Lekha Books

A+ A A-

பிச்சைக்காரர்கள் - Page 10

Pichaikkarargal

"இப்படித்தான் பிச்சைக்காரர்களை உண்டாக்குகிறார்கள். கூலி கொடுக்காமலே வேலை செய்ய ஆளுங்க கிடைப்பாங்க. வேலையிலிருந்து விலக்கப்பட்டவர்கள் அதிகமா சம்பளம் கேட்டிருப்பாங்க."

அது அவனுக்குத் தெரியாது.

அவள் ஒரு தொழிலாளியின் மனைவியாக இருந்தாள். நல்ல உடல்நலம் கொண்ட ஒரு கணவனின் மனைவி. அவன் எந்தச் சமயத்திலும் ஒரு பிச்சைக்காரனாக இருந்ததில்லை. இன்னொருவனிடம் ஒரு பாக்குத் துண்டுகூட இரவலாகக் கேட்டதில்லை. இரவு- பகல் பாராமல் பணி செய்தான். ஆனால், கையில் மிச்சம் என்று எதுவுமே இல்லாமல் ஆன போது, மேலும் மேலும் அவன் வேலை செய்தான். இப்படி ஓய்வே இல்லாமல் வேலை செய்த அவன் உரிய காலத்திற்கு முன்பே மரணத்தைத் தழுவிவிட்டான்.

அவள் சொன்னாள்:

"அந்த மனிதர் வேலை செய்த நிலைக்கு, நாங்க யாரும் பிச்சை எடுக்க வேண்டிய அவசியமே இல்லை."

அதே வார்த்தைகளைத்தான் அவனுடைய தாத்தா கூறியும் அவன் கேட்டிருக்கிறான். அவனும் பிச்சை எடுக்க வேண்டியதே இல்லை. அந்த வரலாறை நினைக்கும்போது அவனுக்கு மேலும் ஆர்வம் உண்டானது. அவனுடைய தாத்தா வேலை செய்ததற்கான பலனை யாரோ அபகரித்துக் கொண்டார்கள். இந்தத் தொழிலாளிகளின் கடுமையான உழைப்பிற்கான பலன்...?

அவள் பதில் சொன்னாள்:

"நாம் பார்க்கும் மாளிகையும் கோபுரமும் பிறகு என்னன்னு நினைச்சே? ஏழைங்களோட உழைப்புதான்."

அப்படியென்றால் அவனும் வேறு யாரோ பணம் சம்பாதிப்பதற்குத்தான் இன்று தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறானா? "ஆமாம்" என்று அந்தப் பெண் உறுதியான குரலில் சொன்னாள்.

"இன்னைக்கு உனக்கு முழுசா பதினாலு சக்கரங்கள் கிடைச்சது. இதை வச்சு நீ ஒரு நாள் வாழ முடியுமா? இல்லை. நீ வேலை செய்றது மூலம் கிடைக்கிற பணம் நீ வாழ்ற அளவுக்காவது வேண்டாமா? அப்படின்னா உனக்கு தேவையான பணம் கிடைக்கணும். அதைத் தர மாட்டாங்க. அப்போத்தான் பிச்சைக்காரர்கள் உண்டாகுறாங்க. பிச்சைக்காரர்கள் உண்டாகுறப்போ, சம்பளம் குறைவா கொடுத்தால் போதும். பிச்சைக்காரர்கள் அப்படித்தான் உண்டாகுறாங்க."

தன்னுடைய சொந்தக் கதை மட்டுமல்ல-வேறு பலரின் பரிதாபமான வரலாறுகளும் அவளுக்குத் தெரியும். அந்த இதயத்தை நெகிழச் செய்யும் கதைகளை அவன் மிகவும் கவனமாகக் கேட்டான்.

மறுநாள் காலை அவனைப் பொறுத்தவரையில் ஒரு குறிப்பிடத்தக்க காலையாக இருந்தது. நான்கு பக்கங்களிலும் தெரிகிற மிகப் பெரிய மாளிகைகளை அவன் கூர்ந்து கவனித்தான். அவை அப்படி கம்பீரமாக நின்று கொண்டிருப்பதில் ஒரு புதிய அர்த்தமும் விளக்கமும் இருந்தன. அவை அனைத்தும் இல்லாதவர்களின் உழைப்பால் உண்டானவை.

அன்று அவன் வேலைக்குப் போக வேண்டுமா என்று அந்தப் பெண்ணிடம் கேட்டான். அவள் அறிவுரை சொன்னாள்:

"போகணும் மகனே. வேலை செய்யணும். இல்லைன்னா, சாப்பிடுறது சிரமமான விஷயமா ஆயிடும்."

அப்படியென்றால் மற்றவர்கள் லாபம் சம்பாதிப்பதற்காக வேலை செய்ய வேண்டுமா என்று அவன் கேட்டான். அதற்கான பதிலும் அந்தப் பெண்ணிடம் இருந்தது.

"நாம மனசுல நினைக்க வேண்டியது அவர்களுக்கு லாபம் உண்டாக்குறதைப் பற்றி இல்ல குழந்தை. வேலை செய்யணும். நம்மால எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு வேலை செய்யணும்."

அந்த அறிவுரையை அவன் பின்பற்றினான். காலையில் நடந்து செல்லும்போது இரு பக்கங்களிலும் பார்த்துக் கொண்டே அவன் நடப்பான். அந்த செழிப்பான சூழ்நிலைக்கான அர்த்தம் என்னவென்று அவனுக்கு நன்றாகவே புரிந்தது. கடந்து செல்லும் பணக்காரர்களைப் பற்றி அவன் சிந்திக்க ஆரம்பித்தான். அவனுக்குத் தெரிந்த ஏராளமான பேருக்கு எதுவுமே இல்லாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?

வாழ்க்கையை அவன் ஒரு புதிய கோணத்தின் வழியாகப் பார்த்தான். வீங்கிய மடியைப் பார்க்கும் போது அவன் அதில் எவ்வளவு இருக்கிறது என்று நினைத்து ஆச்சரியப்படுவதில்லை. அது எப்படி உண்டானது என்று சிந்திக்க ஆரம்பித்தான். தெரு முழுக்க நடந்து பிச்சை எடுத்தும் ஒரு பிடி சோறு கிடைக்காமல், தோல்வியைச் சந்தித்த பிச்சைக்காரனைப் பார்க்கும்போது அவனுடைய பங்காக இருக்கும் உணவு எங்கு போனது, யார் அதை அபகரித்தார்கள் என்று அவன் சிந்தித்துப் பார்த்தான். இந்த நகரத்தில் இருப்பவர்கள் வசிப்பதற்கான வீடுகள் இதே நகரத்தில் இருக்கத்தான் செய்கின்றன. காலியாக கிடக்கும் வீடுகள் நிறைய இருக்கின்றன. ஆனால், பாதையோரங்களிலும் புளிய மரத்தடியிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அப்படித்தான் வாழ்ந்தாக வேண்டும் என்ற சூழ்நிலை வந்ததற்கான காரணம் என்ன?

ஒன்றுக்குப் பின்னால் இன்னொன்றாக கேள்விகள் எழுந்து கொண்டேயிருந்தன. அனுபவங்களில் இருந்து உண்டான அர்த்தம் நிறைந்த கேள்விகள்! ஆனால், பதில்கள்தான் கிடைக்கவில்லை. பதில்கள் கிடைத்தாலும் அவனுடைய சிந்தனை அறைகளில் குழப்பம் உண்டானதுதான் மிச்சம். மிகப்பெரிய மாளிகைகளின் சொந்தக்காரன் அதன் உரிமையாளராக எப்படி ஆனான்? வீங்கிய மடிகள் மேலும் வீங்க முடிந்தது எப்படி? இப்படி ஒன்றின் மீது ஒன்றாக சாய்ந்து விழுந்து பிரச்சினைகள் சிந்தனைத் தளத்தில் அதிகமாகிக் கொண்டிருந்தன.

தன்னுடன் இருக்கும் பிச்சைக்காரர்களிடம் அவன் சொன்னான்- இந்த வசதி படைத்த மனிதர்கள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டியதை அபகரித்துக் கொண்டார்கள் என்று. அதைக் கேட்டு அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அடித்துப் பிடுங்குவதற்குப் பிச்சைக்காரர்களிடம் என்ன இருக்கிறது? எந்தப் பிச்சைக்காரனிடமிருந்து எந்தப் பணக்காரன் சொத்தைப் பிடுங்கினான்? தொழிற்சாலையில் தன்னுடன் வேலை பார்க்கும் மற்ற பணியாட்களிடம் அவன் சொன்னான்- இப்போது வாங்கிக் கொண்டிருப்பதை விட அதிகமான சம்பளம் வாங்க அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்று. அது யாருக்கும் புரியவில்லை. பிச்சை எடுத்துக் கொண்டு தெருவில் நடந்து திரிந்தவர்களுக்கு கூப்பிட்டு வேலை தருவது என்பதே எவ்வளவு பெரிய விஷயம்! இந்த அளவிற்காவது கிடைத்ததே! முதலாளிக்கு அதிகமாக லாபம் கிடைக்கிறது என்றால், அது அவர்கள் பணத்தை முதலீடு செய்ததன் காரணமாகத்தானே?

அப்போது அவன் தனக்குள் கேட்டுக் கொண்டான்.

'முதலாளிக்கு பணம் எங்கே இருந்து வந்தது?'

அந்தச் சிறுவன் இன்று ஒரு சாதாரண சிறுவனல்ல. எதுவுமே இல்லாத பிச்சைக்காரன் அல்ல. கிடைப்பதைக் கொண்டு எப்படியோ வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தொழிலாளியும் அல்ல. அவன் சிந்திக்கக் கற்றுக் கொண்டான். அவனுக்கு சிந்தனை செய்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருந்தன. அவனுடைய கண்கள் பலவிதப்பட்ட பிரச்சினைகளையும் வெளிப்படுத்துகின்றன. அங்கு ஒரு பிரகாசம் தெரியவே செய்கிறது. பிரகாசம் தெரிகிறதா என்று நீங்கள் கேட்கலாம். ஆமாம்... பிரகாசம்தான். அவனுக்குள் ஒரு நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. புனிதமான ஒரு நெருப்பின் சக்தி அங்கு திரண்டிருக்கிறது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel