Lekha Books

A+ A A-

பர்ர்ர்!!! - Page 2

Burrrr

சில நேரங்களில் அவளின் தங்கை ஜன்னல் வழியே எங்களை எட்டிப் பார்ப்பாள். எனக்கு அவளின் தங்கையிடமோ, தாயிடமோ, தந்தையிடமோ பேசுவதில் எந்தவித தயக்கமும் இல்லை. வார்த்தைகள் சர்வசாதாரணமாக என் வாயிலிருந்து வரும். ஆனால், அவள்... அவளுடன் என்னால் அப்படி சாதாரணமாக உரையாட முடியவில்லை. அவளுடன் பேசுவது என்றாலே என்னுடைய நாக்கு உள்ளே வயிற்றுக்குள் போய் ஒளிந்து கொள்கிறது. அதைப் பார்த்தாவது என்மீது அவளுக்கு இரக்க உண்டாக வேண்டாமா?

அவளின் தங்கை ஒரு பெரிய கிண்ணத்தில் தேநீருடன் வருவாள். பயங்கர சூடாக அது இருக்கும். நான் அதை இரண்டு கைகளாலும் வாங்கி, வியர்வை உடம்பில் அருவியென வழிய, கண்ணீர் சிந்தியவாறு நின்றிருப்பேன்.

“சூடா இருந்துச்சுன்னா, கீழே வைக்க வேண்டியதுதானே!” அவள் அதிகார தொனியில் சொல்வாள். அடுத்த நிமிடம் நான் அந்த தேநீர் கிண்ணத்தைக் கீழே வைப்பேன். தொடர்ந்து துணியின் நுனியால் கண்களைத் துடைப்பேன்.

“வெப்பமா இருந்துச்சுன்னா, வெளியே போய் காத்து வாங்க வேண்டியதுதானே?” ஹுரியின் கட்டளை. நான் எழுந்து சென்று வராந்தாவில் போய் நிற்பேன். காற்று வரும் அறிகுறியே இருக்காது. காற்று எங்கே போய் மறைந்து கொண்டது?

நான் அப்படி நின்று கொண்டிருக்கும் பொழுது, அவளின் தங்கை வந்து தேநீர் ஆறிப்போகும் என்று கனிவுடன் கூறுவாள். எல்லாருக்கும் என்மீது கருணை உண்டு. அவளுக்கு மட்டும்... நான் மீண்டும் சந்நிதியில் போய் நிற்பேன். அவளைப் பார்த்த வாறு தேநீரைக் குடிப்பேன். பார்த்தவாறு என்றால் அவளின் முகத்தைப் பார்த்தவாறு என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். அவளின் முகத்தைப் பார்ப்பதற்கு எனக்கு எங்கே தைரியம் இருக்கிறது? கறுத்த மணிகளைக் கொண்ட பெரிய கண்களைக் கொண்டவள் அவள். அவளின் கழுத்து மிகமிக அழகாக இருக்கும். மொத்தத்தில்- அவளின் எல்லா உறுப்புகளுமே அழகானவைதாம். மூக்குக்குக் கீழே- மேலுதட்டுக்கு சற்று மேலே வியர்வை பொடிப்பொடியாக அரும்பி நின்றிருக்கும். அது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அழகான- சிவந்த உதடுகள். இவை எல்லாம் நான் அவளை நேரடியாகப் பார்த்து ரசித்தவை அல்ல. பக்கத்தில் நின்றவாறு கடைக் கண்ணால் பார்த்தவாறு என்னையே நான் மறந்து போய்விட்டிருக்கும் நிமிஷங்கள் அவை என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எது எப்படியோ... என்னைப் பார்த்து நல்லதாக நான்கு வார்த்தைகள் அவள் பேசக் கூடாதா?

அவள் தந்த ரோஜாப் பூவை நான் ஒரு புத்தகத்தில் வைத்திருக்கிறன். அது காய்ந்து கருகிப் போய்விட்டது. இருந்தாலும், அதை ஒரு பொக்கிஷம் என கருதி பாதுகாத்து வைத்திருக்கிறேன். இரவு நேரங்களில் அந்த மலரை நான் எடுத்துப் பார்ப்பேன். அப்போது என்னையும் மீறி அழுவேன்.

இந்தக் காலகட்டத்தில் என் முகத்தில் சிரிப்பையே பார்க்க முடியாது. என்னால் சிரிக்க முடியவில்லை. மனம் முழுக்க கவலை ஆக்கிரமித்துவிட்டிருந்தது. காதலுக்காக உயிரையே விடுவது என்று தீர்மானித்தேன். அது ஒரு நல்ல இலட்சியமாக என் மனதிற்குப் பட்டது. அப்படியே உயிரைத் துறப்பது என்றால், நான் காதலிக்கும் அந்தப் பெண்ணுக்கு முன்புதான் அந்தச் சம்பவம் நடக்க வேண்டும். அவளின் வீட்டுக்குச் சென்று அங்கிருக்கும் மா மரத்திலோ பலாமரத்திலோ தூக்குப் போட்டு தொங்கி... நல்ல முடிவுதான்! காதலுக்காக மரணத்தைத் தானே வலிய போய் தேடிக்கொண்டவர்கள் எல்லாருமே உண்மையிலேயே மகான்கள்தான்!

அப்போதெல்லாம் எனக்கு கவிதை எழுதத் தெரியாது. அதுமட்டும் எனக்கு அப்போது தெரிந்திருந்தால், அவளைப் பற்றி ஒரு மிகப்பெரிய காவியமே நான் தீட்டியிருப்பேன். அதற்குப் பிறகு அந்தக் கனவு தேவதைக்கு முன்னால் தூக்குப் போட்டு மரணத்தைத் தழுவிக் கொள்ள வேண்டியதுதான்.

அவள் அப்போதாவது வாய்விட்டு அழட்டும்!

ஆனால், தூக்கில் தொங்கி சாவதற்கான மன தைரியம்தான் எனக்குக் கிடையாது. எவ்வளவு பெரிய மரமாக இருந்தாலும் கொஞ்சம்கூட பயமில்லாமல் நான் ஏறிவிடுவேன். ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு மிகவும் சர்வ சாதாரணமாக நான் தாவவும் செய்வேன். ஒரு சிறு கயிறு கையில் இருந்தால் போதும். விஷயம் மிகவும் சுலபமாக முடிந்துவிடும். ஆனால், அதற்கான தைரியம்...? விளைவு- காதல் வயப்பட்டு, வருத்தம் தோய்ந்த முகத்துடன் நான் அலைந்து திரிந்தேன். இப்படியே வாரங்கள், மாதங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கடந்து போய்க் கொண்டிருந்தன.

அப்போது வருகிறது என் வாழ்க்கையில் பிரகாசமான ஒளியை வீசியவாறு அந்தக் காலை நேரம்!

அன்று நான் விழுந்து விழுந்து சிரித்தேன். மேலும் கீழும் குதித்தேன். எந்தவித தயக்கமும் இல்லாமல் அவளின் முகத்தை தைரியமாக நான் பார்த்தேன். நடந்து சம்பவம் என்னவென்றால்-

அதுதான் காலை நேரம் என்று நான் சொன்னேனே! சொல்லப்போனால் காலை நேரம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. நல்ல உஷ்ணம் தகித்துக் கொண்டிருந்த பகல் நேரம். சுமார் பத்து மணி இருக்கும். உடம்பில் வியர்வை வழிய அவளின் அருகில் நான் நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். அவள் மேஜை மேல் கைகளை ஊன்றியவாறு, தலையை உள்ளங் கையால் தாங்கியவாறு மிகவும் களைப்படைந்தது போல் உட்கார்ந்திருந்தாள்.

நானும் பிரபஞ்சமும் அசையாமல் இருந்தோம். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி என்னால் ஒரு முடிவுக்குமே வர முடியவில்லை. அப்படி என்னதான் நடக்கும்? ஒரு இளம் காற்று அவளின் மேனியை இலேசாக வருடிச் சென்றது. அவள் தன் தலைமுடியை சுதந்திரமாக காற்றில் பறக்கும்படி விட்டிருந்தாள். அது ஒரு மார்பகத்தை இலேசாக மறைத்தவாறு எங்கோ பறந்து கொண்டிருந்தது. ஹுரியின் வலது பக்கத்தில் நெற்றிக்கு மேலே கூந்தலில் ஒரு ரோஜாப்பூ இருந்து அழகு காட்டிக் கொண்டிருந்தது. அந்த மலர் எப்படி அங்கே நிற்கிறது?

நானும் பிரபஞ்சமும் கொஞ்சமும் அசையாமல் அந்த மலரைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு இடி இடிப்பதைப்போல-

புதிதாக வாங்கிய துணியை வேண்டுமென்றே இழுத்துக் கிழிப்பதைப்போல-

அழகு தேவதையிடமிருந்து,

“பர்ர்ர்!!!” என்றொரு சத்தம்... தொடர்ந்து ஒரு நாற்றம்.

“அய்யோ!” நான் மூக்கைப் பொத்திக் கொண்டு வேகமாக எழுந்தேன். இதற்கு முன்பு சிரித்திராத அளவுக்கு நான் சிரித்தேன். சிரித்துச் சிரித்து என் கண்களில் நீர் வந்துவிட்டது. கண்ணீர் வழிய நான் ஓடினேன். அவளின் தங்கையைப் பார்த்து சொன்னேன். அவளின் தாயைப் பார்த்துச் சொன்னேன். எல்லாரிடமும் அவள் என்ன செய்தாள் என்பதைச் சொன்னேன். உலகமே கேட்கிற மாதிரி

“புஹோயி” என்று உரத்த குரலில் எனக்குக் கூவ வேண்டும்போல் இருந்தது. அவளின் தாய் சென்றாள். அவளின் சகோதரி சென்றாள். நானும் சென்றேன்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel