Lekha Books

A+ A A-

புனிதப் பயணம் - Page 2

punidha payanam

"அன்பு நண்பரே, நீங்க அவ்வளவு பெரிய பணக்காரர்ன்ற விஷயம் எனக்கு இதுவரை தெரியாமலே போச்சே!"- அவர் சொன்னார். "சரி... உங்களுக்கு எங்கேயிருந்து பணம் வரும்?"

"நான் வீட்டுல இருந்து கொஞ்சம் பணம் எடுப்பேன். அந்தப் பணம் பத்தலைன்னா, தேனீக் கூட்டுல கொஞ்சத்தை என் நண்பர் ஒருவருக்கு விற்பேன். ரொம்ப நாளா என்கிட்ட இருந்து, அதை வாங்குறதுக்காக அவர் காத்துக்கிட்டு இருக்கார்."

"இந்த வருடம் நிறைய தேனீக்கள் உற்பத்தி ஆச்சுன்னு வச்சுக்கோங்க, அதை விக்கிறப்போ நீங்க ரொம்பவும் வருத்தப்படுவீங்க..."

"வருத்தப்படுவதா? நிச்சயமா நான் வருத்தப்பட மாட்டேன், நண்பரே! வாழ்க்கையில என் பாவங்களுக்காகத் தவிர, வேற எதுக்காகவும் நான் வருத்தப்பட்டது இல்ல. ஆன்மாவைவிட விலை மதிப்புள்ளது உலகத்துல என்ன இருக்கு சொல்லுங்க..."

"நீங்க சொல்றது சரியா இருக்கலாம். இருந்தாலும் வீட்டு  விஷயங்களைச் சாதாரணமா நினைச்சு ஒதுக்குறது அவ்வளவு நல்ல விஷயமா எனக்குப் படல."

"நம்ம ஆன்மாக்கள் நிராகரிக்கப்படுதுன்னு வச்சுக்கோங்க. அப்போ என்ன ஆகும்? அது ரொம்பவும் மோசமான விஷயமாச்சே! நாம பயணம் போறதுன்னு முடிவு செஞ்சோம். நாம புறப்படுறதுதான் சரி. நண்பரே, நாம உடனே புறப்படுறதுக்கான வழியைப் பார்ப்போம்."

2

ன்னுடைய நண்பரிடம் புனிதப் பயணம் போவதைப் பற்றி தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருந்ததில் எலிஷா வெற்றி பெற்று விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆழமான சிந்தனையில் ஆழ்ந்ததற்கு அடுத்த நாள் காலையில் எஃபிம் எலிஷாவைத் தேடி வந்தார்.

"நீங்க சொல்றது சரிதான்"- அவர் சொன்னார். "நாம புறப்படுவோம். வாழ்க்கை, மரணம்-ரெண்டுமே கடவுளின் கையில தான் இருக்கு. நாம உயிரோட இருக்குறப்பவே, உடம்புல தெம்பு இருக்குறப்பவே நாம கிளம்பிப் போய்ட்டு வந்துறதுதான் சரி."

ஒரு வாரம் கழித்து இரண்டு கிழவர்களும் புனிதப் பணத்தைத் தொடங்குவதற்கான ஆயத்தங்களில் இறங்கிவிட்டார்கள். எஃபிம் கையில் தேவையான அளவிற்குப் பணம் இருந்தது. அவர் கையில் நூறு ரூபிள்கள் எடுததுக் கொண்டு இருநூறு ரூபிள்களைத் தன்னுடைய மனைவியிடம் வைத்திருக்கும்படி சொன்னார். எலிஷாவும் புறப்படுவதற்குத் தயாரானார்.அவர் பத்து தேனீக்கூடுகளைத் தன் நண்பர் ஒருவருக்கு விற்பனை செய்தார். கோடைக்கு முன்பே அந்தத் தேனீக் கூட்டிலிருந்து புதிய தேனீக்கள் வந்துவிடும். தேனீக் கூடுகளை விற்றதில் அவருக்கு எழுபது ரூபிள்கள் கிடைத்தன. நூறு ரூபிள்களில் மீதித்தொகையை தன் வீட்டிலுள்ள ஒவ்வொருவரிடமும் சிறிதுசிறிதாக வசூலித்தார். அவர்கள் தங்கள் கையிலிருந்த பணம் முழுவதையும் அவர் கையில் தந்தார்கள்.அவருடைய மனைவி தன்னுடைய அந்திமச் சடங்கிற்காகச் சேர்த்து வைத்திருந்த முழுப் பணத்தையும் அவரிடம் கொடுத்தாள். அவரின் மருமகள் தன் கையில் இருந்த பணம் முழுவதையும் தன் மாமனாரிடம் கொடுத்தாள்.

எஃபிம் தன் மூத்த மகனை அழைத்து தான் வீட்டில் இல்லாத போது என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை விளக்கினார். புற்களை எங்கெங்கு வளர்க்க வேண்டும், எப்படி வளர்க்க வேண்டும் எங்கிருந்து உரத்தை ஏற்றிக்கொண்டு வரவேண்டும், வீட்டை எப்படி முடித்து மேற்கூரையைப் போட வேண்டும் போன்ற பல விஷயங்களை அவர் விளக்கிச் சொன்னார். ஒவ்வொரு விஷயத்தையும்அவர் நன்கு யோசித்து, அதற்கேற்றபடி கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தார். அதற்கு மாறாக எலிஷா தன் மனைவியிடம் தான் விற்ற தேனீக் கூட்டிலிருந்து மற்ற தேனீக்களை எப்படி தனியாகப் பிரித்து வைக்க வேண்டுமென்றும், தான் விற்ற தேனீக்கூட்டைச் சேர்ந்த தேனீக்கள் எந்தவித தந்திரமும் இல்லாமல் தன்னுடைய நண்பருக்கு முழுமையாகப் போய்ச் சேர வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டிருந்தார். வீட்டு விஷயங்களைப் பற்றி, ஒரு வார்த்தைகூட அவர்களிடம் வாய் திறந்து சொல்லவில்லை.

"உங்களுக்கே தெரியும்; என்னென்ன செய்யணும், தேவைப்படுற நேரத்துல எப்படி அதைச் செய்யணும்னு” என்று சொன்ன அவர் மேலும் சொன்னார். "உங்க எல்லாருக்கும் எல்லா விஷயங்களையும் நல்லா செய்யத் தெரியும். இதுக்குமேல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு?"

கடைசியில் இரண்டு கிழவர்களும் புறப்படத் தயாரானார்கள். அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் கேக் தயாரித்து, அவற்றைப் பைகளில் போட்டு வைத்தார்கள். துணிகள் தைத்தனர். அவர்கள் கால்களில் புதிய தோலாலான காலணிகளை அணிந்தார்கள். அதுதவிர, தனியாக வேறு காலணியையும் இருக்கட்டுமென்று எடுத்து வைத்துக் கொண்டார்கள். அவர்கள் இருவரின் குடும்பமும் அவர்களுடன் கிராமத்தின் எல்லை வரை சென்றது. கிராமத்தின் முடிவு வந்தவுடன் அவர்களிடமிருந்து, அவர்கள் விடைபெறறுக் கொண்டார்கள். அந்த இரண்டு கிழவர்களும் தங்களின் புனிதப் பயணத்தைத் தொடங்கினார்கள்.

எலிஷா வீட்டை விட்டு புறப்படும்போது மிகவும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். கிராமத்தை தாண்டியவுடன், அவர் தன்னுடைய வீட்டிலுள்ள விஷயங்களைப் பற்றி முழுக்க முழுக்க மறந்து போனார். அவரிடமிருந்த ஒரே கவலை என்னவென்றால் தன் நண்பரை எப்படி சோர்வடையாமல் மகிழ்ச்சியுடன் வைப்பது என்பதும், போகும் வழியில் யாரிடமும் ஒரு வார்த்தைகூட கடுமையாகப் பயன்படுத்தி விடாமல் இருக்கவேண்டும் என்பதும், எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் பத்திரமாகவும் மன அமைதியுடனும் வீட்டிற்குத் திரும்பி வந்துசேர வேண்டும் என்பதும்தான். சாலையில் நடந்து செல்லும்போது, எலிஷா மெதுவான குரலில் ஏதாவது பிரார்த்தனை வரிகளை முணுமுணுத்துக்கொண்டே செல்வார். இல்லாவிட்டால், தனக்குத் தெரிந்த ஞானிகளின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை நினைத்தவாறு போய்க் கொண்டிருப்பார். சாலையில் யாரையாவது பார்க்க நேர்ந்தாலோ அல்லது இரவு நேரத்தில் எங்காவது தங்க நேர்ந்தாலோ அவர் முடிந்தவரை மிகவும் கண்ணியமான மனிதராக நடந்து கொண்டார். உயர்ந்த வார்த்தைகள் தன்னிடமிருந்து வரும்படி பார்த்துக் கொண்டார். அதனால் அவருக்குப் பயணம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது. ஒரே ஒரு விஷயத்தைத்தான் எவ்வளவுதான் முயற்சி பண்ணினாலும் அவரால் விட முடியவில்லை. அது-பொடிபோடும் பழக்கம். தன்னுடைய பொடி டப்பாவை அவர் வீட்டில் வைத்துவிட்டு வந்திருந்தாலும், அவரின் மனம் என்னவோ பொடியை நினைத்துக் கொண்டுதானிருந்தது. வழியில் அவர் சந்தித்த ஒரு மனிதர் அவருக்குக் கொஞ்சம் பொடி தந்து உதவினார். தன்னுடைய நண்பருக்குத் தேவையில்லாமல் மன எரிச்சலைத் தரக்கூடாது என்பதற்காக அவ்வப்போது பொடி போடுவதற்காகச் சற்று பின்தங்கி விடுவார். பொடியைப் போட்டவுடன் மீண்டும் அவர் தன் பயணத்தைத் தொடர்வார்.

எஃபிம்கூட நன்றாகவே நடந்தார். வேகமாக அவரின் பயணம் சென்று கொண்டிருந்தது. யாரிடமும் தேவையில்லாமல் எந்தவித முறையற்ற வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தவில்லை. ஆனால், அவரின் இதயம்தான் மென்மையாக இல்லாமல் எப்போதும் கனத்துப் போய் இருந்தது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

கடல்

கடல்

September 24, 2012

தோழி

தோழி

August 8, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel