Lekha Books

A+ A A-

வாழ்க்கைப் போட்டி - Page 3

குட்டி அம்மாவிற்கு பதில் கூற முடியவில்லை. அவள் என்ன பதில் கூறுவாள்? கார்த்தியாயனி இளைய குழந்தையை இடுப்பில் வைத்தாள். மற்றவர்களை அருகில் அழைத்து நிறுத்தினாள். கார்த்தியாயனிக்கு மேலும் சிறிது உயரம் உண்டானதைப் போல தோன்றியது. அவள் தலையை உயர்த்திக் கொண்டு கூறினாள்:

'மண்வெட்டியை வைத்து வெட்டும் வேலையைப் பார்ப்பவனாக இருந்தாலும், என் பிள்ளைகளின் அப்பா அவர்தான். துண்டின் நுனியில் அரிசியைக் கட்டிக் கொண்டு வந்து தந்துதான் நாங்கள் சாப்பிடுறோம். எங்களுக்கு அது சந்தோஷமாக இருக்கு!'

தொடர்ந்து அவள் நடந்தாள். அவள் குழந்தைகளுடன் படியைக் கடந்ததும், குட்டி அம்மாவின் உதடுகளிலிருந்து ஒரு சத்தம் வெளியே வந்தது.

'மகளே!'

சரோஜினி, பத்மாக்ஷி ஆகியோரின் நாவிலிருந்தும் ஒரே நேரத்தில் இன்னொரு வார்த்தை வெளியே வந்தது.

'அக்கா!'

அதை அவள் கேட்டாளோ என்னவோ? எது எப்படி இருந்தாலும் அவள் திரும்பிப் பார்க்கவில்லை.

பிள்ளைகள் தங்களின் தந்தையைப் பார்க்கும் அவசரத்தில் உற்சாகமாக ஓடிக் கொண்டிருந்தனர்.

வழிச் செலவிற்கு காசு இல்லை. கிருஷ்ணன் குட்டியின் இடுப்பில் கிடந்த அரைஞாணத்தை கடையில் விற்று அவள் பணத்தைத் தயார் பண்ணினாள்.

சரோஜினிக்கு ஒரு திருமண ஆலோசனை வந்தது. மாதமொன்றிற்கு எழுநூற்றைம்பது ரூபாய் சம்பளம் வாங்கக் கூடிய ஒருவன். சுகுமாரனின் நண்பன்தான். அவன் பெண்ணைப் பார்ப்பதற்காக பத்தாம் தேதி வருகிறான். விளக்கமாக எல்லா காரியங்களையும் சுகுமாரன் எழுதியிருக்கிறான்.

அது பெரிய சந்தோஷத்தைத் தரும் செய்தியாக இருந்தது. மகள் நல்ல நிலைக்கு போகிறாளே! ஆனால், குட்டி அம்மாவின் மனதை ஒரு நினைவு ஊமையாக்கி விட்டிருந்தது. மூத்த மகள் கார்த்தியாயனியை அவளால் மறக்க முடியுமா?

வீட்டிலுள்ளவர்கள் கூடியிருந்த இடத்தில் குட்டி அம்மா ஒரு பிரச்னையை முன் வைத்தாள். குடும்பத்தில் ஒரு முக்கியமான சம்பவமல்லவா அது? கார்த்தியாயனிக்கு தெரிவிக்க வேண்டாமா?

சரோஜினியிடம் உடனடியாக பதில் இருந்தது.

'வேண்டாம்... வேண்டாம்... அந்த ஆளையும் பிள்ளைகளையும் அக்காவையும் சேர்த்து பார்த்தால்...'

பத்மாக்ஷி அதை முழுமை செய்தாள்.

'அவர்கள் வந்த கால்களுடன் திரும்பிச் செல்வார்கள்.'

அந்த தாயின் நாக்கு அடங்கியது. எனினும், அவளிடம் கூறுவதற்கு இருந்தது.

'அடியே... அவள் என் மூத்த மகள். உங்களையெல்லாம் தூக்கி வளர்த்தவள்.'

சரோஜினி கோபித்தாள்:

'இல்லை என்று சொன்னோமா? அந்த அன்பு இருக்கிறது. ஆனால், அன்பைக் கேட்டால், வெட்கக் கேடாகும்.'

சிறிது நேரம் நினைவில் மூழ்கி விட்டு, குட்டி அம்மா ஒரு நீண்ட பெருமூச்சுடன் கூறினாள்:

'அது உண்மைதான்.'

சிறிது நேரம் கழித்து அவள் தொடர்ந்து கூறினாள்:

'பாவம்... அதிர்ஷ்டமில்லாத என் குழந்தை!'

அவளுடைய கண்கள் நிறைந்தன.

சரோஜினி கூறினாள்:

'அண்ணனுக்கு எழுதி, கேட்போம்.'

அது அந்த தாய்க்கும் சரியான விஷயமாக பட்டது.

சுகுமாரனின் கடிதம் வந்தது. சரோஜினி கூறியதைப் போலத்தான். கார்த்தியாயனியையும் பப்பு நாயரையும் அழைக்க வேண்டாம். அது குறைச்சல் அளிக்கக் கூடிய காரியம் மட்டுமல்ல. அந்தத் திருமணமே நடக்காமற் போனாலும் போகலாம். காரணம் -- அவனுடைய வார்த்தையில் இப்படி இருந்தது:

'நாம பாரம்பரியம் இல்லாதவர்களாக இருந்தோம் என்று அவர்கள் நினைப்பார்கள்.'

குட்டி அம்மா அந்த வார்த்தைகளின்படி நடந்தாள். ஒரு மகளின் நன்மைக்காக மூத்த மகளை தியாகம் செய்தாள்.

இளைஞனுடன் சேர்ந்து வந்திருந்த ஒரு ஆள் பேச்சுக்கு இடையே ஒரு கேள்வியை குட்டி அம்மாவிடம் கேட்டான்:

'அம்மா, உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?'

சிறிதும் எதிர்பார்த்திராத ஒரு சாதாரண கேள்வி அது. அவள் தொண்டை அடைக்க நின்று கொண்டிருந்தாள். ஒரு நிமிடம் அவளுடைய மூளைக்கும் இதயத்திற்குமிடையே மிகப் பெரிய ஒரு போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் மூளை வெற்றி பெற்று, குட்டி அம்மா தட்டுத் தடுமாறி கூறினாள்:

'மூ... மூணு... குழந்தைகள். ஒண்ணு...'

அவன் கேட்டான்:

'ஒண்ணு இறந்திருக்கணும். கவலை மறையவில்லையே!'

குட்டி அம்மா பதில் கூறவில்லை. அவளுடைய கண்கள் நிறைந்தன.

அவன் அதற்குப் பிறகு... தொடர்ந்து எதுவும் கேட்கவில்லை.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel