Lekha Books

A+ A A-

பர்ர்ர்!!!

Burrrr

ரு “பர்ர்ர்!!!” சம்பவத்தைப் பற்றித்தான் நான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன். இந்தச் சம்பவத்தில் சிறிது காதலும் இருக்கிறது. காதல் என்றால் என்ன?

ஒரு பெண்ணை நாம் பார்க்கிறோம். அவள் மிகவும் அழகாக இருக்கிறாள். நல்ல உடல் நலத்துடன் இருக்கிறாள். நம்மால் அவளை வெறுமனே பார்த்துக்கொண்டு மட்டும் இருக்க முடியவில்லை. இந்தா பிடித்துக் கொள் என்பது மாதிரி அவள்மீது மையல் கொள்ள ஆரம்பிக்கிறோம். அவளிடம் எந்தக் குறையும் இல்லை. அவள் ஒரு தேவகன்னி. தேவதை. ஹுரி!

அவள்தான் நம் ஐடியல் கேள்!

கற்பனையில் அவளுக்காக ஒரு சிம்மாசனம் உண்டாக்கி, அதன்மேல் அழகு தேவதையென அவளை உட்கார வைக்கிறோம். அதற்குப் பிறகு...? நாம் அவளை ஆராதனை செய்ய ஆரம்பிக்கிறோம்... கைகளால் தொழுதவாறு பயபக்தியுடன் நின்றுகொண்டு.

இந்த அளவுக்கு நான் ஒரு ரசிகனாக மாறியதற்குப் பிறகு, என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? சொல்கிறேன். தெரிந்துகொள்ளுங்கள்.

அப்போது எனக்கு பதின்மூன்று, பதினான்கு வயது இருக்கும். என் கால்களில் செருப்புகூட கிடையாது. வெளுத்த ஒரு வேஷ்டி கட்டி இருப்பேன். சிவப்பு கோடும் காலரும் உள்ள ஒரு வெள்ளை சட்டை. தலைமுடியை ஒட்ட வெட்டியிருப்பேன். எனக்கு முன்னால் என் தந்தை நடந்து போய்க் கொண்டிருக்கிறார். நான் என்ன ஆடைகள் அணிந்திருக்கிறேனோ, அதே ஆடைகளைத்தான் என் தந்தையும் அணிந்திருக்கிறார். அதற்கு மேல் கூடுதலாக அவரின் தலையில் ஒரு தொப்பியும், கையில் ஒரு குடையும் இருந்தன. நாங்கள் ஒன்றரை, இரண்டு மைல் தூரத்தில் இருக்கும் ஒரு வீட்டைத்தேடி போய்க் கொண்டிருக்கிறோம். அங்கே ஏதோ பணம் சம்பந்தமான விஷயத்திற்காக என் தந்தை போகிறார். அவர் மர வியாபாரம் பண்ணிக் கொண்டிருக்கும் ஒரு மனிதர்.

நாங்கள் நடந்து செல்லும் சாலை பிரதான சாலைதான். இருந்தாலும் அந்தச் சாலையில் தார் போடப்பட்டிருக்கவில்லை. பாதையின் இரு பக்கங்களிலும் மரங்கள் இருந்தன. இடையில் ஆங்காங்கே வீடுகள். சாலையில் வாகனங்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆட்கள் எல்லாரும் பொதுவாக நடக்கத்தான் செய்தார்கள்.

“அப்பாவும் பையனும் எங்கே கிளம்பியாச்சு?” சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்த சிலர் கேட்டார்கள். அவர்கள் கேட்டதற்கு என் தந்தை பதில் சொன்னார். நாங்கள் நடந்து நடந்து பிரதான சாலையை விட்டுக் கீழே இறங்கி ஒரு ஒற்றையடிப் பாதை வழியே நடந்தோம். சிறிது தூரம் சென்ற பிறகு கண்ணைக் கவரும் ஒரு காட்சி. நெல் வயல்கள்... நெல் வயல்கள் கண்கள் முன்னே பரவிக் கிடந்தன. சற்று மேடான இடத்தில் ஒரு தோட்டம். அதற்குப் பக்கத்தில் ஓடு வேய்ந்த ஒரு வீடு.

நாங்கள் நிலத்தில் ஏறி மரங்களுக்கு மத்தியில் நடந்து சென்று வீட்டின் முற்றத்தில் போய் நின்றோம். அங்கு- வெண்மையான ஆடைகள் அணிந்த ஒரு தேவகன்னி!

சிவந்த மலர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும் ஒரு பன்னீர் செண்பக மரத்திற்குப் பக்கத்தில் அவள் நின்றிருந்தாள். முடியை வாரி சுதந்திரமாகத் தொங்கவிட்டிருந்தாள். அதிக நீளமில்லாத வெளுத்த முகம். சற்று உருண்டு திரண்ட- முன்பக்கம் தள்ளிய மார்பகங்கள். அளவான கச்சிதமான உடலமைப்பு.

அழகாகப் புன்னகை சிந்தியவாறு அவள் என்னைப் பார்த்தாள்.

“மூத்த மகன்தானே?” இனிமையான குரலில் அவள் கேட்டாள்.

“ஆமா...” என்றார் என் தந்தை. அப்போது வீட்டுக்குள்ளிருந்து ஒரு கனமான குரல்.

“வாங்க... வாங்க...”

அழைத்தது அவளின் தந்தை. என் தந்தை உள்ளே போனார்.

நானும், அந்தப் பெண்ணும் மட்டும் வெளியே-

பெரிய ஒரு பன்னீர் செண்பக மலரை அவள் பறித்தெடுத்தாள். சிறிது நேரம் கையில் வைத்து அதன் அழகை அனுபவித்த அவள் அந்த மலரை என்னிடம் தந்தாள். அடடா! உலகமே இனிமையான மணத்திலும், அழகிலும் மூழ்கிக் கிடப்பதுபோல் நான் உணர்ந்தேன். நான்

அவளையே வைத்த கண் எடுக்காது பார்த்தவாறு நின்றிருந்தேன்.

அவளுக்கு பத்தொன்பது, இருபது வயது இருக்கும்.

கண்கள் குளிர அவளையே பார்த்தவாறு நான் நின்றிருந்தேன்.

அந்த ஹுரி புன்னகைத்தாள்!

அவள் என் பெயரைக் கேட்டாள். படிக்கும் வகுப்பைக் கேட்டாள்.

வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை விசாரித்தாள்.

எல்லா விவரத்தையும் விக்கி விக்கி நிறுத்தி நான் சொல்ல முயன்றேன்.

அவள் கேட்டாள்:

“எதுக்கு இவ்வளவு வெட்கப்படுறே?”

கடவுளே! நான் வெட்கப்படுகிறேனா? அவளுடன் எவ்வளவோ பேச வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் என்னால் ஒன்றுமே பேச முடியவில்லை. நாக்கு பேசவே வர மாட்டேன் என்கிறது. தொண்டை ஒரேடியாக வற்றிப் போயிருக்கிறது. மொத்தத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் வியர்வை வழிய, அந்த தேவதை முன் அமைதியாக நான் நின்றிருந்தேன்.

ஈர்ப்பு-காதல்!

நறுமணம் கமழும் தங்கக் கனவு!

நான் அந்தக் கனவில் ஆழமாக மூழ்கிப் போனேன். நினைக்க நினைக்க சுகமாக இருந்தது. உடல் முழுக்க சுகமான ஒரு வலி.

நானும் என் தந்தையும் தேநீர் குடித்தோம். அவளின் தந்தையிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு நாங்கள் திரும்பினோம்.

வாரத்தில் இரண்டு மூன்று முறைகள் நான் அங்கு போவேன். சில நேரங்களில் பணம் வாங்க. சில நேரங்களில் கொடுக்க.

மனதில் உண்டான ஈர்ப்பையும் காதலையும் ஒளித்து வைக்க முடியுமா? இந்த விஷயம் காட்டுத் தீ போல் பரவியது. நான் அவள் மீது தீவிர காதல் கொண்டிருக்கிறேன் என்ற விஷயத்தை அவளின் சகோதரி அறிந்தாள். அவளின் தாய் அறிந்தாள். அவளின் தந்தை அறிந்தார்.

எல்லாருக்குமே அது படு தமாஷான ஒரு சமாச்சாரமாக இருந்தது.

அவளைவிட இரண்டு வயது குறைந்தவள் அவளின் சகோதரி.

என்னை தூரத்தில் பார்த்தால், அவளின் தங்கை அவளிடம் கூறுவாள்:

“ஆள் வருது!”

அடுத்த நிமிடம் அவள் ஒரு மகாராணியைப்போல என்று சொல்வதைவிட, ஒரு சக்கரவர்த்தினியைப்போல மிகவும் கம்பீரமாக உட்கார ஆரம்பிப்பாள். என்னைக் கண்டால், புன்னகைப்பதில்லை. எதுவுமே வாய் திறந்து மரியாதைக்காகக்கூட பேசுவதில்லை. புருவத்தை இலேசாக வளைத்து ஒரு சிறு பூச்சியைப் பார்ப்பதைப் போன்று பார்ப்பாள். ஒரே ஒரு பார்வைதான். ஃப்பூ என்று என்னை அந்தப் பார்வையாலேயே ஊதி விடுவாள்.

அவள் இப்படி இந்த உலகத்தை ஆண்டு கொண்டிருந்தாள்.

நான் அவளுக்கு அருகில் நின்று அவளை ஆராதனை செய்து கொண்டிருந்தேன்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel