Lekha Books

A+ A A-

மாமரத்திற்குக் கீழே

mamarathirku kilae

“ஒரு காற்றும் காற்றல்ல

பெரும் காற்றும் காற்றல்ல

மாவேலிக் குன்னத்தின் காற்றே வா! கடலே வா!

கடல் மோதி, ஒரு மாங்காயைத் தா!''

அப்போது ஒரு காற்று அடித்தது. வானத்தை முட்டிக்கொண்டிருக்கும் அந்த மாமரத்தின் பெரிய கிளையில் இருந்த சிறிய கிளைகள் இப்படியும் அப்படியுமாக ஆடின.

அவர்களின் உற்சாகம் அதிகமானது. அவர்கள் எல்லாரும் ஒரே குரலில் கூறினார்கள்: “காற்றே வா! கடலே வா!''

காற்றின் பலம் அதிகரித்தது. இலைகளில் அது மோத, என்னவோ கீழே விழுந்தது. பாட்டு அந்தக் கணமே நின்றது. மாமரத்திற்குக் கீழே  ஒரு நிமிடம் ஒரே ஆரவாரமானது. விழுந்த அந்த பொருள் ஒரு சிறுமிக்குக் கிடைத்தது. ஒரு சிரிப்பு! அது ஒரு அழுகிய மாம்பழமாக இருந்தது. முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு அந்தச் சிறுமி அதை தூரத்தில் விட்டெறிந்தாள். தலையைக் கையில் பிடித்துக் கொண்டு ஒரு சிறுவன் அங்கு வந்தான். எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அந்தச் சிறுமி அழுதுவிட்டாள்.

குறும்புத்தனம் செய்த அந்தச் சிறுவனின் பெயர் பாலகிருஷ்ணன். சிறிது தூரத்திலிருந்த ஒரு கொய்யா மரத்தில் தாவி ஏறி, அதன் கிளையில் தொங்க விடப்பட்டிருந்த ஓலைக் கூடையிலிருந்து ஒரு மாம்பழத்தை எடுத்து அவளுக்கு முன்னால் அவன் எறிந்தான்.

ஒரு நிமிடம் அவள் அதை எடுக்கத் தயங்கினாள். அவள் குனிந்தபோது அதை மற்றொரு சிறுவன் எடுத்துவிட்டான். அப்போதும் அங்கிருந்த எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

கவுரியும் நாராயணனும் கற்களைப் பொறுக்கி ஒற்றையா இரட்டையா விளையா டிக் கொண்டிருந்தார்கள். நாணியும் கோவிந்த னும் கஞ்சியும் குழம்பும் வைத்துக்கொண்டிருந்தார்கள். நீலகண்டனும் ராமனும் "மாங்கொட்டை அய்யா'விற்கு சடங்குகள் நடத்திக் கொண்டிருந்தார்கள். காய்ந்த சுள்ளிகளைக் கொண்டு தயார் செய்யப்பட்ட பல்லக்கில் ஒரு மாங்கொட்டையை எடுத்து வைத்து, அதைச் சுற்றி அவர்கள் வலம் வந்தார்கள். “மாங்கொட்டை அய்யா செத்துப் போயிட்டாரு. ஆத்துல குளிச்சாச்சு. பதினாறாம் நாள் விசேஷம் நடத்த ஒரு மாங்காயைத் தா!'' அவர்கள் சொன்னார்கள்.

மேலே ஒரு காகம் கரைந்தது. சிறார்கள் விளையாட்டை நிறுத்தினார்கள். கொய்யா மரத்தில் இருந்தவன் கீழே குதித்தான்.

“அது காக்கா குஞ்சு...''

“இல்ல... தாய் காக்காதான்!''

“மாங்காயைக் கொத்துறதைப் பார்க்கலையா?''

“பேசாதே... காக்கா... பறந்து போயிடப் போகுது...''

எல்லாரும் மேலே பார்த்தவாறு நின்றிருந்தார்கள்.

அவர்களின் கிண்டலுக்கு ஆளான சிறுமி- அவளுடைய பெயர் பாப்பி- சற்று தூரத்தில் நின்றிருந்தாள். அவளுடைய முகத்தில் இருந்த தோற்று விட்டோம் என்ற எண்ணம் இப்போதும் போகாமல் அப்படியே இருந்தது.

ஒரு மாம்பழம் விழுந்தது. அது பாலகிருஷ்ணனுக்குக் கிடைத்தது. மாம்பழத்தின் காம்பை ஒடித்து மேலே எறிந்தவாறு சொன்னான்:

“இதை எடுத்துக்கிட்டு இன்னொரு பழுத்த மாம்பழத்தை பாப்பிக்கு தா...''

இந்த வார்த்தைகள் பொதுவாகச் சிறார்கள் சொல்லக் கூடியவைதான். “பழுத்த மாம்பழத்தை எனக்கு தா'' என்று அவர்கள் கூறுவார்கள். அவனுடைய குறும்புத்தனத்திற்கு அவனே பிராயச்சித்தமும் செய்தான். இன்னொரு பழுத்த மாம்பழம் பாப்பிக்குக் கிடைத்தது.

மாலை மயங்கிக் கொண்டிருந்த நேரத்தில் சிறார்கள் மரத்தடியை விட்டுக் கிளம்பினார்கள். பாலனும் பாப்பியும் ஒருவரோடொருவர் கைகளைப் பிணைத்தவாறு வீடுகளுக்குத் திரும்பினார்கள். அவனுடைய கையில் மாம்பழங்கள் நிறைந்த கூடை தொங்கிக் கொண்டிருந்தது. அவளுக்கு ஒரு மாம்பழத்திற்கு மேல் அன்று கிடைக்கவில்லை.

பாலனும் பாப்பியும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். அவனுடைய வீட்டுக்கு மேற்குப் பக்கத்தில் அவளுடைய வீடு இருக்கிறது.

அடுத்த பூஜையன்று அவர்கள் இருவரையும் பள்ளிக் கூடத்தில் சேர்த்தார்கள். அவர்கள் ஒன்றாக கிட்டு ஆசிரியரின் பள்ளிக் கூடத்திற்குச் செல்வார்கள். ஒன்றாகவே திரும்பி வருவார்கள். வீட்டில் தொங்கவிடும் பச்சிலையை அவர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொள்வார்கள். கோவில் குளத்திலிருந்து பாலன் தாமரை மலரைப் பறித்துக்கொண்டு வந்து பாப்பிக்குத் தருவான்.

அவள் படிப்பதற்கு மிகவும் சிரமப்பட்டாள். ஆசிரியரின் அடிகளை வாங்குவதற்கே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. அவளுக்கு எதுவுமே தெரியவில்லை. ஆனால், அவள் பாலனை ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் தோற்கடித்தாள்.

“அக்கரையில் இருக்கும்

இக்கரையில் இருக்கும்

ஒன்றோடொன்று சந்திக்கும்

அது என்னன்னு சொல்லு?''

பாலனுக்கு அந்த விடுகதை தெரியாது. அவன் கூறுவான்: “தென்னை மரம்...''

“இல்ல...'' அவள் வெற்றிப் பெருமிதத்துடன் கைதட்டிச் சிரிப்பாள்.

“அப்போ என்னன்னு சொல்லு!''

“கண் இமைகள்...''

அவர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வார்கள். அவன் அவளை அடிப்பான். அவள் அழுதுகொண்டே அவனைப் பார்த்து வக்கனை காட்டுவாள்.

“பாலா, இனிமேல் நான் உன்கூட பேச மாட்டேன்.''

அவளுடைய குடும்பம் மிகவும் ஆச்சாரமானது. அவள் கூறுவாள்:

“உங்க சோற்றை நாங்க சாப்பிட மாட்டோமே!''

அவனும் தன் பங்குக்கு பெருமையாகக் கூறுவான்:

“நான் ஆங்கிலத்தில் படிப்பேனே!''

ஆறு மாத படிப்பிற்குப் பிறகு பாப்பி பள்ளிக்கூடத்திற்குப் போவதை நிறுத்தனாள். அவளுடைய மாமா சொன்னார்:

“அவள் போக வேண்டாம். பொண்ணுக படிச்சா கணக்கு கேட்பாங்க!''

பாலன் அடுத்த வருடம் ஒரு ஆரம்பப் பள்ளியில் சேர்ந்தான். சிலேட்டையும் புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு சிறிய ஒரு வேட்டியையும் கட்டிக்கொண்டு அவன் பள்ளிக்கூடத்திற்குச் செல்வதை பாப்பி பார்த்தவாறு நின்றிருப்பாள். அவள் ஒருநாள் கேட்டாள்:

“பாலா! பள்ளிக்கூடத்துல சார் அடிப்பாரா?''

“படிக்கலைன்னா அடிப்பாரு.''

மாங்காய் இருக்கும் காலத்தில் பாப்பி பாலனுக்காக மாங்காய்களைப் பொறுக்கி பத்திரப்படுத்தி வைத்திருப்பாள். சாயங்காலம் வரும்போது அவள் அவற்றை அவனிடம் தருவாள்.

அவளுக்கு வீட்டில் செய்வதற்கு எவ்வளவோ வேலைகள் இருக்கும். நெருப்பு எரிய வேண்டும். தொழுவத்தில் சாணத்தை அள்ள வேண்டும். பாத்திரங்களைச் சுத்தம் செய்ய வேண்டும். மொத்தத்தில் அவளுக்கு விளையாடுவதற்கு நேரமே இல்லாமல் இருந்தது.

ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் படிப்பு முடிந்தது. பாலன் நான்கு மைல்கள் தூரத்திலிருந்த ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தான். அவன் நல்ல ஆடைகள் அணிந்துகொண்டு தன் தந்தையுடன் அம்பலப்புழைக்குப் போவதை அவள் சிலையைப்போல பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

“பாலா! இனி நீ வர மாட்டியா?'' அவள் கேட்டாள்.

“நான் வெள்ளிக்கிழமை வருவேன்.''

அதைக் கேட்டு பாப்பி அழுதுவிட்டாள். அவன் அம்பலப் புழையில் போய் தங்கப் போகிறான். அது தெரிந்து அந்தச் சிறு பெண் சோர்வடைந்துவிட்டாள். அந்த வெள்ளிக்கிழமை சாயங்காலம் பாலன் வந்தான். ஒரு கூடை நிறைய மாம்பழங்களை அவள் அவனுக்குத் தந்தாள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel