Lekha Books

A+ A A-

அவன் திரும்பி வருவான் - Page 2

Avan Thirumpi Varuvan

ஸ்ரீதரனுக்கு ஒரு ஆபத்தும் உண்டாகவில்லை என்று கூறி ஒரு கற்பனைக் கதையை உண்டாக்க என்னால் முடிந்தது. அந்தக் கதை நாக்கில் சர்வ சாதாரணமாக வரவும் செய்தது. அவன் எப்படித் தப்பித்தான் என்ற கதை!

நான் அப்படிச் செயல்பட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் என்னுடைய இதயத்தில் தாங்க முடியாத வேதனை உண்டானது. ஸ்ரீதரன் உயிருடன் இருப்பதாக நான் கிழவியிடம் சொன்னேன். அவன் ஓடிய வழியை விவரித்துக் கூறும்போது, அவன் மார்பு துளைக்கப்பட்டு நிலத்தில் விழும் காட்சியை இரண்டு முறை என்னுடைய மனக் கண்கள் பார்த்தன. அவனுடைய இறந்து போன உடலை காலைப் பிடித்து இழுத்து அந்தப் பெரிய பிணக் குவியலுக்கு மேலே தூக்கிப் போட்டார்கள். கிழவி கேட்டாள்:

“அவன் எங்கே ஒளிஞ்சிருக்கான்?”

“அதை இப்போ சொல்ல முடியுமா?”

“கூட யாரெல்லாம் இருக்காங்க?”

“நிறைய பேர் இருக்காங்க.”

அவள் சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அவளுடைய நம்பிக்கையின் வெளிப்பாடு அவளின் முகத்தைப் பார்க்கும்போது தெரிந்தது. ஏராளமானவர்கள் இறந்தார்கள் அல்லவா? எந்த காரணத்தால் அவளுடைய மகன் அந்த இறந்தவர்களின் பட்டியலில் இல்லை? அவன் அப்படி இல்லாமல் இருக்கக் கூடிய அளவுக்கு அவள் கொடுத்து வைத்தவளா என்ன! அவன் அழத் தொடங்கினாள். நான் கேட்டேன்.

“எதுக்காக அழறீங்க! அவன் தப்பிச்சதுக்கா?”

“இல்ல... உயிரோட இருந்தா நேற்று ராத்திரி என்னை அவன் வந்து பார்த்திருக்கணுமே! என்னைப் பார்க்காம என் மகன் ஊரை விட்டுப் போக மாட்டான். எனக்கு அவனை விட்டா யார் இருக்காங்க?”

அவளுடைய அறிவுக்கு முன்னால் நான் குழம்பிப் போய் நின்றேன். எனக்கு ஒரே வழிதான் இருக்கிறது. சிறிது கோபம், சிறிது கவலை என்று அவளிடம் வெளிப்படுத்த வேண்டியதுதான்.. பாவம்... வயதான கிழவிதானே? பேசாமல் இருந்து விடுவாள். நான் குரலை உயர்த்தி நடித்தவாறு கேட்டேன்.

“என்னை நிம்மதியா இருக்க விட முடியுமா? முடியாதா?”

அவள் என்னுடைய முகத்தையே பார்த்தாள். நான் மற்றொரு ஆளுக்கு பாரமாகி விட்டிருக்கிறோம் என்று அவளுக்குப் புரிந்ததைப் போல் இருந்தது. ஒருவித தவிப்புடன் அவள் சொன்னாள்:

“இல்ல மகனே... நீ கோபப்படாதே. இன்னொரு அம்மா கேட்டேன்னு வச்சுக்கோ... இனி என் மகனை விட்டா எனக்கு யார் இருக்காங்க? நான் எதுவுமே பேசல. போதுமா?”

“அவன் திரும்பி வருவான்.”

எவ்வளவு பெரிய துக்கத்திலும் ஆறுதல் தேட விரும்புவது மனிதனின் குணமாகும். ஒரு புல் கொடி கிடைத்தால்கூட அதைப் பற்றிப் பிடித்துக் கொண்டு ஆறுதல் தேட மனித மனம் விழையும். யாரெல்லாம் இறந்திருக்கிறார்கள், யாரெல்லாம் உயிரோடு இருக்கிறார்கள் என்பது தெரியாததால் தனக்கு வேண்டியவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்றுதான் ஒவ்வொருவரும் நம்பினார்கள். இந்த நம்பிக்கையுடனே அவர்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ஓடிக் கொண்டிருந்தது. எங்கள் ஊரில் எல்லா வீடுகளிலும் ஒரு ஆள் உண்ணக் கூடிய உணவு எப்போதும் தயாராக இருக்கும். தூக்கத்தில்கூட எல்லாரும் காதைத் தீட்டி வைத்துக் கொண்டுதான் இருப்பார்கள். அண்ணனும் தம்பியும் சண்டை போடும்போது தம்பி அண்ணனிடம் சொல்லுவான். “அப்பா வரட்டும்... நான் உன்னை நல்லா உதைக்கச் சொல்றேன்” என்று. காதலி காதலனுக்காக காத்திருக்கிறாள். இப்படி தாமரை நூலில் தொங்கிக் கொண்டிருக்கும் ஆறுதல் என்ற விஷயத்தில் வாழ்க்கையின் கனவுகள் நித்தமும் புலர்வதை எல்லா இடங்களிலும் நாம் பார்க்கலாம்.

“அவன் திரும்பி வருவான்” என்று ஒரு இயந்திரத்தைப்போல நான் உறுதியான குரலில் கூறிக் கொண்டிருந்தேன். அன்று இறக்காமல் உயிரோடு இருப்பவர்கள் திரும்பி வருவதற்கு முன்பு அந்தக் கிழவி இந்த உலகை விட்டுப் போய்விடுவாள் என்று சில நேரங்களில் என் மனதில் தோன்றும். ஸ்ரீதரன் உயிரோடு இருந்து அதற்குப் பிறகும் அந்தக் கிழவியின் வாழ்க்கை நீடித்தால் அது ஒரு கொடை என்றுதான் சொல்ல  வேண்டும். அதே நேரத்தில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் கிழவி உயிருடன் இருந்து, ஸ்ரீதரன் வராமலே போய்விட்டால்...? இருந்தாலும் அவளுக்குக் கிடைத்த ஆறுதல் தொடரட்டும். அவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையிலேயே அவள் வாழட்டும்.

அவளுக்குத் தேவையானதையெல்லாம் ஸ்ரீதரனைவிட அதிகமாக நான் கவனித்தேன். எந்த விஷயத்திலும் அவளுக்கு ஒரு சிறு குறைபாடு கூட இருக்காமல் பார்த்துக் கொண்டேன். மகன் இல்லையே என்ற மனக்குறை அவளுக்கு உண்டாகக் கூடாது. ஆனால், நான் அப்படி அவளை மிகவும் சிரத்தை செலுத்தி கவனித்தது அவளை மேலும் அதிகமான துக்கத்தில் மூழ்கச் செய்தது. அவளிடமிருந்த அமைதி அவளை விட்டுப் போயிருந்தது. நான் அவளுக்காக ஏதாவது செய்ய முயலும்போது, “வேண்டாம்டா மகனே என்று அவள் விலக்கிக் கொண்டிருந்தாள். ஆனால், அப்படி நான் அவளை கவனிக்காமல் விட்டிருந்தால்? “என் மகன் என்கூட இல்லாததுனாலதான் எனக்கு எந்த வசதியும் கிடைக்கல” என்ற எண்ணம் அவளுடைய மனதில் உண்டாகத் தொடங்கிவிடும். உண்மையிலேயே அது ஒரு தர்மசங்கடமான நிலைதான்.

ஒரு தாயால் தன்னுடைய மகனின் கவனக் குறைவாலோ இயலாமையாலோ விளையக்கூடிய குறைகளைத் தாங்கிக்கொள்ள முடியும். நான் அதை அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். ஸ்ரீதரன் இருந்தபோது அவளுக்கு எவ்வளவோ கஷ்டங்கள் இருந்திருக் கின்றன. ஆனால், அப்போது அவள் மிகவும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தாள்.

அவள் எனக்காக பிரசவ வேதனையை அனுபவித்ததில்லை.

நான் தீவிரமாக உருவாக்கிய நம்பிக்கை அந்தக் கிழவியின் மனதில் எதிர்காலத்தைப் பற்றிய பல கனவுகளையும் படைத்தது. தனியாக அமர்ந்து அவள் என்னவோ நினைவுகளில் மூழ்கிப் போயிருப்பதை இதயத்தில் வேதனை குடிகொள்ள நான் பார்த்துக் கொண்டிருப்பேன். அவளுடைய உடல் நிலை முன்பிருந்ததைவிட இப்போது நன்றாக இருந்தது. அவளின் உடல் நலம் எப்படி முன்னேற்றம் கண்டது? அது மோசமாக பாதிக்கப்பட்டு அவள் இறப்பைத் தழுவியிருக்கலாம். ஆனால், அவள் சாகவில்லை. அவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையுடன் சாப்பிட வேண்டிய உணவை ஒழுங்காகச் சாப்பிட்டு உடம்பை நல்ல நிலையில் வைத்திருக்கிறாள் அவள். அவளின் வாழ்க்கைக் காலம் மேலும் அதிகமாகப் போகிறது!

நான் அவளை ஏமாற்றி விட்டேன். அந்த ஏமாற்றத்தில் சிக்கிக் கொண்டு அவள் சிந்திக்கிறாள். அவள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

சிந்தனைக்கு மத்தியில் கிழவி என்னைப் பார்த்துக் கேட்டாள்:

“அப்போ... மகனே! ஸ்ரீதரன் வந்த பிறகு யூனியனோட தலைவனா ஆயிடுவானா?”

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel