Lekha Books

A+ A A-

என் பம்பாய் நண்பர்கள் - Page 5

En Bombai Nanpargal

“அய்யோ... வயிறு பசிக்குதே! அய்யோ... வயிறு பசிக்குதே!'' -என்ற பல்லவியைத் தொடர்ந்து திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டு கோழிக்கோடு கடைத் தெருவில் இருக்கும் ஒரு குருட்டு பிச்சைக்காரனின் உதவியாளனாக இருக்கும் சிறுவன், ஒரு நாள் பாத்திரத்திற்குள்ளிருந்து சாதத்தை வாரித் தின்று கொண்டிருந்தபோதே, "அய்யோ... வயிறு பசிக்குதே!' என்று, ஞாபகமே இல்லாமல் உரத்த குரலில் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்த காட்சி என்னுடைய நினைவில் வந்தது.

எங்களுடைய ட்ராம் இன்னும் வந்து சேரவில்லை. ட்ராம் விஷயம் பெரும்பாலான நேரங்களில் இப்படித்தான். வயதான கன்னிப் பெண்களுக்கு வரும் திருமண ஆலோசனையைப் போலத்தான் எப்போதும் அதன் வரவு இருக்கும். காத்திருந்து காத்திருந்து வெறுப்படையும்போது ஒரு பழைய பெரியவர் அப்படியே ஊர்ந்து ஊர்ந்து வருவார். அதைத் தொடர்ந்து பின்னால் ஒரு பதினைந்து ட்ராம்கள் அடுத்தடுத்து ஓசை எழுப்பியவாறு வருவதையும் பார்க்கலாம்.

நான் பொறுமையை இழந்து நான்கு பக்கங்களிலும் கண்களை ஓட்டினேன். ப்ளாட்ஃபாரத்தின் எதிர்பக்கத்தில், ஒரு விளக்குத் தூணின் மீது சாய்ந்து கொண்டு நின்றிருந்த மேடம் ப்ளவாட்ஸ்கியின் உருவம் என் கண்களில் பட்டது. அவள் தனக்கு உண்டான அவமானத்தை நினைத்து கவலையுடன் அசையாமல் முகத்தைக் குனிந்து கொண்டு நின்றிருந்தாள்.

பொழுது போக வேண்டும் என்பதற்காக, மீண்டும் அவளைத் தேடிப் போக நாங்கள் தீர்மானித்தோம்.

நான் நாணுவின் தொப்பியை வாங்கி தலையின் நெற்றிப் பகுதியில் சாய்த்து வைத்து, சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு, மேடத்தை நோக்கி புதிய ஒரு நடை நடந்தேன்.

ஒரு "ஜென்டில்மேன்' வருவதைப் பார்த்து அவள் விளக்குத் தூனை விட்டு நகர்ந்து முன்னோக்கி வந்தாள்.

“Give me two pice. I want to go to...''

அந்தப் பல்லவி முழுமையடைவதற்கு முன்பே விளக்கொளி யில் அவள் என்னுடைய முகத்தை அடையாளம் கண்டு கொண்டாள்.

"Ah! you again!''

-அவள் முகத்தைச் சுளித்துக் கொண்டு முதுகை நிமிர்த்தி, சாம்பல் நிற விழிகளைப் பிரகாசமாக்கி, நாயை எதிர்த்து அருகில் வரும் காட்டுப் பூனையைப் போல சீறினாள். தொடர்ந்து அந்த மூட்டையை இறுகப் பிடித்துக் கொண்டு திரும்பி ஓட ஆரம்பித்தாள்.

நானும் ஓடினேன். அவளுக்குப் பின்னால் அல்ல- வந்து நின்று கொண்டிருந்த ட்ராமை நோக்கி.

ட்ராமில் ஏறி நிம்மதியுடன் உட்கார்ந்தபோது, அந்தக் கிழட்டு பிச்சைக்காரியின் உருவம் மனதில் வலம் வந்தது. அந்தக் கிழவியிடம் நான் காட்டிய குறும்புத்தனங்களை நினைத்து எனக்கு வெட்கமாக இருந்தது. அவள்மீது பரிதாபமும் தோன்றியது.

அவள் தன் வாழ்க்கையின் ஒரே எதிரியாக என்னை நினைத்துவிட்டிருப்பாள். அவள் ஒரு குழந்தையை விட அப்பிராணி. “அரை அணா- ட்ராம்- போரிபந்தர்'' என்று வார்த்தைகளைக் கொண்ட கோஷத்தைத் தவிர, புதிய ஒரு பல்லவியை உருவாக்க அவளால் முடியவில்லை. அதற்கான தேவையும் உண்டாகவில்லை. அந்த அரையணா விண்ணப்பத் தைப் பற்றி இதுவரை யாரும் எந்தக் கேள்வியும் கேட்டிருக்க வாய்ப்பில்லை. அவளுடைய அமைதிக் கோட்டையை உடைத்தவர்கள் நாங்கள்தான்.

அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது.

மறுநாள் சாயங்காலம் நான் சார்னி சாலை சந்திப்பில் ட்ராமை விட்டு இறங்கினேன். மேடம் ப்ளவாட்ஸ்கி அங்கேதான் இருந்தாள்.

“மன்னிக்கணும்...'' -நான் அவளின் அருகில் சென்று ஒரு கால் ரூபாய் நாணயத்தை நீட்டினேன்- “போரிபந்தருக்குப் போ...''

அவள் என்னை அடையாளம் கண்டுகொண்டாள்.

“உன் கால் ரூபாயைச் சாக்கடையில் வீசி எறி. நான் போரிபந்தருக்கு டாக்ஸியில் போக வேண்டும் என்று நினைத்தாலும், அதற்கான பணம் என்னுடைய இந்த மூட்டையில் இருக்கு.''

அவள் பகை உணர்வுடனும் வெறுப்புடனும் என்னைப் பார்த்துக் கொண்டே திரும்பி நடந்து மறைந்தாள்.

அந்தப் பிச்சைக்காரியின் தன்மான உணர்வு என்னை சிந்திக்க வைத்துக்கொண்டே இருக்கிறது.

Page Divider

 

+Novels

சபதம்

சபதம்

March 10, 2012

வேதகிரி

வேதகிரி

March 13, 2012

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel