
சுராவின் முன்னுரை
ஈரானிய முற்போக்கு சிந்தனை கொண்ட பெண்ணியவாதியும், புகழ்பெற்ற எழுத்தாளருமான ஷார்னுஷ் பார்ஸிபுர் (Shahrnush Parsipur) எழுதிய ‘ஜனானே பிதுனே மர்தான்’ என்ற புதினத்தை ‘ஆண்கள் இல்லாத பெண்கள்’ (Aangal illaatha pengal) என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன்.
1946-ஆம் ஆண்டில் பிறந்த ஷார்னுஷ் பார்ஸிபுர் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின் பிரச்சினைக்காகவும் அரசாங்கத்தை எதிர்த்துப் போராடியவர். அவர் பலமுறை கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்திருக்கிறார். பொய்யான காரணங்கள் காட்டியும் அவரைக் கைது செய்திருக்கிறார்கள்.
‘ஆண்கள் இல்லாத பெண்கள்’ 1989ஆம் ஆண்டு எழுதப்பட்டது. கன்னித்தன்மையைப் பற்றியும், திருமண வாழ்க்கையின் அர்த்தமற்ற போக்கையும், குடும்பம் என்ற அமைப்பையும் கேள்வி கேட்கிறது என்று குற்றம் சுமத்தி இந்நூலைத் தடை செய்த ஈரான் அரசாங்கம், நூலாசிரியர் ஷார்னுஷ் பார்ஸிபுரை கைது செய்தது. அவரை போதை மருந்துக் குற்றவாளிகளுடன் சேர்த்து சிறையில் அடைத்தது. இரண்டே வாரங்களில் அனைத்துப் பிரதிகளும் விற்றுத் தீர்ந்த இப்புதினம், கடுமையான தடை காரணமாக, அதற்குப் பிறகு ஈரானிய மொழியில் பிரசுரமாகவில்லை.
சிறையிலிருந்து வெளியே வந்தபிறகு ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, சுவீடன், ஜெர்மனி, டென்மார்க், ஃப்ரான்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து, பல்கலைக்கழகங்களிலும், கலாச்சார மையங்களிலும் சொற்பொழிவுகள் நடத்தினார் ஷார்னுஷ் பார்ஸிபுர்.
1976-ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்த ஷார்னுஷ் பார்ஸிபுர் மைசூர், டில்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்து பலவற்றையும் பார்த்தார். கொல்கத்தாவையும், அஜந்தா குகைகளையும் பார்க்க வேண்டும் என்ற அவருடைய ஆசை அப்போது நிறைவேறாமல் போனது.
சுமார் பத்து புதினங்களை எழுதியிருக்கும் ஷார்னுஷ் பார்ஸிபுர் ஈரானுக்குத் திரும்பிச் செல்ல அனுமதி கிடைக்காமல் போக, கடந்த பல வருடங்களாக அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
மிகவும் மாறுபட்ட இந்தப் புதினத்தை எழுதியிருக்கும் ஷார்னுஷ் பார்ஸிபுர் எழுத்தின் மீது மிகப் பெரிய ஈடுபாடு உண்டானதன் காரணமாகவே, இதை நான் தமிழில் மொழி பெயர்த்தேன். இப்புதினத்தில் வரும் மஹ்தொகத், ஃபாஇஸா, முனீஸ், ஃபாரூக்லாகா, ஸரீன்கோலா என்ற ஐந்து வெவ்வேறு குணம் படைத்த பெண்களும் இதைப் படிக்கும் அனைவரின் மனங்களிலும் இடம் பிடிப்பார்கள் என்பது நிச்சயம்.
கதை அம்சத்திலும், எழுதும் உத்தியிலும் மாறுபட்டிருக்கும் இப்புதினம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன், இதை உங்கள் முன் வைக்கிறேன்.
இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook