Lekha Books

A+ A A-

நூற்றியொரு நாக்குகள் - Page 9

nootriyoru nakkugal

“நான் சும்மா சொன்னேன். ப்ரேஸியருக்கு இந்தப் பேன்ட் துணி நல்லா இருக்குறது மாதிரி தெரிஞ்சது. அதனாலதான் அதை எடுத்து முழுசா வெட்டிட்டேன்.''

“ரொம்ப ரொம்ப சந்தோஷம்!''

அடுத்த நாள் பார்க்கும்போது மேஜை மேல் கிடக்கிறது பேன்ட்டின் இன்னொரு கால். அதுவும் அருமையான ஒரு இங்கிலீஷ் மார்புக் கச்சையாக மாறிவிட்டிருந்தது. அதன் இரண்டு பக்கங்களிலும் பெரிய  இரண்டு பலாப் பழங்களையே வைக்கலாம்.

நான் அதைப் பார்ப்பதைக் கண்ட சௌபாக்கியவதிகள் இருவரும் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். நான் எதுவுமே பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். அப்போதும் அவர்களின் சிரிப்பொலி என் காதுகளில் தொடர்ந்து கேட்டுக் கொண்டுதான் இருந்தது. சௌபாக்கியவதி மிஸ். வாசந்தி போன பிறகு, நான் என் மனைவியிடம் கேட்டேன்.

“அடியே... நீ என் பேன்ட்டை வெட்டி இங்கிலீஷ் மார்புக் கச்சைகளா மாற்றி உன்னோட சிநேகிதிகள்ல யார் யாருக்குக் கொடுத்திருக்கே? இந்தக் கிழவனும் கொஞ்சம் அதைத் தெரிஞ்சுக் குறேன்... அடியே... அந்தப் பெரிய மார்புக் கச்சை யாருக்கு?''

“பேசாம சும்மா இருக்கீங்களா? இதெல்லாம் நீங்க தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க? ஆம்பளைங்க அவங்க வேலைகளை மட்டும் பார்த்துக்கிட்டு இருக்கணும். இங்கிலீஷ் மார்புக் கச்சையாம் இங்கிலீஷ் மார்புக் கச்சை! அதோட பேரு ப்ரேஸியர்ஸ்.'' தொடர்ந்து ரகசியமான குரலில் அவள் சொன்னாள்: “நம்ம சுமா டீச்சர் இருக்காங்கள்ல... அவுங்களுக்குத்தான் அந்தப் பெரிய ப்ரேஸியர்ஸ். இதை யார்கிட்டயும் சொல்லாதீங்க!''

சே... இதைப் பற்றி ஒரு வார்த்தை சொல்வேனா நான்? என்னுடைய பேன்ட்டைக் கிழித்து தைத்து இங்கிலீஷ் மார்புக் கச்சையாக ஆக்கி கண்ட பெண்கள் எல்லாம் அணிந்து ஒய்யாரமாக நடந்து திரிவார்கள். ஆனால், நான் மட்டும் அதைப் பற்றி வாயே திறக்கக் கூடாது. அதைக் கண்டு கொண்டதாகவே காட்டிக் கொள்ளக் கூடாது. அப்படியானால்... பெரிய மார்புக் கச்சை நம்முடைய சௌபாக்கியவதி சுமா டீச்சருக்குத்தானா? அவளுக்கு வயது முப்பத்தி ஒன்பது. திருமணமாகி கிட்டத்தட்ட எட்டோ ஒன்பதோ வருடங்கள் ஆகியிருக்கும். குழந்தைகள் எதுவும் கிடையாது. மகள் சிம்பிளு மீது அவளுக்கு ஏகப்பட்ட பிரியம். மகளுக்கு அவ்வப்போது மிட்டாய் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பாள். அவளின் வகுப்பில்தான் செல்வமகளை அடுத்த வருடம் சேர்க்க வேண்டும். அவள் மகளை நன்றாகப் பார்த்துக் கொள்வாள். இந்த விஷயத்திற்காக ஒரு லஞ்சம் மாதிரி என்னுடைய பேன்ட் இங்கிலீஷ் மார்புக் கச்சையாக மாறியிருக்கிறது. பேஷ்!

“அடியே... என்னோட பேன்ட் எந்த மாதிரி மாறி இருந்தாலும், எங்கே பார்த்தாலும் நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன். பிடிச்சிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன்.''

“மெதுவா பேசுங்க. யாராவது கேட்டாங்கன்னா என்ன நினைப்பாங்க?''

நான் மெதுவான குரலில் சொன்னேன்:

“பிடிச்சிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன்!''

அடுத்த நாள் சௌபாக்கியவதி சுமா டீச்சர் வந்தாள். இரண்டு சௌபாக்கியவதிகள் சுமா டீச்சர் என்ற சௌபாக்கியவதிக்கு இங்கிலீஷ் மார்புக் கச்சையை அணிவித்து வெளியே அனுப்பினார்கள்.

"புஹோயி!' என்று உரத்த குரலில் கத்த வேண்டும் போலிருந்தது எனக்கு. ஆனால் பண்பாடு கருதி நான் அமைதியாக இருந்தவாறு தொழுதேன். அதோடு நிற்காமல், சௌபாக்கிவதி சுமா டீச்சருக்கும் என்னுடைய பேன்ட்டுக்கும் வாழ்த்துகள் சொன்னேன். இவை ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்து நான் சிரித்தேன்.

“டாட்டா... ஏன் சிரிக்கிறீங்க?'' செல்ல மகள் தேநீருடன் வந்தாள். நான் அதை வாங்கி இலேசாகக் குடித்துவிட்டு ஒரு பீடியை உதட்டில் வைத்துப் புகைத்தேன். பீடியை இழுத்தவாறே வராந்தாவில் இருந்த சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்தேன். அப்போது நம்முடைய பட்டமகிஷி பேப்பர் பொட்டலங்களுடன் அங்கு வந்து நிற்கிறாள். அவள் வராந்தாவில் அமர்ந்து ஒவ்வொரு பொட்டலமாக அவிழ்த்தாள். ஒரு பொட்டலத்தில் கத்தரிக்காய் விதைகள் இருந்தன.

“இது இங்கே இல்லியா என்ன?'' நான் கேட்டேன். கனவு நாயகி- நூற்றியொரு நாக்குகளின் சொந்தக்காரி சொன்னாள்:

“இங்கே இருக்குற இனம் வேற. இது வேற. ஜயன்ட் ஆஃப் பனாரஸ். காய்கள் பெருசா இருக்கும். பெரிய பலாப்பழம் அளவுக்கு அது இருக்கும்.''

இன்னொரு பொட்டலத்தை அவிழ்த்தாள். அரிசி!

“இதென்னடி அரிசி?''

“இது சேம்பிள். இந்த அரிசியில பத்து படி அவங்க இப்போ கொடுத்து விடுறாங்க. யார்கிட்டயும் இதைச் சொல்லாதீங்க. அவுங்க நெல் விவசாயம் பண்றாங்க. பத்து பன்னிரண்டு பேருக்கு ரேஷன் வேற இருக்கு...''

“விவசாயம் செய்றவங்களும் ரேஷன் வாங்குவாங்களா என்ன?''

மனைவி சுற்றிலும் பார்த்தாள். இரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள இந்த இடத்தில் மருந்துக்குக்கூட யாரும் இல்லை. அவள் ரகசிய குரலில் சொன்னாள்:

“இதை யார்கிட்டயும் சொல்லாதீங்க...''

நான் கேட்டேன்: “இதுக்கு காசு தரணும்ல?''

“தரணும்...''

“காசு எங்கே இருக்கு? என்கிட்ட காசே இல்ல...''

சிறிது நேரத்திற்கு ஒரே நிசப்தம்.

நான் சொன்னேன்: “அடியே... அரசாங்கம் என்னைச் சும்மா விடுமா? மனிதர்கள் உயிரோட இருக்குறதுக்குத்தான் ரேஷனே தர்றாங்க. ரெண்டு மூணு நாட்கள் நான் நல்லா சாப்பிட்டு கம்பீரமா நடந்தால், அரசாங்கம் என்னைப் பார்த்து கேட்கும்: டேய் பஷீர்... நீ இப்போ கொஞ்சம் தடிச்சிப்போய் இருக்குறதுக்கான காரணம் என்ன? உனக்கு அரிசி எங்கே இருந்து கிடைச்சது?''

மீண்டும் சிறிது நேரத்திற்கு ஒரே நிசப்தம்.

என் மனைவி சொன்னாள்:

“முட்டாள் அரசாங்கம்! மூக்குல போடுற பொடி போல அஞ்சாறு மணி அரிசி அரசாங்கம் கொடுக்குறதை வச்சுத்தான் மனிதர்கள் இங்கே வாழ்ந்துக்கிட்டு இருக்காங்களா? கள்ளச் சந்தையிலதான் அரிசி வாங்கினேன்னு துணிஞ்சு சொல்ல வேண்டியதுதானே!''

“சரிதான்... அப்போ நீ கம்யூனிஸ்ட் ஆயிட்டியா? தோழரே, என்னோட அரசாங்கத்தை முட்டாள் அரசாங்கம்னு எவ்வளவு தைரியமா சொல்ற!''

“நான் கம்யூனிஸ்ட்டும் கிடையாது ஒண்ணும் கிடையாது'' என் மனைவி சொன்னாள்: “நான் ஒண்ணாம் நம்பர் காங்கிரஸ்.'' (அந்தக் காலத்தில் ஒரே ஒரு காங்கிரஸும் ஒரே ஒரு கம்யூனிஸ்ட் பார்ட்டியும்தான் இருந்தன).

இன்னொரு பேப்பர் பொட்டலத்தை அவள் பிரித்தாள்.

“மிளகு...''

“சரிதான்!''

வேறொரு பேப்பர் பொட்டலத்தை அவிழ்த்தாள். அதில் தங்கம் இருந்தது. பழைய சில நகைகள்.

“இருபத்தி ரெண்டு காரட்.'' மனைவி சொன்னாள்: “அவங்கக் கிட்ட நிறைய நகைகள் இருக்கு. இந்த நகைகளுக்கு நாம பணம் கொடுத்தா போதும். புருஷன் ஒரு லேம்ப்ரட்டா வாங்கப் போறாரு. அதுக்குத்தான் பணம் வேணுமாம்!''

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel