Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

நான் நடிகன் ஆன கதை - Page 28

naan nadigan aana kathai

முழுமையான உடல் நலத்தைத் திரும்பப் பெறும் வரையில், பதினெட்டு மாதங்கள் என் தாய் கெய்ன்ஹிஸ்ல்லில்தான் இருந்தார். நான் நாடகக் கம்பெனியுடன் பயணத்தில் இருக்கும்போதெல்லாம், சிட்னி அவ்வப்போது வந்து அவரைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

நாடகத்தில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது ஸெயின்ட்ஸ்பரி. ஹோம்ஸ் நாடகங்களில் நடித்திருந்தவர்களில் மிகவும் சிறப்பான ஹோம்ஸ் அவர்தான் என்று பொதுவாக எல்லோருமே கூறுவார்கள்.

நாடகக் கம்பெனியுடன் சேர்ந்து பயணம் செய்கிற காலத்தில் நாங்கள் ஆங்காங்கே ஒவ்வொரு வீடுகளிலும் தங்குவோம். பகல் நேரங்களில் நான் மட்டும் தனியாக இதற்கு முன்பு பார்த்திராத பாதைகள் வழியாக அலைந்து திரிவேன். சாயங்காலம் நாடகம் ஆரம்பிக்கிற நேரத்தில்தான் நான் கம்பெனியைச் சேர்ந்த மற்றவர்களையே பார்ப்பேன். வார இறுதியில் பொருட்கள் வாங்கி வீட்டுச் சொந்தக்காரியிடம் கொடுப்பேன். அவள் சமையல் செய்து தரும் உணவைச் சாப்பிடுவது மிகவும் சந்தோஷமான ஒன்றாக இருக்கும்.

வீட்டிலிருந்து வந்து ஆறு மாதங்கள் ஆகி விட்டன. இதற்கிடையில் சிட்னி நடிப்பு ஆசைகளை மூட்டை கட்டி வைத்து விட்டு வேறொரு வேலையில் நுழைந்தான். அவன் தவறாமல் எனக்கு கடிதங்கள் எழுதினான். என் தாயைப் பற்றிய தகவல்களை எனக்கு தெரியப்படுத்தினான். ஆனால், நான் பதில் கடிதமே எழுதவில்லை. வார்த்தைகளைச் சரியாக எழுதத் தெரியாமல் இருந்ததே முதற் காரணம். அவன் எழுதிய ஒரு கடிதம் என்னை பலமாக பாதித்து விட்டது. பதில் கடிதம் எழுதாததற்கு அவன் என்னைக் குற்றம் சுமத்தினான். நாங்கள் ஒன்றாக அனுபவித்த கஷ்டங்களையும் ஒன்றாகச் செலவழித்த நாட்களையும் அவன் தன்னுடைய கடிதத்தில் விளக்கமாக எழுதியிருந்தான். ‘அம்மா சுய நினைவுடன் இல்லாமல் இருந்தால் இந்த உலகத்தில் நம் இரண்டு பேருக்கும் நாம் மட்டுமே உள்ளோம். எனக்கு ஒரு சகோதரன் இருக்கிறான் என்பதைக் கூறுவதற்காகவாவது நீ அவ்வப்போது கடிதம் எழுத வேண்டும்’ என்று அவன் எழுதியிருந்தான். அவனுடைய அந்தக் கடிதத்தைப் படித்து விட்டு எனக்கு கவலையாகிவிட்டது. நான் உடனே பதில் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதம் வாழ்க்கையின் இறுதி வரையில் எங்களுக்கிடையே இருந்த அன்பை மேலும் பலப்படுத்தியது.

தங்கியிருந்த இடத்தை விட்டு வெளியே போகும்போது வழியில் கம்பெனியைச் சேர்ந்த யாரையாவது பார்த்தால், பேசுவதற்கு எனக்கு என்னவோபோல இருந்தது. கேள்விகளுக்கு தெளிவாக பதில் சொல்ல என்னால் முடியவில்லை. அதனால் யார் கண்ணிலாவது பட்டுவிட்டால், நான் தந்திரமாக ஓடி ஒளிந்து கொள்வேன்.

நான் என்னை கவனிப்பதையே கூட விட்டுவிட்டேன் எதிலும் ஒரு ஒழுங்கு இல்லாமலிருந்தது. இரயில்வே ஸ்டேஷனுக்கு கடைசி நிமிடத்தில்தான் நான் போய் சேர்வேன். அது கூட சரியாக ஆடை அணியாமலேயே. தொடர்ந்து என் மீது குறைகள் சொல்லப்பட்டன.

அறையில் தனியாக இருந்ததால் என்னுடன் இருக்கட்டுமே என்று நான் ஒரு முயலை வளர்த்தேன். இந்த விஷயம் நான் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரிக்குத் தெரியாது. தூய வெண்மை நிற ரோமங்களைக் கொண்டிருந்த ஒரு அழகான முயல் அது. எனினும், அது இருந்ததால் ஒரு தாங்கிக் கொள்ள முடியாத நாற்றம் இருந்ததென்னவோ உண்மை. கட்டிலுக்கு அடியில் இருந்த ஒரு மரப்பெட்டிக்குள் நான் அதை மறைத்து வைப்பேன். வீட்டின் சொந்தக்காரி தினமும் காலையில் பிரகாசமான முகத்துடன் காலை உணவுடன் அறைக்கு வருவாள். முயலின் நாற்றம் மூக்கில் வந்து மோதுவதன் காரணமாக முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டுதான் அவள் அங்கிருந்து கிளம்புவாள். அவள் சென்றவுடன் நான் கதவை அடைத்துவிட்டு பெட்டியைத் திறந்து முயலை வெளியே எடுப்பேன். அது அறை முழுவதும் துள்ளிக் குதித்து ஓடிக் கொண்டிருக்கும்.

கதவை யாராவது தட்டும் ஓசை கேட்டு விட்டால் போதும், ஓடிப் போய் பெட்டிக்குள் ஒளிந்து கொள்ள நான் அதை பழக்கி விட்டிருந்தேன். வெவ்வேறு இடங்களில் மாறி மாறி வசிக்க நேர்ந்தபோது வீட்டின் சொந்தக்காரிகள் முயலைப் பார்த்து விட்டால், நான் இந்த தந்திரம் செய்துதான் அவர்களின் கோபத்தை மாற்றினேன். பிறகு அவர்கள் முயலை அங்கேயே வைத்துக் கொள்ள சம்மதித்து விடுவார்கள்.

ஒரு முறை வெய்ல்ஸில் இருந்த ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது நான் பெட்டிக்குள் முயலை மறைக்கும் விஷயத்தை அந்த வீட்டின் சொந்தக்காரியிடம் சொன்னேன். அப்போது அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். ஆனால், நாடகம் முடிந்து திரும்பி வந்தபோது முயலின் எந்தவொரு அடையாளமும் அங்கு இல்லாமலிருந்தது. நான் அதைப் பற்றி கேட்டதற்கு அவள் கையை விரித்து விட்டாள். ‘அது எங்கேயாவது ஓடிப் போயிருக்கும். இல்லாவிட்டால், யாராவது திருடிக் கொண்டு போயிருப்பார்கள்’ என்று கூறி அவள் அந்தப் பிரச்னைக்கு அத்துடன் முற்றுப்புள்ளி வைத்து விட்டாள்.

நகரத்தை விட்டு நகரத்திற்கு நாங்கள் நாடகத்துடன் பயணித்துக் கொண்டிருந்தோம்.

9

நாற்பது வார பயணத்திற்குப் பிறகு நாங்கள் லண்டனுக்குத் திரும்ப வந்தோம். ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதால், மூன்று வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக இன்னொரு பயணம் போக வேண்டிய சூழ்நிலை உண்டானது.

இந்த முறை நானும் சிட்னியும் பெளனல் டெரஸ்ஸிலிருந்த சிறிய அறையை விட்டு கென்னிங்டன் சாலையில் மேலும் கொஞ்சம் வசதிகள் கொண்ட இன்னொரு வீட்டிற்குக் குடி பெயர்ந்தோம். பாம்புகள் சட்டைகளைக் கழற்றுவதைப் போல கடந்த காலத்தின் எல்லா அடையாளங்களையும் நாங்கள் உதறித் தள்ள விரும்பினோம். ‘ஷெர்லாக் ஹோம்ஸி’ன் அடுத்த பயணத்தில் சிட்னிக்கு ஒரு கதாபாத்திரம் கொடுக்க வேண்டுமென்ற என்னுடைய வேண்டுகோளை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. சம்பளம்- வாரத்திற்கு முப்பத்தைந்து ஷில்லிங்! பயணத்தில் சிட்னியும் என்னுடன் இருந்தான்.

சிட்னி ஒவ்வொரு வாரமும் என் தாய்க்கு கடிதம் எழுதினான். பயணம் முடிகிற நேரத்தில் எங்களுக்கு கெய்ன் ஹில்லில் இருந்து என் தாயின் உடல் நிலை சரியாகிவிட்டது என்று தெரிவிக்கப்பட்ட கடிதம் வந்தது. மிகுந்த சந்தோஷத்தைத் தந்த செய்தியாக அது இருந்தது.

என் தாய் அங்கிருந்து வருவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் நாங்கள் செய்தோம். இரண்டு படுக்கை அறைகளும் ஒரு உட்காரும் அறையும் கொண்ட ஒரு வீட்டை நாங்கள் வாடகைக்கு எடுத்தோம். அழகான அந்த அறையில் பியானோவும், என் தாயின் படுக்கையறையில் மலர்களும் இருக்கும்படி செய்தோம். மிகவும் சுவையான உணவு தயாரித்தோம்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version