Lekha Books

A+ A A-

க்ளியோபாட்ராவின் முத்துக்கள் - Page 5

முஸ்ஸெ தேநீரை முன்னால் வைத்து விட்டு, கண்களை அகல திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்தான். அவனுடைய முகம் ஏதோ பயங்கரமான சிந்தனையின் காரணமாக மிகவும் கோரமாக தெரிந்தது.

'முஸ்ஸே, இரவை இங்கேயே கழிப்பதா?' - நான் தேநீரை ருசித்துக் கொண்டே கேட்டேன்.

'ம்...' - அவன் ஆந்தையின் குரலில் மெதுவாக முனகினான்.

சிறிது நேர பேரமைதி.

'நான் இன்றே லண்டனை விட்டு புறப்படுகிறேன்' - முஸ்ஸெ என் முகத்தையே வெறித்துப் பார்த்தவாறு திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டான்.

'ம்... ஏன்?'

அவன் என்னுடைய முகத்தையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான். எதுவுமே பேசாமல்.

ஐந்து நிமிடங்கள் கடந்தவுடன் அவன் என்னவோ கூறினான். தெளிவற்ற குரலில்.

'முஸ்ஸெ, என்ன சொன்னே?' - நான் கேட்டேன்.

'அவள் இறந்து விட்டாள் என்று தோணுது' - அவனுடைய தொண்டையிலிருந்து வார்த்தைகள் மிகவும் சிரமப்பட்டு வெளியே வந்தன.

'யாரு?'

'க்ளோரியா பாட்ரிக்.'

'க்ளியோபாட்ராவா?' - நான் கேட்டேன்.

அவன் எதுவும் கூறவில்லை.

சிறிது நேரம் கடந்தவுடன் அவனுக்கு ஒரு உத்வேகம் கிடைத்ததைப் போல தோன்றியது. அவன் அந்த கதையை என்னிடம் விளக்கிக் கூறி கேட்க வைத்தான். அதன் சுருக்கம் இதுதான்:

இரண்டு மூன்று நாட்களாக க்ளியோபாட்ராவிற்கு உடல் நலம் சரியில்லை. அதனால் அவள் ஆட்களைத் தேடி வெளியே செல்லாமல் அறைக்குள்ளேயே படுத்திருந்தாள். முஸ்ஸெ அவளிடம் பணம் வேண்டுமென்று கேட்டிருக்கிறான். ஒன்றிரண்டு நாட்கள் அவனும் பட்டினி கிடந்திருக்கிறான். முஸ்ஸெய்க்கு கொடுப்பதற்கு அவள் கையில் ஒரு பென்னி கூட இல்லை. அவள் பொய் சொல்கிறாள் என்றும், உடனடியாக பத்து ஷில்லிங் கிடைத்தே ஆக வேண்டுமென்றும் அவன் பிடிவாதமான குரலில் கூறியிருக்கிறான். அவள் எதுவுமே பேசாமல் இருந்திருக்கிறாள். அவனுக்கு கோபம் வந்து விட்டது. அவன் அவளுடைய தலை முடியை அள்ளிப் பிடித்து, அவளை பலமாக அடித்திருக்கிறான். முகத்தில்தான்.... அப்போது அவள் தன் கையைக் கடித்து விட்டதாக அவன் கூறுகிறான். அவன் கோபத்தின் காரணமாகவும், வேதனையாலும், தன்னையே மறந்து முழு பலத்தையும் பயன்படுத்தி அவளைத் தள்ளி விட்டிருக்கிறான். அவள் அறையின் மூலையிலிருந்த வாஷ்பேஸினில் தலை மோதி, கீழே விழுந்திருக்கிறாள். சிறிது துடித்திருக்கிறாள் என்று தோன்றுகிறது. அதற்குப் பிறகு எந்தவொரு அசைவுமில்லாமல் கிடந்திருக்கிறாள். அந்த இடத்தில் இரத்தம் கொட்டி கிடந்திருக்கிறது.... அந்த காட்சியைச் சற்று பார்த்து விட்டு, முஸ்ஸெ அங்கிருந்து வெளியேறியிருக்கிறான்.
'அவள் இறந்திருப்பாளோ?' - முஸ்ஸெ என்னுடைய முகத்தையே வெறித்து பார்த்துக் கொண்டே கேட்டான்.

நான் கூறினேன்: 'இல்லை... அவள் இறக்க மாட்டாள். க்ளியோபாட்ராவிற்கு மரணமில்லை.'

முஸ்ஸெ தன் சேன்ட்விச்சை எடுத்து வாய்க்குள் போட்டு விழுங்கி, தேநீரையும் ஒரே மடக்கில் குடித்தான். மேஜையின் மீது கையை தலையணையாக வைத்தவாறு முகத்தைச் சாய்த்து வைத்துக் கொண்டு, குனிந்து படுத்தான். ஒரு நிமிடம் கடந்ததும் அவனுடைய குறட்டைச் சத்தத்தைத்தான் அதற்குப் பிறகு நான் கேட்டேன்.

நானும் மேஜையின் மீது தலையைச் சாய்த்து, சற்று தூங்க ஆரம்பித்தேன். என் சிந்தனைகள் கனவு வயதில் க்ளியோபாட்ராவைச் சந்தித்துக் கொண்டிருந்தன. பல சம்பவங்களுக்கு மத்தியில் க்ளியோபாட்ரா மாமன்னர் சீஸருக்கு அளித்த மிகவும் பிரம்மாண்டமான விருந்து உபசரிப்பைப் பற்றியும் நான் குறிப்பாக நினைத்துப் பார்த்தேன். மிகவும் செலவு வரக் கூடிய விருந்தை ஒருவருக்கொருவர் அளிக்கக் கூடிய ஒரு வீர வாதம் அது. சீஸர் தன்னால் அளிக்க முடிந்த மிகவும் விலை மதிப்புள்ள மதுவையும் சாப்பிடக் கூடிய பொருட்களையும் ஏற்பாடு செய்து க்ளியோபாட்ராவை உபசரித்தார். க்ளியோபாட்ரா பதிலுக்கு அளித்த விருந்தில் சாப்பிடக் கூடிய பொருட்கள் அப்படியொன்றும் அதிகமாக இல்லை. ஒரு சிறிய மது அருந்தும் பாத்திரமும், கொஞ்சம் பலகாரங்களும் மட்டும்.... அந்த மது அருந்தும் பாத்திரத்தில் மதுவிற்குப் பதிலாக 'வினாகிரி' நிறைக்கப்பட்டிருந்தது. மாமன்னர் சீஸர் விருந்திற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு வந்தபோது, க்ளியோபாட்ரா தன் காதில் தொங்கிக் கொண்டிருந்த லோலாக்கிலிருந்து விலை மதிக்க முடியாத அந்த பெரிய முத்துக்களைப் பிரித்தெடுத்து மது பாத்திரத்திற்குள் இட்டு கலக்கி, சீஸருக்கு பருக கொடுத்தாள். அந்த வகையில் உலக வரலாற்றிலேயே மிகவும் விலை மதிப்புள்ள விருந்து உபசரிப்பில் அவள் சீஸரைத் தோல்வியடைய வைத்தாள்.

நான் எவ்வளவு நேரம் இவ்வாறு சிந்தனைகள் நிறைந்த தூக்கத்தில் ஆழ்ந்து கிடந்தேன் என்று உறுதியாக தெரியவில்லை. என்னை யாரோ தட்டி எழுப்பியதைப் போல நான் உணர்ந்தேன். நான் மெதுவாக கண்களைத் திறந்தேன். எனக்குப் பின்னால் மேஜையின் மீது தலையை வைத்து படுத்திருந்த வெள்ளை நிற தாடியை வைத்திருந்த ஒரு கிழவன் தூக்கத்தில் கையால் அடித்தது, என் உடலில் தட்டியதைப் போல தோன்றியதாக உணர்ந்தேன். நான் பாதி தூக்கத்துடன் முன்னோக்கி பார்த்ததும், அதிர்ச்சியடைந்ததும் ஒரே நேரத்தில் நடந்தன, எனக்கு முன்னால் ஒரு தங்க நாகம்!

நான் முகத்தை உயர்த்தினேன். ஒரு பெண் உருவம் அசையாமல் எனக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறது. அவளுடைய வெறும் கையைத்தான் நான் முதலில் பார்த்தேன்.

செந்தாமரை மலரைப் போன்ற ஒரு பெண். கறுத்த, குட்டையான உடுப்பு அணிந்து, நிர்வாணமான கைகளையும் தோளையும் வெளியே தெரியும்படி காட்டி முகத்தைத் திருப்பிக் காட்டியவாறு அவள் நின்று கொண்டிருந்தாள். முகத்தின் வலது பக்கம் மட்டுமே தெரிந்தது. சுவரிலிருந்த விளக்கின் மஞ்சள் ஒளி அவளுடைய முகத்தில் தெளிவாக விழுந்து கொண்டிருந்தது. இந்த அளவிற்கு அற்புதமான ஒரு பெண்ணின் அழகை இந்த உலகத்திலேயே முதல் தடவையாக நான் பார்க்கிறேன்.

அவள் மேஜையின் மீது தலையைச் சாய்த்து உறங்கிக் கொண்டிருக்கும் முஸ்ஸெயை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு நான் எனக்குள் மெதுவான குரலில் முணுமுணுத்தேன்: 'க்ளியோபாட்ரா!'

அவள் முஸ்ஸெயையே பார்த்தவாறு அதே நிலையில் அங்கு எவ்வளவு நேரமாக நின்று கொண்டிருந்தாள் என்பது உறுதியாக தெரியவில்லை. அவன் சுகமான நித்திரையில் அசையாமல் படுத்திருந்தான்.

சிறிது நேரம் கடந்ததும் அவள் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவாறு மெதுவாக முகத்தைத் திருப்பினாள். அவளுடைய முகத்தின் இடது பகுதியைத் திடீரென்று பார்த்ததும், என்னுடைய விழிகள் மரத்துப் போய் விட்டன. இடது பக்க நெற்றி பயங்கரமாக வீங்கியிருந்தது. இடது பக்க கன்னத்தில் சூடு வைத்ததைப் போல கறுத்த அடையாளங்கள் இருந்தன. உதடு வீங்கி நீல நிறத்தில் அவலட்சணமாக இருந்தது. புருவத்திற்கு மேலே சதுர வடிவத்தில் சிறிய ஒரு ப்ளாஸ்ட்டர் ஒட்டப்பட்டிருந்தது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel