
அது அவன் இல்லை! பேருந்து நிறுத்தத்தில் அவள் நீண்ட நேரம் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். எங்கெல்லாம் சிறுவர்களைப் பார்த்தாளோ, அங்கெல்லாம் அவள் ஓடிப்போய்ப் பார்த்தாள். ஹோட்டல்களுக்குப் பின்னால் இருந்த எச்சில் பீப்பாய்கள் வைக்கப்பட்டிருந்த இடங்களிலும் அவள் அவனைத் தேடினாள்.
நேரம் அதிகமானது. அவளுடைய கால்கள் வலித்தன. அன்று சிறிது கூட அவள் நீர் அருந்தவில்லை. அவள் சாலையோரத்திலிருந்த ஒரு கடைத் திண்ணையில் போய் உட்கார்ந்தாள். அப்போது அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. எப்படிப்பட்ட கனவுகளையெல்லாம் அவள் தன்னிடம் வைத்திருந்தாள்! மீண்டும் ஒரு வீடு உண்டாகும் என்று அவள் மனதில் ஆசை வைத்திருந்தாள். பிச்சை எடுப்பதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று அவள் மனதில் தீர்மானித்திருந்தாள். மானத்தைத் திரும்பவும் பெறவேண்டும் என்று அவள் ஆசை கொண்டிருந்தாள்.
அந்தத் திண்ணையிலேயே சற்று தள்ளி ஒரு பிச்சைக்காரக் குடும்பம் வசித்துக் கொண்டிருந்தது. அங்கு இருந்த அன்னை, கேசு வயதைக் கொண்ட தன்னுடைய மகனுக்கு சூடான சாதத்தைப் பரிமாறிக் கொண்டிருந்தாள். அவன் உருட்டி உருட்டி அதைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
கல்யாணி அந்தப் பெண்ணின் கண்களில் பட்டாள். அவள் கல்யாணியை நோக்கி நடந்தாள். அவள் கேட்டாள்:
"ஏன் அழுற?"
"என் பையனைக் காணோம்."
"அதற்கு நீ ஏன் அழணும்? அவன் வருவான்."
சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனுக்குக் கொஞ்சம் தண்ணீர் தேவைப்பட்டது. அவனுடைய தாய் நடந்து சென்று ஒரு சிரட்டையில் நீர் மொண்டு கொடுத்தாள். பிறகு அவள் திரும்பி வந்தாள். கல்யாணி அந்தச் சிறுவனிடம் கேட்டாள்:
"கேசுன்ற ஒரு பையனை உனக்குத் தெரியுமா மகனே? உன் வயசு இருக்கும் அவனுக்கு..."
அவன் சொன்னான்: "எனக்குத் தெரியாது."
கல்யாணி தேம்பித் தேம்பி அழுது கொண்டே சொன்னாள்:
"எனக்கு இருந்த ஒரே ஆண் வாரிசு அவன்தான். அவன் நேற்று போனவன், திரும்பியே வரல."
அந்தச் சிறுவனின் அன்னைக்கு அந்த விஷயம் அவ்வளவு முக்கியமானதாக இருக்கவில்லை. அதில் அழுவதற்கு என்ன இருக்கிறது! ஒரு பிச்சைக்காரச் சிறுவன் வெளியே போனான் என்றால், தினமும் மாலையில் திரும்பி வரவேண்டும் என்று இருக்கிறதா என்ன? பிச்சை எடுப்பதற்காகப் போனவதன்தானே அவன்? பிச்சை எடுத்து பிச்சையெடுத்து அவன் எங்கேயாவது போயிருப்பான். சில வேளைகளில் அவன் திரும்பி வராமலே கூட இருந்துவிடலாம். அந்த வகையில், அந்தப் பெண்ணின் இரண்டு ஆண் பிள்ளைகள் காணாமல் போயிருக்கிறார்கள். ஒரு நாள் காலையில் ஒருவன் போனான். அதற்குப் பிறகு அவன் திரும்பி வரவேயில்லை. இன்னொருவன் ஏதோ ஒரு நகரத்தில் இருப்பதாகச் சொன்னார்கள்.
அவள் இப்படிக் கூறி முடித்தாள்.
"நாம இந்த விஷயத்தை அந்த அளவுக்குத்தான் நினைக்கணும். நடக்க ஆரம்பிக்கிறதுவரை நாம வளர்க்கணும். அதற்குப் பிறகு அவங்க இஷ்டப்படி போகட்டும்."
கல்யாணிக்கு அந்தப் பெண் சொன்னது எதுவும் சிறிதுகூட புரியவில்லை. அதே நேரத்தில் அவள் இறுதியாகச் சொன்ன வார்த்தைகள் அவளுடைய இதயத்திற்குள் ஆழமாக நுழைந்தன. 'அதற்குப் பிறகு அவங்க இஷ்டப்படி போகட்டும்' என்று கூறியது! இரண்டு மகன்களை அந்த வகையில் அவர்கள் விருப்பப்படி வெறுமனே விட்ட ஒருத்தி சொன்ன வார்த்தைகள் அவை! கல்யாணி சொன்னாள்:
"பெற்ற பிள்ளையை அப்படி நினைக்க முடியுமா?"
அடுத்த நொடியே அதற்கான பதில் கல்யாணிக்குக் கிடைத்தது.
"அப்படி இல்லாம வேற எப்படி நினைக்கிறது?"
கல்யாணிக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அந்தச் சிறுவன் சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்தான். அவனுடைய அன்னை கேட்டாள்:
"வயிறு நிறைஞ்சிருச்சாடா?"
"ம்..."
"வேணும்னா இன்னும் கொஞ்சம் சாதம் சாப்பிடு."
"வேண்டாம்."
அவனால் மூச்சுவிடக் கூட முடியவில்லை. எனினும் அவனிடம் அன்னை கூறுகிறாள்- இன்னும் கொஞ்சம் சாதம் சாப்பிடும்படி!
கல்யாணி இனிமேல் இப்படித் தன் மகனுக்கு சாதம் பரிமாற வேண்டிய அவசியமில்லை! கல்யாணியின் கண்கள் நீரால் நிறைந்தன. அந்தப் பெண் சொன்னாள்:
"அம்மா! நான் ஒரு விஷயம் சொல்றேன். நாம சும்மா பிள்ளை பெறுவதற்குன்னே பிள்ளைகளைப் பெத்தெடுக்கிறோம்."
அதைக் கல்யாணியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் வெறுமனே பிள்ளை பெற்றவள் இல்லை. அவள் தன்னுடைய கணவன்மீது அன்பு வைத்திருந்தாள். ஒரு ஆண் வாரிசுக்காக அவள் காத்திருந்தாள். அவன் அவளுடைய லட்சியங்களின் மையப்புள்ளியாக இருந்தான். அவனுடைய பிறப்பிற்கு ஒரு நோக்கம் இருந்தது. அந்த சிந்தனைகள் அவளிடமிருந்து இப்படி வெளிப்பட்டன:
"அவன் அவனுடைய தந்தையின் இன்னொரு வடிவம்."
"எல்லா பிள்ளைகளும் அப்படித்தான்."
தொடர்ந்து அவள் கல்யாணியிடம் அவளைப் பற்றிய கதைகளைக் கேட்டாள். கல்யாணி அதை விளக்கமாகச் சொன்னாள். எல்லாவற்றையும் கேட்ட பிறகு, வாழ்க்கையைப் பார்த்த ஒருத்தியைப் போல அவள் சொன்னாள்:
"அம்மா, ஆங்காங்கே நாம பார்க்குற பிச்சைக்காரர்கள் ஒவ்வொருவரும் மனிதர்கள்தான். தாய்கள் பெற்றவர்கள்தான். தந்தைகள் இருப்பவர்கள்தான். அண்ணன்- தம்பிகள் இருப்பவர்கள்தான. பெண்கள் பிள்ளைகள் பெறுவதும், ஆண்கள் பிள்ளைகளை உண்டாக்குவதும் சாதாரணமா நடக்கக்கூடியதுதான். இருந்தாலும் அவர்கள் ஏன் இப்படி யாருமே இல்லாமல் தெருக்கள்ல நடந்து திரியிறாங்க? கொஞ்சம் நினைச்சுப் பாரு... என்ன காரணம்?"
கல்யாணி அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. அந்தப் பெண் விளக்கமாகச் சொன்னாள்: "பெண்கள் பிள்ளைகளைப் பெறுகிறார்கள். அவர்களில் சில குழந்தைகள் செத்துப் போகின்றன. கொஞ்சம் குழந்தைகள் உயிரோடு இருக்குறாங்க. உயிரோடு இருக்கும் பிள்ளைகள் தங்கள் வழியைப் பார்த்துக் கொண்டு போகிறார்கள். அந்த வாழ்க்கையில் தாய்க்கு மகனோ மகனுக்குத் தாயோ இல்ல. சகோதரர்களுக்குச் சகோதரிகளும் சகோதரிகளுக்குச் சகோதரர்களும் இல்லாமல் போகிறார்கள். அவர்கள் பிரிந்துவிட்டால், பிறகு எந்தச் சமயத்திலும் பார்க்காமலே கூட போகலாம். அப்படியே பார்க்க நேர்ந்தாலும், அடையாளம் கண்டு பிடிக்க முடியாத நிலைமையில் கூட இருக்கலாம். ஒத்தைக்கு ஒத்தைன்னு போய்க் கொண்டிருக்குற அந்த வாழ்க்கையில் பிறப்பும் மரணமும் ஒரு சிறப்புச் சம்பவம் இல்லை. யாருக்கும் யாரைப் பற்றியும் எதிர்பார்ப்புகளும் ஆர்வமும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கே கிடந்து இறக்கணும் என்று ஆசைப்பட பிச்சைக்காரனுக்கு உரிமை இருக்கா என்ன?"
ஒரு தத்துவஞானியின் கம்பீரத்துடன் அந்தப் பெண் சொன்னாள்:
"அம்மா, நாம அன்பு செலுத்தணும்னு ஆசைப்பட வேண்டாம். யாராவது நம்மேல பாசம் வைக்கணும்னு நினைக்கவும் வேண்டாம்."
சிறுவனைச் சுட்டிக் காட்டியவாறு அவள் தொடர்ந்து சொன்னாள்:
"இப்போ நான் இவனுக்கு சாப்பாடு போட்டேன். நாளை இவன் இங்கேயிருந்து போயிட்டா, போனால் போகட்டும்னு விட்டுடுவேன். பிறகு என்ன செய்றது?"
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook