Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

சாயங்கால வெளிச்சம்

சாயங்கால வெளிச்சம்
டி. பத்மநாபன்
தமிழில்: சுரா

ந்த வீடு ஆட்கள் வசிக்காததைப் போல இருந்தது. அங்கிருந்த சமையலறையிலிருந்து புகை வரவில்லை. கதவுகளும் சாளரங்களும் எப்போதும் அடைந்தே கிடந்தன. போர்ட்டிக்கோவின் இரு பக்கங்களிலும் நன்கு வளர்ந்திருந்த உயரமான போகன்வில்லியா செடிகள் தவிர, வாசலிலும் சுற்றியிருந்த இடங்களிலும் காடு வளர்ந்திருந்தது.

நகரத்திலிருந்து வெளிப் பகுதிக்குச் சென்ற ஒரு ஒற்றையடிப் பாதைக்கு அருகில் வீடு இருந்தது. பழையதாக இருந்தாலும், பொதுவாகவே அது ஒரு நல்ல வீடாக இருந்தது. சற்று உயர்ந்த ஒரு மேட்டில் இருந்ததால், தூரத்திலிருந்தே வீட்டைக் காண முடிந்தது.

அந்த வீட்டில் ஒரு வாடகைக்காரன் தங்கியிருந்தான். அவன் அங்கு வசிக்க ஆரம்பித்து சிறிது காலம் ஆகி விட்டாலும், அவனைப் பற்றி பக்கத்து வீடுகளில் இருப்பவர்களுக்கு அதிகமாக எதுவும் தெரிந்திருக்கவில்லை. எனினும், அவன் ஒரு பத்திரிகையாளன் என்பதையும், மிகவும் இளம் வயதிலேயே அரசியல் காரியங்களில் ஈடுபட்டு, ஏகப்பட்ட கொடுமைகளைத் தாங்கிக் கொண்ட ஒரு மனிதன் என்பதையும் சிலர் தெரிந்து வைத்திருந்தார்கள். இந்தியாவிலிருந்த ஒரு ஃப்ரெஞ்ச் காலனியிலிருந்து அவன் ஓடி வந்தவன் என்பதையும் அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். அந்த காரணத்திற்காக மட்டுமே அவர்கள் அவனை மதித்தார்கள். ஆனால், அவன் யாரிடமும் உரையாடுவதும் இல்லை.

அவனைத் தவிர, அங்கு ஒரு வேலைக்காரப் பையனும் இருந்தான். பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் பெரும்பாலும் அவனைத்தான் பார்த்தார்கள். உண்மையிலேயே கூறுவதாக இருந்தால் - அந்த வீட்டை வீடாக ஆக்கியது அந்தச் சிறுவன்தான்.

திடீரென்று அந்த வீடு ஆள் அரவமற்றதாக ஆகி விட்டதைப் போல தோன்றியது. அப்போதுதான் அவர்கள் நினைத்தார்கள் - அவர்கள் பார்த்தார்கள் - மழைக் காலத்தின் ஆரம்பத்தில் ஒரு நாள் சாயங்காலம் நடுத்தர வயதைக் கொண்ட ஒரு மனிதன் ஒரு மூட்டையுடன் அங்கு வந்தான். நீண்ட தூரம் நடந்து வந்தவனைப் போல அவன் மிகவும் களைத்துப் போய் காணப்பட்டான். மறுநாள் காலையில் அவன் அங்கிருந்து போவதையும் பார்த்தார்கள். அவனுடன் அப்போது அந்தச் சிறுவனும் இருந்தான்.

அதற்குப் பிறகு அவனை அவர்கள் யாரும் பார்க்கவில்லை.

அந்த வீட்டிற்கு அதிகமாக யாரும் செல்லவில்லை. ஆனால், கிட்டத்தட்ட எல்லா நாட்களிலும் தபால்காரர் அங்கு சென்று கொண்டிருந்தார். அந்த மனிதனுக்கு வந்திருக்கும் கடிதங்களையும் புக் போஸ்ட்களையும் போர்ட்டிக்கோவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் வைத்து விட்டு, தபால்காரர் திரும்பிச் செல்வார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த மனிதன் அங்கு இருந்தால் கூட, அவன் எதுவுமே பேசுவதில்லை.

தபால்காரர் தவிர, ஒரு வயதான பெண்ணும் இருந்தாள். அந்த வயதான பெண் தினமும் காலையில் வந்து பெருக்கி, பாத்திரங்களைக் கழுவி சுத்தம் செய்து விட்டு செல்வாள். அந்த பெண்ணின் வீடு சற்று தூரத்திலிருந்தாலும், காலையில் வருவதற்கு அவள் எந்தச் சமயத்திலும் சிறிதும் தயக்கம் காட்டியதேயில்லை.

அவன் அந்த நகரத்திற்கு வந்த பிறகு முதலில் வசித்த வீட்டிலும் அந்த பெண் வேலை செய்தாள்.

இரண்டு மூன்று நாட்கள் மழை தொடர்ந்து பெய்தபோது, அந்த வயதான பெண்ணைக் காணோம். இருண்டு கிடந்த வானத்திலிருந்து மழை இடைவிடாமல் பெய்து கொண்டேயிருந்தது. ஆட்கள் வெளியே செல்வதற்கே சிரமப்பட்டார்கள். எல்லா இடங்களிலும் - நிலப் பகுதியிலும் பாதையிலும் வயல்களிலும் - நீர்மயமாக இருந்தது.

இறுதியில் மழை நின்று, மீண்டும் பிரகாசம் வந்ததும் ஒருநாள் உச்சி வேளையில் அந்த வயதான பெண் அந்த வீட்டிற்கு வந்தாள். முன்பக்க கதவு பாதி திறந்து கிடந்தது. வயதான பெண் முணுமுணுத்தவாறு கதவை முழுமையாக திறந்து விட்டாள்.

வயதான பெண் சிறிது நேரம் தயங்கியவாறு நின்றாள். அவனுடைய அறை நடுவிலிருந்த அறையின் ஒரு பக்கத்தில் இருந்தது. அறையின் கதவு சாத்தப்பட்டிருந்தது. அந்த வீட்டில் எந்த இடத்திலும் ஓசையோ அசைவோ எதுவுமில்லை.

வயதான பெண் என்னவோ முணுமுணுத்தாள். பிறகு மெதுவாக அவனுடைய அறையின் கதவைத் திறந்தாள்.

வயதான பெண் அதிர்ச்சியடைந்து, நடுங்கிப் போய் விட்டாள்.

கடவுளே!

அவன் அங்கு இறந்ததைப் போல கிடந்தான்.

அறையில் கூடு கட்டி வசித்துக் கொண்டிருந்த ஒரு கிளி, கிழவியின் சத்தத்தைக் கேட்டு கோபப்பட்டதைப் போல 'ற்ற்வீ' 'ற்வீ' என்ற சத்தத்தை உண்டாக்கி, அங்கும் இங்குமாக பறந்து கொண்டிருந்தது.

பதைபதைப்பு காரணமாக கிழவிக்கு எதையும் செய்ய தோன்றவில்லை. பயமும் இருந்தது. சிறிது நேரம் கிழவி அந்த காட்சியையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். நன்கு நிமிர்ந்து, எந்தவொரு அசைவுமில்லாமல்.... பிறகு அந்தப் பெண் அழ ஆரம்பித்தாள்:

'ஓ.... என் மகனே, உன்னை நான்....'

ஆனால், அவன் இறக்கவில்லை. வாழ்விற்கும் மரணத்திற்கும் மத்தியில் கனவுகள் கண்டவாறு படுத்திருந்தான். சத்தத்தைக் கேட்டதும், அவன் கண்களைத் திறந்து பார்த்தான்.

ஓ.... கிழவி! கிழவி இதுவரை எங்கு இருந்தாள்? - மழை பெய்து கொண்டிருக்கிறதா? தமிழ் நாட்டில் எந்தச் சமயத்திலும் மழை பெய்வதில்லை. ஆட்கள் வயதாகி விட்டால், இறக்கிறார்கள். கிழவிக்கு வயது குறைவுதான். ஆனால், கிழவிக்கு எதுவுமே தெரியாது. அல்ஃபோன்ஸோ தோதோவைப் பற்றி கிழவி கேள்விப்பட்டிருப்பாளா? இல்லை.... ஸோலா, மாப்பாஸாங், ஃப்ளாபேர்....'
அவனுக்கு தொண்டை வறட்சி எடுப்பதைப் போல தோன்றியது.

எதையோ மறந்து போயிருக்கிறோம்? எதையோ இழந்திருக்கிறோம்? எவ்வளவு யோசித்துப் பார்த்தும் என்னவென்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அவன் கண்களை மூடி படுத்திருந்தான்.

என்ன? என்ன? திடீரென்று இருளடைந்த அந்த அறைக்குள் வெளிச்சத்தின் ஒரு கீற்று கடந்து செல்வதைப் போல, அவனுக்கு நினைவில் வந்தது.

தேநீர் பருகி எவ்வளவு நேரமாகி விட்டது!

ஒரு வகையில் பார்க்கப் போனால் - எவ்வளவு நாட்கள் ஆகி விட்டன!

ஒரு சிறுவனாக இருந்தபோது தன் தாய் தேநீர் தயாரித்து கொடுத்ததை அவன் நினைத்துப் பார்த்தான். எல்லோருக்கும் தயாரிப்பதில்லை. தந்தைக்கு தயார் பண்ணும்போது அம்மா, இளைய மகனுக்கும் கொடுக்கிறாள். தந்தை கூறுவார்: 'இவனுக்கு ஒரு பழக்கத்தை நீ கற்றுத் தருகிறாய் என்று தோன்றுகிறதே!'

அம்மா கூறுவாள்:

'நான்தானே அவனுக்குத் தருகிறேன்! குடி.... என் தங்க மகனே, குடி...'

தந்தைக்கு தேநீர் மிகவும் காட்டமாக இருக்க வேண்டும். அதையே மகனும் பழக்கமாக்கிக் கொண்டான்.

அவன் நினைத்துப் பார்த்தான்: நல்ல காட்டமான தேநீர் தயாரிப்பதற்கு இரண்டு பேருக்கு மட்டுமே தெரியும். ஒன்று தன் அன்னை. இன்னொன்று.... இன்னொன்று....

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version