Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

நான் நடிகன் ஆன கதை - Page 29

naan nadigan aana kathai

ரெயில்வே ஸ்டேஷனில் வேகமாக அடித்துக் கொண்டிருந்த இதயத்துடன் என் தாயை எதிர்பார்த்து நாங்கள் நீண்ட நேரம் நின்றிருந்தோம். கடைசியில் வண்டி ஸ்டேஷனுக்கு வந்தது. இறங்கி வரும் ஒவ்வொரு பயணியையும் நாங்கள் கூர்ந்து பார்த்தோம். அதோ! சிரித்துக் கொண்டே என் தாய் எங்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அன்புடன் அவர் எங்களைப் பார்த்து தன் கைகளை ஆட்டினார்.

வழியில் நாங்கள் தேவையானது, தேவையற்றது என்று நூற்றுக் கணக்கான விஷயங்களைப் பேசினோம். மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்த அறையை மகிழ்ச்சியுடன் பெருமையுடன் நாங்கள் என் தாய்க்குக் காட்டினோம். அவர் வயதில் சற்று கூடிவிட்டதைப் போல காணப்பட்டார். உடல் சற்று தடித்து விட்டிருந்தது. நல்ல ஆடைகளை அணியச் செய்து, அழகான தோற்றத்துடன் என் தாயை நாடகக் கம்பெனிக்காரர்களுக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்த வேண்டும் என்று நான் விரும்பினேன். என் தாயிடம் நான் அதைக் கூறவும் செய்தேன். இப்போதும் தான் உயிருடன் இருப்பது குறித்து தனக்கு உண்மையிலேயே சந்தோஷம்தான் என்று அப்போது என் தாய் சொன்னார்.

நாங்கள் நாடகக் குழுவினருடன் இருக்கும்போது, வேண்டிய பொருட்களை வாங்கச் செல்வது, உணவு தயாரிப்பது எல்லாமே என் தாய்தான். ஒரு மாதம் கடந்ததும், லண்டன் நகரத்திலேயே எங்கேயாவது குடியிருப்பதுதான் நல்லது என்று என் தாய் சொன்னார். அதனால் செஸ்ட்டர் தெருவில் ஒரு பார்பர் ஷாப்பிற்கு மேலேயிருந்த ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தோம். பத்து டாலர்களுக்கு தவணை முறையில் வீட்டு சாமான்களை வாங்கினோம். அறைகள் அப்படியொன்றும் பெரிதாக இல்லை. ஆனால், என் தாயின் மந்திரக் கை அந்த வீட்டை மிகவும் அழகானதாக ஆக்கியது. நானும் சிட்னியும் வாரத்திற்கு சம்பாதித்த நான்கு டாலர் ஐந்து ஷில்லிங்கிலிருந்து ஒரு டாலர் ஐந்து ஷில்லிங்கை என் தாய்க்கு அனுப்பி விடுவோம்.

இரண்டாவது பயணத்திற்குப் பிறகு நானும் சிட்னியும் சில வாரங்கள் என் தாயுடன் செலவழித்தோம். அடுத்த பயணத்திற்குப் புறப்படும்போது எங்களை வழியனுப்பி வைக்க என் தாய் புகை வண்டி நிலையத்திற்கு வந்திருந்தார். வெளியே சந்தோஷம் இருப்பதைப் போல காட்டிக் கொண்டாலும், என் தாய்க்கு உள்ளே கவலை இருந்தது.

சிறிதும் தவறாமல் என் தாய் எங்களுக்கு கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார். அவருடைய கடிதத்திலிருந்துதான் நாங்கள் லூஸியின் மரணத்தைப் பற்றி தெரிந்து கொண்டோம். நாங்கள் முன்பு வசித்த லாம்பெத் அனாதை இல்லத்தில்தான் அவள் இறந்திருக்கிறாள். என் தந்தை மரணமடைந்ததற்குப் பிறகு நான்கு வருடங்கள் மட்டுமே அவள் உயிருடன் இருந்தாள். அனாதையாகிவிட்ட அவளுடைய மகன் நாங்கள் படித்த ஹான்வெல் பள்ளிக்கூடத்தில்தான் படித்தான். என் தாய் அவனைப் பார்ப்பதற்காக போயிருக்கிறார். பழைய விஷயங்கள் எதுவும் அவனுக்கு ஞாபகத்தில் இல்லை என்று என் தாய் எழுதியிருந்தார். நானும் சிட்னியும் அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்த காலத்தில் அவனுக்கு நான்கு வயது. அவனுக்கு தந்தை ஞாபகத்திலேயே இல்லை. இப்போது அவனுக்கு பத்து வயது ஆகிவிட்டது. என் தாய் அவனுக்கு பழங்களும் பலகாரங்களும் கொண்டு போய் கொடுத்திருக்கிறார். மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு கெய்ன் ஹில்லிற்குத் திரும்பவும் போவது வரையில் அவ்வப்போது என் தாய் அவனைப் போய் பார்த்துக் கொண்டுதானிருந்தார்.

என் தாய்க்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது தெரிந்து நாங்கள் உண்மையாகவே அதிர்ச்சியடைந்து விட்டோம். இதயத்தில் மிகப் பெரிய ஒரு அடி விழுந்ததைப் போல எனக்கு அது இருந்தது. அதைப் பற்றி அலுவலக ரீதியாக ஒரு கடிதம் மட்டும்தான் எங்களுக்குக் கிடைத்தது. தெளிவான விவரங்கள் எதுவுமே எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

என் தாய் தெருக்களில் அலைந்து திரிந்தார் என்று பிறகு யாரோ சொன்னார்கள். பாவம்... எல்லாம் என் தாயின் தலையெழுத்து என்று எடுத்துக் கொள்வதைத் தவிர, எங்களுக்கு வேறு வழியே இல்லாமற் போய் விட்டது.

அதற்குப் பிறகு எந்தச் சமயத்திலும் என் தாய்க்கு முழுமையான மன ஆரோக்கியம் திரும்ப கிடைக்கவேயில்லை. அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் படுக்க வைத்து எங்கள் கையில் பணம் இருக்கும் வரையில் அவருக்கு சிகிச்சை கிடைக்க நாங்கள் ஏற்பாடு செய்தோம். வருடக் கணக்கில் அவர் கெய்ன் ஹில்லில்தான் இருந்தார்.

வாழ்க்கையின் இறுதி நாட்களில் தெய்வம் என் தாய்க்கு கருணை காட்டியது. கடைசி ஏழு வருடங்களில் என் தாய் நிறைய வசதிகளை அனுபவித்தார். எல்லா வகைப்பட்ட சுக சவுகரியங்கள், வளர்ந்து பிரபலமான பிள்ளைகள் என்று எந்த நாளிலும் மனதில் கற்பனை பண்ணி பார்க்க முடியாத வாழ்க்கை என் தாய்க்குக் கிடைத்தது.

‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ நாடக பயணத்திலேயே இருந்ததன் காரணமாக வாரக் கணக்கில் சிட்னியும் நானும் என் தாயைப் பார்க்காமல் இருப்போம். இறுதியில் ஃப்ரோமான் கம்பெனியுடன் இருந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. அதற்குப் பிறகு தியேட்டர் ராயலின் உரிமையாளர் ஹாரியார்க் ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ நாடகத்தின் உரிமையை வாங்கியபோது, நாங்கள் அந்தக் கம்பெனிக்கு ஒத்துழைப்பு கொடுத்தோம். எனக்கு பில்லி என்ற பையன் வேடம்தான். சம்பளம் மிகவும் குறைவாக இருந்தது. வாரத்திற்கு முப்பத்தைந்து ஷில்லிங் கிடைத்தது. சிறிய சிறிய நகரங்களில் ஹோம்ஸ் நாடகங்களுடன் நாங்கள் மீண்டும் பயணித்தோம்.

அந்தச் சமயத்தில் எங்களுடைய நிலைமை அப்படியொன்றும் பெரிதாகக் கூறுமளவிற்கு இல்லை. அது மட்டுமல்ல- புகழ் பெற்ற ஒரு கம்பெனியில் வேலை செய்து விட்டு சிறிய ஒரு கம்பெனியில் வேலை செய்ய வேண்டி வந்தது எனக்கு மனதில் வருத்தத்தைக் கொடுத்தது. இதற்கிடையில் ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ நாடகத்தின் கதாசிரியரான வில்யம் கில்லட் ‘க்ளாரிஸ்’ என்ற ஒரு புதிய நாடகத்துடன் லண்டனுக்கு வந்தார். அவருடன் மேரி டோரோவும் இருந்தார். விமர்சகர்கள் அந்த நாடகத்தைக் கடுமையாக விமர்சித்தார்கள். அதைத் தொடர்ந்து அவர் ‘ஷெர்லாக் ஹோம்ஸின் கவலைப்படும் நிலை’ என்றொரு நாடகத்தை எழுதினார். அதில் மொத்தமே மூன்று கதாபாத்திரங்கள்தான். ஷெர்லாக் ஹோம்ஸ், உதவியாளரான பில்லி, பிறகு ஒரு பைத்தியம். அந்த நாடகத்தில் பில்லியின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க முடியுமா என்று கேட்டு ஒரு கடிதம் எனக்கு வந்தது. வில்யம் கில்லட்டின் மேனேஜர் பாஸ்டன்ஸ் அதை எழுதியிருந்தார். அந்த கடிதம் சொர்க்கத்திலிருந்து வந்திருப்பதைப் போல எனக்கு இருந்தது. நான் ஆர்வத்தாலும், சந்தோஷத்தாலும் பரவச நிலையில் இருந்தேன்.

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version