
இளம் வயதுச் சிறுமியாக இருந்தபோது மரங்களை ஆர்வத்துடன் அவள் பார்த்துக்கொண்டு நின்றிருப்பாள். ஒரு முறையாவது அதன்மீது அவளால் ஏற முடிந்திருந்தால்...! ஆனால், கற்பைப் பற்றிய பயம் காரணமாக அவளால் ஒரு முறைகூட அதைச் செய்ய முடியவில்லை. அவளுக்கே தெரியாமல் பனியைப் போன்ற குளிர்ச்சி முழங்கால் வரை ஏறியது. ‘இதற்கு நான் பழி வாங்குவேன்.' அவள் சொன்னாள்.
ஒரு ஆள் தெருவில் திரும்பி வந்து கொண்டிருந்தான். மார்பை இறுகப் பிடித்துக் கொண்டு இப்படியும் அப்படியுமாக ஆடியவாறு அவன் நடந்து வந்து கொண்டிருந்தான். சில அடிகள் நடந்தபிறகு, அவன் ஒரு ஓரத்தில் தலை குப்புற கீழே விழுந்தான். நிறைந்து கிடந்த ஒரு அழுக்குச் சாக்கடை அது. இப்போது அவளால் அந்த மனிதனைப் பார்க்க முடியவில்லை. எனினும், அவனுடைய கால்கள் அழுக்குச் சாக்கடைக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்தன. முனீஸ் தன்னுடைய கண்களை மூடிக்கொண்டு முன்னோக்கி குனிந்தாள். ஒரு ஐந்து நிமிடங்கள்... அந்த ஆள் அதோ தெருவில் மல்லாந்து படுத்திருக்கிறான். ஆனால், கண்கள் திறந்திருந்தன. அவை நிர்மலமான வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தன.
முதலில் அவன் இறந்துவிட்டான் என்றுதான் அவள் நினைத்தாள். குறைந்தபட்சம் அவள் தன்னை அந்த நிலையில் வைத்து எண்ணிப் பார்த்தாள். கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு ஒரு நிமிடம் அந்தத் தெருவில் அவள் கிடந்தாள். நிர்மலமான ஆகாயம் சிறிது சிறிதாக இருண்டு கொண்டு வந்தது. கன்னங்களின் வழியாக கண்ணீர் கீழ் நோக்கி வழிந்து கொண்டிருந்தது. அவள் தன் வலது கையை அழுத்தி கண்களைத் துடைத்தாள். பிறகு... எழுந்து நின்றாள். உடல் பயங்கரமாக வலிப்பதைப்போல இருந்தது. தாங்க முடியாத களைப்பு வேறு...
கால்களை வெளியே நீட்டிக்கொண்டு ஒரு ஆள் அழுக்கு நிறைந்த சாக்கடையில் கிடக்கிறான். முனீஸ் பதைபதைப்புடன் அந்த இடத்தை நோக்கி நடந்தாள். அவன் தன் முகத்தை வானத்தை நோக்கி காட்டிக் கொண்டிருந்தான்.
கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு.... முனீஸ் கேட்டாள்: “ஏதாவது காயம் உண்டானதா?''
“என் கதை முடிந்து விட்டது.''
அந்த மனிதன் பதில் சொன்னான்.
“ஏதாவது உதவி வேண்டுமா?''
“இங்கேயிருந்து சற்று தூக்கி விட்டால் நன்றாகத்தான் இருக்கும். பிரச்சினையில் சிக்கிக் கொள்ளக்கூடாது.''
“என்ன?''
“அந்த ஆரவாரச் சத்தம் காதில் விழுகிறது அல்லவா? எல்லா கணக்குகளையும் அவர்கள் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.''
“அப்படியென்றால் இங்கு கிடந்து என்ன செய்யப் போகிறீர்கள்?''
“அம்மா... என் கதை முடிந்து விட்டது என்று நான்தான் சொன்னேனே?''
“நான் ஏதாவது செய்து பார்க்கிறேன். ஒரு நிம்மதி கிடைக்கிறது என்னும்பட்சம்...''
“இல்லை... அதெல்லாம் சும்மா... மிகவும் தாமதமாகி விட்டது. ஒரு ஃப்ரெஞ்ச் திரைப்படம் இருக்கிறது. ‘இட் ஈஸ் டூ லேட்' என்று பெயர். அதுதான் என்னுடைய நிலைமை... தாமதமாகிவிட்டது...''
முனீஸ் மிகுந்த கவலையில் மூழ்கினாள்: “ஒருவேளை....''
அந்த மனிதனுக்கு கோபம் வந்துவிட்டது. “போகுமாறு நான் கூறினேன் அல்லவா? இது பைத்தியக்காரத்தனம்...''
அதற்குப் பிறகு முனீஸ் அந்த இடத்தில் நிற்கவில்லை. ஒரு மாத காலம் அவள் தெருக்களில் நடந்து திரிந்தாள். முதலில் தெருக்கள் மனிதர்கள் நிறைந்து காணப்பட்டன. ஆட்கள் அடித்துக் கொண்டும் கொலை செய்துகொண்டும் நடந்து திரிந்தனர். படிப்படியாக தெருக்கள் யாருமே இல்லாமல் ஆகிவிட்டன. ஆட்கள் வீடுகளுக்குள் இருக்க ஆரம்பித்தனர். இனி எதுவும் எஞ்சியிருக்கவில்லை என்ற சிந்தனை உண்டானதாலோ, கவலை தோன்றிய காரணத்தாலோ அப்படி அவர்கள் நடந்துகொண்டிருக்க வேண்டும். சிலர் சிறைக்குள் சென்றார்கள். சிலர் சந்தோஷத்தில் மூழ்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் வோட்காவையும் சாராயத்தையும் பரிமாறிக் கொண்டாடினார்கள். அவள் விருந்துகளில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக விருந்து நடக்கும் ஹாலின் சாளரத்திற்கு அருகில் போய் நின்று கொண்டு காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு கேட்டாள். ஊரடங்கு உத்தரவு காரணமாக அன்று யாருமே வெளியே வரவில்லை.
இறுதியில் அவள் பல்கலைக்கழகத்தைத் தாண்டியிருந்த புத்தகக் கடையை நோக்கி நடந்தாள். பல நாட்கள் ஒரு வகையான கூச்சத்துடன் அவள் புத்தகங்களின் மேலட்டைகளைப் பார்த்துக்கொண்டு நின்றிருப்பாள். அவற்றின் பெயர்களைக்கூட அவள் வாசிக்க மாட்டாள். படிப்படியாக பதைபதைப்பு அவளிடமிருந்து விலகிச் சென்றது. அவள் அவற்றின் பெயர்களை வாசிக்க ஆரம்பித்தாள். இறுதியில் புத்தகக் கடையின் சாளரத்தின் வழியாகப் பார்த்து அல்ல... அதே நேரத்தில், தெருவிலிருந்த இன்னொரு கடையில் இருந்த ஒரு புத்தகம் அவளுடைய கண்களில் பட்டது. ‘உடலின்பத்தில் திருப்தி அடைவதற்கான ரகசியங்கள் அல்லது நம் உடலை அறிந்து கொள்வது எப்படி?' என்பதுதான் அந்தப் புத்தகத்தின் பெயர்.
அந்தப் புத்தகத்தையே மறைந்து பார்த்தவாறு முனீஸ் பன்னிரண்டு நாட்கள் கடைக்கு முன்னாலேயே நடந்து திரிந்துகொண்டிருந்தாள். பதின்மூன்றாவது நாள் கடைக்குள் நுழைந்து விசாரிப்பதற்கான தைரியம் அவளுக்குக் கிடைத்தது.
“இதன் விலை என்ன?''
“ஐந்து தொமான்.''
புத்தகத்தை வாங்கி விட்டு, முனீஸ் தெருவில் அமைதியாக இருந்த ஒரு பகுதியை நோக்கி நடந்தாள். ஒரு மரத்திற்குக் கீழே போய் நின்றுகொண்டு வாசிக்க ஆரம்பித்தாள். பக்கங்களை மிகவும் ஆர்வத்துடன் புரட்டினாள். பல முறை... அந்த வகையில் மூன்று நாட்கள் கடந்து சென்றன.
மூன்றாவது நாள் அவள் தன் கண்களை உயர்த்தினாள். மரங்கள், சூரிய வெளிச்சம், தெருக்கள்- எல்லாவற்றுக்கும் புதிய அர்த்தங்கள் வந்து சேர்ந்து விட்டிருப்பதைப்போல தோன்றியது. தான் வளர்ந்திருக்கிறோம் என்பதை அவள் உணர்ந்தாள்.
புத்தகத்தை சாக்கடைக்குள் வீசி எறிந்துவிட்டு, அவள் தன் வீட்டை நோக்கி நடந்தாள்.
இருட்டிய பிறகுதான் அவள் வீட்டையே அடைந்தாள். அவளைப் பார்த்ததும் ஆலியா உரத்த குரலில் கூப்பாடு போட்டவாறு, மயக்கமடைந்து கீழே விழுந்து விட்டாள். முனீஸ் அவளை எழுந்து உட்கார வைத்தாள். “என்ன ஆச்சு உனக்கு?'' அவள் கேட்டாள்.
சுய உணர்வு கிடைத்ததும், ஆலியா இவ்வாறு சொன்னாள்: “ஆளைக் காணோம் என்று நாங்கள் எல்லாரும் கவலையில் மூழ்கிக் கிடந்தோம். ஒருமாத காலமாக உம்மாவும் வாப்பாவும் அண்ணனும் நகரம், கிராமம் என்று எல்லா இடங்களிலும் அலைந்து தேடிப் பார்த்தார்கள். இனி தேடிப் பார்ப்பதற்கு இடமே இல்லை என்ற நிலை உண்டாகி விட்டது. அழுது அழுது கண்ணீரே வற்றிப்போய் விட்டது. இவ்வளவு காலமும் எங்கே இருந்தாய்? என்ன செய்து கொண்டிருந்தாய்?''
அதற்கு முனீஸ் பதிலெதுவும் கூறவில்லை. வெறுமனே தலையை ஆட்டிவிட்டு, ஆழமாகப் புன்னகைத்துக் கொண்டு நின்றிருந்தாள். தொடர்ந்து இவ்வாறு கூறினாள்: “ஆலியா, காதில் வாங்கிக்கொள். இப்போது நான் பழைய ஆள் இல்லை... எவ்வளவோ விஷயங்கள் தெரியும்...''
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook