Lekha Books

A+ A A-

க்ளியோபாட்ராவின் முத்துக்கள் - Page 4

அவளுடைய பெயர் என்ன என்று சொன்னாய்?' - நான் ஆச்சரியத்துடன் கேட்டேன்.

'க்ளோரியா பாட்ரிக்' - முஸ்ஸெ அந்த பெயரை தெளிவாக உச்சரித்தான்.

(ஆனால், க்ளியோபாட்ரா என்றுதான் தெளிவாக முதலில் என் காதில் விழுந்தது.)

'அவள் எங்கே இருக்கிறாள்?' - நான் என்னையும் மீறி கேட்டு விட்டேன்.

முஸ்ஸே சந்தேகப்படுவதைப் போல என் முகத்தையே பார்த்தான். பிறகு ஒரு வருத்தம் கலந்த குரலில் கூறினான்: 'நீங்கள் என்னைப் பார்த்தபோது நான் அவளுடைய அறையிலிருந்து வெளியேறி வந்து கொண்டிருந்தேன். க்ளியோபாட்ராவின் ஊசிக்குப் பின்னால் ஒரு பழைய கட்டிடத்தின் மாடியில் இருக்கும் ஒரு அறையில்தான் நாங்கள் வசிக்கிறோம். ஆனால், நான் அங்கு பகலில் மட்டுமே செல்ல முடியும்.'

க்ளியோபாட்ராவின் ஊசி, க்ளியோபாட்ரா - க்ளோரியா பாட்ரிக் - க்ளியோபாட்ரா - நீக்ரோ காதலன்... நான் மனதிற்குள் முணுமுணுத்தேன். க்ளியோபாட்ரா.... அவள் ஒரு சாதாரண பெண்ணாக மீண்டும் வந்திருக்கிறாளோ? க்ளோரியா பாட்ரிக் என்ற பெயரை உச்சரித்தால் க்ளியோபாட்ரா.... என் க்ளியோபாட்ரா....

அப்போது முஸ்ஸெயின் குரல் என் காதுகளுக்குள் கேட்டது: 'அவள் ஒரு தனி படைப்பு. அவளுக்கு விருப்பமுள்ள ஆண்களை மட்டுமே அவள் ஏற்றுக் கொள்வாள். சில நேரங்களில் அவள் ஒரு பிசாசாக மாறி விடுவாள். அப்போது நான் அவளை அடிப்பேன்... உதைப்பேன். என் அடிகளை வாங்கும்போது அவள் என் கால்களைக் கட்டிப் பிடித்து அழுதவாறு கூறுவாள் - 'என்னைக் கொன்னுடு! கொன்னுடு! கழுத்தை நெரித்து கொல்லு' என்று. என் மிதியையும் உதைகளையும் வாங்குவது என்பது அவளுக்கு ஒரு ஆனந்தமான விஷயமாக இருக்கும், நான் கோபித்துக் கொண்டு அவளை விட்டுப் போய் விடுவேனோ என்பது அவளுடைய பயம். ஆங்கிலேய நாய்....'

முஸ்ஸெ காறி தெருவில் சற்று துப்பினான் (லண்டன் தெருவில் துப்பினால், ஐந்து பவுண்ட் அபராதம் கட்ட வேண்டும் என்ற விஷயம் அவனுக்குத் தெரியாமல் இருக்கலாம்.)

நான் மீண்டும் க்ளியோபாட்ராவின் புதிய வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். எவ்வளவோ ஆண்களுக்கு தண்டனை கிடைக்கச் செய்து உயிர் பிரிந்து செல்வதைப் பார்த்து ரசித்து, அந்த பெண் ரத்தினம் தான் செய்த ஒவ்வொன்றையும் மாறுபட்டு செய்ததில் தனக்குத் தானே ஆனந்தம் அடைந்திருப்பாளோ? பாவம்... க்ளியோபாட்ரா....!

நாங்கள் நடந்து... நடந்து ஸ்ட்ரான்ட்மூலையை அடைந்தோம். நேரம் மூன்று மணி கடந்து விட்டிருந்தது.

முஸ்ஸெ கூறினான்: 'நாம தேநீர் பருகுவோம்.'

நான் கேட்டேன்: 'நண்பனே, இப்போது எங்கிருந்து தேநீர் கிடைக்கும்? இந்த நேரம் கெட்ட நேரத்தில் ஏதாவது கடையும் திறந்திருக்குமா என்ன?'

'வாங்க... தேநீரும், பலகாரங்களும் கிடைக்கக் கூடிய ஒரு இடத்தை நான் காட்டுகிறேன்' - முஸ்ஸெ என்னை எங்கோ அழைத்துச் சென்றான்.

நாங்கள் சிறிது தூரம் நடந்தோம். இறுதியில் பழைய பாணியிலிருந்த ஒரு கருப்பு நிறத்திலிருந்த உயரமான கட்டிடத்தின் மூலையிலிருந்த கற்களால் ஆன படிகளில் இறங்கி, மங்கலான வெளிச்சத்திற்கு மத்தியில் நடந்து, விசாலமாக இருந்த ஒரு ஹாலுக்குள் நுழைந்தோம். ஒரு மங்கலமான மஞ்சள் நிற வெளிச்சம் அங்கு தங்கி நின்றிருந்தது. கொஞ்சம் மடிக்கக் கூடிய நாற்காலிகளும் மடிக்கக் கூடிய மேஜைகளும் அங்கு எலும்புக் கூடுகளைப் போல இங்குமங்குமாக போடப்பட்டிருந்தன. துணி விரிக்கப்பட்டிராத பெரிய பொருட்கள். அந்த நாற்காலிகளின் கைகளிலும் மேஜைகளின் மூலைகளிலும் மனித தலைகள் தெரிந்தன. பிணத்திடமிருந்து வரக் கூடிய ஒரு நாற்றமும்.... அந்த சுடுகாட்டில் இருப்பதைப் போன்ற சூழ்நிலை என்னை அமைதியற்றவனாக ஆக்கியது. அந்த இடத்திற்கு முன்பு எப்போதோ நான் வந்திருக்கிறேன் என்பதைப் போன்ற ஒரு தோணல். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், அதைப் போன்ற ஒரு இடத்தில் எங்கே இருந்தேன்? நான் நினைத்துப் பார்த்தேன். திடீரென்று ஞாபகம் வந்தது - அலெக்ஸான்ட்ரியாவின் காற்றாக்கும்ப் குகைகள்! புராதன எகிப்தியர்கள் மம்மிகளாக ஆக்கிய மனிதப் பிணங்களை கற்களால் ஆன பெட்டிகளில் அடக்கம் செய்து தேன்கூட்டைப் போன்ற தோற்றத்திலிருக்கும் சுவர்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் காற்றாக்கும்ப் குகைகள்! (க்ளியோபாட்ராவைச் சற்று கனவு காண்பதற்காக நான் அலெக்ஸான்ட்ராவின் காற்றாக்கும்ப்களுக்கு அருகில் படுத்து உறங்கியிருக்கிறேன். ஆனால், அவள் எனக்கு தரிசனம் தரவில்லை).

'லண்டனில் ஏழைகளுக்காக கார்ப்பரேஷனின் சார்பில் நடத்தப்படும் முழு இரவு ரெஸ்ட்டாரெண்ட் இது' - அப்போது முஸ்ஸெயின் வார்த்தைகள் தூரத்தில் எங்கிருந்தோ கேட்பதைப் போல எனக்கு தோன்றியது.

இரவில் உடலைச் சாய்ப்பதற்கு தங்களுக்கென்று சொந்தமாக ஒரு இடம் இல்லாத ஏழைகள் அந்த 'ஆல் நைட் ரெஸ்ட்டாரெண்ட்'டில் வந்து அபயம் தேடுகிறார்கள். பாதி பருகிய தேநீர் கோப்பையையோ, பாதி சாப்பிட்ட சேன்ட்விச் துண்டையோ முன்னால் மேஜையின் மீது டிக்கெட்களைப் போல வைத்து விட்டு, இடத்தின் தற்காலிக உரிமையை நிலைநாட்டிக் கொண்டு வறுமையின் பிடியில் சிக்கியவர்கள் நாற்காலிகளின் கைகளில் சாய்ந்தும், மேஜையின் மீது தலையைச் சாய்த்துக் கொண்டும் சிறிது நேரத்திற்கு உறக்கத்தை வரவழைத்துக் கொள்வார்கள். அழுக்கு ஆடைகள் மற்றும் அசுத்தமடைந்த காற்றின் நாற்றமும் அங்கு பரவி விட்டிருந்தது. இனம் புரியாத ஒரு அமைதிச் சூழ்நிலையும்.....

நாங்கள் அந்த கீழே இருக்கும் அறையின் மூலையில் இருந்த கவுண்டரின் அருகில் சென்றோம். சுருக்கங்கள் விழுந்த, வெளிறிப் போய் காணப்பட்ட முகத்தைக் கொண்ட ஒரு பெண் கவுண்டருக்குப் பின்னால் அசையாமல் அமர்ந்திருந்தாள். (அந்த பெண்ணைப் பார்த்தபோது, கெய்ரோ அருங்காட்சியகத்திலிருக்கும் ஒரு பெண் மம்மியின் முகம் எனக்கு ஞாபகத்தில் வந்தது.)

அவள் பேசாமல், முகத்தைச் சிறிது அசைத்தாள். என்ன வேண்டும் என்ற அர்த்தத்தில்.

'இரண்டு கப் தேநீர்... இரண்டு சேன்ட்விச்சஸ்...' - முஸ்ஸெ மிடுக்கான குரலில் ஆர்டர் பண்ணினான். பிறகு என்னை நோக்கி திரும்பி அவன் மெதுவான குரலில் கட்டளையிட்டான்:

'ஒரு ஷில்லிங் கொடுங்க!'

நான் பாக்கெட்டிற்குள்ளிருந்து ஒரு ஷில்லிங் எடுத்துக் கொடுத்தேன்.

தேநீரையும் சேன்ட்விச்சஸையும் கையில் வாங்கி, நாங்கள் அமர்வதற்கு ஒரு காலியான இடத்தைத் தேடி அங்கு சுற்றித் திரிந்தோம். இறுதியில் ஒரு மூலையில் இரண்டு நாற்காலிகள் காலியாக கிடப்பதைப் பார்த்து அங்கு போய் அமர்ந்தோம்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel