Lekha Books

A+ A A-

புனிதப் பயணம் - Page 13

punidha payanam

மறுநாள் காலையில் எஃபிம் கிராமத்துத் தலைவரிடம் சென்று தன்னுடைய மகனைப் பற்றி புகார் சொல்வதற்காகச் சென்றார். அவர் எலிஷாவின் வீட்டைத் தாண்டிச் சென்ற போது, எலிஷாவின் மனைவி வாசலில் நின்றிருந்தாள்.

"என்ன நண்பரே, எப்படி இருக்கீங்க?"- அவள் கேட்டாள்: "ஜெருசலேமிற்கு பத்திரமாய் போய்ச் சேர்ந்தீங்களா?"

அவளைப் பார்த்ததும் எஃபிம் நின்றார்.

"ஆமா, கடவுளுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்"- அவர் சொன்னார்: "நான் பத்திரமா போய்ச் சேர்ந்தேன். உங்க வீட்டுக்காரரை அங்கே என்னால பார்க்க முடியாமப் போச்சு. ஆனா, அவர் பத்திரமா வீடு வந்து சேர்ந்துட்டதா கேள்விப்பட்டேன்."

அந்த வயதான கிழவி ஆர்வத்துடன் சொன்னாள்:

"ஆமா, நண்பரே, அவர் வீட்டுக்கு வந்துட்டாரு... அவர் வந்து எவ்வளவோ நாட்களாயிடுச்சு. போன கொஞ்ச நாட்கள்லயே அவர் திரும்பி வந்துட்டாரு. கடவுள் அவரை நல்ல முறையில எங்ககிட்ட அனுப்பி வச்சதுக்காக உண்மையிலேயே நாங்க சந்தோஷப்படறோம். அவர் இல்லாம நாங்க ரொம்பவும் கவலையில இருந்தோம். அவர்கிட்ட இருந்து நாங்க எந்த வேலையையும் எதிர்பார்க்கல. அவர் வேலை செய்ய வேண்டிய நாட்களெல்லாம் போயிடுச்சு. இருந்தாலும் வீட்டுக்கு அவர்தான் தலைவர். அவர் வீட்டுல இருந்தார்னா, வீடே ரொம்பவும் சந்தோஷமா இருக்கும். அவர் வீட்டுல இருந்தா, எங்க பையன் எவ்வளவு மகிழ்ச்சியா இருப்பான் தெரியுமா?

அவன் சொல்வான், 'அப்பா வீட்டுல இல்லேன்னா, சூரியன் இல்லாத மாதிரி நமக்குத் தோணுது'ன்னு. உண்மைதான் நண்பரே, அவர் இல்லைன்னா எங்க வீடே என்னமோ மாதிரி ஆயிடுது. நாங்க அவர் மேல உயிரையே வச்சிருக்கோம். அவரை ரொம்பவும் கவனமா பார்த்துக்கிறோம்..."

"இப்போ அவர் வீட்டுல இருக்காரா?"

"இருக்காரு நண்பரே. அவர் தன்னோட தேனீக்கள் கூட இருக்காரு. அவர் தேனீக்களைப் பெருக்குறதுல இருக்காரு. இந்த வருடம் நிறைய தேனீக்கள் உற்பத்தி ஆயிருக்கிறதா சொன்னாரு. எல்லாம் கடவுளோட அருள்னுதான் சொல்லணும். ஆனா என் வீட்டுக்காரர் சொல்றாரு- 'நம்ம பாவங்களுக்கேற்றபடி கடவுள் நமக்குப் பரிசு தரமாட்டேன் என்கிறார்'னு. உள்ளே வாங்க நண்பரே... உங்களை மறுபடியும் பார்க்குறதுக்காக அவர் எவ்வளவு சந்தோஷப்படுவார் தெரியுமா?"

எஃபிம் நேரான இடைவெளி வழியாக எலிஷாவைப் பார்க்கும் ஆர்வத்துடன் நடந்து சென்றார். அங்கு எலிஷா சாம்பல் வண்ண கோட்டுடன் நின்றிருந்தார். அவர் முகத்தில் எந்த வலையும் அணிந்திருக்கவில்லை. கைகளில் உறைகள் கூட இல்லை. பிர்ச் மரங்களுக்குக் கீழே மேல்நோக்கிப் பார்த்தவாறு கைகளை விரித்துக் கொண்டு அவர் நின்றிருந்தார். ஜெருசலேமில் கடவுள் சமாதிக்கு அருகில் எஃபிம் எப்படிப் பார்த்தாரோ, அதே தோற்றத்தில் எலிஷா அங்கே நின்றிருந்தார். அவருடைய வழுக்கைத் தலை அங்கே பிரகாசமாகக் காணப்பட்டது. புனித இடத்தில் நெருப்பு நாக்குகள் எரிந்து கொண்டிருப்பதைப் போல, சூரிய வெளிச்சம் பிர்ச் மர கிளைகளுக்கு நடுவில் தெரிந்தது. பொன்நிறத் தேனீக்கள் அவருடைய தலையைச் சுற்றிப் பறந்து ஒரு ஒளி வட்டத்தை உண்டாக்கின. அவை அவரைக் கொட்டவில்லை.

எஃபிம் அதைப் பார்த்து அப்படியே அசையாமல் நின்றுவிட்டார்.கிழவி தன் கணவரை அழைத்தாள்.

"உங்க நண்பர் இங்கே வந்திருக்காரு..."- அவள் உரத்த குரலில் சொன்னாள்.

எலிஷா தன்னுடைய பிரகாசமான முகத்தால் பார்த்தவாறு எஃபிமை நோக்கி வந்தார். வரும்போதே சர்வசாதாரணமாக தன் தாடியிலிருந்து தேனீக்களை எடுத்தவாறு அவர் வந்தார்.

"வணக்கம், நண்பரே வணக்கம். சரி நண்பரே, அங்கே பத்திரமா போய்ச் சேர்ந்தீங்களா?"

"என் கால்கள் அங்கே நடந்தன. உங்களுக்காக ஜோர்டான் நதியிலிருந்து நீர் கொண்டு வந்திருக்கேன்.அதை வாங்குறதுக்கு நீங்க கட்டாயம் என் வீட்டுக்கு வரணும். ஆனா,கடவுள் என் முயற்சிகளை ஏத்துக்கிட்டாரான்றதுதான்..."

"அதுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லணும். கிறிஸ்து உங்களை ஆசீர்வதிக்கட்டும்!"- எலிஷா சொன்னார்.

சிறிது நேரம் எஃபிம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பிறகு அவர் சொன்னார்:

"என் கால்கள் அங்கே இருந்துச்சு, உண்மைதான். ஆனா என் மனமா இல்லாட்டி இன்னோருத்தரோட மனமா... எது அங்கே உண்மையா இருந்துச்சுன்னு..."

"அது கடவுளோட செயல் நண்பரே... கடவுளோட செயல்" -இடையில் புகுந்து சொன்னார் எலிஷா.

"நான் திரும்பி வர்றப்போ, நீங்க தங்கியிருந்த குடிசைக்கு நான் போனேன்..."

எலிஷா அதைக் கேட்டு அதிர்ந்துபோய்விட்டார். அவர் வேகமாக சொன்னார்:

"எல்லாம் கடவுளோட செயல், நண்பரே... கடவுளோட செயல். வாங்க... உள்ளே வாங்க... நான் கொஞ்சம் தேன் தர்றேன்"- எலிஷா பேச்சை மாற்றினார். வீட்டு விஷயங்களைப் பற்றி அவர் பேச ஆரம்பித்தார்.

எஃபிம் தான் வழியில் குடிசையில் பார்த்த குடும்பத்தைப் பற்றியோ, ஜெருசலேமில் எலிஷாவைப் பார்த்ததைப் பற்றியோ ஒரு வார்த்தை கூட எலிஷாவிடம் கூறவில்லை. ஆனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் அவர் புரிந்து கொண்டார். அது- கடவுள்மீது உண்மையாகவே ஒருவனுக்குப் பாசம் இருந்து அவரின் விருப்பப்படி அவன் நடக்க விரும்பினால் அவன் முதலில் செய்யவேண்டியது- தான் வாழும் காலத்தில் அவன் பிறர் மீது அன்பு செலுத்துவதுடன், அவர்களுக்கு நன்மை பயக்கும் செயல்களைச் செய்யவேண்டும் என்பதுதான்.

Page Divider

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel