Lekha Books

A+ A A-

என் பம்பாய் நண்பர்கள் - Page 3

En Bombai Nanpargal

1940-ஆம் ஆண்டில் பம்பாயில் பெரிய அளவில் பொருளாதார வீழ்ச்சி உண்டானது. ஆனால், சுவாமியை அது எந்த வகையிலும் பாதித்ததாகத் தெரியவில்லை.

அந்த சுவாமியின் பெயரை நான் இங்கு கூறப்போவது இல்லை. நாம் அவரை "தச்சோளி சுவாமி” என்று அழைப்போம்.

அங்கு ஒரு குஜராத்தி, ஒரு புதிய இடத்தில் பெரிய ஒரு கட்டிடத்தைக் கட்டியிருந்தார். அந்த நிலத்தின் ஒரு மூலையில், தெருவுடன் ஒட்டியவாறு ஒரு பழைய சிதிலமடைந்த சிறிய கோவில் இருந்தது. சேட் அந்தக் கோவிலையும் புதுப்பித்து அமைத்தார். கற்சுவருக்குக் கீழே உள்பக்கமாகத் தள்ளி அரை நிலா வடிவத்தில், கிட்டத்தட்ட கால்நடைகள் நீர் பருகும் தொட்டியைப் போல இருந்த ஒரு சிறிய கோவில். கடவுளும் பூசாரியும் மட்டும் சிரமப்பட்டு இருப்பதற்கு இடமிருந்தது.

சேட் நம்முடைய சுவாமியை அந்த கோவிலின் முழு அதிகாரம் படைத்தவராகவும் பூசாரியாகவும் நியமித்தார்.

நிலைமை அப்படி இருக்கும்போது, எனக்கு ஒரு குஜராத்தியின் நிறுவனத்தில் ஒரு தட்டெழுத்து வேலைக்கு நேர்முகத் தேர்விற்கான தகவல் வந்தது. நான் குறிப்பிட்ட நாளன்று காலையில், புதிய சூட் அணிந்து, புதிய பூட்ஸின் கடியைத் தாங்க முடியாமல் நொண்டி நொண்டி, துறைமுகத் திற்குச் செல்லும் "எச்' ரூட் பேருந்தைப் பிடிப்பதற்காக வேகமாக நடந்து போய்க் கொண்டிருந்தேன். நான் நம்முடைய சுவாமி இருந்த கோவிலை நெருங்கினேன்.

சுவாமி உரத்த குரலில் கீர்த்தனம் பாடிக்கொண்டிருந்தார். நீளமான வெள்ளி நிறக் கோட்டும் காந்தி தொப்பியும் அணிந்தி ருந்த குஜராத்திகள் சிலர் கோவிலுக்கு முன்னால் தெருவில் கைகளைக் கூப்பியவாறு தியானத்தில் இருப்பதைப் போல நின்றிருந்தனர். பக்கத்தில் நெருங்க நெருங்க சுவாமியின் கீர்த்தனம் உரத்த குரலில் தெளிவாகக் கேட்க ஆரம்பித்தவுடன், நான் ஆச்சரியப்பட்டு அங்கேயே நின்றுவிட்டேன். சுவாமி கீர்த்தனம் பாடுகிறார்.

"தச்சோளி நல்ல செல்லக் குழந்தை உதயணன்

தச்சோளி நல்ல செல்லக் குழந்தை உதயணன்.”

ஒரு பழைய வடக்கன் பாட்டுப் புத்தகத்தை கடவுளுக்கு முன்பாக விரித்து வைத்துக்கொண்டு, உண்டியல் பெட்டிக்குள் வந்து விழும் நாணயங்களைக் கடைக்கண்களால் பார்த்தவாறு நம்முடைய சுவாமி பக்திப் பரவசத்துடன் உதயணன் பொன்னியத் தங்கக் களரியை நோக்கி போன கதையை நீட்டிப் பாடிக்கொண்டிருந்தார். நீங்கள் அந்தக் காட்சியைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். அந்த “மதராஸி கீர்த்தனம்'' புரியவில்லை யென்றாலும், பக்தி உணர்வு வெளிப்படும் அந்தப் பாடலின் இனிமையில் தங்களை மறந்து, லட்சாதிபதிகளான அந்த குஜராத்தி வியாபாரிகள் கண்களை மூடிக்கொண்டு, தொழுத வாறு தலைகுனிந்து நின்றிருந்தார்கள். அந்தக் காட்சியைப் பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் நான் அங்கேயே நின்றுவிட்டேன். தட்டெழுத்து வேலையும், "எச்” ரூட் பேருந்தும் கிடைக்காமல் போனால் போகட்டும் என்று மனதில் நினைத்து அங்கேயே நின்றுவிட்டேன்.

பக்தர்களைப் பார்ப்பதற்கு மத்தியில் அந்த தச்சோளி சுவாமி என்னுடைய முகத்தைப் பார்த்துவிட்டார். தொண்டையில் தவிடு சிக்கி விட்டதைப் போல சுவாமி சில ஜாலங்கள் செய்து கீர்த்தனத்தை நிறுத்திவிட்டு, தீபத்தை எரியவிட்டு, அடுத்த நிமிடம் பூஜைக்கான ஆடையை அணிந்து கொண்டு மிகவும் உரக்க ஒரு நீண்ட சங்கொலியை முழக்கினார்.

பிறகு நான் அங்கு நிற்கவில்லை.

அந்த தச்சோளி சுவாமி இப்போதும் உயிருடன் இருப்பார் என்றே நினைக்கிறேன்.

சிவாஜி பார்க்கில், இரவு நேரத்தில், நாங்கள் வழக்கமாக சந்திக்கக் கூடிய ஒரு பைத்தியம்தான் "டாக்டர் ஃபாஸ்ட்”.

இரவு வேளையில் சாப்பிட்டு முடித்து, சிவாஜி பார்க் கடற்கரைக்கு நாங்கள் நடக்கச் செல்லும்போது, மைதானத்தில் இருக்கும் ஒரு மரத்திற்குக் கீழே, ஒரு வினோதமான மொழியில் உரத்த குரலில் தனக்குத் தானே பேசிக் கொண்டும், அவ்வப் போது குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டும் இருக்கும் அந்த வயதான நிர்வாண மனிதனை என்னால் மறக்க முடியவில்லை. ஒவ்வொரு பைத்தியத்திற்கும் ஒவ்வொரு தனிகுணம்... தனித்துவம் என்றுதான் கூற வேண்டும்- இருக்கும். என்னைக் கவர்ந்தது அவனுடைய தனக்குத் தானே பேசிக்கொள்ளும் பழக்கமும், தேம்பி அழுவதும், நிர்வாணக் கோலமும் அல்ல. தனக்கு முன்னால் படுக்க வைத்து அவன் வணங்கிக் கொண்டிருந்த உருவம்தான் என் இதயத்தைத் தொட்டது.

ஈர்க்குச்சி, கிழிந்த துணி ஆகியவற்றைக் கொண்டு உண்டாக்கப்பட்ட ஒரு குழந்தையின் உருவத்தை முன்னால் படுக்க வைத்து, அதைப் பார்த்து அவன் சத்தம் போட்டு அழுவான். கலைத் தன்மையுடன் உண்டாக்கப்பட்ட அந்த உருவ பொம்மை ஒரு பைத்தியக்காரனால் செய்யப்பட்டது என்று யாராலும் நம்ப முடியாது.

அந்த "சிம்ப”லின் ரகசியம் என்ன? அவன் என்ன கூறுகிறான்? அவனைப் பைத்தியக்காரனாக மாற்றிய வாழ்க்கைச் சம்பவம் எது? யாருக்குத் தெரியும்? மனித வாழ்க்கையில் மறைந்து கிடக்கும் ரகசியங்கள் அப்படி எவ்வளவு இருக்கும்?

தன்னுடைய பயங்கரமான வாழ்க்கைக் கதையை நம்மிடம் கூறிக் கேட்கச் செய்ய அவனுடைய மூளை இனி எந்தச் சமயத்திலும் தயாராகப் போவதில்லை. மரணம், அவனுடைய வாழ்க்கைக்கும், வாழ்க்கையின் ரகசியத்திற்கும் இப்போது முழு ஓய்வை அளித்திருக்க வேண்டும்.

மேடம் ப்ளவாட்ஸ்கி

நான்கு வருடங்களுக்கு முன்புதான் நான் மேடம் ப்ளவாட்ஸ் கியை முதல் தடவையாகப் பார்த்தேன்.

நான் சார்னி சாலை சந்திப்பில் கிர்காமிற்குச் செல்வதற்காக ட்ராம் வண்டியை எதிர்பார்த்து நின்றிருந்தேன். அப்போது வயதான ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண், மெதுவாக என் அருகில் நடந்து வந்து ஒரு குழந்தையின் கள்ளங்கபடமற்ற ஆங்கிலத்தில் சொன்னாள்: “Give me two pice. I want to go to Bori Bunder, I have not only two pice with me'' (எனக்கு இரண்டு பைசாக்கள் தா. நான் போரிபந்தருக்குப் போக வேண்டும். இரண்டு பைசாக்கள்தான் என்னிடம் இருக்கின்றன.)

போரிபந்தருக்குச் செல்வதற்கான ட்ராம் டிக்கெட்டிற்கு ஒரு அணா இல்லாமல் கஷ்டப்படும் அந்தக் கிழவியை நான் கூர்ந்து பார்த்தேன். கணுக்கால் பகுதி வரை இருக்கும் தலையணை உறையைப் போன்ற தடிமனான நீல நிறக் கோடுகள் போட்ட ஆடையும், காலில் பழைய ஹைஹீல் ஷூக்களும் அணிந்து, வெள்ளை நிறத்தில் இருந்த ஒரு கிழவி. வெள்ளை நிறத் துணியால் கட்டப்பட்டிருந்த ஒரு பெரிய மூட்டையை அவள் தன் கையிடுக்குள் இறுகப் பிடித்திருந்தாள். வாயில் பற்கள் எதுவும் இல்லை. ஒரு கிழிந்த ரப்பர் பந்து நசுங்குவதைப் போல, பேசும்போது அந்தக் கிழவியின் கன்னங்களும் வாயும் அசைந்து கொண்டிருந்தன.

 

+Novels

சபதம்

சபதம்

March 10, 2012

வேதகிரி

வேதகிரி

March 13, 2012

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel