Lekha Books

A+ A A-

புனிதப் பயணம் - Page 5

punidha payanam

“கொஞ்சம் தண்ணி இருந்தா...”- அந்தக் கிழவி சொன்னாள். “அவங்க வாய் தண்ணி இல்லாம உலர்ந்து போய் இருக்கு. நேற்று நான் கொஞ்சம் தண்ணி கொண்டு வர்றதுக்கு முயற்சி பண்ணினேன். இல்லாட்டி இன்னைக்குன்னு நினைக்கிறேன். என்னைக்குன்னு சரியா ஞாபகத்துல இல்ல. ஆனா, தண்ணி கொண்டுவரப்போன வழியில நான் கீழே விழுந்துட்டேன். அதற்கு மேலே என்னால போகமுடியல. நான் கையில வச்சிருந்த வாளி அங்கேயே கிடக்கு. அதை யாராவது எடுத்தாங்களான்னுகூட தெரியல...”

எலிஷா “கிணறு எங்கே இருக்கிறது?” என்று கேட்டார். கிணறு இருக்கும் இடத்தை கிழவி சொன்னாள். எலிஷா வெளியே சென்று தண்ணீர் எடுக்கும் வாளியைக் கண்டெடுத்து நீர் எடுத்துக்கொண்டு வந்து, அங்கிருந்தவர்களுக்குக் கொடுத்தார். குழந்தைகளும் கிழவியும் தண்ணீரின் உதவியுடன் மேலும் கொஞ்சம் ரொட்டியைத் தின்றார்கள். ஆனால், அந்த மனிதர் சிறிதுகூட சாப்பிடவில்லை.

“என்னால சாப்பிட முடியாது”- அவர் சொன்னார்.

இவ்வளவு நேரமும் அந்த இளம்பெண் எந்தவித உணர்ச்சியையும் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால், இப்படியும் அப்படியுமாய் புரண்டு கொண்டேயிருந்தாள். எலிஷா வெளியே சென்று கிராமத்திலிருந்த கடையில் தானியம், உப்பு, மாவு, எண்ணெய் ஆகியவற்றை வாங்கினார். ஒரு கோடரி கிடப்பதைப் பார்த்து அவர் அதை எடுத்து அருகில் கிடந்த சில மரக்கட்டைகளை வெட்டி, அதைக்கொண்டு தீ மூட்டினார். அந்தச் சிறுபெண் அவருக்கு உதவியாக இருந்தாள். அவர் சூப் தயாரித்து, பசியால் வாடிக் கொண்டிருந்த அவர்களுக்கு ஒரு நல்ல சாப்பாடு போட்டார்.

5

ந்த மனிதர் கொஞ்சம் சாப்பிட்டார். கிழவி சிறிது உண்டாள். அந்தச் சிறு பையனும் சிறுமியும் பாத்திரத்தை ஒன்றுமேயில்லாத அளவிற்கு நாக்கால் நக்கினார்கள். சாப்பிட்டு முடித்ததும் ஒருவரையொருவர் கை கோர்த்தவாறு ஒரு ஓரத்தில் சுருண்டு படுத்துத் தூங்க ஆரம்பித்தார்கள்.

அந்த மனிதரும் வயதான கிழவியும் தாங்கள் இந்த நிலைக்கு எப்படி வந்தோம் என்பதை எலிஷாவிடம் கூறத் தொடங்கினார்கள்.

“நாங்க ரொம்பவும் ஏழைங்க...”- அவர்கள் சொன்னார்கள். “பயிர்களோட விளைச்சல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமப் போனவுடன், நாங்க ஏற்கெனவே எங்களுக்குன்னு சேமிச்சு வச்சிருந்தது எல்லாமே முழுசா தீர்ந்து போச்சு. குளிர்காலம் வந்தப்போ, பக்கத்து வீட்டுக்காரங்ககிட்டயும், யார் யார் கண்ணுல படுறாங்களோ எல்லார்கிட்டயும், கை நீட்டி பிச்சை எடுக்க ஆரம்பிச்சிட்டோம். முதல்ல அவங்க கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. பிறகு நாங்க கேட்டா யாரும் எதுவும் தர்றது இல்ல. சிலபேர் எங்களுக்கு உண்மையாகவே உதவணும்னு நினைப்பாங்க. ஆனா, அவங்க கையில கொடுக்குறதுக்கு எதுவும் இருக்காது. எங்களுக்கு ஏதாவது வேணும்னு மத்தவங்கக்கிட்ட கைநீட்டி நிக்கிறதுக்கு எங்களுக்கு என்னவோ போல இருக்கும். எங்களுக்கு நிறைய கடன் உண்டாயிருச்சு. பணம், மாவு, ரொட்டி - இப்படி என்னென்னமோ கடனா வாங்கினோம்.

நான் வெளியே போய் ஏதாவது வேலை கிடைக்குமான்னு பார்த்தேன்.”- அந்த மனிதர் தொடர்ந்து சொன்னார்: “ஆனா, வேலை எதுவும் கிடைச்சாத்தானே! அப்படியே வேலை கிடைச்சாலும் அது ஏதோ உயிர் வாழ்ற அளவுக்குத்தான் இருக்கும். உதாரணத்துக்கு ஒரு சின்ன வேலை கிடைக்குதுன்னு வச்சுக்கோங்க. அதுக்குப் பின்னாடி ரெண்டு நாட்கள் வேற ஏதாவது வேலை கிடைக்காதான்னு அலைய வேண்டியதிருக்கும். அந்த நேரத்துல கிழவியும் பெண்ணும் தூர இடங்களுக்குப் போய் ஏதாவது தரும்படி பிச்சை எடுப்பாங்க. ஆனா, அவங்க கையில ஏதோ கொஞ்சம்தான் கிடைக்கும். ரொட்டி கிடைக்குறதுன்றது ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம். எப்படியோ நாங்களும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தோம். அடுத்த அறுவடை வர்றதுவரை போராடிப் போராடி வாழ்க்கையை ஓட்டிட்டோம். வசந்த காலம் வர்ற நேரத்துல மத்தவங்க எங்களுக்கு எதுவும் தரமுடியாதுன்னுட்டாங்க. அதுக்குப் பிறகு எங்க உடல்நலம் ரொம்பவும் பாதிக்க ஆரம்பிச்சது. நிலைமை ரொம்பவும் மோசமாகிக்கிட்டு இருந்தது. ஒரு நாள் சாப்பிடுறதுக்கு எங்களுக்கு ஏதாவது இருக்கும். அதற்குப் பின்னாடி ரெண்டு நாட்களுக்கு சாப்பிடுறதுக்கு எதுவுமே இருக்காது. அப்போ நாங்க புற்களைச் சாப்பிட ஆரம்பிச்சோம். என் மனைவியை இந்த அளவுக்கு உடல்நலம் கெடும்படி செய்தது இந்தப் புற்களா, இல்லாட்டி வேற எதுவுமான்னு எனக்குத் தெரியாது. தன் கால்களால அவளால நிற்க முடியல... அவ உடம்புல கொஞ்சம்கூட சக்தி கிடையாது. நாங்க உடல்நலம் தேறி வர்றதுக்கு உதவி செய்ய யாருமே இல்லைன்ற நிலைக்கு ஆளாயிட்டோம்...”

“நான் தனியா எவ்வளவோ கஷ்டப்பட்டேன்.” -அந்த வயதான கிழவி சொன்னாள்! “சாப்பாடு இல்லாம என்னால எதுவுமே செய்ய முடியல. என் உடம்புல கொஞ்சம் கூட சக்தி இல்லாம, நான் ரொம்பவும் மெலிஞ்சு போயிட்டேன். இந்தப் பெண்ணும் ரொம்பவும் மெலிஞ்சு போயிட்டா. அவளால எதுவுமே செய்ய முடியல. பக்கத்து வீட்டுல போய் ஏதாவது கேட்டு வாங்கச் சொல்லி நான் இவகிட்ட சொன்னேன். ஆனா, இவளால குடிசையைவிட்டு வெளிய போக முடிஞ்சாத்தானே! கொஞ்சம் கொஞ்சமா ஊர்ந்து போய் மூலையில உட்கார்ந்திடுவா. முந்தாநாளு பக்கத்து வீட்டு பொம்பளை ஒருத்தி வீட்டுக்குள்ள வந்தா! நாங்க உடம்புக்கு முடியாம பசி, பட்டினியா இருக்குறதைப் பார்த்துட்டு போனவதான் அதுக்குப் பிறகு திரும்பியே வரல. அவ புருஷன் அவளை விட்டுட்டுப் போயிட்டான். அவ குழந்தைகளுக்குக் கொடுக்கவே அவகிட்ட எதுவும் இல்ல... நாங்க மரணத்தை எதிர்பார்த்து காத்துக் கிடந்தோம்…”

அவர்களின் கதையைக் கேட்ட எலிஷா தன் நண்பரை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை ஒதுக்கி வைத்து விட்டு அன்று இரவு அவர்களுடன் தங்கிவிடுவது என்ற முடிவுக்கு வந்தார். காலையில் படுக்கையைவிட்டு எழுந்த அவர், ஏதோ தன்னுடைய சொந்த வீட்டில் செய்வதைப்போல வீட்டு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார். கிழவியின் உதவியுடன் அவர் நெருப்பைப் பற்ற வைத்தார். அதில் ரொட்டியை வாட்டினார். பிறகு சிறுமியைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு பக்கத்து வீடுகளைத் தேடிப்போய், மிகவும் அவசியமாகத் தேவைப்படக்கூடிய பொருட்களைத் தரும்படி கேட்டார். குடிசையில் பொருள் என்று எதுவுமே இல்லை. ரொட்டிக்காக அவர்கள் எல்லா பொருட்களையும் விற்றிருந்தார்கள். சமையல் செய்யும் பாத்திரங்கள், துணிகள் என்று எல்லாமே விற்கப்பட்டிருந்தன. எலிஷா சிலவற்றை அவரே உருவாக்கினார். வேறு சில முக்கியமான பொருட்களை விலை கொடுத்து வாங்கினார். அவர் அங்கே ஒருநாள் தங்கினார். அதற்கடுத்த நாளும் அங்கேயே இருக்க ஆரம்பித்தார்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel