களைப்பைப் போக்குவதற்காக அவர் ஒரு கோவிலின் குளத்திற்கு அருகிலிருந்த ஒரு ஆலமரத்திற்குக் கீழே இருந்த பீடத்தில் போய் உட்கார்ந்தார். வெயிலின் அதிக வெப்பமும் பசியின் கடுமையும் அவரை ஒரு உயிருள்ள பிணமாக ஆக்கின. கையில் ஒரு தேய்ந்து போன செம்புக் காசு கூட இல்லை. ஒரு உஷ்ணம் தகிக்கும் வயலின் வழியாக இனிமேலும் மூன்று கல் தூரம் நடக்க வேண்டும். சுய உணர்வை இழந்து வழியில் விழுந்து விடுவோமோ என்று கூட அவர் பயந்தார்.

அருகிலிருந்த ஒரு நிலத்தில் உயரம் குறைவாக இருந்த ஒரு தென்னை மரத்தில் பெரிய ஒரு இளநீர் குலை வெளியே தொங்கிக் கொண்டிருப்பது சுதர்ம்மாஜியின் பார்வையில் பட்டது. தாகத்தால் பார்வை தெரியாமல் அவர் அதை நோக்கி நடந்தார். அந்த செழிப்பாக இருந்த இளநீர் குடங்களில் ஒன்றில் அவர் தன் கையை வைத்தார். சுதர்ம்மாஜி நான்கு பக்கங்களிலும் திரும்பிப் பார்த்தார். ம் அரை மைல் தூரம் அளவிற்கு ஒரு உயிரினத்தைக் கூட பார்க்க முடியவில்லை.

'யாருக்குச் சொந்தமானது இது?' - சுதர்ம்மாஜியின் மனச்சாட்சி முணுமுணுத்தது. அவர் தன் கையை பின்னோக்கி இழுத்துக் கொண்டார்.

'கடன் கொடுத்தவர்களைச் சமாதானப் படுத்துவதற்காக நான் பல நேரங்களில் பொய் கூறியிருக்கிறேன். ஆனால், எந்தவொரு நேரத்திலும் நான் திருடியது இல்லை' - சுதர்ம்மாஜி தன் மனதிற்குள் நினைத்தார்: 'எனக்கென்று ஒரு பெயர் இருக்கிறது - கவிஞன். கவிஞர்கள் பொய் கூறியிருக்கிறார்கள். பெண்களுடன் தவறான உறவு கொண்டிருக்கிறார்கள். ஆனால், திருடியதாக கேள்விப்பட்டதில்லை' - அவர் தலையைத் தாழ்த்தியவாறு ஆலமரத்தடியை நோக்கி திரும்பி, வயலின் நடுவிலிருந்த சோளக் கொல்லை பொம்மையை வெறித்துப் பார்த்தவாறு கூறினார்: 'திருடுவதற்குக் கூட சுதந்திரம் இல்லாத ஒரு மனிதன்!'

சுதர்ம்மாஜியின் வறண்டு போய் காணப்பட்ட கண்களிலிருந்து இரண்டு துளி கண்ணீர் அந்த ஆலமரத்திற்குக் கீழே இருந்த பீடத்தில் உதிர்ந்து விழுந்தன.

பிரபாவும், பிரதிபாவும் - இவைதான் சுதர்ம்மாஜியின் குழந்தைகளின் பெயர்கள். இளைய குழந்தையான பிரதிபாவிற்கு ஒன்றரை வயது. சுதர்ம்மாஜிக்கு பணம் வருவதற்கான அனைத்து இடங்களும் அடைக்கப்பட்டு விட்ட சூழ்நிலையில் பிரதிபாவிற்கு காய்ச்சல் வந்தது. அது ஒரு கடுமையான ஜுரமாக இருந்தது. மருந்துகளின் தட்டுப்பாடும் உணவு பிரச்னையும் சேர்ந்து அந்த குழந்தையை அபாயமான நிலைக்குக் கொண்டு போய் விட்டது. தாயின் நிராசை கலந்த பெருமூச்சுக்களாலோ, இதயத்தைப் பிழிந்து வந்த கண்ணீராலோ அந்த குழந்தையைக் காப்பாற்றுவதற்கு முடியவில்லை.

சுதர்ம்மாஜி மீண்டும் தன்னுடைய ஒரு நெருங்கிய நண்பனைத் தேடிச் சென்று விஷயத்தைக் கூறினார். அவன் ஒரு மருத்துவ மாணவன்.

நண்பன் கூறினான்: 'மிகவும் வருத்தப்படுறேன். வரும் வாரத்தில் வந்தால், ஏதாவது தருகிறேன்.'

'அந்தச் சமயத்தில் என் குழந்தை இறந்து விடும்' - சுதர்ம்மாஜி கவலையுடன் கூறினார்.

'என்ன செய்வது? என் கையில் காசு இல்லை என்று நான்தான் சொன்னேனே!' - சுதர்ம்மாஜி திரும்பி நடந்தார். வாசற்படியை அடைந்தபோது, அந்த மருத்துவ மாணவன் தன் மனைவியிடம் கிண்டல் கலந்த குரலில் கூறுவதை சுதர்ம்மாஜி கேட்டார்: 'குழந்தை இறந்துவிட்டால், பிணத்தை நான் வாங்கிக் கொள்கிறேன்.'

ஒரு நாட்டு வைத்தியர் கூறிய சாதாரண மருந்துகளால் பிரதிபாவிற்கு நோய் குணமாகவில்லை. பச்சைத் தண்ணீர்தான் இருந்ததே தவிர, அதை வெப்பப்படுத்துவதற்கு ஒரு விறகுக் கொள்ளி கூட வீட்டில் இல்லை.
சுதர்ம்மாஜி அறையின் மூலையைப் பார்த்தார். அங்கு அவருடைய கவிதை நூல்கள் கட்டி வைக்கப்பட்டிருந்தன. நூறு பிரதிகளுக்கு மேல் கையை விட்டு போகவில்லை. அச்சகத்தில் கடன் தீராமலிருந்தது. தொள்ளாயிரம் பிரதிகள் அங்கு கட்டி வைக்கப்பட்டு இருந்தன.

சுதர்ம்மாஜி அந்த புத்தகங்களை அள்ளி அடுப்பிற்கு அருகில் கொண்டு போய் போட்டார்.

'இதை எரிய வைத்து நீரைச் சூடு பண்ணி கொடு' - சுதர்ம்மாஜி தன் மனைவியிடம் கூறினார்: 'என் மகள் வெப்பத்தையும் வெளிச்சத்தையும் வாங்கி இறக்கட்டும்.'

அந்த வகையில் அந்த 'நெருப்புப் பொறிகள்' ஒவ்வொன்றாக உண்மையான நெருப்புப் பொறிகளைத் தொட்டன. அந்த கவிதைகள் நெருப்பிடம் என்னவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தன. அந்த புத்தகங்களின் வெண்மையான பக்கங்கள் ஒவ்வொன்றாக எரிந்து கரிந்து சுருங்கி சாம்பலாகி வெளியே பறந்து சென்றன.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel