Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

வாழ்க்கைப் போட்டி - Page 2

அதற்கு யார் குற்றவாளி? யாரையும்... யாரையும் குற்றம் கூறுவதற்கில்லை. தாய் மூத்த மகள் மீது அன்பு இல்லாமல் இருப்பாளா? முதலில் அவளை அன்னையாக ஆக்கியது அவள்தானே? உடன் பிறந்தவளிடம் சரோஜினிக்கும் பத்மாக்ஷிக்கும் பாசம் இல்லாமல் இருக்குமா? உண்மையிலேயே இருக்கும். பிறகு... தவறு எங்கே இருக்கிறது?

பப்பு நாயர் ஒரு மாட்டைப் போன்றவன் என்று அந்த தாய் கூறுகிறாள். அவன் கார்த்தியாயனியின் மீது அன்வு வைத்திருக்கிறான். அந்த விஷயத்தில் அவளுக்கு சந்தேகமில்லை. ஆனால், ஒரு பிறப்பும் விவரமும் இல்லை. வயிறு புடைக்க சாப்பிட தெரியும். கிடைப்பவை அனைத்தையும் சாப்பிடுவான். இன்று வரை நான்கு காசு சேமித்து வைக்கவில்லை. ஒரு வளர்ச்சியும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு சிந்தனையும் இல்லை. ஒரு காட்டு மாடு. ஒரு இரண்டு கால்களைக் கொண்ட மிருகம்... அவனுக்குப் பிறந்த மூன்று பிள்ளைகளும்... எப்படி தன் மூத்த மகளைக் காப்பாற்றுவது என்பதுதான் அந்த அன்னையின் சிந்தனையாக இருந்தது. அவள் தன் மற்ற பிள்ளைகளிடம் கூறினாள்:

'ஒரு விஷயத்தை நீங்கள் எல்லோரும் மனசுல வச்சிக்கணும். இங்கே இருக்கும் அனைத்திலும் நான்கில் ஒரு பாகம் என் கார்த்தியாயனிக்கு உள்ளது. என் பெயரில்தான் அனைத்தும் இருக்கு.'

அந்த விஷயத்தில் சரோஜினிக்கும் பத்மாக்ஷிக்கும் கருத்து வேறுபாடு இல்லை. அவர்களும் கூறினார்கள்:

'அது வேண்டாம் என்று நாங்கள் சொன்னோமா? ஆனால், அதை எப்படி அந்த ஆளிடம் ஒப்படைப்பது? கொடுத்தால், அவர் கப்பைக் கிழங்கு தின்று அழித்து விடுவார்.'

அதுதான் அந்த அன்னையையும் கவலைப்பட வைத்தது. சரோஜினி கூறினாள்:

'அக்காவின் அழகு கூட பாழாயிடுச்சு.'

'அது எப்படி நல்லா இருக்க முடியும்? மண்வெட்டியை வைத்து வெட்டுபவனுடன் அல்லவா வாழ்க்கை?'

அதைத் தொடர்ந்து தாயும் பிள்ளைகளும் சேர்ந்து ஆழமாக கலந்தாலோசித்தார்கள். அந்த நரகத்திலிருந்து கார்த்தியாயனியைக் காப்பாற்றுவதற்கு என்ன வழி? அந்த வகையில் ஒரு மண்வெட்டி வேலைக்காரனுடன் சேர்ந்து வாழ்வது என்பது அவர்களுக்கு குறைச்சல் அளிக்கக்கூடிய விஷயமாக இருந்தது. அவர்களின் வளர்ச்சிக்கு அது தடையாக இருந்தது. பத்மாக்ஷி கூறினாள்:

'அக்கா இங்கே வசித்தால், நல்ல அழகா இருப்பாங்க!'

சரோஜினி கூறினாள்:

'அந்த பிள்ளைகளையும் நாம நல்லாக்கிடலாம்.'

தாய் கூறினாள்:

'அப்படின்னா, அவனும் வருவான்.'

அது யாருக்கும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விஷயமாக இல்லை. அவன் அங்கு என்றில்லை -- எங்கு சென்றாலும், ஒரு காட்டு மாட்டைப் போலத்தான் இருப்பான். அவன் மண்வெட்டியை வைத்து வெட்டுவதற்காக பிறந்தவன்.

என்ன வழி? பத்மாக்ஷியின் மூளையில் ஒரு எண்ணம் தோன்றியது.

'அண்ணனிடம் கூறி கடிதம் எழுதச் சொன்னால் என்ன?'

'அது வேண்டாம்...' - சரோஜினி சொன்னாள்.

'அந்த ஆளை விட்டுட்டு, இங்கே வந்து தங்கும்படி அண்ணனிடம் ஒரு கடிதம் எழுதி வாங்கி வைத்துக் கொள்ளணும். அதற்குப் பிறகு அம்மா போய், அக்காவை அழைச்சிட்டு வரணும். பிறகு... விடக் கூடாது.'

தாய் கேட்டாள்:

'அப்படின்னா, அவன் வந்தால்?'

'அவனைப் போகச் சொல்லணும்.'
அது ஒரு நல்ல வழியாக தோன்றியது.

பல நாட்கள் ஆவதற்கு முன்பு 'அன்புள்ள அக்கா'விற்கு சுகுமாரன் எழுதிய ஒரு கடிதம் குட்டி அம்மாவின் முகவரிக்கு வந்தது. அவர்களின் அன்னை, கார்த்தியாயனியை அழைத்துக் கொண்டு வருவதற்காகச் சென்றாள்.

எதற்காக தன்னை அழைத்துக் கொண்டு செல்வதற்கு தன் அன்னை வந்திருக்கிறாள் என்ற விஷயம் கார்த்தியாயனிக்கு புரியவில்லை. ஏதோ ஒரு நோக்கம் இருக்கிறது என்று அவளுக்கு தோன்றியது. எவ்வளவு சிந்தித்தும், தன் அன்னையிடம் விசாரித்தும் அதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. பப்பு நாயரிடம் கேட்காமல், வர முடியாது என்று அவள் சொன்னாள். பப்பு நாயருக்கும் அந்த பாசத்தின் நோக்கம் புரியவில்லை. ஆனால், அவன் ஒரு விஷயத்தைக் கூறினான்:

'நீ உன் அம்மாவுடன் சேர்ந்து போ. நான் தடுக்கவில்லை. ஆனால், திரும்ப அழைத்துக் கொண்டு வருவதற்கு நான் வரமாட்டேன். நீயேதான் வரணும்.'

அதற்கு கார்த்தியாயனி சம்மதித்தாள்.

அப்போது இன்னொரு பிரச்னை: பிள்ளைகளில் ஒருத்தனுக்கும் தங்களின் தந்தையைப் பிரிந்து செல்வதற்கு மனம் வரவில்லை. எல்லோரும் கூறியது 'நான் வரவில்லை' என்றுதான். அம்மா போய் வரட்டும். அவ்வளவு நாட்களும் எங்கள் தந்தையுடன் இருந்து கொள்கிறோம் என்று கூறினார்கள் அவர்கள். குட்டி அம்மா பலவற்றையும் கூறி பார்த்தாள். 'நல்ல ஆடைகள் வாங்கித் தருகிறேன். நெய்யப்பம் செய்து தருகிறேன்' என்றெல்லாம் கூறினாள். ஆனால், அவர்களுக்கு அவை எதுவும் வேண்டாம். இரண்டாவது மகன் கூறினான்:

'ஆடை அணிந்தாலும், அப்பாவைப் பார்க்க முடியாதே!'

இறுதியில் ஒரு வகையாக பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு கார்த்தியாயனி கிளம்பினாள். பாதி வழி வந்ததும் இளையமகன் தன் தந்தையை அழைத்து அழ ஆரம்பித்தான்.

வீட்டை அடைந்த அன்று இரவு எல்லா பிள்ளைகளும் தங்களின் தந்தையை அழைத்து அழுதார்கள். யாருக்கும் ஒரு நிம்மதியையும் தரவில்லை. அவர்கள் தங்களின் தந்தையுடன் படுத்து உறங்கி பழகியவர்கள்.

மறுநாளும் சண்டைதான். அடுத்த நாள் அவர்கள் கார்த்தியாயனிக்கு ஒரு மன அமைதியையும் தரவில்லை. வீட்டு விஷயங்களை நினைத்து அவளுக்கும் ஒரு மன அமைதியும் இல்லாமற் போனது.

அவளுடைய கணவன் காலையில் எதுவும் சாப்பிடாமல்தான் போயிருப்பான். வேலை முடிந்து திரும்பி வந்து ஏதாவது சமைத்து சாப்பிடுவானோ என்னவோ? இப்போது மிகவும் தளர்ந்து போய் இருப்பான். இப்படி அவள் மனதிற்குள் கவலைப்பட்டாள். எதற்காக அழைத்துக் கொண்டு வந்தோம் என்ற விஷயத்தை யாரும் கூறவுமில்லை.

நான்காவது நாள் கிருஷ்ணன் குட்டி தீர்மானமான குரலில் கூறினான்: 'அம்மா, நீங்கள் வராவிட்டால், நாளை நான் என் அப்பாக்கிட்ட போயிடுவேன்.'

அதையே இரண்டாவது மகனும், புரியாத மொழியில் மூன்றாவது மகனும் கூறினார்கள்.

தாயும் இளைய மக்களும் சேர்ந்து ரகசியமாக கலந்தாலோசனை செய்து விட்டு, சுகுமாரனின் அந்த கடிதத்தை கார்த்தியாயனியின் கையில் கொடுத்தார்கள். என்ன காரணத்தாலோ என்னவோ... யாராலும் அதை அவளுடைய முகத்தைப் பார்த்து கூறுவதற்கு முடியவில்லை.

கார்த்தியாயனி அந்த கடிதம் முழுவதையும் மீண்டுமொருமுறை வாசித்தாள். அவளுக்கு கோபம் வரவில்லை. கவலை வரவில்லை. அவள் சிறிது புன்னகைக்க மட்டும் செய்தாள். தொடர்ந்து அவள் தன் தாயின் முகத்தைப் பார்த்து கேட்டாள்:

'அம்மா, நீங்க ஒருத்தனுடன் சேர்ந்து வாழ்ந்து நான்கு குழந்தைகள் பிறந்தன. அல்லவா? நீங்கதானே எங்களை 'அப்பா' என்று அழைக்க சொல்லித் தந்தது?'

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version