Lekha Books

A+ A A-

க்ளியோபாட்ராவின் முத்துக்கள் - Page 2

தூணுக்கும் இணைப்பிற்குமிடையே இருந்த தொடர்பு விடுபட்டு விட்டது. தூணைக் கடலிலிருந்து பாதுகாப்பாக எடுப்பதற்குச் செய்த சாகசம் நிறைந்த முயற்சியில் ஆறு பேர் மரணத்தைச் சந்தித்தார்கள். அந்த ஆறு வீர ஆன்மாக்களின் பெயர்கள் அந்த தூணின் கீழ்ப் பகுதியில் செதுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.'

அந்த தூணைப் பற்றி வழிகாட்டி புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருந்த தகவலை நான் வாசித்து புரிந்து கொண்டேன். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த உலக அழகியான க்ளியோபாட்ரா உலக வரலாற்றில் என்னுடைய காதலியாக இருந்தாள். அழகும் புத்தி சாமர்த்தியமும் அதிகார ஆசையும் சுயநல ஆர்வமும் கலந்து நடனமாடிக் கொண்டிருக்கும் ஒரு அற்புத வாழ்க்கையாக அவளின் வாழ்க்கை இருந்தது. போர் தந்திரங்களைப் போல காதல் உறவுகளிலும் க்ளியோபாட்ரா தனக்கென்று ஒரு தனித்துவ குணத்தைக் கொண்டிருந்தாள். வாழும் காலத்தில் வெறும் பொழுது போக்கிற்காகவும் அப்படி இல்லாமலும் ஆயிரக் கணக்கான இளைஞர்களை அவள் தண்டிக்கப்பட்டு மரணமடையச் செய்திருக்கிறாள். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் அவள் இந்த கொடூரமான பொழுது போக்குச் செயலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறாள் என்பதைத்தானே அந்தத் தூணின் கீழ்ப் பகுதியில் செதுக்கி வைக்கப்பட்டிருந்த பெயர்கள் தெரிவிக்கின்றன! நான் அந்த ஊசி தூணையே உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சிறிது நேரம் பார்த்தேன். க்ளியோபாட்ரா அந்த ஊசியின் நுனியில் ஏறி நின்று கொண்டு ருத்ர தாண்டவம் ஆடுவதைப் போல எனக்கு தோன்றியது. நான் மனதிற்குள் கூறினேன்: 'என் க்ளியோபாட்ரா, நீ உலக வரலாற்றிலேயே மிகவும் இரக்கமற்ற கொலை பாதகி. உறுதி படைத்த உடல்களைக் கொண்ட நீக்ரோ அடிமைகளை, விஷத்தைப் பருகச் செய்தும், பயங்கரமான பாம்புகளை வைத்து கடிக்கச் செய்தும், நீ கொன்றாய். எதற்காக? அவர்களுடைய மரண வேதனையைப் பார்த்து ரசிப்பதற்காக மட்டுமே. அவர்கள் துடித்து அங்குலம் அங்குலமாக இறப்பதைப் பார்த்து நீ புன்னகைத்தாய். கார் கூந்தலில் விஷ சக்தி படைத்த வெள்ளை நிற மலர்களை அணிந்து, நீ காதலர்களை கூறி வரவழைத்து அவர்களை இறுக தழுவினாய். விஷத்தின் மோக தூக்கத்தில் விழுந்து கிடக்கும் அவர்களுடைய கழுத்தில் நீ உன்னுடைய நீண்ட தலை முடியால் இறுக்கி அவர்களை மூச்சு விடாமற் செய்து கொன்றாய். உஷ்ணம் நிறைந்த மனித மாமிசத்தை அறுத்துக் கொடுத்துச் சாப்பிடச் செய்து வளர்த்த ஆரல் மீன்கள்தான் உனக்கு மிகவும் விருப்பமான உணவு. உலகத்தில் நீ நினைத்தால் வசீகரிக்க இயலாத ஆண் படைப்புகளே இல்லை. கிழச் சிங்கமான மன்னர் சீஸரையும், மிகப் பெரிய வீரனான ஆன்டனியையும் நீ பழைய துணியைப் போல சுருட்டி கையிடுக்கில் இறுக்கி வைத்துக் கொண்டாய். இறுதியில் ஆக்டோவியாவிற்கு முன்னால் உன்னுடைய வசீகரிக்கும் சக்தி விலை போகவில்லை என்பது தெரிந்ததும், உன்னுடைய அழகு என்ற விஷ பாணத்திற்கு பலம் குறைந்து கொண்டு வருகிறது என்ற சந்தேகம் உனக்கு உண்டானதும், நீ ஆண் அணலி பாம்பை வைத்து உன்னுடைய மார்பைக் கடிக்கச் செய்து முகத்தில் சாந்தம் நிறைந்த ஒரு புன்னகையுடன் இறந்து விழவும் செய்தாய். க்ளியோபாட்ரா, உன்னுடைய ஒவ்வொரு செயலையும் அது எந்த அளவிற்கு கேவலமானதாக இருந்தாலும், இரக்கமற்றதாக இருந்தாலும் நான் நியாயப்படுத்துகிறேன். நான் உன்னை அறிவை மறந்து விட்டு ஆராதிக்கிறேன். உன்னுடைய கையால் கிடைத்த விஷத்தை வாங்கிப் பருகி இறந்து விழுந்த இளைஞர்களைப் பார்த்து நான் பொறாமைப்படுகிறேன். உலகத்தில் இனி எந்தச் சமயத்திலும் பார்க்க முடியாத அற்புத அழகை தங்களுக்கு முன்னால் பார்த்துக் கொண்டே அல்லவா அவர்கள் இறுதியாக கண்களை மூடியிருக்கிறார்கள்! க்ளியோபாட்ரா, அந்த காதல் இரவின் இறுதி யாமத்தில் உன் கையிலிருந்து விஷத்தை வாங்கிப் பருகிய உன்னுடைய அந்த நீக்ரோ காதலனின் கதையையும் நான் நினைத்துப் பார்க்கிறேன்: 'நான் க்ளியோபாட்ராவைக் காதலிக்கிறேன்' என்ற ஒரு காமம் நிறைந்த வாசகத்தை அம்பில் இணைத்து உன்னுடைய படுக்கையறைக்கு அனுப்பி வைத்த அந்த தைரியசாலியான இளைஞனை நீ உன்னுடைய குளியலறை இருக்கும் வீட்டின் தோட்டத்தில் வைத்து பிடித்தாய். கண்ட நிமிடத்திலேயே அந்த அழகான இளைஞன் மீது நீ காதல் வயப்பட்டு விட்டாய். ஆனால், நீ உன்னுடைய பெண்மைத் தனத்தை ஒதுக்கி வைத்து விட்டு, மகாராணியின் மன நிலையுடன் அவனை அங்கேயே வைத்து விசாரணை செய்தாய்:

'நீ யார்?'

'நான் க்ளியோபாட்ரா மகாராணியின் படையில் ஒரு சாதாரண வீரன். ஆனால், இப்போது ஒரு காதலன்.'

'உனக்கு என்ன வேணும்?'

'க்ளியோபாட்ரா, நான் உங்களைக் காதலிக்கிறேன்.'

'நீ மரணத்தைக் காதலிக்கிறாய்.'

'க்ளியோபாட்ரா, நான் உங்களைக் காதலிக்கிறேன்.'
'உன்னுடைய தைரிய குணத்தை மதித்து உனக்கு நான் மன்னிப்பு அளித்திருக்கிறேன், உன்னுடைய உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நீ இப்போது இங்கிருந்து செல்லலாம்.'

'க்ளியோபாட்ரா, நான் உங்களைக் காதலிக்கிறேன். அந்த காதல் நிறைவேறிய பிறகு மட்டுமே நான் இங்கிருந்து செல்வேன்.'

'உன்னுடைய உயிருடன் நீ இப்போது போகலாம். இல்லாவிட்டால்... இன்று இரவு என்னுடன் இருப்பதற்கு நான் உன்னை அனுமதிக்கிறேன். ஆனால், நாளை காலையில் இறக்க வேண்டியதிருக்கும். இந்த இரண்டு நிலைகளில் நீ எதை ஏற்றுக் கொள்வதாக தீர்மானித்திருக்கிறாய்?'

'இரண்டாவதை...'

க்ளியோபாட்ரா, நீ கூறிய வார்த்தைகளைக் காப்பாற்றினாய். அன்று இரவு நீ அந்த படை வீரனை உன்னுடைய படுக்கையறைக்குள் வரச் செய்தாய். பொழுது புலரும் நேரத்தில் விஷம் நிறைந்த தங்கத்தால் ஆன குவளையைக் கையில் ஏந்தி நீ அவனை நெருங்கினாய். அந்த விஷம் நிறைந்த குவளையைக் கையில் உயர்த்தி பிடித்தபோது, உன்னுடைய வலது கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீர் அந்த விஷத்தில் விழுந்தது. உன் காதலன் உன்னுடைய கையிலிருந்து விஷத்தை வாங்கினான். உன்னுடைய கண்ணீர் விழுந்த பகுதியை உதட்டில் வைத்து இழுத்து குடித்து இறந்து விழவும் செய்தான்.

அந்த இளைஞனின் அழகான சரீரத்தைப் பார்த்து நீ ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாய். உன் இடது கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீர் அந்த பிணத்தின் உதட்டில் விழவும் செய்தது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel