Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

நான் நடிகன் ஆன கதை - Page 24

naan nadigan aana kathai

அவ்வப்போது திரும்பிப் பார்த்துக் கொண்டே என் தாய் அவர்களுடன் சென்றார். ‘மகனே, இனிமேல் உன் நிலைமை என்ன?’- டாக்டர் என்னிடம் கேட்டார்.

அனாதை இல்லத்தில் தங்குவதில் விருப்பமில்லாததால் நான் சொன்னேன்: ‘நான் என் பாட்டியுடன் போய் இருக்கப் போகிறேன்.’

மீண்டும் வீட்டை நோக்கி நடந்து வந்தபோது நான் முற்றிலும் உணர்ச்சியற்றுப் போயிருந்தேன். இருட்டறைக்குள் எதுவும் சாப்பிடாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருப்பதை விட என் தாய் மருத்துவமனையில் இருப்பதே நல்லது என்று நினைத்து என்னை நானே தேற்றிக் கொண்டேன். ஆனால், என்னைத் திரும்ப பார்த்தவாறு நடந்து மறைந்த என் தாயின் உருவம் என்னுடைய மனதை விட்டு மறையவே இல்லை. இதயத்தை நெகிழச் செய்வதாக இருந்தது அந்தக் காட்சி. என் தாயுடன் வாழ்ந்த நிமிடங்களைப் பற்றி நான் நினைத்துப் பார்த்தேன். என் தாயின் பாசம், தளர்ந்து போன உருவம், புன்னகை, வெளியே போய் விட்டு வரும்போது கையிலிருக்கும் பையில் எனக்கும் சிட்னிக்கும் ஏதாவது பலகாரங்கள் கொண்டு வருவது... இப்படி ஒவ்வொன்றையும் நான் நினைத்துப் பார்த்தேன். இன்று காலையில் கூட நான் என் தாயின் மடியில் அமர்ந்து கொண்டு தேம்பித் தேம்பி அழுதபோது அவர் எனக்கு ஒரு மிட்டாய் தருவதாகக் கூறினார்.

நேராக வீட்டிற்குச் செல்ல என்னால் முடியவில்லை. நேரம் இருட்டும் வரை நான் கடை வீதியில் அலைந்து திரிந்து கொண்டிருந்தேன். திரும்ப வீட்டிற்கு வந்தபோது பயங்கரமான ஒரு வெறுமையை நான் உணர்ந்தேன்.

அங்கு நாற்காலியில் அழுக்குத் துணிகள் ஊறப் போட்ட பாத்திரம் வைக்கப்பட்டிருந்தது. என்னுடைய இரண்டு சட்டைகளும் ஒரு பாவாடையும் அதில் இருந்தன. எனக்கு நல்ல பசி எடுத்தது. நான் எல்லா இடங்களிலும் சோதித்துப் பார்த்தேன் சாப்பிடுவது மாதிரி அங்கு எதுவும் கண்ணில் படவில்லை. பாதி தேநீர் தூளைக் கொண்ட ஒரு பாக்கெட் மட்டும் கையில் கிடைத்தது. திண்ணையில் என் தாயின் பர்ஸ் இருந்தது. நான் அதைத் திறந்து பார்த்தேன். மூன்று அரை பென்களும் பயணச் சீட்டுகள் சிலவும் அதில் இருந்தன. மேஜையின் மூலையில் என் தாய் தருவதாகச் சொன்ன மிட்டாய் கிடப்பதை நான் பார்த்தேன். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை.

கவலையிலேயே நான் தளர்ந்து போய் உறங்கிவிட்டேன். காலையில் மீண்டும் பயங்கரமான ஒரு வெறுமை உண்டானது. சிறிது நேரம் கழித்து வீட்டுச் சொந்தக்காரி மேலே வந்தாள். அந்த அறையை வேறு யாருக்காவது கொடுப்பது வரையில் அங்கேயே நான் இருக்கலாமென்றும் சாப்பிடுவதற்கு ஏதாவது வேண்டுமென்றால் கேட்க சிறிதும் தயங்க வேண்டாமென்றும் அவள் என்னிடம் சொன்னாள். அதற்கு நான் நன்றி சொன்னேன். சிட்னி திரும்பி வந்து விட்டால் எல்லா கடன்களையும் அடைத்து விடலாம் என்று நான் சொன்னேன். சாப்பிடுவதற்கு எதையாவது கேட்டு வாங்க எனக்கு வெட்கமாக இருந்தது.

சொன்னது மாதிரி நான் மறுநாள் என் தாயைப் பார்க்க போகவில்லை. என்னால் போக முடியவில்லை. அது எங்களை மீண்டும் கவலைக்குள்ளாக்கும். ஆனால், வீட்டுச் சொந்தக்காரி டாக்டரைப் போய் பார்த்திருக்கிறாள். என் தாயை கெய்ன்ஹில் மனநல மருத்துவ மனைக்கு மாற்றி விட்டிருக்கிறார்கள் என்பதை அவள் மூலம் நான் தெரிந்து கொண்டேன். கவலை தரக் கூடிய அந்தத் தகவல் எனக்கு சற்று ஆறதலைத் தந்தது. காரணம்- என் தாயைப் பார்க்க போகவில்லையே என்ற குற்ற உணர்வு என் மனதில் இருந்தது. கெய்ன்ஹில் இங்கிருந்து இருபது மைல் தூரத்தில் இருந்ததால், அங்கு போவது என்பது சாதாரண விஷயமில்லையே! சிட்னி வந்த பிறகு, நாங்கள் சேர்ந்து போய்க் கொள்ள வேண்டியதுதான். முதல் சில நாட்கள் நான் யாரையும் பார்க்காமலே இருந்தேன்.

அதிகாலை நேரத்தில் நான் வீட்டை விட்டு வெளியேறுவேன். பகல் முழுவதும் வெளியிலேயே சுற்றிக் கொண்டிருப்பேன். எல்லா நாட்களிலும் ஏதாவது சாப்பிடுவதற்குக் கிடைக்கிற மாதிரியான வழிகளை நான் எப்படியோ உண்டாக்கிக் கொள்வேன். ஒரு நேரம் உணவு சாப்பிடாமல் இருப்பதென்பது அப்படியொன்றும் கஷ்டமான விஷயமாக இல்லை. ஒரு நாள் காலையில் நான் மெதுவாக வீட்டை விட்டு வெளியேறிச் செல்வதை வீட்டுச் சொந்தக்காரி பார்த்தாள். காலை உணவு சாப்பிட்டேனா என்று அவள் கேட்டதற்கு நான் தலையை ஆட்டினேன். ‘அப்படின்னா வா...’ என்று அவள் வழக்கமான தன்னுடைய மிடுக்கான குரலில் சொன்னாள்.

மக்கார்த்தி குடும்பத்திற்கு நான் போகவேயில்லை. என் தாயைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரிய வேண்டாம். யார் கையிலும் பிடிபடாத ஒருவனைப் போல நான் எல்லோரிடமிருந்தும் விலகி ஓடிக் கொண்டிருந்தேன்.

என் தாய் மருத்துவமனைக்குப் போய் ஒரு வாரம் முடிந்து விட்டது.

நிரந்தரமற்ற அந்த வாழ்க்கையுடன் என்னை நான் பழக்கப்படுத்திக் கொண்டேன். நான் அதை விரும்பவும் இல்லை, வெறுக்கவும் இல்லை. வீட்டுச் சொந்தக்காரிதான் எனக்கு ஒரு முக்கிய பிரச்னையாக இருந்தாள். சிட்னி சீக்கிரமே திரும்பி வரவில்லையென்றால், அவள் அதிகாரிகளிடம் என்னைப் பற்றிக் கூறுவாள். என்னைத் திரும்பவும் ஹான்வெல்லிற்கு அனுப்புவார்கள். அதனால் நான் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். சொல்லப் போனால்-- தூங்குவதைக கூட நான் வெளியே வைத்துக் கொண்டேன்.

கென்னிங்டன் சாலைக்குப் பின்னால் ஒரு ஷெட்டில் விறகு வெட்டக் கூடிய சில பணியாட்கள் இருந்தார்கள். நான் அவர்களுடன் நட்பு உண்டாக்கிக் கொண்டேன். இருட்டு நிறைந்த ஷெட்டில் அவர்கள் நாள் முழுவதும் விறகை வெட்டி, அதை அரை பெனி விலை வரக் வடிய கட்டுகளாக கட்டுவார்கள். மிகவும் தாழ்ந்த குரலில்தான் அவர்கள் பேசுவார்கள். கதவிற்கு அருகில் சென்று நின்று கொண்டு அவர்கள் வேலை செய்வதை தினமும் நான் பார்த்துக் கொண்டிருப்பேன். பெரிய ஒரு மரத்துண்டை எடுத்து ஒரு அங்குலம் அகலத்தில் அவர்கள் பலகையாக மாற்றுவார்கள். மீண்டும் அதைப் பிளந்து விறகு எரிக்க பயன்படும் துண்டுகளாக ஆக்குவார்கள். அந்த வேலை எனக்கு ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாக இருந்தது. சிறிதும் தாமதிக்காமல் நான் அவர்களுக்கு உதவ ஆரம்பித்தேன். வெள்ளி, சனிக் கிழமைகளில் அவர்கள் விறகு விற்பனை செய்வார்கள். விற்பனை வேலை எனக்கு அந்த அளவிற்கு சுவாரசியமான ஒன்றாக தோன்றவில்லை.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version