Lekha Books

A+ A A-

நீலவானமும் சில நட்சத்திரங்களும் - Page 2

neela vaanamum sila natchathirangalum

பிள்ளையின் நினைவு வலை வார்டர் ஸ்ரீதரனால் பாதியிலேயே அறுந்து நின்றது. சற்று தடித்துக் காணப்பட்ட அவனையே பார்த்தார் பிள்ளை. “ஸ்ரீதரன், இன்னைக்கு வந்த அவனைப் பார்த்த இல்லையா?”

“பார்த்தேன் சார்...”

“நாம கொஞ்சம் அவனை அடைச்சு வச்சிருக்கிற அறை வரை போயிட்டு வருவோம். அந்தச் சாவியை எடு...”

“அந்த ஆளைப் பார்க்கவா சார்...?”

பதிலொன்றும் கூறாமல் பிள்ளை மெதுவாக நடந்தார். சாவியை எடுத்துக் கொண்டு ஸ்ரீதரனும் அவர் பின்னால் போனான். ராமதாஸை அடைத்து வைத்திருக்கின்ற அறை வந்ததும், அவருடைய கால்கள் திட்டமிட்ட மாதிரி நின்றன. வெளியே நின்றவாறு, இருளடைந்து போய்க் காணப்பட்ட அந்த அறையைக் கம்பியின் வழியே அவருடைய கண்கள் ஆராய்ந்தன. மூலையில் யாரோ அசைவது போலிருந்தது.

“டார்ச் இருக்கா...?”

“இல்லை சார்... தீப்பெட்டியும் மெழுகுவர்த்தியும் இருக்கு!”

“எங்கே கதவைத் திற.”

ஸ்ரீதரன் கதவைத் திறந்தான். அவனிடமிருந்த மெழுகு வர்த்தியை வாங்கிப் பற்ற வைத்தார் பிள்ளை. மெழுகுவர்த்தியின் ஒளி இருளடைந்து போய்க்கிடந்த அவ்வறையில் மங்கலான பிரகாசத்தைப் பரப்பியது. அவ்விளக்கொளியில் மூலையில் தலையைக் குனிந்தவாறு அமர்ந்திருந்த ராமதாஸைச் சந்தித்தன பிள்ளையின் கண்கள்... ஒரு வேளை ராமதாஸ் உறங்கிவிட்டானோ...?

“ராமதாஸ்... ராமதாஸ்...” தாழ்ந்த குரலில் அழைத்தார் பிள்ளை.

ராமதாஸ் தலையைத் தூக்கிப் பார்த்தான். பிள்ளை மேலும் இரண்டடி முன்னால் சென்று நின்றார். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அவனுடைய முகம் தெளிவாகத் தெரிந்தது பிள்ளைக்கு. குழந்தை முகம்; இப்போதுதான் வளர்ந்துவிட்டிருக்கின்ற அரும்பு மீசை; சுருண்டிருந்த தலைமுடி நெற்றியில் காட்டுப் புதராய்ப் பரவிக்கிடந்தது. கருத்த அந்த விழிகளில் கொலைவெறி சிறிதுமில்லை.

“ராமதாஸ்...” பிள்ளை அழைத்தது அவனுடைய செவிகளில் விழவில்லை. “நான்தான் ஜெயில் சூப்பிரெண்டு, உன்னை இங்கே எதுக்குக் கொண்டு வந்திருக்குன்னு தெரியுமில்ல...?”

ராமதாஸ் பதிலொன்றும் கூறாமல் அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். பிள்ளை தொடர்ந்து பேசினார். “பதினெட்டாம் தேதி அதிகாலை அஞ்சரை மணிக்கு முன்னாடியே உன்னைத் தூக்குல போட்டுடுவோம்...” அவர் குரல் அத்தோடு நின்றது. ராமதாஸின் முகத்தில் ஒரு மாற்றமும் தெரியவில்லை. “உன்னை அன்னைக்குக் காலையில மூணு மணிக்கே இங்கேயிருந்து கொண்டு போயிடுவாங்க. அஞ்சரை மணிக்கு முன்னாடியே உனக்கு உயிர் போயிடும். அதுக்கு முன்னாலே ஏதாவது வேணும்னா தைரியமா எங்கிட்ட சொல்லு... தெரியுதா?”

பதிலொன்றும் கூறாமல் பிள்ளையையே பார்த்தான் ராமதாஸ். அவன் தன் பற்களை ‘நறநற’ வெனக் கடிப்பது போலிருந்தது பிள்ளைக்கு. அவனுடைய உதடுகளிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தபோது, திரும்பி நடந்தார் பிள்ளை. ஜெயில் கதவை இழுத்துப் பூட்டினான் ஸ்ரீதரன். பிள்ளையின் கால்கள் தூக்கு மரத்தை நோக்கி நடந்தன. ஜெயிலர் தாமஸ் கயிற்றின் நுனியில் பெரியவொரு கல்லைக் கட்டி வைத்திருந்தான். இரும்புச் சக்கரங்களுக்கு உராய்தலைத் தடுக்கும் பொருட்டு எண்ணெய் போட்டுக் கொண்டிருந்தான். எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒருமுறை பரிசோதித்துப் பார்த்தார் பிள்ளை.

“இந்தக் கயிறு நிச்சயம் அறுந்திடும், தாமஸ்...”

“லிவரைத் தட்டட்டுமா?” ஸ்ரீதரன் கேட்டான்.

“ம்...”

ஸ்ரீதரன் லிவரைத் தட்டினான். பலகை இரண்டாகப் பிளந்தது. அதே சமயம் கயிற்றின் நுனியில் கட்டியிருந்த கல் அதல பாதாளத்தில் போய் விழுந்தது. கயிறு இரண்டு துண்டுகளாக அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது அந்தரத்தில்.

“எனக்கு அப்போதே சந்தேகம்தான்... ம்... இப்ப என்ன செய்யிறது? இனி வேற ஒரு கயிறுதான் பார்க்கணும். ஆமா... இங்க யாருக்குக் கயிறு உண்டாக்கத் தெரியும்?”

“எல்லாருக்கும் தெரியுமே...”- சிரித்தவாறு கூறினார் ஸ்ரீதரன்.

“ஆனா... தூக்குக் கயிறுல்ல இப்போ நமக்கு வேணும்?” -தாமஸ் கூறினான்.

“கொலைக் கயிறு செய்யத் தெரிஞ்ச யாரும் இங்கே இல்லியா?”

“...ஏன்... கிட்டாப்புள்ளி ராமன் இருக்கானே...!” தாமஸ் கூறினான். அவன்தான் முன்னால் பயன்படுத்திய கயிறையும் உண்டாக்கிக் கொடுத்திருந்தது போன்றொரு ஞாபகம்.

“அப்படின்னா தாமஸ், நீ ஒண்ணு செய். அவனைச் சீக்கிரம் ஒரு கயிறு உண்டாக்கித் தரச் சொல்லு. உதவிக்கு வேணும்னா இரண்டு ஆளுகளைக் கூட அனுப்பிவை. நாளை மறுநாளுக்குள் கயிறு கிடைக்கணும்... தெரியுதா?” - தன்னுடைய அறைக்குத் திரும்பினார் பிள்ளை. அங்கு சிறைப் பணியாள் ஒருவன் சிறைக் கைதிகளின் உணவிற்கான சாம்பிலுடன் நின்று கொண்டிருந்தான். அவன் கொண்டு வந்திருந்த உணவை ருசி பார்த்த பிள்ளை கூறினார். “ம்... போதும், நல்லாயிருக்கு கொண்டு போ...” அந்தப் பணியாள் போய் சில நிமிடங்களில், வேறு ஒரு ஆள் வந்து பிள்ளைக்கு ‘சலாம்’ செய்தவாறு நின்றான். சிகரெட் ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தவாறு பிள்ளை கேட்டார். “என்ன விஷயம்?”

“ஒரு பொம்பளையும் மூணு ஆளுங்களும் வந்திருக்காங்க சார்...”

“யாரு? அவனைப் பார்க்கத்தானே? திங்கட்கிழமை வரச் சொல்லு...”

பிறகு என்ன நினைத்தாரோ புறப்படத் தயாராயிருந்த அந்த மனிதனை நோக்கிக் கூறினார் பிள்ளை.

“சரி, அவுங்களை இங்க வரச்சொல்லு...”

மூன்று ஆண்களும், பெண்ணும் வாசலைக் கடந்து பிள்ளை அமர்ந்திருந்த அறையினுள் நுழைந்தார்கள். எல்லாருமே இளம் பிராயத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்தார்கள். அந்தப் பெண்ணுக்கு வேண்டுமானால் இருபது வயது இருக்கும்.

“உங்களுக்கு என்ன வேணும்?”

அவர்களில் சற்று உயரமான ஆள் கூறினான்.

“நாங்க ராமதாஸைப் பார்க்கணும்...”

“ராமதாஸுக்கு நீங்க எல்லாம் என்ன வேணும்?”

“நாங்க அவனோட நண்பர்கள்.”

“இந்தப் பெண்...”

“அவளும்தான்...”

அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்தார் பிள்ளை. அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அந்தப் பணியாளிடம் பிள்ளை கூறினார். “இவங்களை ராமதாஸிடம் அழைச்சிட்டுப் போயி காட்டு...”

“வாங்க” - படிகளைக் காட்டினான் பணியாள்.

அரை மணி நேரம் சென்றிருக்கும் முதலில் பேசிய அந்த உயரமான மனிதனும், அந்தப் பெண்ணும் திரும்பி வந்தார்கள்.

“ராமதாஸை பார்த்தீங்க இல்லியா?”

“பார்த்தோம் சார்.”

“பிறகு?”

“சார்... ஒரு விஷயம்... உண்மையிலேயே ராமதாஸ் இந்தக் கொலையைச் செய்யல. இந்தக் கொலை நடக்குறப்போ, ராமதாஸ் எங்களுடன் தான் இருந்தான். நாங்க எல்லாருமே ஒரு நாடகக் கம்பெனியைச் சேர்ந்தவங்க.”

பிள்ளை ஒன்றும் பதில் கூறவில்லை. அந்த மனிதனே மீண்டும் தொடர்ந்தான். “திடீர்னு என்ன நினைச்சானோ, ராமதாஸ் வீட்டுக்குப் போயிட்டான். அவன் ஏன் போனான்னு எங்களுக்கு ஒண்ணும் பிடிபடல. அது மட்டும் தெரிஞ்சிருந்தா, நாங்க இந்த விஷயத்தை இந்த அளவுக்குப் போகவே விட்டுருக்க மாட்டோம்.”

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel