Lekha Books

A+ A A-

என் பம்பாய் நண்பர்கள் - Page 2

En Bombai Nanpargal

ரோமியோ காதல் உணர்வு பொங்க ஜுலியட்டின் கன்னங்களைத் தடவி, அவளுடைய கல் மாலையைத் திருகி, சுட்டு விரலால் அவளுடைய நிர்வாணமான வயிறை வெறுமனே குத்துவான். சில நேரங்களில் அவனுடைய பருமனான கைகள் மெதுவாக அவளுடைய பருத்த மார்பகங்களிலோ, கீழே மடிக்கு அருகிலேயோ எல்லையைக் கடக்கும்போது, அவள் அவனுடைய கையில் ஓங்கி ஒரு அடி அடிப்பாள். அவன் ஒரு உரத்த சிரிப்புடன் குறும்புத்தனமான குரலை வெளிப்படுத்துவான். காதலை வெளிப்படுத்தும் இடிச் சத்தத்தைப் போன்ற அந்த உரத்த சிரிப்பைக் கட்டாயம் கேட்க வேண்டும்.

அவன் சிகரெட் பெட்டியின் ஈயத் தாளைச் சுருட்டி எடுத்து, அவளுக்கு ஒரு புதிய காதணி செய்து, அவளுடைய காதுகளில் அணிவித்து, அதன் அழகைப் பார்த்து ஆச்சரியப்பட்டு வாயைத் திறந்து படுத்திருப்பான்.

அவன் அவளுடைய நிர்வாணமான வயிறைத் தன்னுடைய நாக்கை நீட்டித் தொட்டு, அவளுடைய கைகளின் விரல்களைக் கடித்து, அவளுடைய தலைமுடியைத் தன் கழுத்தில் சுற்றி, பிறகு எந்தவிதமான அசைவும் இல்லாமல் அவளுடைய நீல நிறக் கண்களைப் பெருமூச்சு விட்டவாறு பார்த்துக்கொண்டே ஷேக்ஸ்பியரின் நாயகனான சாட்சாத் ரோமியோவைப் போல,

“Alack, there lies more peril in thine eye

Than twenty of their Swords''

என்றோ, அவளுடைய காதல் உணர்வு வெளிப்படும் எதிர்வினையைப் பார்த்துக் கவலையுடன்,

“O wilt thou leave me so unsatisfied''

என்றோ, கூறுவதற்கு அவனுக்கு வார்த்தைகள் இல்லை- நாக்கு இல்லை.

ஆனால், சில வேளைகளில் காட்சி சற்று மாறும். அவர்கள் நாய்களைப் போல ஒருவர்மீது ஒருவர் விழுந்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். ரோமியோவின் காதல் நடவடிக்கைகள் அதிகமாகும்போது, ஜுலியட் அவனை கட்டுப்படுத்த வேண்டும் என்ற விஷயத்தை மனதில் வைத்துக்கொண்டு, அவனுடைய இடுப்பு எலும்பை அழுத்தி கிச்சுக்கிச்சு மூட்டுவாள். கண் பார்வை தெரியாத அவன் அடுத்த நிமிடம் நெளிந்து பரபரப்பு அடைந்து பின்னோக்கி குதிப்பான். அதைப் பார்த்து அவள் சுட்டுவிரலை அசைத்து குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பாள்.

அவன் அந்த மரத்தடியை விட்டு வேறு எங்கும் போவதில்லை. உணவைத் தேடி அவள் வெளியே போய்விட்டு, திரும்பி அவள் வருவது வரை அவன் அந்த மரத்தில் சாய்ந்து கவலையுடன் பேந்தப் பேந்த விழித்தவாறு நேரத்தைச் செலவிடுவான்.

அவர்கள் எப்படி வாழ்க்கையில் சந்தித்தார்கள்? பிச்சை எடுத்தாவது சொந்தத்தில் ஒரு வாழ்க்கை நடத்தக்கூடிய உடல் நலமும், சிறிது விருப்பமும் கொண்டிருக்கும் அந்த இளம் பெண், அந்தப் பார்வை தெரியாத மனிதனை எதற்காகத் தன் வாழ்க்கையின் நண்பனாக ஏற்றுக்கொண்டாள்? நான் அதைத் தெரிந்துகொள்ள விரும்பினேன். ஒரு நாள் நான் எங்களுடைய அலுவலகத்தின் காவலாளியாக இருந்த பட்டாணியை அருகில் அழைத்து மெதுவான குரலில் கேட்டேன். “லாலா, மரத்தடியில் இருக்கும் பிச்சைக்காரனும் பிச்சைக்காரியும் அங்கே வந்து எவ்வளவு காலம் ஆச்சு?''

“ஏன் ஸாப்? அந்தப் பன்றிகள் இங்கே வந்து தொந்தரவு தர்றாங்களா?'' -பட்டாணி தன் முறுக்கு மீசையை நீவியவாறு கேட்டான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. நான் சும்மா கேட்டேன். கொஞ்ச நாட்களாகவே அவர்களை நான் அங்கே பார்க்கிறேன்.''

“அவர்களை அங்கேயிருந்து விரட்டிவிடணுமா?''

“வேண்டாம்... வேண்டாம். அந்த அப்பிராணிகள் அங்கே சந்தோஷத்துடன் இருக்கட்டும். அவர்களைப் பற்றி ஏதாவது தெரியுமா லாலா?''

பட்டாணி என்னுடைய கேள்வியைப் புரிந்துகொள்ளாமல் இளித்தான்.

“அந்தப் பெண் அந்த குருடனின் மனைவியா?'' -நான் கேட்டேன்.

“மனைவி!'' -பட்டாணி குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். “போன வருடம் ஒரு குதிரை வண்டிக்கு முன்னால் விழுந்து, சாகும் நிலையில் இருந்த அந்தக் குருடனை அந்தப் பெண் பார்த்து, இரக்கம் கொண்டு அவனை அழைத்துக்கொண்டு வந்து அக்கறையுடன் கவனித்தாள். பிறகு அவர்கள் ஒருவரை யொருவர் விட்டுப் பிரியவில்லை''- பட்டாணி அந்த “ரொமான்ஸ்'' விஷயத்தை சுருக்கமாகச் சொன்னான்.

ஒரு நாள் நான் அலுவலகத்திற்குச் செல்லும்போது, அந்த ஜுலியட்டை வழியில் பார்த்தேன்.

“தாயே... அம்டீ பாத்'' என்று உரக்க கெஞ்சுகிற குரலில் நீட்டி முழக்கியவாறு, கட்டிடங்களின் மாடியில் இருந்து முந்தின நாள் இரவில் மீதமிருந்த உணவை வைத்துக்கொண்டு தன்னை யாராவது அழைக்கிறார்களா என்று கவனித்தவாறு, கையில் ஒரு பழைய பாத்திரத்துடன் அவள் நடந்து கொண்டிருந்தாள்.

ஆறு மாதங்கள் நான் அவர்களை அதே நிலையில் பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான் அந்த அலுவலகத்தின் வேலையை விட்டு விட்டேன். பிறகு, அவ்வப்போது அந்த வழியில் போகும்போது அவர்களை நான் அதே இடத்தில் பார்ப்பேன்.

நான்கு வருடங்கள் கடந்து, நான் மீண்டும் பம்பாய்க்குச் சென்றேன். நான் என்னுடைய பழைய அலுவலகத்திற்குச் சற்று போய்விட்டு வரலாம் என்று தீர்மானித்தேன்.

நான் அந்த ஓய்வு அறையில் இருந்து கொண்டு சாளரத்தின் வழியாக வெளியே பார்த்தேன்.

அந்தப் பூ மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. அந்தச் சிறிய மைதானம் இல்லாமல் போய் விட்டிருந்தது. அங்கு புதிய பிரம்மாண்டமான வெள்ளை மாளிகைகள் எழுந்திருந்தன.

ஆனால், அங்கு இமயமலையே உயர்ந்து நின்றிருந்தாலும், அந்த மைதானத்தையும் பூ மரத்தையும் காதல் சாகசத்தில் மூழ்கிவிட்டிருக்கும் ரோமியோவும் ஜுலியட்டும் சேர்ந்திருக்கும் அந்தப் பழைய காட்சியையும் என் மனதை விட்டு அகற்றவே முடியாது.

தச்சோளி சுவாமி

நான் வேலை தேடி சமூக சேவையுடனும் பகல் தூக்கத்துடனும் ஒரு நிச்சயமற்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த காலம். மலபார் ஹில்லுக்கு அருகில் இருக்கும் பாணம் கங்கா கோவில் பகுதியில் இருந்த ஒரு வீட்டில் நான் வசித்துக் கொண்டிருந்தேன். கோவிலுக்கு அருகில் இருக்கும் சத்திரங்களில் சாப்பாடு, குளத்தின் கரையில் தூக்கம் என்று வாழ்ந்து கொண்டிருந்த ஏராளமான மலையாள சுவாமிகள் பாண கங்காவைச் சுற்றி இருந்தார்கள். அவர்களில் ஒரு நண்பர் அவ்வப்போது தன் ஊருக்கு மணி ஆர்டர் எழுதிக் கொடுக்கும்படி கேட்டு என்னைத் தேடி வருவார்- முழங்கால் வரை இருக்கும் ஒரு வேட்டியைக் கட்டி, போர்வையைப் போர்த்தி, நெற்றியில் திருநீறும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும் அணிந்திருக்கும் ஒரு நடுத்தர வயது மனிதர்.

அந்த வகையில் சுவாமி என்னுடைய குறிப்பிடத்தக்க நண்பராக ஆனார். சுவாமிக்கு ஊரில் மனைவியும் ஆறு பிள்ளைகளும் இருந்தார்கள். மாதத்தில் குறைந்த பட்சம் அறுபது ரூபாய்களையாவது அவர் ஊருக்கு அனுப்பி வைப்பார்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel