Lekha Books

A+ A A-

அவன் திரும்பி வருவான் - Page 3

Avan Thirumpi Varuvan

இதற்கு நான் என்ன பதில் சொல்வேன்? மகன் வந்த பிறகு நடக்கப் போகிற விஷயம் இது. அப்படித்தான் நடக்கும் என்று நான் சொன்னேன். சிறிது நேரம் என்னவோ யோசனையில் ஆழ்ந்த அவள் மீண்டும் சொன்னாள்:

“என் பிள்ளைக்கு அதுக்குப் பின்னாடி ஏகப்பட்ட வேலைகள் இருக்கும். ஏதாவது வேலை நிறுத்தம் நடந்ததுன்னா, போலீஸ்காரங்க அவனைத்தான் முதல்ல பிடிச்சிட்டுப் போவாங்க.”

மனதிற்குள் சிந்தித்துச் சொன்ன இந்த வார்த்தைகளுக்குப் பிறகு கிழவி இனிமையான பல கனவுகளில் மிதக்க ஆரம்பித்தாள். ஸ்ரீதரன் திருமணம் செய்து கொள்வது, அவனுக்கு குழந்தைகள் பிறப்பது- இப்படி. இப்படி... ஆனால், கிழவியின் கனவுகளைப் பார்க்கும்போது என்னுடைய இதயம் வேதனையால் வெம்பியது. வேறு ஏதாவது வழிகளுக்கு அவளுடைய சிந்தனையைத் திருப்பிக் கொண்டு போனால் என்ன என்று நினைத்தேன். அதே நேரத்தில் இன்னொரு சிந்தனை எனக்குள். அதை நினைத்தாவது அவள் ஆனந்தத்தில் திளைத்திருக்கட்டுமே!

அவள் சொன்னாள்:

“அவனை சிறைக்குக் கொண்டு போனாக்கூட எனக்கு கவலையில்ல. நான் கொஞ்சம் கூட வருத்தப்பட மாட்டேன். அவன் நல்ல காரியத்துல ஈடுபட்டதுனாலதானே சிறைக்குப் போயிருக்கான்? யூனியன் வந்த பிறகு எல்லாருக்கும் எவ்வளவு நிம்மதி தெரியுமா? பிள்ளைகளே, உங்களுக்குத் தெரியாது. நாங்க சின்னப் பிள்ளைகளா இருக்குறப்போ கஷ்டப்பட்டு வேலை செய்யணும். ஆனா, சம்பளம் மட்டும் கேட்கக் கூடாது. அவங்களா தந்தா வாங்கிக்கணும். இப்போ... நீங்க நல்ல ஆடைகளும் வெளுத்த வேஷ்டியும் கட்டிக்கிறீங்கள்ல? அப்போ இதெல்லாம் முடியாது...”

அவள் அந்தப் பழைய கதையைச் சொன்னாள். ஏழைகள் அனுபவித்த கொடுமையான கதைகள்! வெளுத்த வேஷ்டி கட்டியதற்கு அடிகள் கிடைத்தது, குழந்தை இறந்துவிட்டது என்று தாய் அழுததற்காக அருகில் வசித்த பணக்காரன் பொறுக்க முடியாமல் அவளை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னது, வாங்கிய கூலி அன்றைக்குப் போதாது என்று தனக்குத் தானே முணுமுணுத்து நின்ற ஒரு புரட்சிக்காரன் அதற்குப் பிறகு நிரந்தரமாகக் காணாமல் போனது... இப்படி நூறு கதைகள்!

அவள் சொன்னாள்:

“இப்பவும் நமக்கு எல்லாம் கிடைக்குதா, பிள்ளைகளே? நாம வேலை செய்யிறோம். முதலாளி லாபம் சம்பாதிச்சு சுகமாக இருக்காரு. அவருக்கு பிடிக்கலைன்னா, நம்மளை வேலையைவிட்டு போகச் சொல்லிடுவாரு. வேலை செய்ய முடியாம நாலு நாட்கள் படுத்துட்டா, பட்டினி கிடக்க வேண்டியதுதான்...”

நான் சொன்னேன்:

“இனியும் பல தடவை துப்பாக்கிச் சூடு பட்டு செத்தாத்தான் இதெல்லாம் சரியாகும் அம்மா.”

நான் சொன்னதற்கு தலையைக் குலுக்கி சம்மதித்தாள் கிழவி.

“நீ சொல்றது சரிதான். இப்ப செத்ததெல்லாம் இனி இருக்குற குழந்தைகளுக்காகத்தான்...”

அப்படியென்றால் ஸ்ரீதரன் துப்பாக்கிச் சூடு பட்டு இறந்தான் என்றால் அவளுக்கு அது குறித்து பெருமைதானே என்று சொல்ல வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால், அவளின் முகத்தை பார்த்து அதைச் சொல்ல எனக்குத் தோன்றவில்லை. அவள் அவனைப் பெற்ற தாய். அப்படி ஒரு மகனின் மரணத்தைப் பெருமையாக நினைத்து தன்னுடைய துக்கத்தை அடக்க ஒரு தொழிலாளியின் தாயால் முடியக் கூடிய காலம் எப்போது வரப் போகிறதோ?

அன்று தப்பித்து பூமியின் பல பகுதிகளிலும் போய் ஒளிந்து கொண்டவர்களில் பலர், ஆச்சரியப்படும் விதத்தில் ஒளிந்தும் பதுங்கியும் ஊருக்குள்ளும் வீட்டுக்கும் வந்து போகத் தொடங்கினர். ஸ்ரீதரன் இறந்திருக்க வேண்டும் என்று ஒருவன் சொன்னான். தப்பித்து விட்டான் என்று சொன்னவனால் அவன் இப்போது எங்கே இருக்கிறான் என்பதைக் கூற முடியவில்லை. அவன் தப்பித்ததை அந்த மனிதன் பார்க்கவில்லை. வெறும் யூகம் மட்டுமே.

நாட்கள் நீங்க நீங்க அந்தக் கிழவிக்கு ஒரு விரக்தி உண்டாக ஆரம்பித்தது.

“அவன் எப்போ வருவான் மகனே?” என்ற ஒரு நாளில் பத்து முறையாவது அவள் கேட்பாள். அவளின் எந்த பேச்சும் இந்தக் கேள்வியில்தான் போய் முடிந்தது. முதலில் அவன் வரப் போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்று நான் கூறிக் கொண்டிருந்தேன். எவ்வளவு நாட்கள்தான் நான் இப்படியே நடித்துக் கொண்டிருக்க முடியும்? அதே நேரத்தில் அவன் திரும்பி வருவான் என்று கூறுவதைத் தவிர வேறு வழியில்லை. இனி இருக்கும் நாட்களி லாவது பாவம் அந்த ஏழைத் தாய் நிம்மதியாக இருக்கட்டும்.

அவன் எப்போது வருவான் என்ற கேள்வி அவன் விரைவில் வருவானா என்று மாறியது. தொடர்ந்து அவள் நூற்றுக்கணக்கான கேள்விகளைக் கேட்பாள். எல்லாமே ஸ்ரீதரன் திரும்பி வரக்கூடிய சாத்தியங்களை விமர்சிக்கக் கூடியவை. அந்தத் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னால் உள்ள அரசியல் நிலவரங்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அந்தக் கேள்வி தொட்டது. படிப்பறிவே இல்லாத ஒரு கிழவிக்கு இதெல்லாம் எப்படித் தெரிகிறது என்று நான் ஆச்சரியப்பட்டேன். அனுபவத்திலிருந்துதான் அரசியல் அறிவு உதயமாகிறதோ?

மகன் திரும்பி வருவதற்கு முன்பு தான் மரணமடைவது நிச்சயம் என்று உறுதியாக அந்தத் தாய் நம்பினாள். அவனை ஒரு முறையாவது பார்த்த பிறகே தான் மரணமடைய வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். நடக்க முடியாத ஆசை... இருந்தாலும் அதை அறுதியிட்டுக் கூற எனக்கு நாக்கு வரவில்லை.

அந்த கூட்டுக் கொலை பொதுமக்கள் நீதிமன்றத்தில் ஒரு கூட்டுக் கொலையாகத்தான் தீர்ப்பு சொல்லப்பட்டது. அப்போது எங்கெங்கோ போய் ஒளிந்து கொண்டவர்கள் அஞ்சாமல் வெளியே வரலாம் என்ற சூழ்நிலை உண்டானது. ஆனால், அந்த முக்கியமான நாளன்று நோய் வாய்ப்பட்டு அவ்வப்போது சுய நினைவு வருகிற மாதிரி மரணப்படுக்கையில் படுத்துவிட்டாள் கிழவி. அன்று மூன்று முறை அவள் என்னை அழைத்துக் கேட்டாள்:

“அவன் திரும்பி வந்துட்டானா?”

இறந்து போனவர்கள் என்று நம்பப்பட்டவர்கள் திரும்பி வந்த சந்தோஷம் ஒவ்வொரு வீட்டிலும் அலையடித்துக் கொண்டிருக்கும் போது நான் என்ன பதில் சொல்வேன்? அவர்கள் வந்த விஷயம் கிழவிக்குத் தெரியாது. அவள் அதைத் தெரியாமலே இருக்கட்டும். அவன் திரும்பி வருவான் என்ற என் வார்த்தைகள் பிரம்மாண்டமாக எனக்கு முன்னால் நின்று என் முகத்தைப் பார்த்து வக்கனை காட்டின.

நாட்கள் சில கடந்தன. வர வேண்டியவர்களெல்லாம் வந்துவிட்டார்கள். அவன் திரும்பி வரவில்லை.

கிழவியின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அவள் படுத்த இடத்தைவிட்டு எழுந்திருக்கப் போவதில்லை. அது மட்டும் உண்மை.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel