Lekha Books

A+ A A-

புனிதப் பயணம் - Page 7

punidha payanam

அதற்குள் அவருடைய காலில் கட்டப்பட்டிருக்கும் துணி வேலியின் இன்னொரு பக்கத்தில் மாட்டிக் கொள்கிறது. அவர் தன் பையை இழுக்கிறார். அப்போது தான் அவருக்கே தெரியவருகிறது தன்னுடைய பை வேலியில் மாட்டவில்லை- அந்தச் சிறுமிதான் அதைப்பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையே.

“ரொட்டி, அப்பா... ரொட்டி!”

அவர் தன் கால்களைப் பார்க்கிறார். அவருடைய காலில் கட்டப்பட்டிருக்கும் துணியை அந்தச் சிறுவன் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறான். அதே நேரத்தில் அந்த வீட்டில் உள்ள மனிதரும் அந்த வயதான கிழவியும் ஜன்னல் வழியாக அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

எலிஷா படுத்திருந்த இடத்தைவிட்டு எழுந்து தனக்குள் கூறிக்கொள்கிறார்:

‘நாளைக்கு நான் இவங்களோட அடமானம் வைக்கபட்ட வயலை மீட்டுத் தருவேன். இவங்களுக்கு ஒரு குதிரை வாங்கித் தருவேன். அறுவடை வர்றது வரைக்கும் தேவையான மாவு வாங்கித் தருவேன். சின்னப் பசங்களுக்கு ஒரு பசுவை வாங்கித் தரப்போறேன். இது எதுவுமே செய்யாம நான் கடலைத்தாண்டி இருக்கிற கடவுளைப் பார்க்கப் போனா, எனக்குள்ள இருக்கற கடவுளை நான் இழந்தவனாவேன்.’

அதற்குப் பிறகு எலிஷா தூக்கத்தில் ஆழ்ந்தார். பொழுது விடியும் வரை நன்றாகத் தூங்கினார். காலையில் சீக்கிரமே படுக்கையை விட்டு எழுந்த அவர் அந்த ஊரின் பணக்கார விவசாயியைத் தேடிச் சென்றார். வயல், புல் வளர்ந்திருக்கும் நிலம் இரண்டையும் அவரிடமிருந்து மீட்டார். மண்வெட்டி ஒன்றை விலைக்கு வாங்கினார். (ஏற்கனவே இருந்த மண்வெட்டி விற்கப்பட்டிருந்தது.) அதை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்தார். வீட்டில் இருந்த அந்த மனிதரை நிலத்திற்குப் போகும்படி கூறிவிட்டு, அவர் கிராமத்திற்குள் சென்றார். ஓரு வீட்டில் குதிரையும் வண்டியும் விலைக்கு இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கு அவர் சென்றார். அங்கிருந்த உரிமையாளரிடம் பேரம் பேசி அவற்றையும் விலைக்கு வாங்கினார். பிறகு அவர் ஒரு மூட்டை மாவு வாங்கி அதை வண்டியில் வைத்தார். பிறகு ஒரு பசுவைப் பார்ப்பதற்காகச் சென்றார். போகும் வழியில் பேசிக்கொண்டு செல்லும் இரண்டு பெண்களை அவர் கடந்து சென்றார். அவர்கள் சின்ன ரஷ்யாவில் பேசப்படும் மொழியில் பேசினாலும், அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

“முதல்ல அவர்களுக்கு அவர் யாருன்னே தெரியாது. அவர் யாரோ ஒரு சாதாரண ஆள்னுதான் அவங்க ஆரம்பத்துல நினைச்சாங்க. அவர் வீட்டுக்குள்ளே வந்ததே குடிக்கிறதுக்கு கொஞ்சம் தண்ணி வேணும்னு கேட்கத்தான். ஆனா, அவர் வீட்டுலயே இருந்துட்டார். அந்த வீட்டில் இருக்கிறவங்களுக்காக அவர் செய்திருக்கிற விஷயங்களைப் பார்த்தியா? அவங்களுக்காக ஒரு குதிரையையும் வண்டியையும் இன்னைக்குக் காலையிலதான் வாங்கினாரு. உலகத்துல இந்த மாதிரியான ஒரு மனிதரைப் பார்க்குறது ரொம்ப ரொம்ப அரிது. போற பாதையில அவரைப் பார்க்க நமக்கு கொடுத்து வச்சிருக்கணும்.”

தன்னை அந்தப் பெண்கள் புகழ்ந்து பேசிக் கொண்டு போகிறார்கள் என்பதை எலிஷா புரிந்துகொண்டார். அதற்குப் பிறகு அவர் மாடு வாங்கப் போகவில்லை. மீண்டும் திரும்பிவந்த அவர் குதிரையை வண்டியில் பூட்டி குடிசையை நோக்கிச் செலுத்தினார். குதிரையைப் பார்த்ததும் குடிசையில் இருந்தவர்கள் ஆச்சர்யப்பட்டு நின்று விட்டார்கள். அவர்கள் அந்தக் குதிரையும் வண்டியும் தங்களுக்குத் தான் என்பதை உணர்ந்தாலும், அதைக் கேட்பதற்கான தைரியம் அவர்களுக்கு வரவில்லை. குடிசையில் இருந்த மனிதர் கேட்டைத் திறப்பதற்காக வந்தார்.

“இந்தக் குதிரை எங்கேயிருந்து உங்களுக்குக் கிடைச்சது தாத்தா?” - அவர் கேட்டார்.

“நான் இதை விலைக்கு வாங்கியிருக்கிறேன்” எலிஷா சொன்னார். “இதை ரொம்பவும் குறைஞ்ச விலைக்கு நான் வாங்கினேன். வெளியே போய் கொஞ்சம் புல் அறுத்துக் கொண்டு வாங்க. இன்னைக்கு இந்தக் குதிரைக்குச் சாப்பிடுறதுக்கு அந்தப் புல்லைப் போடுங்க. வண்டியில இருக்கிற மூட்டையை உள்ளே கொண்டுபோய் வைங்க...”

அந்த மனிதர் வண்டியிலிருந்து குதிரையை விடுவித்தார். வண்டியிலிருந்த மூட்டையை உள்ளே எடுத்துக் கொண்டு போனார். புல் அறுத்துக் கொண்டு வந்து குதிரைக்குப் போட்டார். எல்லாரும் கீழே படுத்துத் தூங்க ஆரம்பித்தார்கள். எலிஷா வெளியே சென்று சாலையோரத்தில் படுத்தார். அவருடைய பையை எடுத்து தன் கையில் வைத்திருந்தார். எல்லோரும் உறங்க ஆரம்பித்ததும், அவர் படுத்திருந்த இடத்தைவிட்டு எழுந்தார். தன் பையை உடம்போடு சேர்த்துக் கட்டினார். கால்களில் துணியைச் சுற்றினார். காலணிகளையும் கோட்டையும் எடுத்து அணிந்தார். எஃபிம் போன வழியில் நடக்க ஆரம்பித்தார்.

7

லிஷா மூன்று மைல்களுக்கும் அதிகமாக நடந்திருப்பார். அப்போதுதான் சிறிது வெளிச்சம் தோன்றியது. அவர் ஒரு மரத்திற்குக் கீழே உட்கார்ந்து, தன் பையைத் திறந்தார். அதிலிருந்த பணத்தை எண்ணினார். பதினேழு ரூபிள்களும் இருபது கோபெக்குகளும் மட்டும்தான் அதில் இருந்தன.

‘ம்...’ - அவர் தன் மனதிற்குள் நினைத்தார்: ‘இந்தப் பணத்தைக் கையில வைச்சிக்கிட்டு கடலைத் தாண்டிப் போக முடியாது. போற வழியில யார்கிட்டயாவது பணம் கேட்டா, அங்கே போகாம இருக்கிறதைவிட அது ரொம்பவும் மோசமானது. நண்பர் எஃபிம் நான் இல்லாமலே ஜெருசலேமிற்குள் நுழைந்திருப்பார். என் பேர்ல அவரே ஒரு மெழுகுவர்த்தியைக் கடவுள் முன்னாடி வச்சிருப்பார். இந்த வாழ்க்கையில நான் எடுத்த உறுதிமொழியை எங்கே என்னால காப்பாற்ற முடியாமலே போயிடுமோன்றதை நினைக்கிறப்பத்தான் கவலையா இருக்கு. இரக்கமுள்ள, பாவம் செய்கிறவர்களை மன்னிக்கக் கூடிய கடவுளுக்கு நான் எப்போதும் நன்றி உள்ளவனா இருக்கணும்...”

எலிஷா உட்கார்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்தார். மீண்டும் பையைத் தோளில் தொங்கவிட்டார். பிறகு திரும்பி நடக்க ஆரம்பித்தார். யாரும் தன்னைப் பார்த்துவிடக்கூடாது என்பதை மனதில் வைத்துக் கொண்டு கிராமத்திற்குள் நுழையாமலே வேறுவழியில் சுற்றி வேகமாக அவர் நடந்தார். தன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு வரும்போது நடப்பதே அவருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. எஃபிமுடன் சேர்ந்து நடப்பதற்கு அவர் மிகவும் சிரமப்பட்டார். ஆனால், திரும்பி வரும்போது, கடவுள் அவருக்கு மிகவும் உதவியாக இருந்தார். களைப்பே சிறிதும் தோன்றாத அளவுக்கு அவருக்கு நடப்பதில் எந்தவித சிரமமும் இல்லாமல் இருந்தது. நடப்பது என்பது ஒரு குழந்தையின் விளையாட்டைப்போல அவருக்கு இருந்தது. தன்னுடைய பொருட்களைச் சுமந்து கொண்டு அவர் ஒவ்வொரு நாளும் நாற்பதிலிருந்து ஐம்பது மைல்கள் வரை நடந்தார்.

எலிஷா தன்னுடைய வீட்டை அடையும்போது அறுவடை முடிந்துவிட்டது. அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவரை மீண்டும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். நடைபெற்ற சம்பவங்களைத் தெரிந்து கொள்வதில் எல்லாரும் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார்கள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

படகு

படகு

June 6, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel