Lekha Books

A+ A A-

ஜல சமாதி - Page 6

Jala Samathi

முனுசாமியின் மனதில் அப்போது முத்து மட்டுமே இருந்தான். முதலில் கரும்புத் தோட்டங்களில் முத்து கூலி வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனை முடி வெட்டச் செய்து, குளிப்பாட்டி, சுத்தமாக இருக்கச் செய்து, ஒரு நீல நிற ஆடையை அணியச் செய்து ஒருநாள் நிர்வாகி அய்யர்வாளுக்கு முன்னால் கொண்டு போய் தான் நிறுத்தியதை இப்போதுகூட அவன் நினைத்துப் பார்த்தான்.

என்ன காரணத்தாலோ அய்யர்வாள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்த நாள் அது. ஒரு வாரம் கழித்து வரும்படி அவர் சொன்னார். பிறகு சென்றபோது மேலிருந்து கீழ்வரை ஒருமுறை பார்த்துவிட்டு அங்கு சேர்ந்து கொள்ளும்படி அவர் சொன்னார். “ஒப்பந்தப் பத்திரம் எதுவும் கேட்காதே. தொடர்ந்து வேலை பார்த்தா, உரிய நேரம் வர்றப்போ செட்டியார்கிட்ட சொல்லி ஒரு ஒப்பந்தப் பத்திரம் வாங்கித் தர்றேன்'' என்றார் அவர்.

முத்து நல்ல பணிவு கொண்ட மனிதனாக இருந்தான். கண்டு கொண்டும் கேட்டுக் கொண்டும் அவன் இருந்தான். எல்லாரும் விரும்பக் கூடியவனாகவும் அவன் நாளடைவில் ஆகி விட்டான்.

அதனால் கடைசி நாட்களில் அவனிடம் திடீரென்று உண்டான மாற்றத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. சிறு நிழல் களின் அசைவைக்கூட பார்த்து பயப்பட ஆரம்பித்த முத்து, எல்லாரிடமிருந்தும் விலகி நிற்க முயன்ற விஷயம் சிறிதும் எதிர்பாராமல் நடந்தது. முகத்தை மூடிக்கொண்டு அவன் தன் வேலையில் ஈடுபட்டான். யாரிடமும் அதிகமாக அவன் எதுவும் பேசுவதில்லை. எப்போதும் அவன் கண்களில் ஒரு உயிரோட்ட மில்லாத பார்வை இருந்து கொண்டேயிருந்தது. ஒரு சிறு சத்தம் கேட்டால்கூட போதும், அவன் நடுங்கிப்போய் விடுவான்.

எல்லா இறுக்கங்களையும் இறக்கி வைப்பதற்கு முத்துவுக்கு இரண்டே இரண்டு இடங்கள்தான் இருந்தன என்பதை முனுசாமி நினைத்துப் பார்த்தான். பத்து மைல் தூரத்தில் மரங்கள் காடென வளர்ந்திருந்த ஒரு இடத்தில் இருந்த முருகன் கோவில். அதை விட்டால் முனுசாமி... அவனைவிட முத்து ஆறேழு மாதங்கள் வயதில் இளையவன் என்றாலும், முனுசாமி அவனுக்கு எப்போதும் மணி அண்ணன்தான்.

ஒருநாள் காலையில் பார்த்தபோது முத்துவின் முகம் மிகவும் வெளிறிப்போய் காணப்பட்டது. தூக்கம் இல்லாத கண்கள் கறுத்து வீங்கிப் போய் காணப்பட்டன.

முனுசாமி ஏதோ கேட்கிற மாதிரி பார்த்தபோது, முத்து சொன்னான்:

“படுத்தாச்சுன்னா தூக்கமே வராது மணி அண்ணே! தூங்கியாச்சுன்னா ஒரே கெட்ட கெட்ட கனவுதான்...''

கனவுகளில் ஒருவன் தன்னை மட்டுமே பார்ப்பது என்பது ஒரு மிகப்பெரிய சாபம் என்று முத்து சொன்னான். தூங்கும்போது காணும் கெட்ட கனவுகளில் கொம்பும் வாலும் நீட்டிய பற்களுமாக முத்து என்ற முத்துக்கருப்பனின் பலவிதப்பட்ட தோற்றங்கள்... கனவுகளில்தான் என்றாலும்கூட தனக்கு கொம்பும் வாலும் முளைப்பது என்ற விஷயத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை.

அத்துடன் கோவில்களைத் தேடிச் செல்லும் முத்துவின் பயணங்கள் நீள ஆரம்பித்தன. பலரும் சொல்லி கேள்விப்பட் டிருக்கும் வெளியூர்களிலிருக்கும் பல்வேறு கோவில்கள்... அலைச்சலும் சிரமங்களும் நிறைந்த பயணங்கள்... நாளைச் சொல்லி வேண்டிக் கொள்ளும் நேர்த்திக் கடன்கள்... மாதச் சம்பளத்தில் முக்கால் பகுதியை கோவில்களுக்குக் கொண்டு போய் செல வழித்தால் வீட்டுச் செலவு எப்படி நடக்கும் என்று அவனுடைய மனைவி முனுசாமியிடம் குறைபட்டுக்கொண்டாள். அதற்கு முனுசாமி பதிலெதுவும் கூறவில்லை. முத்துவிடம் அதைப் பற்றி அவன் எதுவும் கேட்கவுமில்லை. இதே மாதிரி கோவில்களையும் பிரதிஷ்டைகளையும் தேடிப்போக வேண்டிய ஒரு காலம் தனக்கும் வரும் என்று அவனுக்குள் யாரோ கூறிக் கொண்டேயிருந்தார்கள்.

ஆனால், இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் முத்துவின் நடத்தையில் மிகப்பெரிய மாற்றம் தெரிந்தது. முகத்தில் அந்த முரட்டுத்தனம் இல்லாமல் போனது. கேன்டீனின் வாசலில் புகையிலையை மென்றுகொண்டு நின்றிருக்கும்பொழுது அவன் சொன்னான்:

“இனி நான் கோவிலுக்குப் போக மாட்டேன், மணி அண்ணே!''

“ஏன்பா?''

“போதும்... எல்லாமே போதும்...'' முத்துவின் குரல் உணர்ச்சியற்று இருந்தது.

யாராலும் புரிந்துகொள்ள முடியாத, தொன்மையான ஒரு அமைதியில் அவனுடைய முகம் ஆழ்ந்து பிரகாசித்தது. எவ்வளவோ நாட்களுக்குப் பிறகு அந்தப் பழைய உற்சாகமான குரலில் பொழுது போக்காக பல விஷயங்களைச் சொல்லி முத்து வாய்விட்டு சிரித்தான்.

அன்று பகல் முழுவதும் முனுசாமி யாரிடமும் ஒரு வார்த்தைகூட பேசாமல் கட்டிலில் தூங்கிக்கொண்டும், கண் விழித்துக் கொண்டும் கிடந்தான். இடையில் எப்போதோ பகல் இருட்டாக ஆனதையும் மெதுவான காலடிச் சப்தங்களுடன் இரவு கடந்து வந்ததையும் அவன் பார்க்கவில்லை.

இரவில் அவன் தன் கண்களை இறுக மூடிக்கொண்டு சுவரை நோக்கி சாய்ந்து படுத்துக்கொண்டு, உணவு சாப்பிட வேண்டும் என்ற வற்புறுத்தலை அலட்சியம் செய்து விட்டான். காவேரியின் குரலில் கவலையும், கோபமும், குற்றம் சாட்டலும் இருப்பதை அவனால் உணரமுடிந்தது. எது வந்தாலும் சிறிதுகூட அசைவதாக இல்லை என்று மனதிற்குள் முடிவு செய்துவிட்டு அவன் கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தபோது, “அப்பா, உங்களுக்கு வேண்டாம்னா எங்களுக்கும் வேண்டாம்'' என்று காவேரி சொன்னதைத் தான் கேட்டதைப்போல் அவன் காட்டிக் கொள்ளவில்லை.

“இன்னைக்கு அப்பா, நான் உங்க அறையிலதான் தூங்குவேன்'' என்று காவேரி பிடிவாதமாகக் கூறுவது அவன் காதுகளில் விழுந்தது. அந்த விஷயத்தைப் பற்றி ஒன்று, இரண்டு என்று பேசி தாய்க்கும் மகளுக்குமிடையில் பெரிய சண்டை வந்துவிட்டது. கடைசியில் இரவு வெகு நேரம் ஆனபிறகு, தன்னுடைய கட்டிலுக் குக் கீழே தாயும் மகளும்  பாய் விரித்துப் படுத்திருப்பதை அவன் பார்த்தான். படுத்த சிறிது நேரத்திலேயே அவனுடைய மனைவி குறட்டை விடுவதையும், காவேரி இடைவெளி விட்டு பெருமூச்சு கள் விட்டதையும் அவன் கேட்டான்.

அறைக்குள் ஆக்கிரமித்திருந்த மங்கலான இருட்டை வெறித்துப் பார்த்தவாறு படுத்திருந்தபோது, ஏதோ ஒரு வினோதமான நிரந்தரத்தை நோக்கி தான் பயணம் செய்து கொண்டிருப்பதைப் போல் முனுசாமி உணர்ந்தான்.

இறுதி நாட்களில் முத்துவை மிகவும் அலைக்கழித்துக் கொண்டி ருந்தது- ஒரு சந்நியாசி கூறிய சில வார்த்தைகள்தான் என்பதை அவன் நினைத்துப் பார்த்தான். காட்டுக்குள் ஆள் நடமாட்ட மில்லாத கோவிலில் கடவுளைத் தொழுது கொண்டிருக்கும் நூறு வயது மதிக்கக் கூடிய ஒரு சந்நியாசி... "இன்னொரு மனிதனின் பாவச் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பது என்பது, தானே பாவம் செய்ததைப்போல துன்பம் தரக்கூடிய ஒன்று' என்று சுவாமிஜி கூறினார்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel