க்ளியோபாட்ராவின் முத்துக்கள் - Page 6
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 4059
முஸ்ஸெயின் பராக்கிரமச் செயலின் வெளிப்படையான சின்னங்கள்.
அவள் ஒரு ஆவியைப் போல அங்கிருந்து நகர்ந்தாள். அவள் திரும்பிச் செல்கிறாளோ? நான் சுவாசத்தை அடக்கியவாறு பார்த்தேன்.
அவள் அங்கு ஒரு நாற்காலியில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் செம்பு நிற தலைமுடியைக் கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணின் அருகில் சென்று அவளை எழுப்பி என்னவோ பேசியவாறு தன் காதிலிருந்து முத்து தொங்கட்டான்களை அவிழ்த்து அந்த இளம் பெண்ணிடம் காட்டிக் கொண்டிருந்ததை அதற்குப் பிறகு நான் பார்த்தேன். அந்த இளம் பெண்ணும் பார்ப்பதற்கு ஒரு தெரு பெண்ணைப் போலவே இருந்தாள்.
செம்பு நிற கூந்தலைக் கொண்டிருந்த இளம் பெண் க்ளியோபாட்ராவின் காதில் அணியும் ஆபரணத்தை வாங்கி அலட்சியமாக சற்று சோதித்துப் பார்த்து விட்டு, மறுப்பதைப் போல தலையை ஆட்டியவாறு அந்த பொருளை அவளிடமே திருப்பிக் கொடுத்தாள்.
க்ளியோபாட்ரா தன் முத்துக்களை விற்பனை செய்வதற்கு ஒரு முயற்சியைச் செய்திருக்கிறாள் என்பதை நான் புரிந்து கொண்டேன். அதை வாங்குவதற்கு அந்தச் செம்பு நிற கூந்தலைக் கொண்ட பெண்ணின் கையில் தற்போதைக்கு பணம் இல்லாமலிருக்கலாம்.
தன் முத்துக்களை கையில் வைத்தவாறு க்ளியோபாட்ரா சிறிது நேரம் கவலையுடன் அங்கேயே நின்றிருந்தாள். பிறகு வேறு யாரையாவது பார்ப்போம் என்பதைப் போல அவள் இன்னொரு மூலையை நோக்கி நடந்தாள்.
நான் முஸ்ஸெயைச் சற்று பார்த்தேன். அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
நான் மெதுவாக எழுந்தேன். சத்தமாக துடிக்கும் இதயத்துடன் க்ளியோபாட்ராவை நெருங்கினேன்.
'முத்துக்களை நான் வாங்கிக் கொள்கிறேன்' - பாக்கெட்டிற்குள்ளிருந்து ஒரு ஐந்து பவுண்ட் நோட்டை எடுத்து அவளை நோக்கி நீட்டியவாறு நான் நடுங்கிக் கொண்டிருக்கும் குரலில் கூறினேன்:
என்னையும் என்னுடைய அசாதாரணமான நடவடிக்கையையும் என் கையிலிருந்த ஐந்து பவுண்ட் நோட்டையும் பார்த்து அவள் சிறிது நேரம் ஆச்சரியப்பட்டு விட்டதைப் போல நின்று விட்டாள். அந்த காட்சி உண்மைதானா என்பதை நம்புவதற்கு அவனால் முடியாமல் போயிருக்கலாம். ஆனால், அரை நிமிடம் கடந்ததும், அவளுக்கு ஒரு விழிப்புணர்வு உண்டானது. திடீரென்று அவள் இடது கையை உயர்த்தி, தன்னுடைய முகத்தின் இடது பக்கத்தை மூடியவாறு சற்று புன்னகைக்க முயற்சித்துக் கொண்டு வலது கையிலிருந்த முத்துக்களை என்னை நோக்கி நீட்டினாள். நான் நடுங்கிக் கொண்டிருக்கும் கையுடன் அதை வாங்கி அதே இடத்தில் பாக்கெட்டிற்குள் போட்டேன்.
'தேங்க் யூ சார்' - ஐந்து பவுண்ட் நோட்டை வாங்கி கையில் இறுக பற்றியவாறு அவள் எனக்கு நன்றி கூறினாள். அவளுடைய வலது கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீர் உதிர்ந்து விழுவதை நான் பார்த்தேன்.
அதற்குப் பிறகு நான் அங்கு நிற்கவில்லை. மிகவும் விலை மதிப்புள்ள ஒரு பொருள், கையில் வந்து சேர்ந்த சந்தோஷம் அலையடித்துக் கொண்டிருந்த இதயத்துடன் நான் அந்த தரைப்பகுதி அறையிலிருந்து வெளியேறி தெருவிற்கு வந்தேன்.
க்ளியோபாட்ராவின் அந்த முத்துக்கள்தாம் என் கையிலிருந்து மத்திய தரைக் கடலில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் அவளுடைய ஆன்மாவை அபகரித்துக் கொண்டு போயிருக்கின்றன.
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,