Lekha Books

A+ A A-

புனிதப் பயணம் - Page 9

punidha payanam

எஃபிம் அங்கிருந்த பலரிடமும் எலிஷாவைப் பற்றி விசாரித்துப் பார்த்தார். ஆனால், யாரும் அவரைப் பார்த்ததாகச் சொல்லவில்லை.

அவருடன் இருந்த பயணி பயணக் கட்டணத்தைக் கட்டாமலே எப்படி கப்பலில் ஏறலாம் என்பதை எஃபிமிடம் கூறிக் கொண்டிருந்தார். ஆனால், அந்த மனிதர் சொன்னதை எஃபிம் காதிலேயே வாங்கவில்லை. "இல்ல... நான் பணம் கட்டி பயணச்சீட்டு வாங்குறதுக்கு தயாரா இருக்கேன்."- என்று சொன்னார்.

எஃபிம் தனக்காக ஒரு வெளிநாட்டு நுழைவு அட்டையை ஐந்து ரூபிள்கள் கொடுத்து வாங்கினார். நாற்பது ரூபிள்கள் கொடுத்து

ஜெருசலேம் செல்வதற்கான பயணச் சீட்டை வாங்கினார். பயணத்தின் போது சாப்பிடுவதற்காக கொஞ்சம் ரொட்டியும் வேறு சில உணவுப் பொருட்களும் வாங்கினார்.

கப்பல் புறப்படுவதற்குத் தயாராக நின்றது. பயணிகள் அவரவர் இடத்தில் போய் அமர்ந்தார்கள். எஃபிம்தன்னுடைய புதிய தோழருடன் போய் அமர்ந்தார். கப்பல் இப்போது கடல்மீது நீந்திச் செல்ல ஆரம்பித்தது.

பகல் முழுவதும் அவர்கள் எந்தவித பிரச்சினையுமில்லாமல் பயணம் செய்தார்கள். இரவு நெருங்கும்போது ஒரு பலமான காற்று வீசியது. தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்தில் கடல் நீர் கப்பலுக்குள் வர ஆரம்பித்தது. கப்பலிலிருந்த பயணிகள் பயப்பட ஆரம்பித்தார்கள். பெண்கள் வாய்விட்டு அழத் தொடங்கினார்கள். பலர் 'அய்யோ அம்மா' என்று அலறினார்கள். தைரியம் குறைவான சில மனிதர்கள் கப்பலுக்குள்ளேயே பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடினார்கள்.எஃபிம் கூட பயந்துதான் போய் விட்டார். ஆனால் தனக்குள் உண்டான பயத்தை அவர் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. தான் ஆரம்பத்தில் எங்குவந்து அமர்ந்தாரோ, அதே இடத்தில் எவ்வித பதட்டமும் வெளியே தெரியாதவாறு அவர் அமர்ந்திருந்தார். அவருடன் டாம்பவ்வில் இருந்து வந்திருந்த சில பயணிகள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் அதே இடத்தில் அன்று இரவு முழுவதும், மறுநாள் பகல் முழுவதும் தங்களின் உடைமைகளை இறுகப் பற்றியவாறு அமர்ந்திருந்தார்கள். மூன்றாம் நாள் கடல் மிகவும் அமைதியாகத் தொடங்கியது. ஐந்தாவது நாள் அவர்கள் சென்ற கப்பல் கான்ஸ்டான்டிநோபில் என்ற ஊரை அடைந்தது. பயணிகளில் சிலர் இப்போது துருக்கி நாட்டவரின் பிடியில் இருக்கும் புனித ஸோபியா தேவாலயத்தைப் பார்ப்பதற்காகச் சென்றார்கள். எஃபிம் எங்கும் செல்லாமல் கப்பலிலேயே இருந்தவாறு கொஞ்சம் வெள்ளை ரொட்டி வாங்கினார். அங்கேயே இருபத்து நான்கு மணிநேரம் கப்பல் நின்றது. பிறகு மெதுவாக நகர ஆரம்பித்தது. அதற்குப்பிறகு ஸ்மிர்னாவில் கப்பல் நின்றது. பிறகு அலெக்ஸான்ட்ரெட்டாவில் நின்றது. கடைசியில் பத்திரமாக அவர்கள் ஜாஃபாவை அடைந்தார்கள். அங்குதான் எல்லா பயணிகளும் இறங்க வேண்டும். அதற்குப்பிறகு சாலை வழியாக நாற்பது மைல்களுக்கும் அதிகமாக பயணம் செய்து அவர்கள் ஜெருசலேமை அடைய வேண்டும். கப்பலைவிட்டு இறங்கும்போது பயணிகள் மேலும் அதிகமாக பயந்தார்கள். கப்பல் மிகவும் உயரமாக இருந்தது. அதிலிருந்து அவர்கள் ஒவ்வொருவரும் படகுகளில் இறக்கிவிடப்பட்டார்கள். அந்தப் படகுகள் இப்படியும் அப்படியுமாய் ஆடிக்கொண்டேயிருந்தன. அவற்றில் பயணிகள் இறக்கிவிடப்படும் பொழுது, அவர்கள் நீருக்குள் விழுந்துவிடும் அபாயம் அதிகமிருந்தது. இரண்டு மனிதர்கள் நீரில் விழுந்து விட்டார்கள். எனினும் அவர்களையும் சேர்த்து எல்லோரும் பத்திரமாகக் கரை சேர்க்கப்பட்டார்கள். 

அவர்கள் கால்நடையாகச் சென்றார்கள். மூன்றாவது நாள் மதிய நேரத்தில் அவர்கள் ஜெருசலேமை அடைந்தார்கள். நகரத்திற்கு வெளியே இருந்த ரஷ்யன் தங்குமிடத்தில் அவர்கள் நிறுத்தப்பட்டார்கள். அங்கு அவர்களின் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டன. சாப்பிட்டு முடிந்ததும், எஃபிம் புனித இடங்களைத் தன்னுடன் பயணம் செய்த பக்தருடன் போய்ப் பார்த்தார். இயேசுவின் சமாதிக்கு அவர்களை அனுமதிப்பதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்பதால் அவர்கள் வேறொரு இடத்தை நோக்கிச் சென்றார்கள். அங்குதான் எல்லா புனிதப் பயணம் வந்தவர்களும் இருந்தார்கள். ஆண்கள் வேறு பெண்கள் வேறாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். வெறும் கால்களுடன் அவர்கள் வட்ட வடிவில் அமர வைக்கப்பட்டார்கள். அப்போது அங்கு ஒரு துறவி வந்தார். அவர் கையில் அவர்களின் பாதங்களைக் கழுவுவதற்கான கைக்குட்டை இருந்தது. அவர் அங்குள்ளவர்களின் பாதங்களைக் கழுவினார், துடைத்தார். பிறகு அவர் அந்தப் பாதங்களை முத்தமிட்டார். வட்டமாக அங்கு அமர்ந்திருந்த ஒவ்வொருவர் பாதங்களையும் அவர் இவ்வாறு செய்தார்.எஃபிமின் பாதங்களும் கழுவப்பட்டன, முத்தமிடப்பட்டன. அவர் அங்கு நின்று தொழுதார். சிலைகளுக்கு முன்னால் மெழுகுவர்த்திகள் ஏற்றினார். தேவாலயத்தில் நடக்கும் பிரார்த்தனையின்போது உச்சரிக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தன்னுடைய பெற்றோர்களின் பெயர்களைக் குறித்துக் கொடுத்தார். அங்கு உணவும் ஒயினும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. மறுநாள் காலையில் அவர்கள் எகிப்து நாட்டைச் சேர்ந்த மேரி, கடைசி காலத்தில் இருந்த இருட்டறையைப் பார்ப்பதற்காகச் சென்றார்கள். அங்கும் அவர்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்து பிரார்த்தனைகளைப் படித்தார்கள். அங்கிருந்து அவர்கள் ஆப்ரஹாமின் நினைவிடத்திற்குச் சென்றார்கள். கடவுளுக்குத் தன்னுடைய மகனை ஆப்ரஹாம் பலிகொடுக்க முயன்ற இடத்தை அவர்கள் பார்த்தார்கள். அதற்குப் பிறகு மேரி மக்தலீனா முன் கிறிஸ்து தோன்றிய இடத்தையும், இறைவனின் சகோதரரான ஜேம்ஸின் தேவாலயத்தையும் அவர்கள் பார்த்தார்கள். அந்த நண்பராக வந்த பயணி எஃபிமிற்கு இந்த எல்லா இடங்களையும் சுற்றிக் காட்டினார். ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு பணம் தரவேண்டும் என்பதை எஃபிமிற்கு அவர்தான் சொன்னார். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அவர்கள் தங்குமிடத்திற்குத் திரும்பி வந்து உணவருந்தினார்கள்.சிறிது படுத்து ஓய்வெடுக்கலாம் என்று நினைக்கும்பொழுது, எஃபிமுடன் வந்த அந்தப் பயணி உரத்த குரலில் கூப்பாடு போட ஆரம்பித்தார். அவர் தன்னுடைய துணிகளில் எதையோ தேடிக் கொண்டிருந்தார்.

"என் பர்ஸை யாரோ திருடிட்டாங்க. அதுல இருபத்து மூணு ரூபிள்கள் இருந்துச்சு"- அந்த மனிதர் சொன்னார்: "ரெண்டு பத்து ரூபிள் நோட்டுகள். மற்றவை சில்லறைகளா இருந்துச்சு..."

அவர் உரத்த குரலில் வாய்விட்டு அழுதார். ஆனால் அவரின் கூப்பாட்டை யாரும் பொருட்படுத்தாமல், அவர்கள் தரையில் படுத்து தூங்க ஆரம்பித்தார்கள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel