அவன் திரும்பி வருவான் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 9640
அதே நேரத்தில் அவள் தன் கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்கக் கூடிய அளவிற்கு அவளுக்கு சுயநினைவு இல்லாமல் இருக்க வேண்டுமே என்று நான் கடவுளிடம் வேண்டினேன். இன்னொரு முறை அவன் எப்போது வருவான் என்று அவள் கேட்டால், அவன் திரும்பி வரப்போவதில்லை என்று நான் கூறினாலும் கூறிவிடுவேன். அந்தப் பெரிய பொய்யை இனிமேலும் சொல்ல என்னால் முடியாது.
அவள் வாய்க்கு வந்தபடி உளறிக் கொண்டிருந்தாள். ஆனால் அதிலும் ஒரு ஒழுங்கும் கட்டுப்பாடும் இருந்தது. அவள் யாரையோ தனக்கு முன்னால் இருப்பது மாதிரி நினைத்துக் கொண்டு அவர்களுடன் வாதம் செய்வதைப் போல் தோன்றியது. அவள் சொன்னாள்:
“இந்த இருபத்தைந்து தென்னங்கன்றுகளையும் நாங்கதான் வச்சோம். தலைமுறை தலைமுறையாக வசிச்சு வர்ற இந்த இடத்தைவிட்டு இப்போ வேற இடத்துக்குப் போறதுன்னா எப்படி மனசு வரும்?”
அந்த “மனமில்லா நிலை”க்குத்தான் எத்தனை சக்தி இருக்கிறது! எவ்வளவு திடமாகச் சொல்கிறாள் அவள்! அப்படிச் சொல்லும்போதுதான் கிழவியின் குரலில் என்ன உறுதி! ஒரு முழுமையான உரிமை உணர்விலிருந்து வரும் வார்த்தை அது. எந்த சக்தியாலும் அந்த “மனமில்லா நிலை”யை மாற்ற முடியாது. வெறித்துப் பார்த்தவாறு அவள் கேட்டாள்:
“உங்க மண்ணா! உங்களுக்கு எங்கேயிருந்து மண்ணு வந்துச்சு?”
சிறிது நேரம் கழித்து அவன் ஒரு பழைய கதையைக் கூறத் தொடங்கினாள். அவளின் தந்தையை அடித்துக் கொன்றதை தாத்தா சகித்துக் கொண்டார் என்ற பரம்பரை பரம்பரையாக நடந்து வந்த ஒரு கொலைக் கதை அது. அவள் அழுதாள். ஆவேசம் வந்து பற்களைக் கடித்தாள். தன்னுடைய இளம் வயதில் பார்த்த அந்த கொலைக் கதைகளை அவளே நடித்துக் காட்டினாள்.
அந்தக் கதைகளை நாங்கள் கேட்டோம், கண்டோம். பாவம் அந்தக் கிழவி இந்தக் கதைகளையெல்லாம் வாழ்க்கையில் பார்த்திருக்கிறாளா என்று நினைத்தோம். அந்தக் குடும்பத்தின் அடக்கப்பட்ட ஆவேசத்தின் சின்னம்தானே ஸ்ரீதரன்? இருக்கலாம். அவனுடைய வர்க்க உணர்வு, தைரியம் ஆகியவற்றிற்கான காரணம் அந்தக் கிழவி சொன்ன குடும்பக் கதைகள் மூலம் தெரிந்தது.
மற்றொரு வீட்டு சம்பவம்... பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு கிடைத்த கூலியான ஏழு சக்கரத்தை வீட்டுக்கு கொண்டு வந்த கணவனும் மனைவியும் செலவு விஷயங்களைப் பற்றி சிந்திக்கிறார்கள். அந்தச் சுருக்கமான கணக்கிலும் ஆறு சக்கரம் குறைவாக இருக்கிறது. தன்னுடைய மகனைப் பார்த்து தாய் கூறுகிறாள்:
“என் மகனே, என்ன பாடுபட்டாவது இன்னைக்கு உனக்கு சோறு போடுவேன்.”
அதுவும் அந்தக் குடும்பத்தின் கதைதான்.
அன்று அங்கு மண்ணோடு மண்ணாகப் போய்ச் சேர்ந்த தியாகிகளின் நினைவைக் கொண்டாடும் நாள். கிராமத்தையே சுற்றி வர ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிழவி மரணப் படுக்கையில் கிடப்பதால் என்னால் அந்த நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ள முடியவில்லை.
தூரத்தில் சோக மயமாக பேண்ட் வாத்தியம் முழங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தியாகியின் வீட்டின் முன்னாலும், அந்த ஊர்வலம் நின்று மரியாதை செலுத்தியது.
ஊர்வலம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து கொண்டிருந்தது. எங்களுக்கு அடுத்த வீட்டின் முன்னால் அது வந்து நின்றது. அந்தத் தாய் ஒரு தாலாட்டு பாடலைப் பாடத் தொடங்கினாள்:
“வா வ வா வ வா வோ- ஸ்ரீதரன்
வா வ வா வ வா வோ...”
அதை அங்கு கூடியிருந்த எங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நாங்கள் அழுது விட்டோம்.
ஊர்வலம் எங்கள் வீட்டின் முன்னால் வந்து நின்றது. அந்த இதயத்தை நெகிழச் செய்யும் பேண்ட் வாத்தியக் குழு, “எங்களுக்கு மகிழ்ச்சி தருக” என்ற பாடலை இசைத்துக் கொண்டிருந்தது.
கிழவி புன்னகை ததும்ப கண்களைத் திறந்தாள். அந்த அளவிற்கு இதயம் குளிர்ந்த ஒரு சிரிப்பை நான் பார்த்து எவ்வளவு நாட்களாயிற்று! அவள் தன்னுடைய மகனைக் காண்கிறாள்!
அவள் கைகளை உயர்த்தி காற்றைக் கட்டிப் பிடித்தாள். அவள் என்ன செய்கிறாள்? அவளின் அணைப்புக்காக அவன் அங்கு நின்றாலும் நின்றிருக்கலாம்.
“பிள்ளைகளே, என் மகன் வந்துட்டானா?” அவள் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். அந்தக் கண்கள் மூடின.
+Novels
Short Stories
May 28, 2018,
July 31, 2017,
May 10, 2018,
March 7, 2016,