Lekha Books

A+ A A-

நீலவானமும் சில நட்சத்திரங்களும் - Page 4

neela vaanamum sila natchathirangalum

“இந்த ஆளு என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தாரு. அவன் கேட்கிற மாதிரி இல்ல. அவன் பாட்டுக்கு சுவத்துல தலையை முட்டிக்கிட்டு அழுதுக்கிட்டே இருந்தான்...”

“அவனுக்கு ஏதாவது வேணுமான்னு கேட்டியா?”

“கேட்டேன் ஸார்! ஆனா, நான் சொல்றது அவன் காதுலயே விழல...”

“சரி... நீ போ.”

மாலையில் தேநீர் குடிப்பதற்காக வீட்டுக்கு வந்த பிள்ளை மனைவியிடம் கூறினார், “நான் இன்னைக்கு ராத்திரிச் சாப்பாட்டுக்கு வரமாட்டேன்.”

“ஏன்?”

“ம்... ஒண்ணுமில்ல... ஆமா... மினியை எங்கே காணோம்?”

“மினி...”- தாய் அழைத்தாள். அடுத்த நிமிடம் ஐந்து வயதே ஆன மினி, தந்தையை நோக்கி ஓடி வந்தாள். அவளை வாரி எடுத்து அணைத்துக் கொண்டார் பிள்ளை. “மகளே, இன்னைக்கு ராத்திரி சாப்பாட்டுக்கு அப்பா வரமாட்டேன் தெரியுதா? அதனால அம்மாகூடத்தான் இன்னைக்கு நீ சாப்பிடணும்.”

“அப்பா எங்க போறீங்க?”

“எங்கேயுமில்ல, மகளே!”

“பிறகு ஏன் ராத்திரி வர மாட்டீங்க?”

“கொஞ்சம் வேல இருக்கு. அதுனாலதான்.”

“இந்த அப்பா எப்பவும் இப்படித்தான். வேலை வேலைன்னு எப்போ பார்த்தாலும் சொல்லிக்கிட்டேயிருப்பாரு. ம்க்கும்... நான் உங்க கூட இனி பேசமாட்டேன்.”

மகளின் தலையை மெல்ல வருடியவாறு கூறினார் பிள்ளை, “மகளே, போ... போய் விளையாடு.”

“தேநீர் அருந்திவிட்டு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தவாறு வீட்டை விட்டிறங்கிய பிள்ளையிடம் கேட்டார் அவர் மனைவி. “நாளைக்குக் காலையிலதான அது...?”

“ம்.”

“அதுனாலதான் இன்னைக்கு ராத்திரி வரமாட்டேன்னு சொன்னீங்களா?”

“ம்...” மெல்ல நடந்தார் பிள்ளை. அவர் சிறையிலிருந்த தன் அறையை அடைந்தபோது, லிவர் தட்டுவதற்குப் பத்ரோஸ் சகிதமாய் நின்று கொண்டிருந்தான் தாமஸ். கருத்து மெலிந்து கூன் விழுந்து போய்க் காணப்பட்ட அந்த உருவத்தையே ஒரு கணம் பார்த்தார் பிள்ளை. “ம்... இவன்தான் பத்ரோஸா?”

“ஆமா ஸார்!”- பிள்ளையின் கால்களில் விழுந்து வணங்கினான் பத்ரோஸ்.

“இதுக்கு முன்னாடி லிவர் தட்டியிருக்க இல்ல?”

“பிறகு? முப்பது வருஷமா இந்த ஜெயிலில் லிவர் தட்டுறது யாருன்னு நெனைக்கிறீங்க? நான்தானே? இதுவரை நான் செஞ்ச கொலை மட்டும் இருநூறுக்கும் மேல இருக்குமே!”

“கொலையா?”

“ஆமா... கொலைதான். இதுவும் ஒரு கொலை செய்யிற மாதிரிதானே ஸார்?”

பிள்ளைக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை.

“சரி, தாமஸ்... இந்த ஆளைக் கொண்டு போ.”

என்ன நினைத்தானோ, பத்ரோஸ் திடீரென்று கெஞ்ச ஆரம்பித்து விட்டான். “ஸார், தயவு செஞ்சு என்னை அந்தப் பாழடைஞ்சு போன ரூம்ல போட்டுப் பூட்டிடாதீங்க. அந்த ரூம்ல நெறைய ஆவி சுத்திக்கிட்டிருக்கு. எல்லாம் அந்த ரூம்ல முன்னாடி அடைச்சு வச்சிருந்த கைதிகளோட ஆவிதான். தனியா என்னைப் போட்டுப் பூட்டிட்டீங்கன்னா, ஒரு வேளை அது எல்லாம் ஒண்ணு சேர்ந்து என்னையே காலி பண்ணினாலும் பண்ணிடும்.”

“பரவாயில்லை. வா... உனக்கு வேண்டியதெல்லாம் அங்க இருக்கு” -தாமஸ் கூறி அவனை இழுத்துக் கொண்டு போனான்.

நாற்காலியில் அமர்ந்த பிள்ளை கடிகாரத்தை நோக்கினார். மணி சரியாக ஏழு ஆகியிருந்தது. எட்டே எட்டு மணி நேரம்தான் இன்னும் எஞ்சி இருக்கிறது. அவருடைய மனம் அப்போது எது குறித்தோ ஆழமாக சிந்தித்துக் கொண்டிருந்தது. திடீரென்று என்ன நினைத்தாரோ, எழுந்து நடக்க ஆரம்பித்தார். வழியில் வார்டர் ஸ்ரீதரன் நின்று கொண்டிருந்தான். “டேய், ஸ்ரீதரா, அந்த அறைச் சாவியைக் கொண்டு வா.”

“அந்த ஆளைப் பார்க்கவா சார்?”

“ம்...”

ஸ்ரீதரன் சாவியை எடுப்பதற்காகப் போனான். பிள்ளை நடந்தார். ‘இதுதான் நல்ல நேரம்’- பிள்ளை ஆலோசித்தார். இப்படிப்பட்ட சமயத்தில்தான் எப்படிப்பட்ட மனிதனும் மனம் திறந்து பேசுவான். மரணத்தின் நுழைவாயிலில் - வாழ்க்கை முடியப்போகிற தருணத்தில் அழகான ஒரு வாழ்க்கை அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இன்னும் ஒரு சில மணிகளே எஞ்சி நிற்கிற நேரத்தில் அங்கு நிச்சயம் உண்மையைத் தவிர வேறு எதற்கும் இடம் இருக்க முடியாது. பயங்கரமான கொலையைச் செய்துவிட்டு வந்தவர்கள்கூட அந்தக் கடைசி நிமிடம் வருகின்றபோது தாங்கள் செய்ததையெல்லாம் ஒன்று விடாமல்- எவ்வித மறைவுமின்றி திறந்த மனதுடன் கூறிக்கொள்ளத்தான் விரும்புவார்கள். சாகின்ற போது நிம்மதியாக- மனதில் எந்தவிதமான கனமும் இல்லாமல் சாகத்தான் ஒவ்வொரு மனிதனும் விரும்புவான். மனதில் ஆயிரம் பிரச்சினைகளை வைத்துக் கொண்டே சாகத் துணிவது சாதாரணமாக சாத்தியமாகக் கூடியதல்ல. மரணத்திற்கு ஒரு சில நிமிடங்களோ- வினாடிகளோ எஞ்சி இருக்கின்ற தருணத்திலாவது ஒவ்வொரு மனிதனும் மன சாந்திக்கு வழி தேடத்தான் முயல்வான்.

அந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு எதிர்காலம் என்ற ஒன்று இருக்கவா போகிறது? பிறகு சிந்திக்க எஞ்சி இருப்பது என்னவோ கடந்து வந்த வாழ்க்கைப் பாதையில் அவன் சந்தித்த பலவகைப்பட்ட அனுபவங்கள்தான். அதைத்தான் கடைசி நிமிடம் வரை மீண்டும் மீண்டும் அசைபோட்டுப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் அவற்றையே சிந்திக்க வேண்டும் போல் இருக்கும் அப்போது. கடந்தவற்றை நினைத்துப் பார்ப்பதில் அப்படியொரு சுகம்! ஆனால் எதிலாவது ஒன்றில்தான் மனம் முற்றுப்புள்ளி வைத்து நிற்கும். அப்போதுதான்- மரணம் கண்ணுக்கு எதிரில் தோன்றிக் கொண்டிருக்கின்ற வேளையில்தான் மனதில் இருக்கின்ற ஒவ்வொன்றையுமே வெளியே கூறிவிட வேண்டும் போன்ற ஒரு உணர்வு தோன்றும். அதன்படி ஒவ்வொரு மனிதனும் அப்போதுதான் மனதை முழுமையாகத் திறந்து வைத்துப் பேசுவான். பல சமயங்களில், அவை வார்த்தைகளாக வெளிவராமல் போய்விடலாம். சில சமயங்களில் எதையாவது வாசிக்கச் சொல்லி கேட்க வேண்டும் போலிருக்கும். யாராவது வாசித்தாலோ, அதைச் செவி கேட்க மறுக்கும். அப்போது ஆசை... ஆசை... எத்தனை ஆயிரம் ஆசைகள் இருக்கும் மனதின் அடித்தளத்தில்! ஒவ்வொன்றுமே அசாத்தியமாகத் தான் தோன்றும் அப்போது. ஒவ்வொன்றும் மீண்டும் மீண்டும் மனவறையில் வலம் வந்து கொண்டேயிருக்கும். கடைசியில் எஞ்சி நிற்பது என்னவோ ஒன்றே ஒன்றுதான். நகர்வதற்கு மறுக்கும் கனமான மணித்துளிகள் அவை. எப்படியோ, அவையும் ஓடி இறுதியில் ஒரு சில மணித்துளிகளே எஞ்சி நிற்கும். ஒவ்வொரு வினாடியைக் கடத்துவதும் ஒரு யுகத்தைக் கடப்பது போலிருக்கும். அப்போது- அந்த ஒரு சில நிமிடங்களில் எந்த மனிதனும் உண்மையைத்தான் கூறுவான்- எல்லாம் மனசாந்தி என்ற ஒன்றிற்காக மட்டும். கயிற்றின் நுனியில் தொங்கும்போது நிம்மதியாக- உடலில் எந்த விதமான பாரமுமின்றி இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் காரணம் - வேறென்ன?

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel