Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

நான் நடிகன் ஆன கதை - Page 23

naan nadigan aana kathai

சிலர் அதற்குப் பிறகு தைப்பதற்கு துணி தருவதை நிறுத்திக் கொண்டார்கள். தவணைப் பணம் கட்டுவது தவறியபோது, தையல் இயந்திரத்தையும் இழக்க வேண்டி நேரிட்டது. நடனம் கற்றுத் தருவதற்கு எனக்கு வருமானமாக வந்து கொண்டிருந்த ஐந்து ஷில்லிங்கும் நின்று போனது. என் தாயின் நடவடிக்கைகளில் உண்டான மாறுதலை என்னால் உணர முடிந்தது.

ஒரு நாள் நான் என் தாயிடம் சென்னேன்: ‘அம்மா, முன்னாடி மாதிரி நல்ல ஆடைகளை அணியக் கூடாதா? எப்போ பார்த்தாலும் அறைக்குள்ளே இப்படி உட்கார்ந்து கொண்டே இருந்தா எப்படி?’

பாவம் என் தாய். நான் சொன்ன வார்த்தைகள் நினைத்து பின்னால் நான் மிகவும் வருத்தப்பட்டேன். பட்டினி காரணமாகத்தான் என் தாய் இந்த அளவிற்கு தளர்ந்து போயிருக்கிறார் என்பதை என்னால் அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை.

7

ள்ளிக்கூடத்தில் கோடை கால விடுமுறை ஆரம்பித்தது. அறையில் சோர்வடைந்து உட்கார்ந்து கொண்டிருப்பதை இல்லாமற் செய்வதற்காக நான் அன்று சற்று முன் கூட்டியே மக்கார்த்தியின் வீட்டிற்குச் சென்றேன். அவள் என்னை சாப்பிட அழைத்திருந்தும், நான் சாப்பிட மறுத்துவிட்டு என் தாயைத் தேடி திரும்பி வந்து விட்டேன். பெளனல் டெரஸ்ஸிற்கு நான் வந்தபோது, அங்கு நின்றிருந்த சிறுவர்கள் சிலர் என்னை வெளி கதவிற்கு அருகிலேயே தடுத்து நிறுத்தினார்கள்.

‘உன் அம்மாவுக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சு...’- ஒரு சிறுமி சொன்னாள்.

அதைக் கேட்டு முகத்தில் யாரோ அடித்ததைப் போல நான் உணர்ந்தேன்.

‘நீ என்ன சொல்ற?’- நான் முணுமுணுத்தேன். ‘நாங்க உண்மையைத்தான் சொல்றோம். அவங்க அடுப்புக் கரி துண்டுகளை கையிலெடுத்து வச்சிக்கிட்டு ஒவ்வொரு கதவா தட்டினாங்க. இது சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் பிறந்த நாள் பரிசுன்னு சொல்லிக்கிட்டு எல்லா வீடுகள்லயும் இந்த அடுப்புக் கரியைக் கொடுத்தாங்க’- இன்னொரு சிறுவன் சொன்னான்.

அதற்கு மேல் எதையும் கேட்காமல் நான் படிகளில் ஏறி அறைக்குள் நுழைந்தேன். சிறிது நேரம் என் தாயையே வெறித்துப் பார்த்தேன். அவர் வழக்கம் போல ஜன்னலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். முகம் மிகவும் வெளிறிப் போயிருந்தது. அதிகமான துன்பங்களை அனுபவிக்கிற முக பாவத்துடன் என் தாய் என்னைப் பார்த்தார்.

‘அம்மா...’- அழும் குரலில் நான் அழைத்தேன்.

‘என்ன?’- என் தாய் அலட்சியமாக கேட்டார்.

நான் ஓடிச் சென்று என் தாயின் மடியில் முகத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதேன்.

‘என்ன நடந்தது?’- என் தலையில் விரலால் வருடியவாறு என் தாய் கேட்டார்.

‘அம்மா, உங்களுக்கு உடல் நலம் சரியில்லை’- நான் அழுவதற்கிடையில் சொன்னேன்.

‘எனக்கு எந்த பிரச்னையுமில்லை...’ – என் தாய் என்னைத் தேற்றினார். அவர் மன அமைதி இல்லாமல் இருப்பதை என்னால் உணர முடிந்தது.

‘இல்ல... இல்ல... அவங்க எல்லோரும் சொன்னாங்களே! அம்மா, நீங்க ஒவ்வொரு வீட்டுக்கும் போயி...’- என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை.

‘நான் சிட்னியைத் தேடினேன். அவங்க அவனை ஒளிச்சு வச்சிருக்காங்க’- சோர்வான குரலில் என் தாய் சொன்னார்.

அந்தச் சிறுவர்கள் கூறியது அனைத்தும் உண்மைதான் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

‘அம்மா... அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நாம ஒரு டாக்டர்கிட்ட போவோம்’- நான் தேம்பித் தேம்பி அழுது கொண்டே சொன்னேன்.

‘அவன் எங்கே இருக்கான்னு மக்கார்த்திக்கு நல்லா தெரியும். அவள் அவனை என்கிட்ட இருந்து மறைச்சு வச்சிருக்கா’- என் தலையைப் பிடித்து ஆட்டியவாறு என் தாய் சொன்னார்.

‘அம்மா, தயவு செய்து.... நான் ஒரு டாக்டரை அழைக்கிறேன்.’

நான் எழுந்து கதவை நோக்கி நடந்தேன்.

என் தாய் திடீரென்று கேட்டார்: ‘நீ எங்கே போற?’

‘டாக்டரை அழைக்கிறதுக்கு.... நான் சீக்கிரம் வந்திடுறேன்.’

அதற்கு என் தாய் எந்த பதிலும் கூறவில்லை. உள் கவலையுடன் அவர் என்னையே பார்த்தார். நான் உடனடியாக கீழே இறங்கி வீட்டுச் சொந்தக்காரியிடம் சென்றேன்.

‘அம்மாவுக்கு உடல் நலம் சரியில்லை. நான் டாக்டரை அழைக்கிறதுக்காக போறேன்’- நான் அவளிடம் சொன்னேன்.

‘டாக்டருக்கு ஆள் அனுப்பியாச்சு’- அவள் சொன்னாள்.

அடுத்த சில நிமிடங்களில் வயதான டாக்டர் ஒருவர் வந்தார். அவர் வீட்டுச் சொந்தக்காரி சொன்ன ஒவ்வொன்றையும் காது கொடுத்து கேட்டார். சிறுவர்கள் சொன்ன கதையைத்தான் அவளும் சொன்னாள். டாக்டர் என் தாயை ஆழமாக சோதித்துப் பார்த்தார். ‘பைத்தியம் பிடிச்சிருக்கு. இவங்களை உடனடியா மருத்துவமனைக்கு அனுப்புங்க’- அவர் சொன்னார். தொடர்ந்து ஒரு தாளில் என்னவோ எழுதினார். அதில் என் தாய்க்கு உடலில் சத்து மிகவும் குறைவாக இருக்கிறது என்று எழுதியிருந்தார். அதை அவர் எனக்கு விளக்கிச் சொன்னார்.

‘மருத்துவமனையில் இருந்தால் அவங்களுக்கு நல்ல உணவு கிடைக்கும்’- வீட்டுச் சொந்தக்காரி என்னிடம் சொன்னாள். என் தாயின் ஆடைகளை மாற்றவும், தேவைப்படும் துணிகளை எடுத்து வைப்பதற்கும் அவள் எனக்கு உதவினாள். ஒரு குழந்தையைப் போல என் தாய் நாங்கள் சொன்னபடி நடந்தார். நாங்கள் வீட்டை விட்டு வெளியேறியபோது பக்கத்து வீடுகளிலிருந்த பெண்களும் சிறுவர்- சிறுமிகளும் கூட்டமாக வந்து கேட்டிற்கருகில் நின்றிருந்தார்கள்.

மருத்துவமனைக்கு ஒரு மைல் தூரம் இருந்தது. நடந்து செல்லும்போது என் தாய் சோர்வு காரணமாக மது அருந்திய பெண்ணைப் போல இப்படியும் அப்படியுமாக ஆடினார். நான் அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டேன். உச்சி வெயில் எங்களை மேலும் கஷ்டப்படுத்தியது. கடந்து சென்ற ஒவ்வொருவரும் என் தாய் மது அருந்தியிருப்பதாகவே எண்ணினார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு கனவில் வரும் மாய உருவங்களைப் போலவே எனக்கு தோன்றினார்கள். எதுவும் பேசவில்லையென்றாலும் நாங்கள் எங்கு போகிறோம் என்ற விஷயம் என் தாய்க்கு நன்கு தெரிந்திருந்தது. நான் அவருக்கு ஆறுதல் சொல்ல முயன்றேன். என் தாய் வெறுமனே புன்னகைத்தார். அவ்வளவுதான்.

மருத்துவமனையை அடைந்தபோது இளைஞரான ஒரு டாக்டர் என் தாயைச் சோதித்துப் பார்த்தார். வயதான டாக்டரின் குறிப்பைப் படித்து விட்டு மிகுந்த கனிவுடன் அவர் சொன்னார்: ‘சரி... திருமதி. சாப்ளின்... இப்படி வாங்க.’

என் தாய் அவர் சொன்னபடி நடந்தார். நர்ஸ்மார்கள் வந்து அழைத்துக் கொண்டு சென்றபோது திடீரென்று திரும்பிய என் தாய் என்னைக் கவலையுடன் பார்த்தார்.

‘நாளைக்கு பார்க்கிறேன்’- சந்தோஷத்தை வரவழைத்துக் கொண்டு நான் சொன்னேன்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version