Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

ஹைவே

Highway

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

ஹைவே – Highway

(இந்தி திரைப்படம்)

2014 பிப்ரவரி மாதத்தில் திரைக்கு வந்த படம். இரண்டே இரண்டு பிரதான கதாபாத்திரங்களை வைத்து தேசிய நெடுஞ்சாலையில் எடுக்கப்பட்ட புதுமைப் படம். படத்தின் இயக்குநர் Imtiaz Ali. Jab we met, Love Aaj Kal ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி, தனகென ஒரு மிகச் சிறந்த பெயரைப் பெற்று வைத்திருக்கும் இம்தியாஸ் அலியின் முத்திரைப் படமிது. Sajid Nadiadwalaவுடன் இம்தியாஸ் அலியும் இணைந்து தயாரித்த 'Highway' படத்தின் கதையை எழுதியிருப்பதும் இம்தியாஸ் அலிதான்.

படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். சவுண்ட் டிசைனிங் : ரசூல் பூக்குட்டி.

133 நிமிடங்கள் ஓடக் கூடிய இப்படத்தின் கதாநாயகன் ரந்தீப் ஹூடா. கதாநாயகி- அலியா பட். (பிரபல பட தயாரிப்பாளர், இயக்குநர் மகேஷ் பட்டின் மகள் இவர்).

2014 பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் 'பனோரமா' பிரிவில் 'Highway' திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது. இதே கதையை இதே பெயரில் 1999ஆம் ஆண்டில் ஜீ-தொலைக்காட்சிக்காக அரை மணி நேர படமாக Imtiaz Ali இயக்கினார். அதற்கு மக்களிடம் மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது.

அந்த கதையை முழு நீள திரைப்படமாக இயக்கினால் என்ன என்று அப்போதே நினைத்திருக்கிறார் இம்தியாஸ் அலி. கடந்த 15 வருடங்களாக தன் மனதிற்குள்ளேயே இந்த கதையை வைத்துக் கொண்டிருந்த இம்தியாஸ், காலப் போக்கில் அதில் ஏராளமான மாறுதல்களை உண்டாக்கியிருக்கிறார். கதாபாத்திரங்களின் குணங்கள், கதை நகரும் முறை ஆகியவற்றில் நிறைய மாற்றங்களைச் சிறிது சிறிதாக உருவாக்கி, இப்போது திரைக்கு வந்திருக்கும் படத்திற்கான கதையை உண்டாக்கியிருக்கிறார்.

முழு படத்தின் திரைக்கதையையும் முன்கூட்டியே எழுதி விடவில்லை. படமாக்கப்பட்ட இடங்களைப் பார்த்த பிறகு, புதிதாக ஏதாவது ஐடியாக்கள் தோன்ற, அதற்கேற்றபடி காட்சிளைப் புதிதாக உருவாக்கிய அனுபவங்களும் இம்தியாஸுக்கு உண்டாகியிருக்கிறது. படப்பிடிப்பிற்கு முன்பே இம்தியாஸ் வசனம் முழுவதையும் எழுதி வைத்திருக்கவில்லை. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் வைத்துத்தான் பெரும்பாலும் உரையாடல்களை எழுதியிருக்கிறார். 'முன் கூட்டியே தாளில் உரையாடல்களை நான் எழுதி தயார் பண்ணி வைத்திருந்தால், நிச்சயம் அவற்றில் உயிரோட்டம் இருக்காது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் வைத்தே, அந்தச் சூழ்நிலைகேற்றபடி எழுதியதால்தான் 'Highway' படத்தின் உரையாடல்கள் ஒவ்வொன்றும் மிகவும் யதார்த்தமாகவும், உயிரோட்டமாகவும் அமைந்தன என்பதுதான் உண்மை' என்கிறார் இம்தியாஸ் அலி.

நெடுஞ்சாலையிலேயே நடைபெறும் இக்கதையை முதலில் மேற்கு வங்காளம்- பீஹார் - ஒடிஸா நெடுஞ்சாலையில்தான் படமாக்க இம்தியாஸ் திட்டமிட்டிருந்தார். பின்னர் தன் தீர்மானத்தை அவர் மாற்றிக் கொண்டார். டில்லி, ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப், இமாச்சல பிரதேசம், காஷ்மீர் ஆகிய ஆறு மாநிலங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் 'Highway' படத்தின் படிப்பிடிப்பு நடைபெற்றது.

ஒரு இளைஞனையும், இளம் பெண்ணையும் மட்டுமே வைத்து ஒரு முழு நீள திரைப்படத்தை, சிறிதும் சோர்வு உண்டாகாத அளவிற்கு, பாராட்டக் கூடிய வகையில் இயக்குவது என்பது எவ்வளவு பெரிய விஷயம்! இப்படிப்பட்ட ஒரு புதுமையான சிந்தனையைச் செயல் வடிவத்திற்குக் கொண்டு வந்த ஒரே காரணத்திற்காகவே இயக்குநர் இம்தியாஸ் அலியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

படம் பார்த்த அனைவரின் பாராட்டுக்களையும் அள்ளிச் சென்ற 'Highway' படத்தின் கதை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் உங்கள் எல்லோருக்கும் இப்போது உண்டாகியிருக்குமே! உங்களுக்காக இதோ கதை:

வீரா த்ரிபாதி ஒரு அழகான இளம் பெண். மிகப் பெரிய கோடீஸ்வரரும், தொழிலதிபருமான த்ரிபாதியின் மகள். அவளுக்கு திருமணம் நடக்க இருக்கும் மாலை மயங்கிய வேளையில் கதை ஆரம்பமாகிறது. தான் திருமணம் செய்து கொள்ள இருக்கும் மணமகனிடம் தன்னைச் சிறிது தூரம் காரில் ஏற்றிக் கொண்டு செல்ல முடியுமா என்று கேட்கிறாள் வீரா. அதற்குச் சம்மதித்த அவன் அவளை தன் அருகில் உட்கார வைத்து காரை ஓட்டிச் செல்கிறான். கார் சிறிது தூரம் சென்றதும், மேலும் சிறிது தூரம் போகும்படி கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறாள் வீரா. 'இரவு நேரம்... சாலையில் பாதுகாப்பு இருக்காது. வேண்டாம்...' என்று கூறுகிறான் அந்த சொந்தக்கார இளைஞன். ஆனால்,  அவளோ பிடிவாதமாக இருக்கிறாள். வேறு வழியில்லாமல் அவன் காரை ஓட்டிச் செல்கிறான். ஒரு பெட்ரோல் பங்கிற்கு அருகில் செல்லும்போது, சிறிதும் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் முகமூடி அணிந்திருக்கும் ஒரு கூட்டம் இளம் பெண் வீராவை மட்டும் கடத்திக் கொண்டு செல்கிறது.

ஒரு பாழடைந்த கட்டிடம். கடத்தல்காரர்கள் தங்களின் முகமூடிகளைக் கழற்றுகிறார்கள். ஆளைக் கடத்தி, அதை வைத்து பணக்காரர்களிடம் பணம் பறிக்கக் கூடிய கூட்டம்தான். ஆனால், அந்த இளம் பெண்ணின் தந்தை மிகப் பெரிய அந்தஸ்த்தில் இருப்பவர் என்பதும், அரசாங்க அளவில் அவருக்கு வியக்கத்தக்க அளவில் செல்வாக்கு இருக்கிறது என்பதும் தெரிந்ததும் அந்தக் கூட்டம் சிறிது அச்சமடைய தொடங்குகிறது. அவளை கடத்தியது கூட தவறோ என்று கூட அவர்கள் நினைக்க ஆரம்பிக்கின்றனர்.

அந்தக் கூட்டத்தில் இருக்கும் ஒரு இளைஞன், வீராவின் அழகில் தன் மனதைப் பறி கொடுக்கிறான். அவளைப் பார்த்து ஆசை வார்த்தைகளை அள்ளி வீசுகிறான். 'நான் கூறுவதைக் கேள். உன்னை நான் இங்கிருந்து தப்பிக்க வைக்கிறேன்' என்கிறான் அவன். இதையே அவன் திரும்பத் திரும்ப பல்வேறு சூழ்நிலைகளில் கூறிக் கொண்டே இருக்கிறான். ஒரு சமயம் அவன் இந்த வார்த்தைகளை அவளிடம் கூறிக் கொண்டிருக்கும்போது, கூட்டத்தின் தலைவனான மஹாவீர் பதி பார்த்து விடுகிறான். அவ்வளவுதான்- அந்த இளைஞனை அந்த இடத்திலிருந்தே விரட்டியடிக்கிறான்.

இதற்கிடையில் வீராவை அவளுடைய குடும்பம் பலமாக தேடிக் கொண்டிருக்கிறது என்பதையும், அவள் கடத்தப்பட்டு எந்த இடத்தில் கடத்தல்காரர்களால் வைக்கப்பட்டிருக்கிறாள் என்பதை அவளுடைய தந்தையும், மற்றவர்களும் தெரிந்து கொண்டு விட்டார்கள் என்பதையும், காவல் துறையின் உதவியுடன் சிறிது நேரத்தில் அங்கு வரப் போகிறார்கள் என்பதையும் மஹாவீர் தெரிந்து கொள்கிறான்.

அடுத்த நிமிடம் அங்கிருந்து வேறொரு தூர இடத்திற்கு அவளைக் கொண்டு செல்கிறார்கள். ஆள் நடமாட்டமே இல்லாத இடமது. அந்த இடத்தில் அவளை வைத்துக் கொண்டிருப்பதும் பாதுகாப்பானது அல்ல என்பது தெரிந்ததும், மற்ற ஆட்களை ஒதுக்கி விட்டு, ஒரு லாரியில் அவளை மட்டும் ஏறுமாறு கூறி விட்டு, அதில் தான் மட்டும் ஏறுகிறான் மஹாவீர்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version