
தன்னுடைய பிள்ளைகளுக்காகத் தான் மிகவும் அதிகமாக கஷ்டப்பட்டு விட்டதாக. அவர்கள் தான் கூறுவதை நம்ப வேண்டும் என்றும்; இப்படியொரு நிலைமைக்கு அவர்கள் வந்து சேர்ந்ததற்கு தான் காரணம் இல்லை என்று அவர்கள் நினைக்க வேண்டும் என்றும் அவன் எதிர்பார்த்தான். அவன் நகர்ந்து நகர்ந்து தன் மகளுக்கு அருகில் வந்தான்.
"என் மகளே, நீ எப்பவாவது என்னை மனசில திட்டியிருக்கியா?"
"ஏன் அப்படி கேக்குறீங்க அப்பா?"
"இல்ல மகளே... நீ கட்டாயம் திட்டியிருப்பே. என் மகளே, நான் உன்னை ரொம்பவும் செல்லம் கொடுத்து வளர்த்தேன். உனக்கு இடுப்புக் கொடியும் கம்மலும்கூட இருந்தது. உன் கல்யாணத்துக்கு நான் ஜரிகை போட்ட புடவை வாங்கிக் கொடுத்தேன். என் மகளே, அந்தப் படுபாவி..."
கிழவன் அடக்க முடியாமல் தேம்பி அழுத போது, அந்த முற்றிப் போன எலும்புகள் நொறுங்கி ஒடிவதைப் போல் இருந்தது. அந்த மகளும் அழுதாள்.
"அப்பா, அழாதீங்க."
இவ்வளவுதான் அந்தப் பெண்ணால் கூற முடிந்தது. அந்தத் தந்தையின் பாசத்தைப் பற்றி அவளுக்கும் ஞாபகத்தில் இருந்தது. தன் தந்தை கஷ்டப்பட்டது யாருக்காக என்பதையும் அவள் நன்கு தெரிந்து வைத்திருந்தாள். ஒரு நல்ல வீட்டை உண்டாக்கி, அதில் தன் மகளை குடி வைக்க வேண்டும் என்ற அந்த ஏழைத் தந்தையின் விருப்பம் சிறிதுகூட நடக்கவில்லை. அதைப்பற்றி அவளுக்கு மனதில் வருத்தமில்லை. எதற்காகக் கவலைப்பட வேண்டும்? அந்த மனிதன் அதற்காகக் கஷ்டப்படாமல் இல்லை. கஷ்டப்பட்டதற்கான பலன் அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விட்டது என்பதுதான் உண்மை. அந்தக் கிழவனின் கவலையை அவளால் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. எப்படி அவனுக்கு ஆறுதல் கூறுவது என்றே தெரியாமல் அவள் தடுமாறினாள். ஒரு விஷயம் மட்டும் உண்மை. பாசமான தந்தையாக இருந்ததால், பிள்ளைகள் பிச்சை எடுப்பதைப் பார்க்க சக்தியில்லாமல் அந்த மனிதன் பதுங்கி, ஒதுங்கிக் கொண்டிருந்தான். கிழவனின் வாரிசுகளுக்கு இனியும் எப்படிப்பட்ட அனுபவங்களெல்லாம் கிடைக்கப் போகின்றனவோ?
கிழவன் அவற்றையெல்லாம் கண்ணால் பார்க்க வேண்டுமா? இவையெல்லாம் யார் செய்த பாவங்களின் பலனாக நடக்கின்றனவோ? இந்த நீண்ட ஆயுள் ஒரு மிகப்பெரிய பாவத்தின் சம்பளமாக இருக்கலாம்.
பிள்ளைகள் வந்து சேராமல் இருக்கிறார்களே என்பதைப் பற்றிய எண்ணம் மீண்டும் அந்தக் கிழவனின் சிந்தனையோட்டத்தில் வந்து நுழைந்தது. இவ்வளவு நேரமாகியும் அவர்கள் வந்து சேரவில்லை. ஏன் அவர்கள் வந்து சேரவில்லை என்பதற்கான காரணத்தை மகள் கூறவேண்டும். அவளுக்கு அந்தக் காரணம் தெரியவில்லை.
கிழவன் கேட்டான்: "உனக்கு அதைப்பற்றி கொஞ்சம் கூட நினைப்பு இல்லையா?"
"நான் ஏன் அதைப்பற்றி நினைக்கணும் அப்பா?"
"இல்ல. நீ ஒரு பிச்சைக்காரியா இருந்தாலும் குடும்பத்திற்கான நெறிமுறைகளுடன் வளர்ந்தவளாச்சே!"
"ஏதாவது கிடைக்கும்னு அவங்க நடந்துக்கிட்டு இருக்கலாம் அப்பா."
"சாயங்காலம் ஆயிடுச்சுன்னா, கிடைச்சது போதும்னு நினைக்கணும்."
அவள் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. பிச்சைக்காரர்களாக இருந்தாலும், நெறிமுறைகளுடன் வாழ்வது எப்படி என்று கிழவன் சொன்னான். இருக்கும் மதிப்பை விட்டுவிடக் கூடாது. பிச்சை எடுப்பதிலும் ஒரு மதிப்புடன் இருக்க வேண்டும். தங்களுக்கென்று ஒரு வீடு இல்லையென்றாலும், குடும்பத்துடன் வாழமுடியும். அப்படி வாழந்தால், அடுத்த தலைமுறையாவது ஒழுங்காகத் தலைநிமிர்ந்து இருக்கும். மரியாதையை இழக்காமல், நெறிமுறைகளை விற்றுத் தின்னாமல், இருக்கும் மதிப்பை இழக்காமல் பிச்சைக்காரர்கள் வாழ முடியாதா? வாழ முடியும் என்பதுதான் கிழவனின் கருத்து.
மகள் கேட்டாள்:
"அது எப்படி அப்பா?"
"ஒரு குடும்பத்தில் இருக்கிறோம் என்பதை நினைச்சா போதும்."
ஒரு பாட்டின் ஒரு வரி உரத்த குரலில் பாடப்படுவது கேட்டது.
"கேசு வர்றான்லடி... அவன்தானேடி பாடுறது?"
"அவன்தான்னு நினைக்கிறேன்."
பத்து, பன்னிரண்டு வயது இருக்கக்கூடிய ஒரு சிறுவன் அங்கு வந்தான். கிழவன் கேட்டான்:
"அக்கா வந்துட்டாளாடா?"
"என்ன?"
அவனுக்கு அது தெரியாது.
அந்தப் பெண் கேட்டாள்:
"உன் கையில எவ்வளவு இருக்கு?"
"நான்கைந்து சக்கரங்கள் (பழைய கேரள நாணயம்) இருக்கு."
கிழவன் கேட்டான்:
"நீ இன்னைக்கு அவளைப் பார்க்கலையா?"
அவன் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.
"உன் வயிறு ஏன் இப்படி வீங்கியிருக்கு?"
"அங்கே இருக்குற ஒரு வீட்ல ஒரு விருந்து இருந்தது."
"அப்படின்னா இரவு சாப்பாடு வேண்டாமா?"
"பிறகு? என் பங்கு எனக்கு வேணும்."
மீண்டும் கிழவனின் கேள்வி ஆரம்பமானது. அவள் எங்கு போனாள் என்று அவன் கேட்டான். சிறுவன் முணுமுணுத்தான். கிழவனின் சரமாரியான கேள்விகளைக் கேட்க பொறுமை இல்லாமல் ஆனபோது, அவன் சொன்னான்:
"எனக்கு எப்படித் தெரியும்?"
கிழவன் எழுந்தான். அவன் தன் மகள் இருந்த பக்கம் திரும்பினான்.
அவள் எங்கு போனாள் என்பதை அந்தப் பெண் கூற வேண்டும். அவள் எப்படிக் கூறுவாள்?
தாயும் மகனும் சேர்ந்து தங்களுக்கு அன்று நடந்ததைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள். அவளுக்கு இன்று கொஞ்சம் அரிசியும் சிறிது உப்பும் மிளகாயும் கிடைத்தன. அவன் அந்த விருந்து நடந்த இடத்திற்குச் சென்ற காரணத்தால் வேறு எங்கும் செல்லவில்லை. அவன் மெதுவான குரலில் கேட்டான்:
"தாத்தாவுக்கு மத்தியானம் எப்படி இருந்தது?"
அவள் முணுமுணுத்தாள்:
"அதைக் கேக்குறியா? கொஞ்சம் கஞ்சித் தண்ணியை எங்கே இருந்தாவது கொண்டு வந்து கொடுத்தால் குடிக்கிறது இல்ல. மத்தியானம் நான் வந்து பண்ணிக் கொடுத்தேன்."
"இது நல்ல கூத்தா இருக்கு."
"என்ன செய்றது?"
"அம்மா, மத்தியானம் நீங்க வரவேண்டாம். சும்மா படுத்திருக்கட்டும்."
கிழவன் தட்டுத் தடுமாறி சாலை வழியாக சிறிது நேரம் நடந்தான். பேத்தியைத்தேடி அவன் நடந்து செல்கிறான். அவனால் சாதாரணமாக உட்கார்ந்திருக்க முடியவில்லை.
கேசு தன் தாயிடம் சொன்னான்:
"தாத்தா வெளியே போறதா இருந்தா, நல்லா காசு கிடைக்கும் அம்மா. வயதான ஆளா இருந்தா எல்லாரும் கொடுப்பாங்க."
"போக மாட்டார் மகனே... போகமாட்டார்."
"அப்படின்னா கொடுக்காதீங்க. அதுதான் நீங்க செய்ய வேண்டியது."
அப்போது உரத்த குரலில் ஒரு கூப்பாடு கேட்டது. தாயும் மகனும் மிகவும் கவனமாக அதைக் கேட்டார்கள். மீண்டும் பெயரைச் சொல்லி அழைக்கும் ஒரு அழைப்பு அது. கிழவன் தன்னுடைய பேத்தியைக் கூப்பாடு போட்டு அழைக்கிறான். அந்த விவசாயியான மனிதனின் அந்த மாதிரியான கூப்பாடு விரிந்து கிடக்கும் வயலின் ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்குப் போய் சேரும்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook