Lekha Books

A+ A A-

என் பம்பாய் நண்பர்கள் - Page 4

En Bombai Nanpargal

எங்கோ பயணம் புறப்பட்டு ஏதோ ஏமாற்றத்தை அடைந்து நிற்பதைப்போல இருந்தது.

நான் பாக்கெட்டிற்குள் தேடிப் பார்த்தேன். அந்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணின் துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். பாக்கெட்டில் சில்லறைக் காசு எதுவும் இல்லை. “கரகர'' என்ற ஆரவார இரைச்சலுடன் என்னுடைய ட்ராமும் வந்து சேர்ந்தது. நான் எதுவும் கூறாமல் வேகமாக ட்ராமில் தாவி ஏறினேன்.

ட்ராம் ஓடிக்கொண்டிருக்கும்போது, அந்த வயதான கிழவியின் உருவம் என் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. அவளுடைய கையிடுக்கில் இருந்த பெரிய மூட்டையையும், பிய்ந்த ரப்பர் பந்தைப் போல இருந்த முகத்தையும் நினைத்துப் பார்த்தேன். கிளி பேசுவதைப் போன்ற அந்த மெல்லிய குரல் மிகவும் அருகில் கேட்பதைப் போல இருந்தது.

சென்ற முறை நான் பம்பாய்க்குப் போயிருந்த சமயத்தில், ஒரு மாலை நேரத்தில் ஒரு மலையாளி நண்பனும் நானும் கிர்காமிற்குச் செல்வதற்காக ட்ராமை எதிர்பார்த்து சார்னி சாலை சந்திப்பில் நின்றிருந்தோம். ட்ராம் வராமல் இருக்கவே, பொழுது போவதற்காக வேறு வழி எதுவும் தெரியாமல், வெறுப்படைந்து நாங்கள் ஒரு ஓரத்தில் நின்றிருந்தபோது, அதோ வந்து கொண்டிருக்கிறாள் நம்முடைய மேடம் ப்ளவாட்ஸ்கி.

“Give me two Pice. I want to go to Bori Bunder. I have got only two pice with me.''

நான் அவளை வியப்புடன் பாதத்திலிருந்து தலை வரை பார்த்தேன். மேடத்திடம் எந்தவொரு மாற்றமும் உண்டாகி யிருக்கவில்லை. அந்த தலையணை உறை சட்டை இருந்தது. ஹை ஹீல் ஷூக்களும் இருந்தன. அவருடைய தனித்துவத்தைக் காட்டும் முக்கிய அடையாளமான அந்த பெரிய மூட்டையும் இருந்தது.

என்னவொரு சோக வரலாறு! போரிபந்தருக்குச் செல்லும் ஒரு ட்ராம் டிக்கெட்டிற்கு ஒரு அணா தயார் பண்ண முடியாமல் நீண்ட நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. அவள் அந்த சார்னி சாலை சந்திப்பில் சுற்றிக்கொண்டு திரிகிறாள். இதுவரை அவளுக்கு போரிபந்தரை அடைய முடியவில்லை. பம்பாயில் இருக்கும் இருபத்து நான்கு லட்சம் மக்களில் ஒருவனுக்குக்கூட அவளுக்கு ஒரு அரை அணா தரக்கூடிய நல்ல மனம் இல்லை.

நான் சிரித்துவிட்டேன். நான்கு வருடங்களுக்கு முன்னால் அவளை அதே நிலையில், அதே இடத்தில் வைத்துப் பார்த்த கதையை நான் என் நண்பனிடம் சொன்னேன்.

“போரிபந்தருக்குப் போக வேண்டிய அவசியம் என்ன?'' -என் நண்பன் நாணு அவளிடம் திடீரென்று கேட்டான்.

அந்தக் கிழவி பேந்தப் பேந்த விழித்துக்கொண்டு நின்றிருந்தாள். அவளுக்குத் தெரியாது. அவள் அதைப் பற்றி சிறிதும் நினைக்கவில்லை. இதுவரை ஒரு ஆளும் அவளிடம் போரிபந்தருக்குப் போக வேண்டிய அவசியம் என்ன என்பதைப் பற்றி விசாரிக்க முயன்றிருக்க மாட்டார்கள்.

இப்போது இதோ குறும்புத்தனம் கொண்ட ஒருவன் அதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறான்.

அவளுடைய தர்மசங்கடமான நிலையைப் பார்த்து, பரிதாபப்படுவதைப் போல காட்டிக் கொண்டு நான் சொன்னேன். “மேடம், என் கையில் ஒரு கால் ரூபாய் நாணயம் இருக்கு. மூன்று அணாக்கள் தாங்க...''

“என் கையில் இரண்டு அணாக்கள்தான் இருக்கு'' -அவள் பாக்கெட்டிற்குள் கையை விட்டு ஞாபகம் இல்லாமல் கூறிவிட்டாள்.

“ங்ஹா... ங்ஹா... இரண்டு அணாக்கள் கையில் இருக்குல்ல? அப்படியென்றால் முன்பு சொன்னது பச்சைப் பொய்தானே?''

நாணு வாய்க்கு வந்தபடி அவளைத் திட்டினான்.

பாவம்! நிரந்தரமான உண்மையால், தன்னுடைய பிரியமான பல்லவியின் பற்கள் காணாமல் போனதை அவள் அறியவில்லை.

அடுத்த நிமிடம் அவளுடைய இயல்பு மாறியது. அவளுடைய மூட்டையைத் தட்டிப் பறிப்பதற்காக நேரம் பார்த்துக் கொண்டு நிற்கும் இரண்டு திருடர்கள் என்பதைப் போல எங்களையே வெறித்துப் பார்த்தாள். பிறகு மூட்டையை இறுகப் பிடித்துக்கொண்டு, கழுத்தைச் சாய்த்து, முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டு என்னவோ முணுமுணுத்தவாறு அவள் தெருவில் மறுபக்கத்திற்கு நண்டைப்போல நடந்து போனாள்.

“அந்தக் கிழவி நம்மை திட்டிக்கொண்டே போகிறாள்'' -நாணு சிரித்துக்கொண்டே சொன்னான். “எது எப்படியோ, இனி அவளுக்கு போரிபந்தருக்குப் போவதற்கான ஆசை இருக்காது.''

“அது வெறும் நினைப்பு!'' -நான் சொன்னேன். “அவள் அந்தப் பல்லவியைத்தான் இனிமேலும் திரும்பத் திரும்ப சொல்லுவாள். அதன் அர்த்தத்தைப் பற்றி அவள் மறந்துவிடுவாள்.''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel