Lekha Books

A+ A A-

ஜல சமாதி - Page 3

Jala Samathi

முத்துவின் தலையின் பின் பாகத்தில் இருந்த பெரிய காயத்தைச் சுட்டிக் காட்டியவாறு சுற்றிலும் நின்று கொண்டிருந்தவர்கள் தங்களுக்குள் என்னவோ மெதுவான குரலில் பேசிக் கொண்டார்கள். காயத்தைச் சுற்றி ரத்தம் கட்டியிருந்தது.

ஆட்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வது அதிகமானவுடன், முத்துவின் மூத்த மகன் ஆறுமுகம் முன்னால் வந்து சொன்னான்:

“கிணத்துக்குள்ளே பெரிய கல் இருக்கு. பாருங்க.''

அவன் சொன்னது சரிதான். செடிகள் அடர்ந்திருந்த கிணற்றின் கற்சுவருக்குள் கூர்மையான ஒரு கல் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.

ஆறுமுகத்தின் முகமும் கல்லைப்போலவே இருந்தது. கவலை நிறைந்த கண்கள் வேறு எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. அவனுடைய மனதிற்குள் இருந்த குழப்பத்தை ஊர்க்காரர்கள் புரிந்து கொள்ள முடிந்தது. அந்தப் பெரிய குடும்பத்தின் சுமை முழுதும் இனிமேல் அவன் மீது தானே!

முத்துவின் உடலை கம்பெனியைச் சேர்ந்த ஆம்புலன்ஸில் ஏற்றியபோது உண்டான அழுகையை முனுசாமியால் அடக்க முடியவில்லை. அப்போது பின்னாலிருந்து அவனை யாரோ தொட்டார்கள்.

தொட்டது அய்யர்வாள்தான்.

“அழக்கூடாது.'' அய்யர்வாளின் குரல் மிகவும் சாந்தமாக இருந்தது. “அவன் எவ்வளவோ கொடுத்து வச்சவன்னுதான் சொல்லணும். இந்த மாதிரி ஒரு ஜலசமாதி கிடைக்குதுன்னா, அவாளோட குடும்பம் செய்திருக்குற புண்ணியம்னுதான்- இந்த ஊர் செய்திருக்குற புண்ணியம்னுதான் சொல்லணும்...''

எல்லாரும் மிகவும் அமைதியாக அய்யர்வாளின் வார்த்தை களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஒரு மாதத்திற்குள் அய்யர்வாளின் கையிலிருந்து வேலையில் சேருவதற்கான பேப்பரைக் கையில் வாங்கியபோது ஆறுமுகம் தரையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். கண்களில் அதே  உயிரற்ற வெளிப்பாடு அப்போதும் இருந்தது. அய்யர்வாளும் அவன் முகத்தைப் பார்க்கவேயில்லை. எதுவும் வாய்திறந்து கூறவும் இல்லை. வெள்ளியாலான வெற்றிலைப் பெட்டியைத் திறந்து வைத்துக் கொண்டு ஜன்னல் பக்கம் நடந்துபோய் நாக்கை நீட்டி எச்சிலைத் துப்பினார். வெளியேயிருந்த வெண்மணலில் ரத்த நிறத்தில் கறைகள் தெரிந்தன.

பேப்பரை இரு கண்களிலும் ஒற்றியவாறு வணக்கம் போட்டுவிட்டு உயிர்ப்பே இல்லாமல் ஆறுமுகம் திரும்பி நடக்கும்போது, லேசாக என்னவோ முணுமுணுத்தவாறு அய்யர்வாள் மீண்டும் வெற்றிலை போடத் தொடங்கினார்.

தூரத்தில் எங்கோ ராக்கோழி கூவியது. கரும்புத் தோட்டங்களின் மறைவிலிருந்து நரியொன்று குறுக்கே ஓடி வேகமாக மறைந்து போனதைப் பார்த்து முனுசாமிக்கு நடுக்கம் உண்டானது. ஒரு நிமிடம் அவன் அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டான். கால்கள் அசையவில்லை. இருட்டும் பனியும் ஒன்று சேர்ந்த ஏதோவொன்றுடன் கண்கள் இறுக ஒட்டிக் கொண்டதைப்போல் அவன் உணர்ந்தான்.

பின்னால் மிகவும் அருகில் சருகுகள் நொறுங்கும் சத்தம் கேட்டது.

நடுக்கத்துடன் முனுசாமி கேட்டான்:

“யார் அங்கே?''

பதில் எதுவும் வரவில்லை. அதற்குப் பிறகு சத்தமும் நின்று விட்டிருந்தது. ஒரு விளக்கு எரிந்து அணைந்ததைப்போல் அப்போது இருந்தது.

யாரோ பின்னால் நின்று கொண்டிருக்கிறார்கள் என்று உறுதியாக முனுசாமிக்குத் தோன்றியது. வேகமாக கால்களை முன்னோக்கி வைத்தபோது, முனுசாமி மேல்மூச்சு கீழ் மூச்சு விட்டான். தன்னுடைய மார்பிற்குள் என்னவோ குடைவதைப் போல் அவன் உணர்ந்தான். இனியும் பாதி தூரம் மீதமிருந்தது. கண்ணெட்டும் தூரம் வரை எந்த இடத்திலும் வெளிச்சமோ அசைவோ எதுவும் இல்லை. அலறி அழைத்தால்கூட, அதைக் கேட்பதற்கு அங்கு யாருமில்லை.

பின்னால் மீண்டும் அந்த அசையும் சத்தம் நன்கு கேட்டது. மிகவும் நெருக்கத்தில் பின்னால் சருகுகளின் சத்தம்...

முனுசாமி திடுக்கிட்டுத் திரும்புவதற்குள், பின்னால் அடி விழுந்து முடித்திருந்தது. முதலில் கழுத்தில்... பிறகு வலது தோளில்...

அவனுக்கு தலை சுற்றியது... கண்கள் மங்கலாயின. உரத்த குரலில் அழுதவாறு எங்கு போகிறோம் என்று தெரியாமலே அவன் ஓடினான். பின்னால் காலடி ஓசை மிகவும் அருகில் கேட்டது. தன்னை வந்து மோதிக் கொண்டிருந்த காற்றுக்கு எதிராக கைகளை வீசியவாறு வேகமாக நடந்தபோது, உருளைக் கற்களில் மிதித்து வழுக்கி அவன் கீழே விழுந்தான். அடுத்த நிமிடம் வேகமாக எழுந்து மீண்டும் ஓட ஆரம்பித்தான்.

சிறிது தூரத்திற்கு பின்னால் அதே காலடி ஓசை கேட்டுக் கொண்டேயிருந்தது. பிறகு சிறிது வெளிச்சம் தெரிந்த ஒரு திருப்பத்தில் அது திடீரென்று நின்றபோது, அவன் ஒரு வெளிச்சத்திற்கு முன்னால் விழுந்து கிடந்தான்.

பெரிய ஒரு சத்தத்துடன் அவனுக்கு எதிரே வந்து கொண்டிருந்த பைக் ப்ரேக் போட்டு நின்றது.

மறுநாள் நடுப்பகல் நேரத்தில் மரச் சட்டங்கள் போடப்பட்ட தன்னுடைய ஜன்னலை நோக்கி கண்களைத் திறந்தபோது முனுசாமிக்கு கழுத்து வலிப்பதைப்போல் இருந்தது. தோளின் பின் பகுதியில் பயங்கர வேதனை இருப்பதைப்போல் அவன் உணர்ந்தான்.

அவனுடைய இளைய மகள் காவேரி மிளகு போட்ட பால் கலக்காத தேநீருடன் அங்கு வந்தாள். அவளின் பெரிய கண்களில் பயமும் அதைவிட கவலையும் இருந்தன.

அவள் அவனைக் கட்டிலில் சாய்ந்து உட்கார வைத்தாள். பீங்கான் குவளையை உதட்டில் வைத்துப் பிடித்துக் கொண்டாள்.

“வலிக்குதாப்பா?'' அவளின் தொண்டை இடறியது.

முனுசாமியால் ஒரு வார்த்தைகூட பதில் பேச முடியவில்லை.

ஒரு சிறு டப்பாவிலிருந்து ஏதோ வழுவழுப்பாகக் காட்சியளித்த தைலத்தை எடுத்து அவள், அவனுடைய கழுத்திலும் தோளிலும் மெதுவாகத் தடவ ஆரம்பித்தாள்.

வலி இருந்தாலும் மகளின் மென்மையான விரல்கள் தடவிக் கொடுக்கும்போது அவனுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. அவன் மெதுவாக தன் கண்களை மூடினான்.

“வலிக்குதாப்பா?'' காவேரி மீண்டும் கேட்டாள்.

“இல்லம்மா. இருந்தாலும் கொஞ்சம் மெதுவா...''

தன்னுடைய இடது கையால் தந்தையின் முடிகளை விரல்களால் கோதி விட்டாள் காவேரி.

“அப்பா... இனிமேல் நீங்க வேலைக்குப் போக வேண்டாம்!''

தான் இனிமேல் வேலைக்குப் போகவேண்டாம் என்று அவள் கூறுகிறாள். அதைக்கேட்டு முனுசாமி அதிர்ச்சியடைந்தான்.

“ஏம்மா?''

“வேண்டாம். போனா அவ்வளவுதான்!''

“அப்புறம் எதை வச்சு சாப்பிடுவா அவ?''

உரத்த குரலில் ஒரு சத்தம் கேட்டது. முனுசாமி முகத்தைத் திருப்பியபோது, கதவுக்குப் பக்கத்தில் இருளடைந்த முகத்துடன் அவனுடைய மனைவி நின்றிருந்தாள்.

அந்தக் குரலில் சிறிதுகூட கனிவு என்பதே இல்லாமல் இருந் ததைப் பார்த்து மனதில் வருத்தப்பட ஆரம்பித்தான் முனுசாமி.

“வேலை முடிஞ்சு ஒழுங்கா வீட்டுக்கு வராம நிறைய தண்ணியைப் போட்டுட்டு எங்கேயாவது போயி சண்டை போட்டா, இந்த மாதிரிதான் நடக்கும்...''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

பூனை

பூனை

November 1, 2012

பார்

பார்

February 15, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel