Lekha Books

A+ A A-

பிச்சைக்காரர்கள் - Page 7

Pichaikkarargal

மறுநாள் காலையில் பாதி திறந்த வாயுடன், அந்தப் புளிய மரத்திற்குக் கீழே அந்தக் கிழவனின் இறந்த உடல் கிடந்தது. அதற்கு எதிர் பக்கத்தில் குளிர்ந்த நீரும் இரத்தமும் கலந்து கிடந்தன. மாலை நேரம் ஆனபோது, நகராட்சிக்குச் சொந்தமான குப்பை வண்டி அங்கு வந்தது. நான்குபேர் அந்த இறந்த உடலை வாரி எடுத்து வண்டிக்குள் எறிந்தார்கள்.

அத்துடன் அந்த வாழ்க்கை முடிந்தது.

2

ரு பழைய கிழிந்து போன காக்கி நிற அரைக்கால் ட்ரவுசரையும் அதே போல இருந்த ஒரு கருப்பு நிற பனியனையும் அணிந்திருந்த ஒரு சிறுவன் அந்தப் புளிய மரத்திற்குக் கீழே வந்து நின்றிருந்தான். அது கேசுதான்.

பழைய அடுப்புக் கற்கள் சாய்ந்து கிடந்தன. அங்கு நீண்ட நாட்களாக நெருப்பு எரிந்ததற்கான அடையாளமே இல்லை. இரண்டு மூன்று நெருப்புக் கட்டைகள் கிடந்தன. அவன் கஞ்சி குடித்துக் கொண்டிருந்த சட்டியின் ஒரு துண்டு அவன் பார்வையில் பட்டது.

அந்தப் புளிய மரம் இலைகளால் நிறைந்து காணப்பட்டது.

கேசு தன்னுடைய தாயையும் தாத்தாவையும் அக்காவையும் பார்ப்பதற்காகத் திரும்பி வந்திருக்கிறான். அவன் வெறும் கையை வீசிக் கொண்டு வரவில்லை. அவனிடம் மூன்று ரூபாய்கள் இருந்தன. அந்தப் பணத்தைத் தன் தாயின் கையில் தர வேண்டும் என்று அவன் நினைத்தான். தன் தாயிடம் கூறுவதற்கு அவனிடம் எவ்வளவோ விஷயங்கள் இருந்தன. ஆனால், அவனுடைய தாய் எங்கு போனாள்? அவன் யாரிடம் கேட்டு விஷயத்தைத் தெரிந்து கொள்வான்?

அந்த மரத்தின் உயரமான வேரில் தலையை வைத்து அவன் படுத்தான். அப்படியே படுத்தவாறு அவன் தூங்கிவிட்டான்.

யாரோ தன்னை அழைத்ததைப்போல் உணர்ந்து கேசு அதிர்ச்சியடைந்து கண் விழித்தான். அவன் இந்த உலகத்தில் தனியாக இருந்தான். அருகில் யாருமில்லை. அங்கிருந்து கிளம்பி அலைந்து திரிந்த நாட்களில் அவனுக்குள் ஒரு உணர்வு இருந்து கொண்டேயிருந்தது. தூரத்திலிருக்கும் ஒரு நகரத்தைச் சேர்ந்த ஒரு புளிய மரத்திற்குக் கீழே தன்னுடைய தாயும் அக்காவும் தாத்தாவும் இருக்கிறார்கள் என்ற நினைப்புதான் அது. வாழ்க்கையில் அவன் தனியனாக இல்லை. உரத்த குரலில் தன் தாயை அழைக்க வேண்டும் போல் அவனுக்கு இருந்தது. அந்த அழைப்பு தொண்டைக்குழி வரை வந்தது. ஆனால் வெளியே வரவில்லை. அழைத்தால், அந்த அழைப்பைக் கேட்பார்களா? அவர்கள் எங்கு இருக்கிறார்கள்?

யாரும் இல்லாதவனைப் போல, எந்தவொரு லட்சியமும் இல்லாமல் கேசு நடந்தான். அந்தப் பிச்சைக்காரச் சிறுவனின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஒரு நாளாக இருந்தது அது. அவனுக்கென்று யாரும் இல்லை! பரந்து கிடக்கும் இந்த உலகத்தில் போய் இருப்பதற்கு ஒரு இடமில்லை. எனினும், அந்தப் புளிய மரத்தடியை அவனால் மறக்க முடியவில்லை. அவன் மீது பாசம் வைத்திருப்பவர்கள், அவன் அன்பு வைத்திருப்பவர்கள் எங்கு இருக்கிறார்கள்?

பகல் முழுவதும் நகரமெங்கும் அவன் சுற்றித் திரிந்தான். முன்பு நன்கு அறிமுகமான பிச்சைக்காரச் சிறுவர்கள் எல்லோரிடமும் கேட்டான். யாரிடமிருந்தும் எந்தவொரு தகவலும் அவனுக்குக் கிடைக்கவில்லை.

மாலை நேரம் ஆனதும் பிச்சைக்காரர்களின் குடும்பங்கள் தங்கள் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தன. அவனுடைய தாயும் அக்காவும் தாத்தாவும் இதே மாதிரி புதிய ஒரு இருப்பிடத்தைத் தேடிக் கண்டு பிடித்திருப்பார்கள். அவன் இரவு நேரத்திலும் நடந்தான். மீண்டும் பொழுது புலர்ந்தபோது, அந்தப் புளிய மரத்தடியைத் தேடி வந்தான். அங்கேயே படுத்து அவன் தூங்கிவிட்டான்.

அந்த நகரத்திலிருந்து வேறு ஏதோ நகரத்திற்குச் செல்லும் சிறு பாதை வழியாக மிகவும் அமைதியாக, எந்தவித சிந்தனையும் இல்லாமல் அவன் நடந்து போய்க்கொண்டிருந்தான். அந்தத் தேடலை அவன் நிறுத்தி விட்டானா? தன்னுடைய தாயை இதற்குமேல் பார்ப்பதற்கான வழி இல்லை என்று அவன் முடிவு செய்துவிட்டானா? அவனுடைய எதிர்கால திட்டம்தான் என்ன? பிச்சைக்காரச் சிறுவனுக்கு எதிர்காலத்தைப் பற்றி திட்டம் வேறு இருக்கிறதா?

மீண்டும் ஒன்றிரண்டு மாதங்கள் கடந்த பிறகு ஒருநாள் அந்தப் புளிய மரத்தடியில் அவன் இருந்தான். அன்றும் அவன் அங்கேதான் படுத்து உறங்கினான். சில நாட்கள் கழித்து மீண்டும் ஒரு இரவு நேரத்தில் ஒரு சிறுவன் அங்கு படுத்து உறங்குவதைப் பலரும் பார்த்தார்கள். அது கேசுதான். அடுத்த தடவை அவன் அங்கு வந்தபோது, அந்தப் புளிய மரத்தடி வேறொரு குடும்பத்தின் இருப்பிடமாக மாறியிருந்தது. அடுப்பில் நெருப்பு எரிந்து கொண்டிருக்க, பிள்ளைகள் அழுது கொண்டிருந்தார்கள்.

கேசு மெதுவாக அவர்களை நோக்கி நடந்து சென்றான். அடுப்பின் வெளிச்சத்திலிருந்து விலகி இருட்டில் உட்கார்ந்திருந்த ஒரு குழந்தை பயந்துபோய் கத்தியது. நெருப்பை எரியவிட்டுக் கொண்டிருந்த பெண்ணும் பயந்து விட்டாள். அவள் கேட்டாள்:

"யார் அது?"

"நான்... நான்..."

கேசு நின்றான்.

"யார் அது? பேசாமல் வந்துக்கிட்டு இருந்தா?"

அவன் சொன்னான்:

"நான் இங்கே இருந்தவன்தான்."

"எப்போ?"

"ரொம்ப நாட்களுக்கு முன்னால்..."

"அதுக்கு இப்போ ஏன் இங்கே வந்தே?"

கேசுவிடம் அதற்கு எந்த பதிலும் இல்லாமலிருந்தது. பெண் தொடர்ந்து கேட்டாள்:

"உன் பேர்ல பதிவு செஞ்சிருக்கா?"

அதற்கும் எந்த பதிலும் இல்லை.

பெண் மீண்டும் சொன்னாள்:

"இங்கே நீ இருந்திருக்கலாம். உனக்கு முன்னால் வேற யாராவது இருந்திருப்பாங்க. அதற்கு முன்னாலும் இருந்திருப்பாங்க. அதற்காக திருடனைப் போல இங்கே வர்றதா?"

கேசு ஏதாவது பதில் சொல்லியே ஆக வேண்டும்!

"என் அம்மாவும் அக்காவும் தாத்தாவும் சேர்ந்து இங்கே இருந்தாங்க."

"நல்லது... அதற்காக?"

அவன் ஐந்து, ஆறு அடிகள் பின்னால் நடந்து உட்கார்ந்தான்.

பெண் அழுது கொண்டிருந்த சிறுமியை அருகில் இழுத்துப் பிடித்து உட்கார்ந்தாள். குழந்தையை பயப்படச் செய்ததற்காக அவள் கேசுவைத் திட்டினாள். "என்னடா நீ இன்னும் போகாம இருக்கே?" என்று அவள் கேட்டாள். அப்போது அந்தக் குழந்தை அடிக்கொருதரம் திரும்பிப் பார்த்து அழுது கொண்டேயிருந்தது.

அங்கு அவனும் அவனுடைய தாயும் மற்றவர்களும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு முன்னால் அதே போல பல குடும்பங்களும் வாழ்ந்திருந்தன. இப்போது இவர்கள் இருக்கிறார்கள். இனிமேல் இவர்கள் இங்கிருந்து போய்விடுவார்கள். வேறு ஆட்கள் வருவார்கள். இந்தக் கதையைத்தான் அவன் நினைத்துக் கொண்டிருந்தான். ஏதோ ஒரு அடையாளம் தெரியாத இடத்தில் அவனுடைய தாய் இப்போது இதே போல அடுப்பிற்கு அருகில் உட்கார்ந்திருப்பாள். ஒருநாள் வீட்டைவிட்டு வெளியே போய்விட்டு அதற்குப் பிறகு திரும்பியே வராத தன் மகனை நினைத்து அவள் அழுது கொண்டிருக்கலாம்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel