Lekha Books

A+ A A-

நிர்வாண நிஜம் - Page 9

முன்னணி நடிகராக நினைத்தவர் முன்னணி டப்பிங் கலைஞராக ஆனார்!

சுரா

க்ரவர்த்தி- மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர் இவர். அங்கு பி.ஏ. முடித்துவிட்டு, சென்னைக்கு வந்து ஃபிலிம் சேம்பர் அப்போது நடத்திய நடிப்புப் பயிற்சி கல்லூரியில் ஒரு வருடம் படித்தார் (அங்கு படித்தவர்கள்தாம் ரஜினிகாந்த், சிரஞ்சீவி போன்ற பலரும்). வெளியே வந்தவுடன் சக்ரவர்த்திக்கு 'ஒரு கோவில் இரு தீபங்கள்' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 'மல்லிகை பதிப்பகம்' சங்கரன் தயாரித்த அந்தப் படத்தின் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். பல புதுமுகங்கள் அதில் அறிமுகமானார்கள். அது நடந்தது 1978ஆம் ஆண்டில். முற்றிலும் முடிவடைந்துவிட்ட அந்தப் படம் இன்று வரை திரைக்கு வரவில்லை.

1979ஆம் ஆண்டில் திரைக்கு வந்த பாரதிராஜாவின் 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில் இரண்டு காட்சிகளில் நடித்திருந்தார் சக்ரவர்த்தி. தொடர்ந்து ஆர்.செல்வராஜ் இயக்கிய 'பொண்ணு ஊருக்குப் புதுசு' படத்தில் வரும் 'உனக்கெனத்தானே இந்நேரமா நானும் காத்திருந்தேன்' என்ற பாடல் காட்சியில் வந்தார். சாந்தி திரையரங்கிற்கு பின்னாலிருந்த தாயார் சாஹிப் தெருவில் ஒரு பழைமையான கட்டிடத்தின் மாடியில் ஒரு சிறிய அறையில் சக்ரவர்த்தியும், திருமலைராஜன் என்ற நண்பரும் தங்கியிருந்தார்கள். அப்போது படவுலகில் வாய்ப்புகள் பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருந்தார் சக்ரவர்த்தி. ஒருமுறை நான் சென்னை வந்தபோது, அந்த அறைக்குச் சென்று சக்ரவர்த்தியைப் பார்த்து பேசியிருக்கிறேன்.

சில மாதங்களுக்குப் பிறகு, ‘சாவி’ வார இதழின் உதவி ஆசிரியராக எனக்கு பணி கிடைக்க, நான் சென்னைக்கு வந்தேன். நானும் சக்ரவர்த்தியும் தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் இருந்த ‘மீரான் சாஹிப் சேம்பர்’ என்ற கட்டிடத்தில் ஒரே அறையில் தங்கினோம். எங்களுடன் வேறு மூன்று நண்பர்களும் இருந்தார்கள். அப்போது சக்ரவர்த்தி நடித்த 'சரணம் ஐயப்பா' என்ற படம் திரைக்கு வந்திருந்தது. சில மாதங்களில் 'ஊமை கனவு கண்டால்' என்று அவர் நடித்த படம் திரைக்கு வந்தது. படம் சரியாக ஓடவில்லை. அப்போது நிறைய புதிய பட நிறுவனங்கள் இருத்ததால், சக்ரவர்த்தி மிகவும் பிஸியாகவே இருந்தார். விஜயகாந்தும் சக்ரவர்த்தியும் இணைந்து 'நூலறுந்த பட்டம்' என்றொரு படத்தில் நடித்தார்கள். விஜயகாந்த் கெடுத்து விட்டுப் போன ஒரு இளம் பெண்ணிற்கு சக்ரவர்த்தி வாழ்க்கை தருவது மாதிரி கதை. முற்றிலும் முடிவடைந்துவிட்ட அந்தப் படம் இன்றுவரை ஏனோ மக்களைச் சந்திக்கவே இல்லை. 'ராக்காலப் பறவைகள்' என்றொரு படத்தில் சக்ரவர்த்தி நடித்தார். அதுவும் இன்று வரை திரைக்கு வரவில்லை. ரஜினிகாந்தின் தம்பியாக 'ஆறிலிருந்து அறுபது வரை' படத்திலும், ஒரு புகைப்பட கலைஞனாக 'தர்மயுத்தம்' படத்திலும் சக்ரவர்த்தி நடித்தார்.

'ரிஷிமூலம்' படத்தில் சிவாஜி- கே.ஆர்.விஜயா ஆகியோரின் மகனாக நடிக்கும் வாய்ப்பு சக்ரவர்த்திக்குக் கிடைத்தது. அந்தப் படத்தில் சக்ரவர்த்தி நன்றாக நடித்திருந்தார். படம் திரைக்கு வந்து 100 நாட்கள் ஓடியது. அதில் சக்ரவர்த்திக்கு நல்ல பெயர் கிடைத்தது.

கோமல் சுவாமிநாதன் எழுதிய 'செக்கு மாடுகள்' என்ற நாடகம் 'சாதிக்கொரு நீதி' என்ற பெயரில் படமானது. அதில் விஜயகாந்த் கதாநாயகனாக நடிக்க, சக்ரவர்த்தி இன்னொரு கதாநாயகனாக நடித்தார். 'முள் இல்லாத ரோஜா' என்றொரு படம் வந்தது. அதில் சக்ரவர்த்தி வாய் பேசாத ஊமை பாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். 'பிலிமாலயா' பத்திரிகையின் ஆசிரியராக இருந்த எம்.ஜி.வல்லபன் 'தைப்பொங்கல்' என்ற படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் கதாநாயகன்- சக்ரவர்த்தி.

1983 ஆம் ஆண்டு வாக்கில், 'கொட்டு முரசே' என்ற படத்தில் மகாகவி பாரதியாராக சக்ரவர்த்தி நடித்தார். அந்தப் படத்தைத் தயாரித்தவர் 'முகமது பின் துக்ளக்' படத்தைத் தயாரித்த மகான் என்பவர். அந்தப் படம் முற்றிலும் முடிவடைந்ததும், இந்த நிமிடம் வரை திரைக்கு வரவில்லை.

தொடர்ந்து பல படங்களில் நடித்த சக்ரவர்த்தி முன்னணி நடிகர்களில் ஒருவராக வருவார் என்று நான் எதிர்பார்த்தேன். ஏனோ அப்படியொரு விஷயம் நடக்காமலே போய்விட்டது. அவர் தன் பெற்றோருடன் சென்னையில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கினார். நானும் என் இருப்பிடத்தை மாற்றினேன். இடையில் 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தைப் பார்த்தேன்' அதில் கமல்ஹாசனின் தம்பியாக நடித்திருந்தார். இதற்கிடையில் நடிகர் சங்கத்தில் அவருக்குத் திருமணம் நடந்தது. நான் அதற்கு சென்றிருந்தேன்.

அதற்குப் பிறகு பல மாதங்கள் ஓடிய பின் பாண்டிபஜாரில் நான் சக்ரவர்த்தியை ஒருநாள் பார்த்தேன். 'என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு 'படமொன்றை இயக்குவதற்காக முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறேன். நடிகர் பிரபுவைப் பார்த்து பேசியிருக்கிறேன். அருமையான கதை. நானே எழுதியதுதான். பிரபு கால்ஷீட் தருவதாகக் கூறியிருக்கிறார்' என்றார்.

காலம் கடந்தோடியது. சக்ரவர்த்தியின் இயக்குநர் கனவு நிறைவேறவில்லை. பத்து  வருடங்களுக்கு முன்பு நண்பர்கள் சொன்னார்கள்- சக்ரவர்த்தி இப்போது மும்பையில் இருக்கிறார் என்று. அங்கு தயாராகும் விளம்பரப் படங்களுக்கும், செய்திப் படங்களுக்கும் அவர் டப்பிங் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று அவர்கள் கூறினார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு சக்ரவர்த்தி சென்னை வந்திருந்தார். என்னைப் பார்த்தார். ஒரு குறுந்தாடியை வைத்துக் கொண்டு விஞ்ஞானியைப் போல இருந்தார். ஆள் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். தானே எட்டு பாடல்களை எழுதி, இசையமைத்து ஒரு ஆல்பம் தயாரித்திருப்பதாகக் கூறினார். எஸ்.பி.பாலசுப்ரமணியம், சரண் ஆகியோரும் அதில் பாடியிருந்தார்கள். ஒரு ஒலிப்பதிவுக் கூடத்தில் எனக்கு அவர் பாடல்களைப் போட்டுக் காட்டினார். பாடல்கள் சிறப்பாக இருந்தன. சக்ரவர்த்தியின் இன்னொரு திறமையை நான் உணர்ந்தேன். 'நடிக்கும் எண்ணம் இப்போது இல்லையா?' என்று நான் அவரிடம் கேட்டேன். 'அந்த ஆசை இப்போது கொஞ்சம் கூட மனதில் இல்லை, தோழா' என்றார் சக்ரவர்த்தி.

மும்பைக்குப் போன பிறகு ஒரு நாள் தொலைபேசியில் என்னுடன் பேசினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இறந்ததை நினைவு கூர்ந்து, ஒரு அஞ்சலி நிகழ்ச்சியை மும்பையில் தான் நடத்தியதாகவும், அதில் மும்பையிலிருந்த நடிகை ராதா கலந்து கொண்டார் என்றும் சொன்னார் சக்ரவர்த்தி.

மும்பையில் படப்பிடிப்பு நடத்திய ரேடான் நிறுவனம் தங்களின் 'காவேரி' என்ற பெயரில் சன் டி.வி.யில் ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடரில் சக்ரவர்த்தியை வில்லன் வேடத்தில் நடிக்கச் செய்திருந்தனர். அந்தத் தொடரில் சக்ரவர்த்தி நன்றாக நடித்திருந்ததாகச் சொன்னார்கள்.

மும்பையிலிருந்து என்னுடன் அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பல விஷயங்களையும் பற்றி உரையாடுவார் சக்ரவர்த்தி. மும்பையில் சான்டாக்ரூஸ் பகுதியில் தனக்கு சொந்தமான வீட்டில் தன் மனைவியுடனும் தந்தையுடனும் இரண்டு மகன்களுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர், இப்போது விளம்பரப் படங்களுக்கு தமிழ் குரல் கொடுப்பதில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.

கடந்த 15 வருடங்களில் பல்லாயிரக்கணக்கான விளம்பரப் படங்களுக்கு தமிழில் குரல் தந்ததன் மூலம் சக்ரவர்த்தி, மும்பை விளம்பர உலகின் ஒரு முன்னணி இடத்தை வகித்துக்கொண்டிருக்கிறார். ஒரு நடிகராக அவரால் ஒளி வீச முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் ஒரு நண்பன் என்ற முறையில் எனக்கு பல வருடங்களாக இருந்தது. ஆனால், இப்போது ஒரு முன்னணி டப்பிங் கலைஞராக அவர் இருப்பதைப் பார்த்து நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.

‘நாம் தேடியது கிடைக்காமற் போனால், நமக்கு எது கிடைத்திருக்கிறதோ அதில் நம் சந்தோஷத்தை நாம் தேடிக்கொள்ள வேண்டும்’ என்று பொதுவாக கூறுவார்கள். இந்த வார்த்தைகளுக்கு ஏற்ற வண்ணம் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, அதில் வெற்றி பெற்றிருக்கும் என் இனிய நண்பர் சக்ரவர்த்தியை நினைத்து உண்மையிலேயே நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel