Lekha Books

A+ A A-

ஹைவே - Page 3

Highway

நெடுஞ்சாலையில் ஒரு இரவு வேளையில்... ஒரு இடத்தில் காவல் துறையினரின் சோதனை. ஒவ்வொரு வாகனத்தையும் நிறுத்தி, டார்ச் விளக்கு அடித்து, சோதனை போடுகின்றனர். அவ்வளவுதான்- பதறிப் போகிறான் மஹாவீர். வீராவும்தான்... ஆனால், புத்திசாலித்தனமாக ஒளிந்து கொண்டு, காவல் துறையினரின் கண்களில் மஹாவீர் சிக்கிக் கொள்ளாதது மாதிரி அவள் பார்த்துக் கொள்கிறாள். அந்தச் சம்பவம் மஹாவீரின் மனதை உருக்கி விடுகிறது. அவளை தன்னிடமிருந்து விலகி போய் விடும்படி அவன் கூறுகிறான். ஆனால், அவனை விட்டு போவதற்கு அவள் மறுத்து விடுகிறாள்.

பயணம் மீண்டும் நெடுஞ்சாலையில் தொடர்கிறது. ஒரு இரவு வேளையில்... ஒரு பேருந்து நிலையத்திற்கு அருகில் லாரியை நிறுத்தி விட்டு, மஹாவீர், வீராவிற்கு தேநீர் வாங்கிக் கொண்டு வந்து தருகிறான். இருவரும் லாரியில் இருக்கின்றனர். லாரியின் பின் பகுதியில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டே வீரா, பேருந்து நிலையத்திற்கு முன்னால் நெருப்பை மூட்டி, குளிர் காய்ந்தவாறு தாளம் தட்டி, நாட்டு பாடலை சிலர் பாடிக் கொண்டிருக்க, அதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கிறாள். இதுவரை வாழ்க்கையில் தான் பார்த்திராத ஒரு புதிய அனுபவம் தனக்குக் கிடைத்ததைப் போல அவள் உணர்கிறாள்.

லாரி ஜெய்ப்பூரை அடைகிறது. இருவரும் லாரியிலிருந்து இறங்கி கடைத் தெருக்களைச் சுற்றிப் பார்க்கின்றனர். அவளுக்காக கழுத்தில் அணியக் கூடிய பல வகையான பாசிகளை வாங்குகிறான் மஹாவீர்.

மீண்டும் பயணம் தொடர்கிறது. பஞ்சாப், இமாச்சல பிரதேசத்தைத் தாண்டி, காஷ்மீருக்குள் அவர்கள் நுழைகிறார்கள். காஷ்மீரில் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் ஒரு மலைப் பகுதியில், அன்று இரவு தங்குவதற்காக ஒரு அறை மட்டும் கொண்ட ஒரு வீட்டை அவர்கள் வாடகைக்கு எடுக்கிறார்கள். மஹாவீர் வெளியே சென்று காய்கறி வாங்கிக் கொண்டு வர, வீரா அங்கிருக்கும் விறகு அடுப்பில் சமையல் செய்கிறாள். அவள் சமைத்த உணவை, இருவரும் சாப்பிடுகின்றனர். தான் செய்த சமையலை 'நன்றாக இருக்கிறது' என்று கூறி, ரசித்து சாப்பிடும் மஹாவீரையே வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருக்கிறாள் வீரா. அன்று இரவு இருவரும் அந்தச் சிறிய வீட்டிற்குள் உறங்குகின்றனர்.

பொழுது புலர்கிறது. வீட்டிற்குள் மஹாவீர் இல்லை. வெளியே வருகிறாள் வீரா. மஹாவீர் மலைப் பகுதியின் புல்வெளியில் தூரத்தில் நின்று கொண்டிருக்கிறான். திடீரென்று போலீஸ் துறையினர் அந்த இடத்தைச் சூழ்கின்றனர். அவர்கள் தங்கியிருக்கும் இடத்தை அவர்கள் எப்படியோ தெரிந்து கொண்டு விட்டார்கள். அதைத் தொடர்ந்து அங்கு வந்த அவர்கள் துப்பாக்கியால் சுட, அது பாய்ந்து, கீழே சாய்கிறான் மஹாவீர். அவனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார்கள். அவன் ஏற்கெனவே துப்பாக்கிச் சூட்டில் இறந்து விட்டான் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, டில்லியிலிருக்கும் வீட்டிற்கு மீண்டும் அழைத்துக் கொண்டு வரப்படுகிறாள் வீரா. அவளைச் சுற்றிலும் வீட்டிலுள்ள எல்லோரும், அவளைக் கேள்விகள் கேட்டு துளைக்கின்றனர். ஆனால், அவள் அவர்களைக் கேள்வியால் துளைத்தெடுக்கிறாள். 'இதோ... எனக்கு முன்னால் உட்கார்ந்திருக்கிறாரே... மாமா. இவர் என்னுடைய 9 வயதிலிருந்து என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டிருக்கிறார். அதை கூறிய பிறகும், என் அம்மா அதைத் தடுக்க முயற்சிக்கவில்லை. இது எதுவுமே தெரியாத மாதிரி இதோ எனக்கு முன்னால் என் தாய் அமர்ந்திருக்கிறார். பணம், அரண்மனை, ஆடம்பரம் எல்லாம் இருந்தாலும் எனக்கு சிறிது கூட சுதந்திரம் இல்லை. நான் இங்கு ஒரு கூண்டுப் பறவை. நான் ஏதோ கடத்தப்பட்டதாகவும், துயரங்களை அனுபவித்ததாகவும் நீங்கள் நினைக்கலாம். நிச்சயமாக இல்லை. இப்போதுதான் புதிய உலகங்களையே நான் பார்த்திருக்கிறேன். சுதந்திரக் காற்றை சுவாசித்திருக்கிறேன். இந்த வீட்டில் இருப்பதற்கு எனக்கு விருப்பமில்லை. என்னை யாரும் தடுக்காதீர்கள். இனிமேல் வெளியே இருப்பதுதான் என்னுடைய உலகம். அங்குதான் என்னுடைய இனி இருக்கக் கூடிய வாழ்க்கையைச் செலவிடப் போகிறேன். சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டு, சந்தோஷாக இருக்கப் போகிறேன்' என்கிறாள் வீரா. பதில் கூற முடியாமல் எல்லோரும் சிலையென அமர்ந்திருக்கின்றனர்.

அந்த மாளிகையின் கதவு திறக்கப்படுகிறது. தன் காரில் அந்த வீட்டை விட்டு வெளியேறி, நெடுஞ்சாலையில் பயணிக்கிறாள் வீரா.

மீண்டும் காஷ்மீர் மலைப் பகுதி. முன்பு மஹாவீருடன் இருந்த அதே இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் மேட்டில் நின்று கொண்டிருக்கிறாள் வீரா. சற்று தூரத்தில் ஒரு சிறுவனும், சிறுமியும் ஓடி விடியாடிக் கொண்டிருக்கின்றனர். தன் இளமைக் காலத்தை மனதில் அசை போட்டுக் கொண்டும், மஹாவீருடன் தான் செலவழித்த இனிய நாட்களை நினைத்துக் கொண்டும் புன்னகை தவழ, அந்த மலைப் பகுதியில் நின்று கொண்டிருக்கிறாள் வீரா. அந்த அழகு தேவதையை, சுற்றிலும் ஆட்சி செய்யும் இயற்கை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறது.

Veera Tripathiயாக நடித்த Alia Bhatt, Mahaveer Bhatiயாக நடித்த Randeep Hooda- இருவரும் பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கின்றனர் என்பதே உண்மை.

படத்தில் மொத்தம் 9 பாடல்கள். அவற்றில் 'மாஹி வே' என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மானே சொந்தக் குரலில் பாடியிருக்கிறார். பாடல்களைச் செயற்கையாக இடம் பெறச் செய்யாமல், கதையின் போக்கிலேயே இருப்பதைப் போல இடம் பெறச் செய்ததற்காக, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானையும், இயக்குநர் இம்தியாஸ் அலியையும் கட்டாயம் நாம் பாராட்ட வேண்டும்.

திரைக்கு வந்தபோதே நான் 'Highway' படத்தைப் பார்த்து விட்டேன். எனினும், அதன் ஒவ்வாரு காட்சியும் இப்போதும் என் மனதில் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டே இருக்கிறது.

Page Divider

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel