Lekha Books

A+ A A-

நீலவானமும் சில நட்சத்திரங்களும் - Page 3

neela vaanamum sila natchathirangalum

“அதுக்கு நான் என்ன செய்யணும்னுறீங்க?”

“சார் நினைச்சா ஏதாவது செய்ய முடியாதா?”

“இங்க பாருங்க... நான் இந்த விஷயத்துல ஒண்ணுமே செய்யிறதுக்கில்ல. தூக்குத் தண்டனை விதிச்சாச்சு இல்ல... தூக்குத் தண்டனையை நிறைவேத்தறதைத் தவிர வேற வழி இல்ல. அந்த ஆளு கொலை செஞ்சானா இல்லையான்றதப் பத்தித் தீர்மானிக்க வேண்டியது நானில்ல. பிறகு... நீங்க சொல்றதுதான் உண்மையின்னா, அந்த ஆளு ஏன் ‘நான்தான் கொலையைச் செஞ்சேன்’னு சம்மதிக்கணும்?”

இதைக் கேட்டதும் அந்தப்பெண் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து விட்டாள். “ராமதாஸ் கொலை செய்யக்கூடிய ஒரு ஆள் இல்ல. அப்படிப்பட்ட தைரியம் ராமதாஸுக்கு நிச்சயம் வராது, ஸார். நீங்கதான் ராமதாஸைக் காப்பாத்தணும்...”  -அழதவாறே கூறினாள் அவள்.

“இந்தப் பெண் யார்?” - பிள்ளை கேட்டார்.

“ராமதாஸுக்கு இவளைத்தான் நிச்சயம் செஞ்சிருந்தாங்க. இவ ஒரு

நாடகக்காரி...”

“தங்கச்சி... நான் இந்த விஷயத்துல ஒண்ணுமே உதவி செய்ய முடியாத நிலையில இருக்கேன். தயவு செஞ்சு எல்லாரும் திரும்பிப் போங்க.

கண்ணீர் சிந்தியவாறே திரும்பி நடந்தாள் அந்தப் பெண். பிள்ளைக்கு ‘சலாம்’ போட்டுக்கொண்ட பின், அவளைப் பின்பற்றி நடந்து போனான் அந்த உயரமான மனிதன்.

நான்காவது நாள்... தூக்குக் கயிறு தயாராகிவிட்டது. தூக்குக் கயிறு உண்டாக்குவதில் கெட்டிக்காரன் என்று கிட்டாப்புள்ளி ராமன் மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டினான். இந்தத் தடவை சற்று பலமான கயிறுதான்...

“இன்னைக்கு தேதி என்ன? பதினேழா?” - அந்தச் சுழல் நாற்காலியில் அமர்ந்தவாறு முன்னால் நின்றிருந்த தாமஸைக் கேட்டார் பிள்ளை.

“நாளைக்கு அதிகாலை அஞ்சு மணிக்கு முன்னாடியே எல்லாம் முடிஞ்சிடணும்...”

“சரி, ஸார்!”

“ஆமாம்... லிவரைத் தட்டுறது யாரு? நீயே தட்டிர்றயா?”

“இல்லை, ஸார். அந்தப் பாவத்தை நான் செய்ய விரும்பல...”

“பிறகு?”

“இங்கே அதுக்குன்னே ஒரு ஆளு இருக்கான். பத்ரோஸ்னு பேரு. அவனை எல்லாரும் ‘லிவர் தட்டி பத்ரோஸ்’னுதான் கூப்பிடுவாங்க. காலம் காலமாகவே அவன்தான் லிவரைத் தட்டிக்கிட்டு வர்றான்.

“இப்போ அந்த ஆளு இருக்கான்ல?”

“விசாரிச்சுப் பார்க்கணும்... அனேகமா இருப்பான்.”

லிவர் தட்டுவது என்பது அத்தனை எளிய ஒரு காரியம் அல்ல. தூக்கில் கொல்லப்படப்போகிற கைதியைப் பாதாளத்தில் வீழ்த்தி சாக வைப்பதே அந்த லிவரில்தான் இருக்கிறது. கொலை செய்வதால் உண்டாகும் பாவம் கூட அந்த லிவரைத் தட்டுபவனைத்தான் சேரும் என்று சிறையில் பொதுவாகக் கூறிக் கொள்வதுண்டு.

“சரி... அதுக்கு அவனுக்கு எவ்வளவு கொடுக்கணும்?” - பிள்ளை விசாரித்தார்.

“ம்... அதப் பத்தி ஒண்ணுமில்ல. ஒரு பாட்டில் சாராயமும், கொஞ்சம் மாட்டுக்கறியும் வாங்கிக் கொடுத்தா போதும்...”

“அவன் கரெக்டா அந்த நேரத்துக்கு வந்துடுவான்ல?”

“ம்... அதப்பத்தி உறுதியா சொல்ல முடியாது சார்...”

“அப்படின்னா?!”

“இன்னைக்கே கொஞ்சம் சாராயத்தை ஏத்தி ஒரு அறைக்குள்ளே அவனைப் பூட்டி வச்சிட வேண்டியதுதான்.”

“இல்லைன்னா?”

“அவன் தப்பிச்சு ஓடிடுவான்ல. சுய உணர்வோட திட்டமிட்டுச் செய்யக்கூடிய ஒரு வேலையா இது?”

அப்படின்னா தாமஸ், நீ ஒண்ணு செய்... இன்னைக்குச் சாயங்காலமே அவனை இங்கக் கொண்டு வந்திடு. இந்தா பத்து ரூபாய் இருக்கு. இத வச்சு எல்லாத்தையும் முடிச்சுக்க...” -பாக்கெட்டிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார் பிள்ளை.

தாமஸ் போன சில நிமிடங்களில், நடுத்தர வயதுடைய ஒரு மனிதருடன் பிள்ளையின் அறைக்கு வந்தான் பணியாள் ஒருவன். அந்த மனிதர் சற்று பருத்து... உயர்ந்து... கருத்துப் போய்க் காணப்பட்டார். அவருடைய முகத்தில் ஒரு ஆட்டுக்கடா மீசை.

“ம்... உங்களுக்கு என்ன வேணும்?” - சிகரெட்டை எடுத்து உதட்டில் பொருத்தியவாறு கேட்டார் பிள்ளை.

“இவருக்கு தூக்குல போடப்போற அந்த ஆளை ஒரு தடவைப் பார்க்கணுமாம்...” - பணியாள் கூறினான்.

“திங்கள் கிழமையே வந்திருக்கலாமே? ஆமா... நீங்க யாரு?” என்றார் பிள்ளை.

அவரிடமிருந்து சற்று கனத்த குரலில் பதில் வந்தது.

“நான்தான் ராமதாஸோட அண்ணன். அவனைத் தூக்குல போடுறதுக்கு முன்னால, கண் குளிர ஒரு தடவைப் பார்க்கணும், ஸார். தாய்- தந்தையில்லாத அவனைச் சின்ன வயசுல இருந்து சொந்தப் பிள்ளையைப் போல நான்தான் வளர்த்தேன். தயவு செஞ்சு நீங்கதான் அவனைப் பார்க்க எனக்கு உதவி செய்யணும் ஸார்.”

“சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்த பிள்ளை கேட்டார். “அப்படின்னா, உங்க சம்சாரத்தைத்தான் அவன் கொலை செய்தானா?”

“ஆமாங்க. என்னோட ஒரே தம்பியின் இந்தத் துர்பாக்ய நிலைமைக்கும், என்னுடைய வாழ்க்கை நாசமானதுக்கும் அந்தத் தேவடியாதான் காரணம்.”

“அவன் கொலை செய்யறத நீங்களே நேரில் பார்த்தீங்களா?”

“இல்லை ஸார். வயல்ல இருந்து நான் திரும்பி வர்றப்பவே எல்லாம் முடிஞ்சு போயிருச்சி. நான் வீட்டு வாசல்ல கால் வச்சப்போ அவன் இந்தக் கோலத்துலநின்னுக்கிட்டிருக்கான். என்னன்னு சொல்றது?” இதைக் கூறிவிட்டு தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார் அந்த மனிதர்.

“பரவாயில்ல. நடந்ததெல்லாம் நடந்திருச்சு. இனி கவலைப்பட்டு என்ன பிரயோஜனம்? போங்க... போயி உங்க தம்பியைப் பாருங்க.”

அந்த மனிதர் புறப்படத் திரும்பியபோது, பிள்ளை கூறினார். “ஒரு விஷயம்... நாளைக்குத்தான் ராமதாஸுக்கு தூக்குத் தண்டனை நிறைவேத்துற நாள். அவனுக்கு உங்களால முடிஞ்ச அளவுக்குத் தைரியம் சொல்லுங்க?”

“சரி ஸார்.”

“ஆமா... ராமதாஸோட சடலம் உங்களுக்கு வேணும் இல்லியா?”

“வேணும்... கட்டாயம் வேணும்...” அந்த மனிதரின் குரல் என்ன காரணத்தாலோ தடுமாறியது.

“அப்படின்னா சடலத்தை எடுக்க நீங்க சரியா வந்திடணும் தெரியுதா?”

“சரி ஸார்...”

“டேய், மூலையில் நின்று கொண்டிருந்த பணியாளை அழைத்தார் பிள்ளை- “இந்த ஆளைக் கூட்டிட்டுப் போயி ராமதாஸைக் காட்டு. பதினஞ்சு நிமிஷம்தான் டைம் தெரியுதா?”

பிள்ளையின் பார்வையிலிருந்து அவர்கள் இருவரும் மறைந்து போயினர். சில நிமிடங்கள் சென்ற பின், பணியாள் மட்டும் திரும்பி வந்தான்.

“என்ன பார்த்தாச்சா?”

“ஆமாம் ஸார்.”

“அவங்க ரெண்டு பேரும் பேசினாங்க இல்லியா?”

“இல்ல சார்.”

“இல்லியா? ஏன்?”

“இந்தக் ஆளைக் கண்டதும், ராமதாஸ் முகத்தைத் திருப்பிக்கிட்டான். ‘நீ போ. உன்னை நான் பார்க்க விரும்பலே’ன்னு திரும்பத் திரும்பச் சத்தம் போட்டான். பிறகு என்ன நெனைச்சானோ, அவன் பாட்டுக்கு அழ ஆரம்பிச்சிட்டான்.”

“பிறகு...?”

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel