Lekha Books

A+ A A-

ஜல சமாதி - Page 4

Jala Samathi

தனக்குள் ஏதோ பிடித்து இறுக்குவதைப்போல் முனுசாமி உணர்ந்தான். வேலை முடிந்து எங்கோ போய் "தண்ணி” அடித்துவிட்டு அவன் சண்டை போட்டுவிட்டு வருகிறானாம்! சைக்கிளில் கேடு உண்டாகி விட்டதால், நள்ளிரவு வேளையில் இவ்வளவு தூரம் நான் மட்டும் தனியே நடந்து வந்தேன் என்று கூறினால் அவள் அதை நம்பத் தயாராக இல்லை. அவனுடைய ஆண் பிள்ளைகளும் அதை நம்ப மறுக்கிறார்கள்.

ஒரே ஒருத்தி மட்டுமே அவன் கூறுவதை நம்புகிறாள். அவள்- இந்த காவேரிதான்.

எல்லாவற்றையும் புரிந்து கொண்ட மனநிலையுடன், ஒரு அன்னையின் பாசத்துடன், காவேரி அப்போதும் தைலத்தைத் தேய்த்து விட்டு மெதுவாகத் தடவிக் கொண்டிருந்தாள். தன் தாய் கூறுவதைச் சிறிதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறுவது மாதிரி அவள் அவனுடைய முகத்தைப் பார்த்து கண்களால் ஜாடை செய்தாள்.

சிறிது நேரம் கழித்து காவேரி டம்ளரை எடுத்துக்கொண்டு போகும்போது முனுசாமி மெதுவான குரலில் கேட்டான்.

“உன் அண்ணன் எங்கே?''

காவேரி தன் தந்தையின் முகத்தையே வெறித்துப் பார்த்தாள்.

“எனக்கு தெரியாதுப்பா. ஏதோ கோவில்ல எங்கேயோ வேலை. நேத்து சாயங்காலத்துக்குப் பிறகு நான் அண்ணனைப் பார்க்கவே இல்ல.''

அதைக் கேட்டு தனக்குள் என்னவோ முனகினான் முனுசாமி. கோவில்களுக்குத் திருவிழாவிற்காகப் போகும்போது அவனுடைய நண்பனாக இருப்பவன் முத்துவின் மகன் ஆறுமுகம்தான். எல்லாவித கெட்ட பழக்கங்களையும் அந்தத் தறுதலைப் பையன் அவனுக்குக் கற்றுக் கொடுத்து விடுவான்.

அதே நிலையிலேயே முனுசாமி படுத்திருந்தான். ஐந்து நாட்கள் ஆன பிறகும் கழுத்தில் இருந்த வலி சிறிதும் குறையாமல் இருந்த நிலையில், ஒரு மாலை நேரத்தில் உடலில் வெப்பம் இருப்பதைப் போல் காவேரி உணர்ந்தாள். அன்று இரவு முனுசாமிக்கு பலமாக காய்ச்சல் அடித்தது.

மறுநாள் டாக்டர் வந்து பார்த்தார். கம்பெனியில் பணி செய்யும் தொழிலாளிகளைப் பார்ப்பதற்கு சிறிதும் விருப்பமில்லாத அந்த பெரிய பரம்பரையைச் சேர்ந்த டாக்டர் முதலில் தயங்கினாலும் பிறகு காவேரியின் கண்ணீரைப் பார்த்து மனம் இரங்கிவிட்டார். கம்பெனியில் இளைஞரான அந்த டாக்டருக்கு தூசு படிந்த உடலைத் தொடுவதென்றால் கடுமையான வெறுப்பு இருந்தது. அவர் நாடியைப் பிடித்துப் பார்த்தார். கண்களையும் வாயையும் பார்த்தார். தலையை இப்படியும் அப்படியுமாக அசைத்துப் பார்த் தார். காய்ச்சலுக்கு உடல் வேதனையைவிட மனதில் இருக்கும் பயம்தான் காரணம் என்றார் அவர். துளசி இலையைப் பிழிந்து சாறைக் கண்களில் விழும்படி செய்தார். ஐந்து நாட்களுக்கான கஷாயத்தைக் குறித்துக் கொடுத்தார். மூன்று நாட்களுக்கு தேவைப்படும் மருந்தைப் பொட்டலமாகத் தந்தார்.

“கவலைப்படாதே. எல்லாம் சரியாகும்.'' டாக்டர் நெஞ்சைத் தொட்டவாறு சொன்னார்.

எதுவும் பதில் சொல்லாமல் ஜன்னல் வழியாகத் தெரிந்த நிலப்பகுதியைப் பார்த்தவாறு படுத்திருந்தான் முனுசாமி. தூரத்தில் வானத்தின் விளிம்பு வரை தரிசாகக் கிடக்கும் சிவந்த மண்... கரும்பனைகளுக்கு மத்தியில் ஆங்காங்கே இருண்ட புற்றுகளைப் போல புதர்கள்... இத்தனை நாட்களும் இரவிலும் பகலிலும் பிரம் மாண்டமான இயந்திரங்களின் சத்தத்துடன் இரண்டறக் கலந்து விட்டபிறகு அவன் பார்ப்பதற்கு மறந்துவிட்ட காட்சிகள் அவை.

அடுத்த வருடம் வேலையிலிருந்து விலகி வெளியே வந்த பிறகு இந்தக் காட்சிகளெல்லாம் தனக்கு சொந்தமாகின்றனவே என்பதை நினைத்தபோது அவனுடைய மனதில் ஒரு புத்துணர்ச்சி உண்டானது. வீட்டைச் சுற்றிலும் விசாலமான வெற்றிடம். கொத்தவோ கிளறவோ செய்யாத அந்த நிலத்தில் நீர் கொண்டு வருவதற்கான வழிவகை இருக்கிறது என்று வேளாண்மை அலுவலகத்திலிருந்து வந்த தாடிக்கார இளைஞன் சொன்னான். எவ்வளவு ஆழத்தில் வேண்டுமானாலும் போகக்கூடிய குழாய்களை இணைத்துத் தருவதாக அவன் சொன்னான். நல்ல மண் அது. தண்டும் தடியும் உள்ள இரண்டு ஆண் பிள்ளைகள் அங்கு இருக்கின்றார்களே! அவர்கள் சிறிது வியர்வை சிந்த தயாராக இருந்தால், இந்தப் பெண்மணம் போகாத மண்ணில் பொன்னே விளையச் செய்யலாம்.

ஆண் பிள்ளைகளைப் பற்றி முனுசாமி எதையும் சொல்ல வில்லை. அடுத்த வருடம் கம்பெனியிலிருந்து வெளியே வந்தபிறகு ஏதாவது செய்யலாம் என்று அவன் அந்த இளைஞனிடம் உறுதியான குரலில் சொன்னான்.

வாயை லேசாகத் திறந்து வைத்துக் கொண்டு, சாய்ந்து படுத்தவாறு தூங்கிக் கொண்டிருந்தான் முனுசாமி. வாயைச் சுற்றி சற்று பெரிய அளவில் இருந்த ஒரு ஈ வட்டமிட்டுப் பறந்து கொண்டிருந்தது. வெளியே உச்சிப் பொழுது வெயில் பிளந்து கட்டிக் கொண்டிருந்தது. தரிசு நிலத்தின் வழியாக ஒரு மென்மை யான காற்று வீசிக் கொண்டிருந்தது.

திடீரென்று ஏதோ ஒரு சத்தத்தைக்கேட்டு முனுசாமி திடுக்கிட்டுக் கண்விழித்தான். கட்டிலுக்கு அருகில் ஓரத்தில் யாரோ ஒருவரின் நிழல் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது.

தன்னுடைய உடலில் பலமான ஒரு நடுக்கம் உண்டாவதை முனுசாமியால் உணரமுடிந்தது. காட்சி தெளிவாகத் தெரியவில்லை. தலைக்குள் தாங்கமுடியாத அளவிற்கு ஒரு வெப்பம் இருப்பதை அவன் உணர்ந்தான்.

“அப்பா... நான்தான்...''

முனுசாமி மிகவும் சிரமப்பட்டுத்தான் கண்களையே திறந்தான்.

அவனுடைய மூத்த மகனின் குரல்தான் அது. கட்டிலின் தலைப்பகுதியை இறுகப் பற்றிக்கொண்டு அவன் தன் தந்தையின் வலி எடுத்துக்கொண்டிருந்த கழுத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“வலிக்குதாப்பா?''

மகன் கழுத்தில் விரலை அழுத்தி வைத்துக்கொண்டு பார்த்த போது உண்டான வேதனையால் இப்படியும் அப்படியுமாக நெளிந் தாலும், முனுசாமி அவனைத் தடுக்கவில்லை. அவன் அவனுடைய மூத்த மகன். அவனைத் தந்தை ஆக்கியவன். ஒருநாள் அவனுடைய சிதைக்கு கொள்ளி வைக்கப் போகின்றவன். அவனுடைய பல கெட்ட பழக்க வழக்கங்களுக்கும் மாற்றம் வந்தது அவன் பிறந்த பிறகுதான் என்று எல்லாரும் கூறினார்கள். குழந்தையாக இருந்தபோது, அவன் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தான். கறுத்து, சதைப்பிடிப்புடன், அடர்த்தியான புருவங்களுடன், பிரகாசமான கண்களுடன், எண்ணெய் பசை கொண்ட உடலுடன்...

ஊர் வழக்கத்தையெல்லாம் மறந்து அவனுடைய காதில் ஒரு நகரத்துப் பெயரைச் சொன்னான்: "ராஜா!” அதைக் கேட்டவர்கள் மூக்கில் விரல் வைத்துவிட்டார்கள் என்றாலும் தலையை உயர்த்தி சொன்னான்.

“இவன் என் ராசாமணி! எங்க குலத்துக்கு, எங்க ஊருக்கு ராசா...''

ராஜாவின் குரல் மிகவும் அருகில் கேட்டது:

“திரும்பவும் என்னைக்கு வேலைக்குப் போறீங்க, அப்பா?''

எதுவும் பதில் சொல்லாமல் ஜன்னலுக்கு அப்பால் தெரிந்த நிலப்பகுதியைப் பார்த்தவாறு படுத்திருந்தான் முனுசாமி. அவனுடைய மகன் பதிலுக்காக காத்து நின்றிருக்க வேண்டும்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel