Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

நூற்றியொரு நாக்குகள் - Page 2

nootriyoru nakkugal

“பெண்களோட கழுத்தைச் சுற்றிலும் நூறு நாக்குகள் இருக்கு. பார்த்தா அது தெரியாது. இருந்தாக்கூட அதை மறைக்கிறதுக்காக...''

மகள் இடையில் புகுந்து சொன்னாள்.

"டாட்டா! எனக்கொரு தங்க மாலை வேணும்.''

எனக்கு சிரிப்பு வந்தது. நான் சொன்னேன்.

“மகளே, இன்னும் கொஞ்சம் பெருசா நீ வளர்ந்தப்புறம் நான் வாங்கித் தர்றேன்!''

“டாட்டா... நீங்க ஏன் சிரிச்சீங்க?''

மகள் என்னை "டாட்டா' என்றுதான் எப்போதும் அழைப்பாள். தாய், மகள்- இரண்டு பேர்களின் நாக்குகளின் பலனாக என்னுடைய வலது செவியிலிருந்து இடது செவிக்கு ஒரு சுரங்கப் பாதை உண்டாகிவிட்டது. மகளின் நாக்குக்குத்தான் எத்தனை சக்தி! அவளின் வயது ஐந்தரை. பெயர் ஷாஹினா. பேச்சு வர ஆரம்பித்த போது, “டாட்டா, குங்குறு, குறுகுறு” என்று என்னவெல்லாமோ அன்பு மகள் பேச ஆரம்பித்தாள். அவள் இப்படித்தான் "டாட்டா” என்று என்னை அழைக்க ஆரம்பித்தது. உம்மா என்றழைக்கப்படும் என்னுடைய அம்மா, என் மனைவி எல்லோருமே "பாப்பா, பாயிச்சி, ப்ப்பா' என்றெல்லாம் என்னை அழைக்கும்படி செல்வ மகளுக்குச் சொல்லித் தந்தார்கள். ஆனால், மகள் அவர்கள் சொன்னபடி யெல்லாம் கேட்காமல், என்னை "டாட்டா' என்று மட்டுமே அழைக்கத் தொடங்கினாள். இதில் ஏதாவது ரகசியம் தெரிகிறதா?

நான் அன்பு மகளை "சிம்பிளு” என்று அழைப்பேன். மகள் என்னை "டாட்டா” என்று அழைப்பதன் ரகசியம் சில நாட்களுக்கு முன்புதான் எனக்கே தெரிய வந்தது. மகளுக்கு தாடையில் ஒரு குழியிருக்கும். பொதுவாக இந்த மாதிரியான குழிகள் எல்லாப் பெண்களுக்குமே இருக்கும். (கண்ணுக்குத் தெரியாத நூறு நாக்குகளைப் போல). சில பெண்மணிகளுக்கு இந்தக் குழிகள் ஆண்களுக்கே சவால் விடுகிற மாதிரி கன்னத்தில் அழகாக "ஃபிட்” செய்யப்பட்டிருக்கும். என் மனைவிக்கு கன்னத்திலும் மகளுக்கு தாடையிலும் இந்தக் குழிகள் இருக்கின்றன.

"சிம்பிளு” வின் தாடையில் இருக்கும் குழியைப் பற்றிய ரகசியத்தை ஒரு பிராமணப் பெண்தான் எனக்கு சொன்னாள். திருச்சூர் கெ. பரமேஸ்வரன் நாயர் என்ற பெயரில் ஒரு ஃபோட்டோகிராபர் இருந்தார். அவருக்குச் சொந்தத்தில் ஷோபனா ஸ்டுடியோ என்ற பெயரில் ஒரு படமெடுக்கிற இடம் இருந்தது. இப்போது நான் சொல்லும் அந்தப் பரமேஸ்வரன் நாயர் ஒரு சினிமாக்காரர் என்று எனக்குத் தகவல் வந்திருக்கிறது. நானும், அன்பு மகளும், மனைவியும் மேலே சொன்ன பரமேஸ்வரன் நாயர் வீட்டிற்கு விருந்தினர்களாகப் போயிருக்கிறோம். அருகில் சில பிராமணர் வீடுகள் இருந்தன. அவற்றில் ஒரு வீட்டிற்கு, நானும் மகளும் மனைவியும் பரமேஸ்வரன் நாயரின் மனைவி சௌபாக்கியவதி சரஸ்வதியுடன் சேர்ந்து விருந்துக்குப் போயிருந்தோம். அன்பு மகளின் தாடையில் இருக்கும் குழியைப் பற்றி அங்கு பேச்சு வந்தது. அந்த வீட்டு அம்மா சொன்னாள்:

“இது சாதாரண குழி இல்ல... பணக் குழியாக்கும்- பணக்குழி!''

அந்த அம்மா சொன்னது ஒரு விதத்தில் சரிதான். இல்லா விட்டால் என்னை எதற்கு மகள் "டாட்டா” என்று அழைக்க வேண்டும்? இந்தியாவின் பெரிய பணக்காரர்கள் யார் யார்? டாட்டா, பிர்லா, டால்மியா...

“டாட்டா...'' மகள் சொன்னாள்: “எனக்கு தங்க மாலை வேணும்...''

நான் சொன்னேன்:

“மகளே... டாட்டா கையில இப்ப காசு இல்லியே!''

மனைவி சொன்னாள்:

“பொம்பளைங்களுக்கு நூற்றியொரு நாக்குகள் இருக்கு, அது இதுன்னு பேசித் திரிஞ்சா மட்டும் போதுமா? ஒரு கதை எழுதி, பிள்ளைக்கு ஒரு மாலை வாங்கித் தர்றதுக்கு வழியைப் பாருங்க. பிறகு... நான் ஒரு விஷயம் சொல்லணும்னு நினைச்சேன். எங்களுக்கு பதினாலு கேரட் வேண்டாம். இருபத்திரண்டு கேரட்தான் வேணும்!''

அப்போது அன்பு மகள் என் ஜிப்பாவின் நுனியை ஐந்தாறு தடவை பிடித்து இழுத்து என் கவனத்தைத் தன் பக்கம் திரும்ப வைக்க முயற்சித்தாள். பிறகு கோபத்துடன் என்னைப் பார்த்து சொன்னாள்:

“டாட்டா... பாருங்க. அம்மாவோட நிக்கார துணியைப் போட்டுக்கிட்டு ஒரு ஆளு டாட்டா... உங்களைப் பார்த்து சிரிக்கிறாரு...''

அதாவது-என் மனைவியின் நிஸ்கார ஆடையை அணிந்து ஒரு ஆள் என்னைப் பார்த்து சிரிக்கிறார். இதுதான் மகள் சொன்னதன் அர்த்தம். பெரும்பாலான பெண்களைப் போல, என்னுடைய மனைவியும் ஒரு தெய்வ பக்தைதான். ஐந்து நேரமும் கடவுளைத் தொழுவாள். பல காரணங்களால் பெண்கள் கட்டாயம் கடவுளைத் தொழ வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் அல்லவா? அப்படி பிரார்த்தனை செய்கிறபோது, என் மனைவி நீளமான ஒரு நிஸ்கார ஆடையை அணிவாள். அந்த அவளின் ஆடையை அணிந்து கொண்டு என்னைப் பார்த்துச் சிரிக்கிறவன் யாரடா? அதோடு என் மகள் நின்றால் பரவாயில்லை. அவள் சொன்னாள்: “அந்த ஆளு அம்மாவையும் பாக்குறாரு!''

சாதாரணமாக எல்லா கணவர்களையும் போல நானும் எந்த பெண்ணைக் கண்டாலும் ஆர்வத்துடன் பார்ப்பேன். அதே நேரத்தில் என் மனைவியை யாராவதொரு ஆண் பார்த்தால், "என் பொண்டாட்டியை ஏன்டா அப்படிப் பாக்குறே? உனக்கு கொஞ்சம் கூட பண்பாடுன்னு ஒண்ணு கிடையாதா?” என்று பயங்கரமாக கத்திக்கொண்டு அவன்மீது பாய்ந்து, அவன் கழுத்தை நெரித்துக் கொன்றால் என்ன என்று மனதில் தோன்றும். இங்கே அவளை அவன் பார்க்க மட்டும் செய்யவில்லை. நிஸ்கார ஆடையை வேறு எடுத்திருக்கிறான்.

நெருப்பு கக்கும் கண்களால் நான் பார்த்தேன். அடுத்த நிமிடம் எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. மவுனமாகி விட்டேன். கண்களில் இருந்த தீப்பொறி இருந்த இடம் தெரியாமல் போய் மறைந்துவிட்டது. நான் காற்று போன பலூன்போல கொஞ்ச நேரத்தில் மாறிப்போனேன். மாறாக, பக்கத்தில் போய் தொழுது நின்றேன்.

அங்கே நின்றிருந்தது ஒரு கத்தோலிக்க பாதிரியார். அவருக்கு அப்படி ஒன்றும் அதிகம் வயதில்லை. பாதையில் இருந்த ஒரு மரத்துக்குக் கீழே அவர் நின்றிருந்தார்.

“என்னை ஞாபகத்துல இருக்கா?'' அவர் சிரித்தவாறு என்னைப் பார்த்துக் கேட்டார். நான் சொன்னேன்: “ஞாபகத்துல இருக்கு. என்ன இங்கே...?''

பாதிரியார் சொன்னார்: “நான் இப்போ இந்த ஊர்லதான் இருக்கேன். பஷீர்... நீங்க என்ன இங்கே?''

நான் சொன்னேன்: “நானும் இந்த ஊர்லதான் இருக்கேன்!''

பிறகு நான் இந்த ஊருக்கு எப்படி வந்தேன். அதற்கான காரணங்கள் என்ன போன்ற விஷயங்களை அவரிடம் சொன்னேன். மனைவியையும், மகளையும் அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். வீட்டுக்கு வரும்படி அவரை அழைத்தேன்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version