Lekha Books

A+ A A-

நூற்றியொரு நாக்குகள் - Page 10

nootriyoru nakkugal

“இதோட விலை எவ்வளவு?''

“லாபம்தான். ஆயிரத்தி முன்னூத்தி ஐம்பத்தொரு ரூபா. நம்ம மகளுக்கு கழுத்திலயும் கையிலயும் வர்ற மாதிரி நகைகள் செய்யலாம். நமக்கு இருக்குறதே ஒரே ஒரு மகள்தானே!''

“இந்த ஆயிரத்து முன்னூத்தி ஐம்பத்தொரு ரூபா உன் கிட்ட இருக்கா?''

சரியான கேள்விதான் என்பது மாதிரி என்னை அவள் பார்த்தாள். அதோடு ஒரு சிரிப்பு வேறு.

“என் கையில பணத்துக்கு எங்கே போறது? வேண்டாம்னா திருப்பித் தந்திட வேண்டியதுதான்!''

“நீ சொல்றதும் சரிதான். "அதை இன்னைக்கு அனுப்பிர்றோம். இன்னொண்ணு நாளைக்கு'ன்னு ஒரு டயலாக்கை நான் கேட்டேன். நாளைக்கு அவங்க அனுப்பப் போறது என்ன?''

மனைவி ஒரு அப்பாவியைப் போல முகத்தை வைத்துக்கொண்டு, கலங்கிய கண்களுடன் மெதுவான குரலில் என்னிடம் சொன்னாள்:

“ஒரு புது தையல் மெஷின். இங்கே இருக்குற லொடுக்காஸ் சக்கடா வண்டியை இனியும் நான் மிதிச்சா செத்தே போயிடுவேன்!''

நான் அவளிடம் சொன்னேன்:

“தங்கக்குடமே, நீ சாக வேண்டாம். புது மெஷினையே நீ மிதிக்கலாம். ஆமா... மெஷினோட விலை எவ்வளவு?''

அவள் சொன்னாள்: “என்ன... முன்னூறு ரூபா வரும். பில் கொடுத்து அனுப்புவாங்க. அவளோட புருஷன் மெஷின் கம்பெனியில சேல்ஸ் மேனேஜரா வேலை பார்க்குறாரு...''

ரொம்ப சந்தோஷம். ஆயிரத்து முன்னூற்று ஐம்பத்தொன்று, முன்னூறு, பிறகு... அரிசிக்கு விலை...

“இது தவிர, இன்னைக்கு நீ வேற ஏதாவது வியாபாரம் பண்ணியிருக்கியா?''

“இல்ல...'' ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு அவள் சொன்னாள்: “அரிசியும் தங்கமும் மெஷினும் நமக்கு வேண்டாம்னா நாம திருப்பித் தந்திடலாம். அவங்க எடுத்துக்குவாங்க...''

இது உண்மையா? அரிசி வந்தது. அடுத்த நாள் தையல் மெஷின் வந்து சேர்ந்தது. பழைய லொடுக்காஸ் சக்கடா வண்டி ஸ்டோர் ரூமைத் தேடிப் போனது. புதிய ரோல்ஸ் ராய்ஸ்- அதாவது, சௌபாககியவதி உஷா என்ற தையல் மிஷின் அறைக்குள் நுழைந்தது. இரண்டுக்கும் நான் சம்மதித்தேன். சௌபாகியவதி மிஸ். வாசந்திக்கும் நம்முடைய அருமைப் பொண்டாட்டிக்கும் மெஷினை மிகவும் பிடித்திருந்தது. இரண்டு பேரும் துணி தைப்பதில் மூழ்கிவிட்டார்கள்.

நான் சரியாக சாப்பிடாமல், தண்ணீர்கூட உள்ளே போகாமல் கவலையுடன் நடந்து திரிந்தேன். பணம்.. தேங்காய் விளைச்சல் சரியில்லை. பணத்திற்கு என்ன செய்வது?

“சும்மா தேவையில்லாம தோட்டத்துல இங்கேயும் அங்கேயுமா நடந்துக்கிட்டு இருக்காம, ஒழுங்கா உட்கார்ந்து ஏதாவது கதை எழுதப் பாருங்க...'' நம்முடைய ஹுரி என்னைப் பார்த்து சொன்னாள்: “ஒரு  சின்ன நாவல் எழுதுங்க...''

நான் சொன்னேன்:

“அடியே படுக்கூஸே... மை விழி மங்கையே... நூற்றியொரு நாக்கியே... தேவையில்லாம கலையை அவமானப்படுத்தாதே! கலைன்னா என்ன? உனக்கு இதைப் பற்றி ஏதாவது தெரியுமா? கலையோட நோக்கம் என்னடி?''

என்ன இருந்தாலும் அவள் பெண்ணாயிற்றே! பேசாமல் நின்றிருந்தாள்.

நான் சொன்னேன்:

“அடியே, கலைன்றது மிகப் பெரிய விஷயம். அதோட நோக்கம் நம்ம மகளுக்கு நகை பண்ணி போடுறதுக்கு பழைய இருபத்திரண்டு காரட் தங்கத்தை வாங்குவது இல்ல... நல்லா கேட்டுக்கடி. கலையோட நோக்கம் பொண்டாட்டிக்கு புதுசா தையல் மெஷின் வாங்கித் தர்றதும் இல்ல... என்ன சொன்னே நீ? கலையை எந்த அளவுக்கு அவமானப்படுத்திட்டே தெரியமா?''

“கலையை யாரும் அவமானப்படுத்தல...'' -அவள் தன்னுடைய நூற்றியொரு நாக்குகளையும் பயன்படுத்தி உரத்த குரலில் சொன்னாள்: “நான் என்ன கேவலமா பேசிட்டேன்? கண்ட பெண்களையெல்லாம் பார்த்து "முதல்ல பார்த்தது நான்தான்'னு சொல்லி திரியிறதுதான் கேவலமான விஷயம். உங்களுக்கே வெட்கமா இல்லியா? என்னை இதுக்குமேல பேச வைக்காதீங்க. இந்த சின்ன பிள்ளையையாவது நீங்க அப்ப நினைச்சுப் பார்த்திருக்கணுமா இல்லியா?''

“அடியே...'' நான் சொன்னேன்: “அன்னைக்கு சிம்பிளு இல்ல... நீயும் இல்ல... நாங்க ரொம்பவும் சுதந்திரமா இருந்தோம். இது நடந்து எத்தனையோ நூற்றாண்டுகளாயிடுச்சு!''

“எத்தனையோ நூற்றாண்டுகளா? அந்த அளவுக்கு கிழவனா நீங்க? எல்லாம் எனக்குத் தெரியும். ராமுவிற்கும் பரமுவிற்கும் எவ்வளவு வயசு இருக்கும்னு எனக்குத் தெரியாதா?''

“அவங்க ரெண்டு பேரும் சின்னப் பசங்க. அதுக்காக எனக்கு வயசாகக் கூடாதா?''

“கேட்க நல்லாத்தான் இருக்கு... அந்த நல்ல பாதிரியார்கூட வயசு குறைஞ்ச ஆளுதான். பாவம், அவரோட தொடையைக் கிள்ளி சிவப்பாக்கி, "முதல்ல பார்த்தது நான்தான்”னு யார் சொன்னது? கேட்டா... இப்போ வயசாயிடுச்சுன்னு சொல்றீங்க?''

“அடியே... அந்த விஷயத்தைத்தான் நான் ஏற்கெனவே உன்கிட்ட ஒத்துக்கிட்டேனே! இப்போ என்னோட மனசு எவ்வளவு சுத்தமா இருக்கு தெரியுமா? அடியே... கதை எழுதுற நாங்க எவ்வளவு நல்லவங்க தெரியுமா?''

மனைவி சொன்னாள்:

“அதெல்லாம் எனக்குத் தெரியும். எதையாவது எழுதுங்க. நீங்க எழுதியே ரொம்ப நாளாயிடுச்சு. பார்க்குறவங்கல்லாம் என்னைப் பார்த்து திட்டுறாங்க. ஏதாவது எழுத நினைச்சிருக்கீங்களா?''

நான் சொன்னேன்:

“ஒரு முக்கிய விஷயமா ஒரு இடத்துக்குப் போகணும். மகளும் நீயும் இங்கேயே இருங்க...''

மனைவி மனதிற்குள் என்னவோ நினைத்தவாறு கேட்டாள்:

“எங்கே போறீங்க? நாங்க மட்டும் இங்கே எப்படி தனியா இருக்குறது?''

நான் பதிலே பேசவில்லை.

மனைவி கேட்டாள்:

“ரொம்பவும் முக்கிய வேலையா?''

“ஆமா...''

“எங்கே?''

“இமயமûலைக்குப் போயி தவம் செய்யப் போறேன். நூற்றியொரு நாக்கிகளே, உங்களுக்கு மங்களம்!''

“வா மகளே...'' அவள் எழுந்தாள்: “பசுக்களைக் கூப்பிடு. இமயமலை அடிவாரத்துல புல் நிறைய இருக்கும். டாட்டா தவம் செய்யிறதை நாமும் பார்ப்போம்...''

பார்த்தீர்களா? தவத்தைக் கலைக்க எந்த இடத்திலும் மேனகைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இருந்தாலும், நூற்றியொரு நாக்கிகளுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்து... மங்களம்! தீர்க்க சுமங்கலிகளாக அவர்கள் வாழட்டும்!

ஒரு மாதிரி மங்களம்- சுபம்!

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel