Lekha Books

A+ A A-

சாயங்கால வெளிச்சம் - Page 3

பலரும் புன்னகைப்பதைப் பார்த்திருக்கிறான். ஆனால், அது என்ன ஒரு புன்னகை!

அவனுடைய பற்கள் முழுவதும் வெளியே தெரியும். பெரிய உருண்டையான கண்களில் அன்பும் கள்ளங்கபடமற்ற தன்மையும் வழிந்து ஒழுகிக் கொண்டிருந்தன.

அவனுடைய அண்ணன் அவனிடம் கேட்டார்:

'டேய், நீ இவனுடன் போறியா? உனக்கு நல்லதாக இருக்கும். என்ன?'

அவன் அவனை நேரடியாக பார்த்து முழுமையான சம்மதம் என்பதைப் போல தலையை ஆட்ட மட்டும் செய்தான்.

(சிறிது சிறிதாக வளர்ந்திருந்த உரோமங்கள் எழுந்து நின்று கொண்டிருக்கும் தலை... புன்னகைக்கும் பெரிய உருண்டைக் கண்களும், வெளுத்து காணப்பட்ட பற்களும்....)

தொடர்ந்து அண்ணன் அவனிடம் கூறினார்:

'ஒருவேளை எனக்கு வெகு சீக்கிரமே இடம் மாறுதல் உண்டாகலாம். அப்போது இவனையும் அழைத்துக் கொண்டு செல்வது என்பது - அதில் பல சிரமங்கள் இருக்கின்றன. நடக்காத விஷயம். நீ அழைத்துக் கொண்டு போ. ஒரு வேளை.... ஒரு குவளை தேநீர் தயாரித்துத் தருவதற்கு அவன் பயன்படலாம்.'

என்னவோ சிந்தித்ததைப் போல சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு ஒரு புன்சிரிப்புடன் அண்ணன் கேட்டார்:

'உனக்கு இப்போதும் நல்ல கடுப்பமான தேநீர் வேணுமா?'

அவன் எதுவும் கூறவில்லை. அண்ணன் மீண்டும் கேட்டார்:

'நீ சமீபத்தில் வீட்டுக்குப் போயிருந்தாயா?'

ஒரு அதிர்ச்சியுடன் அவன் தன் அண்ணனின் முகத்தையே பார்த்தான்.

அவன் வீட்டிற்குச் செல்வதே இல்லை என்ற விஷயம் அண்ணனுக்கு நன்றாகவே தெரியும், வீட்டிலிருக்கும் யாருடனாவது ஏதாவது வகையில் உறவு வைத்திருக்கிறான் என்றால், அது அண்ணனுடன் மட்டும்தான். எனினும், அண்ணன் ஏன் அப்படி கேட்டார்?

அண்ணனைப் பற்றி நினைத்தபோது, அவனுடைய முகத்தில் ஒரு மெல்லிய புன்சிரிப்பு பரவியது. அண்ணன் எப்போதும் நியாயத்தின் பக்கத்தில்தான் இருப்பார். எந்த விஷயத்தைப் பற்றியும் அண்ணனுக்கு தெளிவான ஒரு கருத்து இருந்தது. ஆனால், எந்தச் சமயத்திலும் அண்ணன் தேவையில்லாமல் பேச மாட்டார். எல்லாவற்றையும் பார்க்கவும், புரிந்து கொள்ளவும் மட்டும் செய்வார்....

அம்மாவைப் பற்றி அண்ணன் கூறியபோது, அவனால் அண்ணனின் முகத்தைப் பார்க்க முடியவில்லை, அண்ணன் கூறினார்: 'வீட்ல இருந்து கடிதம் வந்திருந்தது. அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லையாம்... அந்தப் பழைய வாதநோய்தான்...'

ஆனால், அவனுடைய உணர்ச்சி மாறுதலைப் பார்த்ததும், அண்ணன் எவ்வளவு வேகமாக விஷயத்தை மாற்றிக் கொண்டார்!

(எனினும், அந்த விஷயத்தை நிரந்தரமாக மாற்றுவதற்கு யாரால் முடியும்? அதற்குப் பிறகு மூன்று வருடங்கள் கடந்து சென்றிருக்கின்றன. மூன்று வருடங்கள்.... அம்மா இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். மகனும் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால்....)

அவன் பெருமூச்சை அடக்கினான். மீண்டும் அந்தச் சிறுவனைப் பற்றி நினைத்துப் பார்த்தான். அன்று சாயங்காலம் குருநாத முதலியிடம் அண்ணன் அந்த விஷயத்தைப் பற்றி குறிப்பிட்டபோது எவ்வளவு சாதாரணமான குரலில் அவன் சொன்னான்!: 'சரி சார்.... எல்லாம் உங்கள் விருப்பம் சார்.'

மகனைப் பிரிந்து இருப்பது என்பது ஒரு தந்தைக்குக் கவலை தரும் ஒரு விஷயமாக இருக்காதா?

ஒரு காலை வேளையில் அவர்கள் இருவரும் - அவனும், அந்தச் சிறுவனும் - புகை வண்டி நிலையத்தை நோக்கி நடந்தார்கள். சாலையின் இரு பக்கங்களிலும் கணிக்கொன்றை மரங்கள் பூத்து நின்று கொண்டிருந்தன. பறவைகள் பாடிக் கொண்டிருந்தன. அந்தச் சிறுவன் கொன்றைப் பூங்கொத்துகளைப் போல புன்னகைத்துக் கொண்டும், பறவைகளைப் போல சந்தோஷப்படவும் செய்தான்.

கண்ணுக்குத் தெரியாத ஒரு எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் பயணத்தின் ஆரம்பம் அது என்பதை அவன் நினைக்கவில்லை. அந்த மனிதனோ?

அந்த மனிதன் நினைத்தானா.... தமிழ்நாட்டில் ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து வந்த அழகற்றவனாக இருந்தாலும், கள்ளங்கபடமற்றவனாகவும் அன்பு நிறைந்தவனாகவும் இருந்த அந்தச் சிறுவன் பிறகு தன்னுடைய வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக ஆவான் என்பதையும், பின்னர் சில வருடங்களுக்குப் பிறகு ஒரு சாயங்கால வேளையில் ஒரு மழை மேகத்தைப் போல அந்தச் சிறுவன் கிட்டத்தட்ட மறக்க ஆரம்பித்திருந்த அவனுடைய தந்தை எங்கிருந்தோ பறந்து வந்து அவனைத் தன்னிடமிருந்து பறித்துக் கொண்டு போவான் என்பதையும்...?

இல்லை... இல்லை...

இப்போது இங்கு கிழவியோ வேறு யாருமோ வந்தால், தோட்டத்திலிருந்த பெரிய மாமரத்தின் மேலே ஒரு 'சைத்தான்' இருக்கிறது என்று கூறுவதற்கும், மாங்காய் பொறுக்க வரும்போது 'சைத்தான்' இரத்தம் நிறைந்த பெரிய கண்களால் வெறித்துப் பார்த்து நாக்கை நீட்டி அவனை நோக்கி பாய்ந்து..... 'இந்தப் பக்கம் வரக் கூடாது. மரத்திற்குக் கீழே போனால், சைத்தான் குரல்வளையைப் பிடிக்கும். குரல்வளையைப் பிடித்தால்....' இப்படிக் கூறி கண்களால் வெறித்துப் பார்த்து, நாக்கை நீட்டி மாங்காய் பொறுக்குவதற்காக வருபவர்களைக் கொல்வதற்காக பாய்ந்து வரும் கற்பனையில் மிகவும் பயங்கரமான அந்த சைத்தானாக நடிப்பதற்கும் யாருமில்லை!

பெரிய மாமரத்தின் உச்சியிலிருக்கும் சைத்தானே, உன்னுடைய அந்த பழைய நண்பன் எங்கு போனான்?

கடைக்கோ, அஞ்சல் நிலையத்திற்கோ செல்வதற்கு ஒரு ஆள் இல்லை. எப்போதாவது இரவு வேளையில் மிகவும் தாமதமாக வீட்டிற்கு வரும்போது, படுக்கையை விரித்து தயார் பண்ணி வைப்பதற்கு ஒரு ஆளில்லை. இடைவேளையில் ஒரு கப் தேநீர் வைத்துத் தருவதற்கு ஒரு ஆளில்லை. வெளியே மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும்போது, எந்தவொரு செயலையும் செய்ய முடியாமல் வெறுமனே அமர்ந்திருக்கும்போது ஏதாவது இரண்டு வார்த்தைகள் கூறுவதற்கு ஒரு ஆளில்லை. இல்லை... இல்லை....

இருள் பரவி விட்டிருந்தது. காற்று வீசும்போது 'போகன்வில்லியா'வின் கிளைகளிலிருந்து காய்ந்த இலைகள் போர்ட்டிகோவில் பறந்து விழுந்து கொண்டிருந்தன. வானத்தின் மூலையில் ஆங்காங்கே நட்சத்திரங்கள் தெரிந்தன. இலைகளுக்கு மத்தியில் பார்த்தபோது, அவை பெரிய மின் மினிப் பூச்சிகளைப் போல அவனுக்குத் தோன்றியது.
பக்கத்து வீடுகளிலிருந்த குழந்தைகள் கடவுளின் பெயர்களை கூறுவதும், பாடங்கள் படிப்பதும் காதில் விழுந்தன.
முன்பு எப்போதோ வாசித்த ஒரு கவிதையின் சில வரிகளை அவன் வெறுமனே முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

'அந்தி மயங்கியது மலர்த் தோட்டம் மயங்கியது
மந்தாரக் கிளையில் மலர்கள் மயங்கின
மின்னல் கை வாளின் அலகு ஒளிர்ந்தது
தென்றலின் கதறல் சுற்றிலும் எழுந்தது'

திரும்பத் திரும்ப அவன் அந்த வரிகளையே முணுமுணுத்துக் கொண்டிருந்தான்: 'அந்தி மயங்கியது....'

அந்த வீட்டில் வெளிச்சமில்லை. அவன் அங்கு தனியாக இருந்தான். சைத்தான் தங்கியிருக்கும் பெரிய மாமரத்தின் உச்சியிலிருந்து பறவைகள்.....

அவன் தனக்குள் கூறிக் கொண்டான்:

'இல்லை... இல்லை... நான் இதுவரை கனவு கண்டு கொண்டிருந்தேன். இந்த வாழ்க்கையில் நான் யார் மீதாவது அன்பு வைத்திருந்தால், அது என் மீது மட்டும்தான். அந்த குழந்தை ஒரு கற்பனை மட்டுமே. வெறும் ஒரு கற்பனை....'

தாமதமாகி விட்டது... மிகவும் தாமதமாகி விட்டது.....

அவன் களைப்பு காரணமாக கண்களை மூடி படுத்தான்.

.... நீரோட்டத்தின் தெளிந்த நீரில் இளம் வயலட் நிறத்திலிருந்த நீர் மருதம் மலர்கள் மிதந்து போய்க் கொண்டிருந்தன.

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel