Lekha Books

A+ A A-

நீலவானமும் சில நட்சத்திரங்களும் - Page 5

neela vaanamum sila natchathirangalum

பிள்ளை ராமதாஸ் இருக்கும் அறையின் முன்னால் வந்ததும் நின்றார். இருளடைந்து போய்க் காணப்பட்ட அவ்வறையை ஒரு முறை ஆராய்ந்து முடித்தன அவர் கண்கள். அதற்குள் ஸ்ரீதரனும் அங்கு வந்துவிட்டான். ஸ்ரீதரனின் கையிலிருந்த டார்ச் விளக்கை வாங்கி அடித்துப் பார்த்தார் பிள்ளை. ராமதாஸ் உள்ளே இங்கும் அங்குமாய் நடந்துகொண்டிருந்தான். மன சாந்தி வேண்டி அவன் கால்கள் வேகமாக அப்போது இயங்கிக் கொண்டிருந்தன.

“ராமதாஸ்...” - பிள்ளை அழைத்தார்.

அவர் அழைத்தது அவன் காதில் விழவில்லை போலிருக்கிறது.

“கதவைத் திற!” - ஸ்ரீதரனிடம் கூறினார் பிள்ளை.

“ஸார், நீங்க மட்டுமா? ஆபத்து ஸார் இது. வேணும்னா ரெண்டு ஆளுங்களை வரச் சொல்லுறேன்.”- ஸ்ரீதரனின் குரலில் பயத்தின் சாயல் படர்ந்திருந்தது.

“வேண்டாம். இவன் என்ன செய்யப்போகிறான்? பாவம்...” -பிள்ளையின் குரலில் திடமிருந்தது.

பயந்து கொண்டே கதவைத் திறந்தான் ஸ்ரீதரன். பிள்ளை வேகமாக உள்ளே நுழைந்தார். அவருக்குப் பின்னால் ஸ்ரீதரனும். ராமதாஸ் அவர்களைக் கண்டதும் நின்றான். பிள்ளையின் முகத்தை நோக்கியவாறு கேட்டான்; “என்ன நேரமாயிடுச்சா ஸார்?”

“இல்ல...” - பிள்ளையின் குரலில் ஆச்சரியத்தின் அறிகுறிகள் தெரிந்தன.

“பிறகு...?” -ராமதாஸ்.

மெதுவான குரலில் கூறினார் பிள்ளை. “இன்னும் எட்டே எட்டு மணி நேரம்தான் இருக்கு. அதுக்கு முன்னால ஏதாவது வேணும்னா...?”

“எனக்கு ஒண்ணும் வேண்டாம் ஸார்!”

“யாரையாவது பார்க்கணும் போல இருக்கா?”

“இல்ல...”

“சரி; ஏதாவது வேணும்னா எங்கிட்டே தயங்காமச் சொல்லு, தெரியுதா?” - வெளியே போக கால் எடுத்து வைத்த பிள்ளை கூறினார், “விடியறதுக்கு முன்னாடி மூணு மணி சுமாருக்கு நாங்க வருவோம். எல்லாம் ஒழுங்கா நடக்கணும்னா நிச்சயம் உன் ஒத்துழைப்பு எங்களுக்கு வேணும்.”

ஒன்றும் பதில் கூறாமல் மீண்டும் பழைய மாதிரியே அறையினுள் நடக்க ஆரம்பித்தான் ராமதாஸ்.

“ம்... கதவை அடைச்சிடு ஸ்ரீதரா.”

ஸ்ரீதரன் கதவை இழுத்துப் பூட்டினான்.

“இங்க ஒரு ஆளை நிறுத்தணும், உடனடியா தெரியுதா?” ஸ்ரீதரனிடம் கூறினார் பிள்ளை.

“சரி ஸார்.”

பிள்ளை மீண்டும் தன் அறையை நோக்கிப் போனார். அங்கே சிறைக்கைதிகளின் இரவு உணவுக்கான சாம்பிலுடன் காத்திருந்தான் பணியாள் ஒருவன். இலேசாக எடுத்து வாயில் வைத்து ருசி பார்த்த பிள்ளை “போதும்” என்று சைகை மூலம் கூறி அவனை அனுப்பி வைத்தார். நாற்காலியில் அமர்ந்த அவர் சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தார். சிறிதுநேரத்தில் என்ன நினைத்தாரோ, எழுந்து அறைக்குள் உலாவ ஆரம்பித்தார். அப்போதுதான் சாப்பிட்டு முடித்து வந்திருந்தான் ஜெயிலர் தாமஸ்.

“ஸார், சாப்பிட்டாச்சா?”

“இல்ல. எனக்கு ஒண்ணும் வேண்டாம். நாம முறையா எல்லாத்தையும் ‘ரெடி’ பண்ணி வைக்கணும்ல?”

“ஆமாம் ஸார். எல்லாம் ரெடி பண்ணி வச்ச மாதிரிதான். ஸார் வேணும்னா ஒரு தடவை வந்து பாருங்க.”

தாமஸ் நடக்க பின்னால் நடந்து போனார் பிள்ளை. இரண்டு மூன்று பணியாட்கள் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் சகிதமாக அங்கு நின்று கொண்டிருந்தார்கள். வழியில் தாமஸ் கேட்டான், “டாக்டர் எத்தன மணிக்கு வருவார்?”

“ஓ... அதைச் சொல்ல மறந்துட்டேனே! ரெண்டு ரெண்டரை மணி சுமாருக்கு டாக்டரின் வீட்டுக்கு ஒரு ஆளை அனுப்பணும் மறந்துடாதே.”

தாமஸ் கயிற்றின் ஒரு நுனியில் கல்லைக் கட்டி இரும்புச் சக்கரத்தின் வழியே தொங்கவிட்டான். லிவர் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று கடைசியாக ஒரு முறை சரிபார்த்துக் கொண்டான். எல்லாம் சரியாகவே இருந்தன. திரும்பி வருகின்ற போது, பிள்ளை கேட்டார். “அவன் ஒழுங்கா நிற்பானா? அவன் பாட்டுக்குப் பலகையில் உருள ஆரம்பிச்சிட்டான்னா...?”

“அதெல்லாம் ஒழுங்கா நிற்பான் சார்”- தாமஸுக்கு இந்த விஷயத்தில் ஏனோ சந்தேகமில்லை.

“இருந்தாலும் எனக்கென்னவோ சந்தேகமாத்தானிருக்கு.”

“ஏன் சார்?”

“இன்னும் அவன் மனசைத் திறந்து பேசலியே!”

“மனம் திறந்துன்னா?”

“எதையும்தான்.”

அதற்குள் அறை வந்துவிடவே, “சரி, தாமஸ்... நீ போ. நான் நாற்காலியில் உட்கார்ந்து கொஞ்ச நேரமாவது தூங்கப் பார்க்குறேன்” என்று கூறி தாமஸை அனுப்பி வைத்தார் பிள்ளை. கால்களை மேஜை மேல் போட்டுக்கொண்டு கண்களை மூடிக் கொண்டார்.

அழகான ஒரு பூங்கா. அதில் பிள்ளை மெல்ல நடந்து போய்க் கொண்டிருக்கிறார். அவருடைய சுட்டு விரலைப் பிடித்துக் கொண்டு சிரித்தவாறு அழகாக அவருடன் நடக்கிறாள் அவருடைய அன்பு மகள் மினி. அவர்களைச் சுற்றிலும் பலப்பல வண்ணங்களில் நறுமண மலர்கள். செடிகளில் தாவித் தாவி விளையாடிக் கொண்டிருந்த கிளிகள் எழுப்பிய இனிய ஒலிகள்! அந்த இனிமையான மாலைப் பொழுது மஞ்சள் வண்ணத்தைச் சிதறவிட்டிருந்தது. செடிகளிலிருந்து மலர்களைக் கொய்ய வேண்டும் என்று எண்ணி ஆவலுடன் இளம் கைகளை நீட்டிக் கொண்டே நடந்து போகிறாள் மினி. திடீரென்று அவள் எதையோ கண்டு அரண்டது மாதிரி தலை தெறிக்க ஓடுகிறாள். அவளுக்குப் பின்னால் இரண்டு தலைகளுள்ள ஒரு பெரிய பாம்பு “அப்பா... அப்பா...” அவளுடைய குரல் விண்ணைப் பிளக்கிறது. அவளை விரட்டிக் கொண்டு பாம்பும் விடாமல் ஓடுகிறது. அவரால் பாம்பின் வேகத்திற்கு ஓட முடியவில்லை. கால்களை ஏதோவொன்றில் கட்டிப்போட்டது போல் இருக்கிறது. மினியோ எத்தனையோ மைல்களுக்கப்பால் இருக்கிறாள்... அவளுக்குப் பின்னால் அந்த ராட்சஷப் பாம்பு...!

இறுதியில் மூச்சிரைக்க நிற்கிறாள் மினி. அந்தப் பாம்பு தன் படத்தை விரித்துக்கொண்டு மினியின் உடலில் ஒரு கொத்து!

“மினி! மினி!” உறக்கத்திலிருந்து திடுக்கிட்டெழுந்த பிள்ளை தன்னை மறந்து கத்திக் கொண்டிருந்தார். உடம்பு முழுவதும் வியர்வைத் துளிகள். தான் கண்டது கனவுதான் என்று உணர்ந்து கொள்ளவே அவருக்குச் சில வினாடிகள் பிடித்தன. திடீரென்று என்ன நினைத்தாரோ, கடிகாரத்தைப் பார்த்தார். மணி சரியாக இரண்டரை ஆகி விட்டிருந்தது. அவ்வளவுதான்... ‘விசுக்’கென்று இருந்த இடத்தை விட்டு எழுந்தார். அதற்குள் ஸ்ரீதரனும் தாமஸும் அங்கு வந்து விட்டார்கள்.

“எப்படியோ என்னை மறந்து கண் அசந்துட்டேன். ம்... போவோமா? ஆமா... டாக்டர் வீட்டுக்கு ஆள் அனுப்பியாச்சா?”

“அனுப்பியாச்சு ஸார்!” - தாமஸ் கூறினான்.

“எல்லாம் வேகமா நடக்கணும். தாமஸ், நீ ஒண்ணு செய்யி, பத்ரோஸையும் கூட்டிக்கிட்டு அங்கே வந்திடு.”

“சரி, ஸார்!” -தாமஸ் நடந்து போனான்.

“டேய், ஸ்ரீதரா! நீ முன்னால் நட...”

ஸ்ரீதரன் முன்னால் நடக்க, பின்னால் நடந்து சென்றார் பிள்ளை. இருவரும் ராமதாஸ் இருக்கும் அறையை அடைந்ததும் நின்றனர்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel